திங்கள், 6 நவம்பர், 2023

முயற்சி திருவினை

 எழுந்துநிற்  பதற்குமொரு  பயிற்சி  வேண்டும்

எழுந்ததும் விழுந்தாலும் அமர்ந்தி   ருந்தே  ,

அழுந்துயர் அடுத்தலிலா  முயற்சி  வேண்டும்

விழுந்தமை தனைஎண்ணி வியர்ப்ப  தின்றிக்

குழந்தையைப் போலதற்கு மனமே வேண்டும்

விழுந்தரம் அடுத்துவெற்றி எனவே  தாண்டு!


தொழுங்கரம்  தேவனருள்  ஈர்த்த வாறே

துலங்குவதே யாவதுமே  உலகின்  மீதே.


பொருள்:

விழுந்தரம் -  விழுந்தடவை அல்லது  விழுந்த பொழுது.

தரம் தர நடந்தன என்றார் கம்பநாடர்.

கரம்  -  கை.  (கர் - கை திரிபு)

ஒ நோ:       அர் - ஐ.  ஆர் -  ஐ  என்பவுமாம்.

வந்தனர்,  வந்தனை, வந்தார் என்ற விகுதிகள் ஒன்றிலிருந்து

இன்னொன்று திரிந்த தொடர்புடையவை.

ஏனைச் சொற்கள் எளியவை.

சனி, 4 நவம்பர், 2023

காசி என்னும் சொல்.

 இன்று காசி என்னும் சொல் பற்றியும் தொடர்புடைய ஒருசிலவற்றையும் தெரிந்துகொள்வதுடன் இச்சொல்லைத் தமிழ் மூலங்களைக் கொண்டு, சற்று ஆய்வுசெய்தறிந்திடுவோம்.

"காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்  தமை நன்னெறிக்கு  உய்ப்பது  வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"   என்பது மிக்க வான்பொருளுய்க்கும் தேவாரப் பாடலாகும்.

இங்குக் கசிதல் என்ற வினைச்சொல் பொருந்திப் பொருள்மிகுக்கும் சொல்லென்க. ஒருவன் காசிக்குச் செல்வதே  இறையை எண்ணிக் கசிந்துருகுவதற்காகத் தான்.

வெள்ளி போல் உருகி ஊற்றுமிடத்து அதில் ஒளிபடுமானால் வெண்மை மின்னி அழகுறுத்தும் என்பதில் ஐயமில்லை.  ஒளியில் மின்னுதல் என்பது இதன் பொருள் என்று ஏனை மொழியினர் கொண்ட பொருளும்  ஏற்புடையதே ஆகும்.
பட்டு மின்னுதல் என்பது மட்டற்ற மகிழ்வு தரும் பொருளாயினும்,  தேவாரம் தரும் பொருள் மனத்துக்கண் நிகழும் கசிவே ஆகுமாதலின்.  அம்மனத்தையே தளமாகக் கொண்டு பொருள் விளக்குதல் இன்னும் சிறப்புடைத்து என்பது  மேம்பாடுடைய கருத்தெனக் கொள்க.

சுடு > சூடு என்று முதனிலை ( அதாவது முதலெழுத்து ) நீண்டு பெயர்ச்சொல் ஆவது போலுமே,  கசிதல் -  கசி >  காசி என்று அமைந்து,  மனம் கசிந்துருக இறைவணக்கம் இயற்றுமிடம்  என்று பொருள் கொள்வது மிகுந்த  சிறப்புடைத்து ஈண்டு என்று முற்றுவிப்போம்.

இப்பெயர் தென்காசி என்று தென்னாட்டிலும் மீள்வருகைகொள்வதால்,  தென் காசிக்கும் இப்பொருள் கொள்ள இடனாகின்ற தென்க.

காசி என்பது காக்குமிடம் என்று காத்தல் அடியாக நின்று,  இருபிறப்பியுமாகும்.
மாசி என்பதில்  மா (பெரிது) என்ற சொல்லுடன் சி விகுதி வந்ததுபோலும் இஃது  விகுதிபேறு ஆகும். மாசி எனின் சிறப்புடைய மாதம். நாசி என்பது நாவின் மேலிருப்பது என்று பொருள்படும் உறுப்பின்பெயர். அதாவது  மூக்கு, நாவொலிகட்குச் சிறப்புச்செய்வது.  சி -  சிறப்பு எனினுமாம். ஆசி என்பது ஆக்கம் சிறக்க என்பது.     ஒப்பிட்டுக்கொள்க. 

இதனைக் காஷி என்று எடுத்தொலித்தல் பின் வந்த மெருகூட்டல்.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்.

