வியாழன், 2 மே, 2024

தினாத்யயா - சமஸ்கிருதச் சொல். பொருள்.

தினம் என்ற சொல்,  தீ என்ற தமிழிலிருந்து வருகிறது.  தீ என்பதோ தேய் என்பதிலிருந்து வருகிறது. சில பொருட்கள் தேய்வதனால் வெப்பம் மிக்குவந்து தீ உண்டாகிவிடுகிறது.

தினம் என்பது தமிழ்ச்சொல் என்று சில தமிழாசிரியர்கள் கூறியுள்ளனர்.

முதலில் தமிழர்கள் தமிழும் சமத்கிருதமும் இருகண்கள் என்றும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று சொன்னார்கள். வெள்ளைக்காரன் அது எங்கள் கண்டத்திலிருந்து உங்கள் கண்டத்துக்கு வந்த மொழி என்று கட்டுரைத்தபின்,  அவர்கள் கடன் வாங்கியதைத் தெரிவிக்காமல், நீங்கள் எல்லாம் கடன் வாங்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிட்டான். அந்நாளிலிருந்து தமிழறிஞர்கள் மனமிகக் கவன்று,  அது சமஸ்கிருதம், இது சமஸ்கிருதம் என்று பிரித்து. ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வால்மிகி என்ற தமிழ்ப்புலவன் தான் முதலில் சமஸ்கிருதத்தில் நூலெழுதியவன்.  அவன்பாடிய இராமரும் நீலவண்ணத்தவர்தான். வெள்ளையன் அல்லன்.

வான்மிகி என்ற புலவர் சங்கத்திலும் சென்று பாடியுள்ளார்.

சமஸ்கிருதம் என்பது நம் உள்ளூர் பூசை மொழி. 

நிற்க, தினம் என்பது நாள் என்று பொருள்படுதலால்,  தினாத்யா  என்ற சொல்லைப் பார்ப்போம்.  தினம் அற்றுப்போவது தான்  தினாத்யா அல்லது தினாத்யாய. அற்றுப்போவது என்றால் முடிந்துபோவது.  அறவே இல்லாமல் போவது அன்று.  (அல்ல).  தினம் அற்றுப் போவதால் இரவு வந்துவிடும்.  அற்று -  இன்று அத்துப்போனால்  நாளைச் சூரியன் முளைக்கும்.  அப்போது   வரும். பூமி சுற்றுவதும் நீங்கள் அறிந்ததே.[ Dinātyaya]

தினேஸ்வரன் என்ற பெயரும் பலரும் விரும்பும் பெயர். தினத்துக்கு ஈஸ்வரன் என்றால் சூரியன். இறைவன் > இஷ்வர் ( ஈஷ்வர்)> ஈஸ்வர் மீண்டும் அன் பெற்று ஈஸ்வரன் ஆகும்.  சூரியன் தெய்வமாக வணங்கப்படுவது. சூடு கொடுப்பவன் ஆதலால் சூடியன்: சூரியன் ஆனான்.

தினாதி என்பது தின ஆதி,  காலைப்பொழுது, இப்போது இவ்வாறு பல சொற்கள் உள்ளன. இந்த மாதிரிச் சொற்களின் மூலம் சமஸ்கிருதமும் பல பெற்று சொற்செழுமை அடைந்தது. 

தின அன்று அகம் என்பவற்றைக் கொண்டு  தின அந்து அக >  தினாந்தக என்ற சொல் உண்டானது. மாலை வந்து மருவும் நேரத்தைக் இது குறித்தது.

அன்று அல்ல என்பதுமாகும், அன் து < >அந்து

தேய் > தீ > தினம்போல,  தேய் என்பதிலிருந்தே டே  ( நாள் ) என்பதை ஐரோப்பியர்கள் உண்டாக்கிக்கொண்டனர்.

தீ இன் அம் > தி ன் அம் > தினம்,.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின

புதன், 1 மே, 2024

புதிய பிரதமர் வோங், மூத்த அமைச்சராகும் லீ மேதகையோருக்கு வாழ்த்துக்கள்.

 சிங்கமான பலசிங்கர்  சிறப்பொடுவாழ் சிங்கைநகர்

தங்கநகர்த் தலைமைசேர்  நல்அமைச்சர் வோங்கவரும்

பொங்கெழிலே  பூத்திருக்கப் பொறுப்பேற்கும் நன்னாளில்

தங்குகசீர்  மங்களமே  தரணிப்பண் நிலைதருமே.


நிறைவான செல்வமெலாம் நித்தலுமே பெருகிவர

நிறைவானும் குன்றாத மழைபொழியச் செழிப்பாகத்

திறைபொருளின் வளம்கொழிக்கத் தேன்மொழியும் கலந்துவர

இறைவரமும் தொடர்தரவே இவராட்சி நிலைதருமே.


பல்லாண்டு  நீள்நகரைப்  பண்புடனே ஆண்டவர்நம்

தொல்குடியின் லீசியன்லுங் துவள்வில்லா வானம்போல்.

வல்கணமொன்  றில்லாமல் வளமான ஆட்சிதந்தார்

நல்மணமே ஒன்றியன்று நலம்காக்க   நிலைதருமே.


இவை மூன்றடுக்கிய தாழிசைப்பாக்கள்.

அரும்பொருள்:

திறை பொருள்  - வரியும் பொருளியலும்

உம்மைத் தொகை.

