ஞாயிறு, 8 ஜனவரி, 2023

துர்க்கை உன் கருணை


 அடியர்   உனையே  வணங்கி  மகிழ்ந்தனர்

அடுத்திருந்  துன்னைப்   பாடிப் பரந்தனர்  

மடியில் மழைபொன் னானதிம் முறுவலில்

வடியும்  கருணை  உலகுக் களித்தனை.


அடியர்  ----  அடியார்கள்,  பற்றர்.  ( பக்தர் என்பது திரிபு)

உன்னையே ----   அம்மனையே

வணங்கி  - பணிந்து

அடுத்திருந்து -    உன்முன் ( அம்மன்முன்)  அமர்ந்து

பாடிப் பரந்தனர் ---  பாடலால் புகழ்ந்தனர்,

மடியில் மழை பொன்னானது ----   மடியில் பொன்மழை பெய்தது போலாம்,

முறுவலில் -  ( உன்) புன்னகையில்

கருணை  வடியும் -  நெஞ்சிரக்கம் வடிந்தது,

உலகுக் களித்தனை ---   இதனை உலக மக்கட்குப் பகிர்ந்தனை,  பகிர்ந்தாய்.


யாம்  அம்மனிடம் வைத்த விண்ணப்பங்கள் கேட்டுக்கொண்டபடி நடந்துள்ளன.  சில வேளைகளில் அம்மன் கோபமாய் இருப்பதாகத் தெரியும். வேறுசில சமயம் புன்னகையாய் இருப்பாள் அம்மை.  இது யாமே கண்டது.

இது ஒரு நேரடி நிகழ்வு, யாம் அறிந்துகொண்டது.  இதை யாம் யாரிடமும் நிறுவ வேண்டியதில்லை.  அம்மன் முறுவலிக்கும் போதெல்லாம் நல்லதாய் இருக்கும். பொருள்வரவு போலும் எதையும் யாம் முன் வைத்ததில்லை. பிறர்பொருட்டுச் சில வேண்டியுள்ளமை நினைவுக்கு வருகிறது. எவனிடமும் எப்பொருளும் வேண்டியதில்லை.   


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பரத்துவாசர் பொருள். சொல்.

 பரம் என்பதன் பொருள்

பரத்துவாசர் என்ற சொல்லில் அடிப்படை முதன்மை வாய்ந்த சொல்லாய் இருப்பது  " பரம் "  என்பதே ஆகும்.

பரம் என்பது பரத்தல்  என்ற   வினைச்சொல்லினின்று வருகிறது.  பர  ,  வினையால் எடுத்துக்காட்ட,  "பரந்த பூமி" என்ற தொடரைப் பார்க்கலாம்.  பல்வேறு பொருட்களை உடைய சொல் என்பதற்கு,  " பரந்த பொருள்தரும் சொல்"  எனினுமாகும். கடலும் பரந்த இயற்கை இடமே.  அதனால் அதற்குப் "பரவை"  என்ற சொல்லும் தோன்றியது.  பறவை என்பது குருவி முதலானவற்றைக் குறிக்கும்.

பரம் என்றாலே அவன் எங்கும் பரந்து இருப்பவனாக உணரப்படும் கடவுள்.   பரம்பொருள் என்ற இருசொல்லொட்டும் அஃதே ஆகும்.

இராமாயணத்தில் பரத்துவாசர்   ஒரு முனிவர்.  பரதன் அவரைத் தந்தைக்குரிய பணிவுதந்து வணங்கினான் என்ப.

வந்த   மாதவத்    தோனையம் மைந்தனும்

தந்தை     யாம்எனத் தாழ்ந்து வணங்கினான்;

இந்து மோலி அன்   னானும் இரங்கினான்,

அந்த   மில்நலத்   தாசிகள் கூறினான். 


மேல் என்பது மோல்- மோள்  என்று திரியும்.    மேலி(டு) >  மோலி.    மேல்- மோள் - மோட்சம் என்பதும் காண்க.  மோலி - மகுடம் 

பரத்து என்பது  பர(ம்) +  அத்து என்பதில் மகர மெய் குன்றிய சொல்.   அத்து என்பது சாரியை.  இது "அது"  என்ற சொல்லினின்று தோன்றி.    தகர மெய் இரட்டித்தது ஆகும்.

இம்முனிவர் பரந்து பல இடங்களிலும் தோன்றி அறியப்பட்டவராக இருக்கலாம்.   இவ்வாற்றல் இருந்தோராக எண்ணப்பட்டவர்களும் உளர்.  பரத்துவாழ் > பரத்துவாஜ்  எனல் திரிபு காண்க.  வாழ் >  வதி > வசி திரிபுகள்.

வாழ்த்து  என்பது வழுத்து என்று குறுகுதலும் காண்க.   வழுத்துதல்.

வசி >  வசி + அர் >  வாசர்.

பரதவர் என்ற மீனவர் குறிக்கும் சொல்லும் பரத்தல் என்ற வினையினுடன் தொடர்புடைய சொல்லே.  பரவை - கடல்.

இதை விளக்கும் பழைய இடுகைகள் காண்க. இங்கு உள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


சனி, 7 ஜனவரி, 2023

எழுப்பிவிடும் காலைக் கதிரோன்

 


கதிரவனின் ஒளிவீச்சில் கண்கள் கூசும்

கட்டிலிலே கிடந்திடவே வொட்டா தன்றோ!

உதிர்ந்துவிழும் தொங்குசீலைத் துளைகள் தம்மில்

ஒளித்துகள்கள்  எழச்செய்யும் விழவும் செய்யும்

பதிந்தபடி படுத்துறங்க  இதந்தான்  இல்லை!

எழுந்தப்பால் சென்றுவிடின் முற்றும் தூக்கம்.

இதந்தருமிவ் வுறக்கத்தைத் தொடர்ந்து  மேவ,

இனியிரவு வரும்விழித்தும் இருக்கப் போமோ? 


ஒட்டாது -  இயலாது

தொங்குசீலை -  சன்னல் துணி

 துளைகள் -துணியின் இழைகளின் இடைத்துவாரங்கள்

இதந்தான் -   நுகர்வுதரும் நிலைதான்

எழச்செய்யும் -  படுக்கையிலிருந்து எழும்பிவிடச்செய்யும்,

விழச்செய்யும் -  மீண்டும் கிடக்கச் செய்யும்,

முற்றும் - முடிந்துவிடும்

இதம் தரும் -  இன்பம் தரும்

மேவ மேற்கொள்ள,

விழித்தும் இருக்க - இனித்தூக்கம் என்பது வருமென்று இருக்க