புதன், 1 நவம்பர், 2023

மந்திரவித்தை வேறுபெயர்கள்

 மந்திரவித்தை என்பது எல்லாக் காலங்களிலும் மக்களிடைக் கடைப்பிடிக்கப்பட்டே வந்துள்ளது.  இதை ஒரு கலையென்று கூறலாம்.  ஆங்கில உலகில் இதை ஓர் அறிவியல் என்று சொல்கிறார்கள். Occult Science என்னும் இதுபற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. இது கலையா அறிவியலா என்பதைப் பற்றி நீங்கள் வாதத்தில் ஈடுபடலாம்.  தென் கிழக்காசியாவில் இது பயிலப்பட்டு பயன்பாட்டில் உள்ளதொன்றாகும்.

அசுரமாயம்,  பூதாசனம், சித்திரகருமம், இந்திரஜாலம்,  மாயாஜாலம், கர்மண, கிர்திஹாரம், மந்திரவித்யா, மந்திரரத்னா  என்பவை முதல் சமஸ்கிருதத்தில் பல சொற்கள் உள்ளன. இந்தச் சொற்களை எல்லாம் வேண்டியாங்கு மந்திரவித்தையைக் குறிக்கப் பயன்படுத்துதல் கூடும்.

தமிழில் மந்திரம்செய்தல் என்று வழக்கில் சொல்லப்படும் இதற்கு,  ஒட்டியம் என்றொரு  சொல்லும் உள்ளது.  சூனியம் செய்வோர் பூசனை செய்யும் காளிதேவிக்கு  ஒட்டியக் காளி என்றும் சொல்லுவர்.

ஓர் உண்மை நிகழ்வை அறிந்தபின்  அதை வேறுபடுத்தவே மந்திரங்கள் செய்யப்படுகின்றன. எ-டு   ஒரு பெண் ஓடிப்போய்விட்டாள்,  அவளைப்பற்றி நிகழ்வறிந்த பின் செய்யப்படுவதே மந்திரவேலை.  ஓடிப்போனவள் திரும்பவேண்டும் என்பது குறிக்கோள்.  இதனால் இந்த மந்திரம் ஒட்டியம் எனப்படுகின்றது.  ஒட்டிச்சென்று இயல்விப்பது ஒட்டிய மந்திரம்.  ஒட்டுவித்தை. ஒட்டுமந்திரம்.  இரண்டாம் உலகப்போர் முடிந்துபின் துணிப்பஞ்சம் இருந்ததால் துணிகளை ஒட்டுப்போடும் தையல்காரர்கள் அதிகமிருந்தனர். இதழொலிகளால் ஆன கவியும் ஒட்டியம் எனப்படும்.

பில்லி,  சூனியம் என்ற வழக்குகளும் உள்ளன.  புல்லுதல் என்றால் ஒட்டிச்செல்லுதல் என்று பொருள். புல்,  மரம்போல் மேலெழாமல் தரையுடன் ஒட்டிவளர்வதால்  (புல்லி வளர்வதால்)  அஃது அப்பெயர் பெற்றது. புறக்காழனவே புல்லென மொழிப என்பது  தொல்காப்பியம்.  ( மரபியல் காண்க). ஆனால் வரையறவுகள் இன்று வேறுபட்டுவிட்டனவால், தொல்காப்பியர் காலத்தின் "புல்லும்"  இன்று நாம் குறிக்கும் புல்லும் வேறுபடுதல் கொள்க.

பில்லி என்பது புல் > புல்லி> பில்லி என்று திரிந்தது.  உ-இ திரிபு.

சூழ்தல், உன்னுதல் என்ற இருசொற்களின் பகவொட்டாகத் தோன்றிய சொல்லே "சூனியம்"  என்ற மந்திரவகை.  சூழ் உன்னியம்.> சூ(ழ்) + (உன்)னியம்.  சூழ் ~தல்  என்பது ஆலோசித்தல்,  ஊன்றி எண்ணுதல்.  உன்னுதல் என்பது அவ்வாறு எண்ணியன முன் கொணர்தல். உன்னுதல் என்பது தியானித்தலுமாகும்.   சூன்யமென்பது ஒன்றுமின்மை என்பது இங்குப் பொருளாகாது.  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்ற குறள் நினைவிலிருக்கிறது.  சூனியம் என்பது மிக்கத் திண்ணியனவாய் எண்ணி நிகழ்த்தப்படுவது.  பில்லிசூனியம் என்பன இணைச்சொற்களாய் உலகவழக்கில் ஒருபொருட்குறிப்பின வாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


தொடர்புடைய மற்ற இடுகைகள்:


If these connections do not take you to the post,  there may be a fault in connection.
You have to search manually to reach these posts. We are sorry about that.