நித்தல் - என்றும்

தரணிப்பண் -  உலகம் ஒத்து இருந்து பாராட்டுதல்

சிங்கர் -  சிங்கம்போன்ற மனிதர்கள் சிங்க( ம் ) + அர்> சிங்கர்

சிங்க(மவ)ர்>  ( தொகுத்தல் விகாரம் என்றும் கொள்க)

தொடர்தர =  தொடர்ந்துவர

இறைவரம் - கடவுள் கிருபை

தொல்குடி -  முதல் தலையமைச்சரின் குடி

நீள்நகர் - பெருநகர்

வல்கணம் - கடினமான தன்மை

ஒன்றியன்று -  ஒன்றாக இணைந்து

ஒன்று இயன்று - ஒன்றாய் இயன்று. ஆய் உருபு தொக்கது.

துவள்வில்லா -  துவள்வு இல்லா - மடங்கிக்கெடுதல் இல்லாத.

வன் கணம் நன் கணம் என்று புணர்த்தாமல் நல் வல் என்றே எதுகைநோக்கி இருத்தப்பட்டன. ஆகவே நல்கணம், வல் கணம், வன் கணம் : வன்மை நிகழ்வின் திரட்சிகள்;  நல் கணம் - நன்மை நிகழ்வின் திரட்சிகள் ( ஆட்சியில்) .

நல் கணம் என்பதைப் பயன் படுத்தாமல்  நல் மணம் என்று பாடியுள்ளோம்.

நட்பினை(சேர்தலை) மிகுத்தல்

 நட்பு என்ற சொல் நள் என்ற அடிச்சொல்லில் பிறந்தது. நள்+ தல் என்பது நட்டல் என்றும் வரும்.  நண்பு மற்றும் நட்பு என்றும் தோன்றும். நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு என்று தேவர் திருவாய் மலர்கின்றார். நண்பர்கள்  ஆனபின்  வீடு  இருந்த இடத்தில் இருக்கும் என்றாலும் வீடில்லை  அதாவது விடமுடியாது என் கின்றார்.  நண்பர்  ஆனபின் பிரிந்துவிடுதல் எளிதன்று.  நண்பர்களாகு முன்னர் மலைகள்போல்   பெரியனவாகத் தெரிந்த குற்றங்களும் கண்களாற் காணவும் இயலாதன ஆகிவிடும். அதனால்தான் வள்ளுவனார் வீடில்லை,  விட்டு விலக முடியாது என்று சொல்கிறார் வெகு திட்டவட்டமாக.

ஒரு செடியை நடுதல்,  மரத்தை நடுதல் இவை போன்றவைதாம்.  இந்த நட்டலும். கொஞ்ச நாட்களிலே  வேர்விட்டு வளரத் தொடங்கிவிடுகிறது. கூடியவர் பிரிந்தால் கொஞ்சம் அழுகையும் வரலாம்,  அப்போது உங்கள் நண்பர் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்ததாக ஊரெல்லாம் ஓமலித்தாலும் உங்களுக்குத் தெரியாது போய்விடும். நட்பில் குற்றம் தெரிவதில்லை. அப்புறம் வீடில்லை.  விடுபாடு கிடையாது.

இவ்வாறெல்லாம் ஏன் சொல்கிறோ மென்றால்,  நட்பு என்பதற்கும் செடி மரம் நடுவதற்கும் வேறுபாடில்லை.  எல்லாம் நள் என்ற அடிச்சொல்லிலிருந்தான் வருகிறது.  அதனால்தான் :"நட்டலிற் கேடில்லை, பின்னர் வீடில்லை:" என்கிறார்.

இப்படி நட்பில் மிகைபாடு இருத்தலால்,  பூசைமொழியில் மிகுத்தல் கருத்திலிருந்து மித்திரம் என்னும் சொல்லைப் படைத்துள்ளனர். நட்பு என்பதே ஒரு கூடுதலில் வரும் மிகைதான்.  இதை உணர்ந்துகொண்டால் மிகு திறன் என்பது ஏன் மித்திரம் ஆனதென்பதை உணரலாகும்..  இதை "திறன்" என்று சொல்வதை விட திரன் என்று சொல்வதே திரிதல் காட்ட எளிதான சொல்லமைபு ஆகும்.  இது உண்மையில் திரி+ அன் > திரன்தான். திரிபுப்பொருள். அகரவரிசையை  நோக்காது  எழுத்துத் திரிபுகளை மட்டும் நோக்குக. இந்த உத்தி புரிதலுக்குத் தேவையானதாகும்.  திரி என்பதில் இகரம் கெட்டு திர் அன் திரன் என்று வந்த சொல்.  மிகத் திரிதல் > மித்திரி அம்> மித்திர ஆகி,  பூசைமொழியில் வரும் நட்புச்சொல்லுக்கு மிக்க நெருக்கமான திரிபு வடிவங்களை முன்வைக்கும்.  திறம், திரம், திரி அம்,  என்பவற்றில் திரி  அம் என்பது மிகத் தெளிவான விளக்கம்  அதாவது புரியவைக்கும் விளக்கம் ஆகும்.

கூடுதல் என்ற தமிழ்ச் சொல்லும் மித்திரன் என்ற சங்கதச் சொல்லும் அதிகம் புலப்படுத்தும் கருத்தில் உண்டாயின. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.