திங்கள், 12 ஜூன், 2023

குச்சி குறுச்சி கூர்ச்சி ( சொல்லியல் உண்மைகளும் மரபுகளும் )

 மொழி எனப்படும் தொடர்புக்கருவி,  நம் பிறப்புக்கு முன்னிருப்பது,  நமக்குப் பின்னரும் வெகுகாலம் வழங்கி மனிதர்களுக்கிடையில் பயன் தருவது ஆகும். யாரும் அதை முழுதுணர்ந்துவிட்டதாகக் கூறிவிட இயலாது. தொல்காப்பிய முனிவரே  தமக்கு முன்னிருந்தோர் சொல்லிவைத்தனவாகப் பலவற்றைக் கூறிச்செல்கின்றார். வள்ளுவனாரும்  பல கருத்துக்களிடையே,  பிறர் கூறியனவற்றையும் குறிப்பிட்டு,  அவற்றுடன் இயைந்தும் முரணியும் செல்கின்றார்.  எடுத்துக்காட்டாக,   "  அறத்திற்கே  அன்பு சார்  பென்ப  அறியார்!  மறத்திற்கும் அஃதே துணை" என்று இடித்துரை வழங்குகின்றார்.  "எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்றும் விளக்குகின்றார்.

"நான் சொல்வதே சரி"  என்று யாரும் முடிவாகக் கூறிவிடுதல் முடியாது. யாரும் முடிவென்று சொல்லியிருந்தாலும்,  அது முடிவாகிவிடாது என்பதை அறிதல் அறிவாகும்.இப்போது குச்சி என்பதையும்  குச்சு என்பதையும் இவற்றுடன் தொடர்புடைய சொற்களுடன் கண்டு சில விளக்கங்களை அடைந்து மகிழ்வோம்.  குச்சி என்பதில் கு என்பதே அடிச்சொல்.  சி என்பது விகுதி.   குச்சு என்பதிலும் அங்ஙனமே  சு என்பது விகுதி ஆகும்,  கு என்ற பகுதியின் பொருள்,  குறுகியது என்பதே ஆகும்   கு என்ற ஓரெழுத்து ஒருசொல்லின் பொருள் யாதோவெனின், அதற்கும் குறு  ( குறுகியது) என்பதற்கும் வேறுபாடின்மை அறிக.

இதைப் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்யின், பொருள் மிகத் தெளிவாம் காண்க:

குறு = கு,

குறுச்சி  : ( இது இடைக்குறைந்தால்  )  குச்சி  ஆகிவிடும்.

சி என்பதும்  சு என்பதும் விகுதிகளாதலின்,

குச்சி என்பதும் குச்சு என்பதும் ஒரு பொருளின் விரிவமைவுகளே.

இங்கு  வரும் "ச்"  என்னும் எழுத்து,  வல்லெழுத்து,  இதனை மென்மையாக்க எழுந்த சொல்லே:  குஞ்சு என்பதாகும். கோழிக்குஞ்சு கியாகியா என்று கத்திக்கொண்டு தொடுதற்கும் மிக்க மென்மையானதே.  குச்சு என்பது மெலிந்து குஞ்சு ஆனது பொருத்தமே ஆகும்.  பொருள் மென்மை உடையதாதலின் அதுவும் மெல்லெழுத்துக்களாலே குறிக்கப்படுதல் வேண்டுமென்பது தமிழ்ச் சொல்லியல் நெறியாகும். மெல்லிய பொருளைக் குறிக்குங்கால் தடபுட கடபுட என்று உருட்டுமுரடாக இல்லாமல்  குஞ்சு என்று வந்ததே சிறப்பமைவு என்பது கண்டுகொள்க.

கு என்பதிலிருந்து நேரடியாக, குன் என்ற அடிச்சொல் பிறக்கிறது. குன் என்பதிலிருந்து  சிறிதாகுதல் குறிக்கும் குன் + சு என்று இணைத்து,  குஞ்சு என்ற சொல்லை உருவாக்கியும் காட்டலாம்.    அதே தத்துவத்தை ( தன்+ து + அம்>  த + து + அம் > தத்துவம்)  அல்லது தன்மையை விளக்க,  இஃது இன்னொரு குறுஞ்சாலை  ஆகும் என்பதறிக. 

குன் > குன்றுதல்:  சிறிதாயமைவு.

கொடிநாட்டுக் குழி குறுமை உடையதாதலின்,  அதுவும் குஞ்சி எனப்பட்டது. மென்மையான கொடி தாங்கு கம்பு நிற்பிடம் இதுவாதலின் சொல்லும் மென்மை காட்டுகிறது.

குறு என்பது நீட்டப்படின்  கூற் என்றாகாது. கூறு என்பது கூடுமாயினும் அது கூர் என்று மென்மை காட்டுதலின், ஏற்புழி கொள்ளப்படும்.  அடி அகன்று இருப்பினும் நுனி குறுகியே கூராதல் கூடும்.  கூரான கால்களை உடைய சிறு இருக்கை கூர்ச்சி ஆகிப்   பின் குருச்சி ஆகித் திரிந்தது.  இதில் வரும் குரு என்பது ஆசிரியன் என்று பொருள்படும் குரு என்பதனுடன் தொடர்பிலாதது, கூர் என்பது குரு என்று திரிந்தது.  முற்படக் கூரியது எனவாகும் பொருளில் கூரியம் > குரியம் >  குயம் என்பது பெண்ணின் மார்பகம் குறித்தது,  நெடில் குறுகியதும் இடைக்குறை கொண்டதும் ஆன சொல்.

குச்சு  இல் என்பது குச்சில் ஆகிச் சிறு வீட்டைக் குறித்தது.

தொடர்புடையன  பிற, பின்னொரு நாள் எடுத்துக்கொள்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

பார்வை: 13062023

வெள்ளி, 9 ஜூன், 2023

சாரங்கபாணி என்ற பெயர்.

 சாரங்கம் என்பது பல்பொருள் ஒருசொல்.

இச்சொல்லை  அறிந்துகொள்வோம்.

சாரங்கம் என்பது  எய்கூர்குச்சியைக் குறிக்கிறது. இதை அம்பு என்று கூறுகிறோம்.  தொடக்கத்தில் குச்சிகளை எய்திருப்பர்.  பின்னர் அது வளர்ச்சியடைந்து ஓர் உயர்நிலை நண்ணி "அம்பு"  ஆனதென்பது உண்மை.

மனிதன் தனக்கு வேண்டியவற்றைத் தானே பண்ணிக்கொண்டான். அம்பு செதுக்கிச் செய்யப்பட்டதால் அல்லது பண்ணப்பட்டதால்,   பண்(ணு) + அம்=பாணம் ஆனது,  தொலைவிலிருந்தே விலங்குகள் முதலியவற்றை வீழ்த்த அறிந்த அவன் மனமிக மகிழ்ந்து பண்ணி முடித்த பெருமையில் " பாணம்" என்றான். பாணம் என்பது முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர். தொழிற்பெயர் என்பது ஒரு வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்ட பெயர்.  படு என்ற சொல் பாடு (தொ.பெ) என்று நீண்டு பெயரானது போன்றதே இது.  பண்ணப்பட்டவெல்லாமும் பாணம் ஆகாமையின்,  இது ஒரு காரண இடுகுறி ஆகும்.  பாணி -  பாணம் ஏந்தியோன்,

பாணம் என்பதற்கு வேறு சொல்லாக்கம் கூறப்பட்டிருப்பது காணினும், இதுவே அதன் சொல்லமைவு ஆகும்.

அங்கு இருக்கும் ஒன்றைச்  சாட வேண்டுமென்றால், எய்யும் செதுக்கிய கூர்குச்சிக்கு என்ன சொல்வது? அது "சாடு+ அங்கு+ பாணம்"  ஆயிற்று.  சாடு என்ற சொல்லின் டுகரம்  ருகரமாகும்,  சாரு ஆயிற்று.   சாரு அங்க பாணம் ஆனது.  மடி என்பது மரி  ஆனதுபோல்,  சாடு என்பது சாரு ஆனது.  இத்தகை திரிபுகள் பல உள. அடுத்து இருப்பது  அருகில் இருப்பது என்னும்போது டு ரு ஆனது காண்க.  முன் இடுகைகளில் பல காண்பீர்.  அங்கு என்பதில்  உகரம் கெட்டு  அங்க ஆனது. அங்கே  அல்லது அங்க  சென்று தாக்கும் பாணம்.

சேருதல்  சாருதல் என்பனவும் சேர்தல் கருத்தே ஆகும்,  இதன் மூலமும் இதை விளக்கலாம்,

ஒரு புதுக்கதையை அல்லது வரலாற்றை எழுதுகையில் புதிய சொற்களை அமைத்துக்கொள்ள பல உத்திகளைக் கையாளலாம். அறியாதவனைத் திக்குமுக்காடவும் செய்யலாம். எல்லாம் பண்டையர் திறமைதாம்,

அம்பு என்பதும் அங்கு சென்று புகுவது என்ற பொருள் உடைய சொல்தான். பு விகுதிக்கு  குறிப்புப் பொருளும் கூறலாம்,  சாரங்க பாணி என்பதிலும் இக்கருத்து உள்ளது.

அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டு.   அம்பு  -  பு என்பது விகுதியும் புகுதல் பொருளதான குறிப்பும் ஆகும். சொற்கள் சிலவற்றில் விகுதிகளும் பொருள் குறிப்பன. அன்பு என்பது அணுகி (  நெஞ்சில் ) புகுதல் என்று பொருளாக்கம் செய்துகொள்ளத் தக்கதே.  அன், அண் என்பன பொருளொன்றானவை.  அனுபந்தம் -  அணுக்கமாகப் பற்றியுள்ள  இணைப்பு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 2 ஜூன், 2023

பழச்சோலையும் பாதுகாப்பும்.

 




"பழச் சோலையில் பிடுங்கித் தின்னப்  பலர் வருவார்கள்" என்பது பொருளாயினும், காத்துக்கொள்வது தோட்டக்காரனின் கடமையும்  ஆகும்.



அகநானூறு. 109 :  மரச்சோலை

பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை . . . . 
.......................................................................
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன் உறு குன்றம் பல விலங்கினவே .

எனக் கண்டு,   பழச்சோலை என்பதும்  ஆம்  என்று  கண்டுகொள்க.

Edited: 12062023 1452