புதன், 30 நவம்பர், 2022

கு, கூ. குடு, குவ, குவி முதலான அடிச்சொற்கள் விளக்கம்.

 கு என்ற ஒலிக்கு மிகப் பழங்காலத் தமிழில்  " கூடியிருத்தல்",  "சேர்ந்து(வாழ்தல்)"   "ஒன்றாகவளர்தல்"   என்றிவ்வாறான பொருண்மைகள் அடிப்படையாக இருந்தன என்பதை இற்றை நாள் ஆய்வுகள் தெரிவித்தல் தெளிவு.  இப் பொருண்மை தெரித்தலில்,  குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடுகள் இல. கூடு என்பதும் இணைந்திருத்தல்  குறிக்கின்றது.  குடு  ( குடும்பம்,  குடி)    என்பதும் அவ்வாறே இணைந்திருத்தலைத்தான் குறிக்கின்றது. கூடு என்பது குருவிகள் கூடிவாழ் இடத்தினைக் குறிக்கிறது என்பதையும்,  மனிதன் செய்துவைத்த கூண்டு என்பது இவ்வடிச்சுவடுகள் பற்றியமைந்த சொல் என்பதையும் அறிய எறிபடை  அறிவியலைத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தான் சொற்கலை* ( சொல்லின் கலை அல்லது கல்வி )  நமக்கு நுகர்பொருளாயும்  பரிமாணம் அடைந்துள்ளது.  

குவி(தல்).  குவவு(தல்), 

குவிந்த வேர்வகை,  குவா என்று  ஆவிறுதி பெற்றமைந்ததுடன்,  கூவை என்றும் நெடின்முதலாயும் அமைந்தது காண்க.   குவி > குவா,  இது  கல் > கலா என்பதுபோலும்,  காண்க.

குவிந்ததுபோலும் ஒரு சிப்பி,  குவாட்டி என்னும் பெயரினதாயிற்று.

குவியுருவினதாய பாக்கு,  குவாகம் ( குவி+ அகம்).

குவளை -  குவியுருவக் கடுக்கன்.

குவளை - குவியுருவின் மலர். 

குவளை மாலை யணிந்தார்,  வேளாண்மக்கள்,  எட்டியணிந்தார் செட்டிகள் போலுமேயாகுவர்.

இனிக் கூடி யிருக்கும் , வாழும் ஊர் குவலிடம் எனப்பட்டது.

நாம் வாழும் ஊர் . நம் ஊர்.   அப்பால் உளளது உலகம்.   அப்பால் என்பதை "அ" என்ற சேய்மைச் சுட்டு உணர்விக்கும். 

குவ >  குவல் >  குவல்+ அ+ அம் (விகுதி) >  குவல+ய்+ அம் > குவலயம்.

குவ> குவல்  ( குவ+ அல் )  - அல்:  சொல் இடைநிலை.

ய்  -  யகர உடம்படு மெய்.

அம் -  அமைந்தது குறிக்கும் இறுதிநிலை ( விகுதி).

குவலிடம் -  குவிந்து வாழும் ஊர்.

குவலயம் -   சூழ் உலகு..

குறிப்புகள்

பரிந்து மாணுதலே பரிமாணம்.  பரிதலாவது உள்ளிருந்து புறம்வருதல் (  சிறந்து விரிதல்.பின் மாணுறுதல் ).  இச்சொல் எழுத்து முறைமாற்று அமைப்பில் விசிறி > சிவிறி என்றமைதல் போல்,  பரிணாமம் என்று மாகும். இன்னோர் எ-டு:   மருதநிலம்சூழ் நகரம்:    மருதை > மதுரை.  இதைப் பண்டை மக்கள் மருதை என்றே அழைப்பினும்,  மதுரை என்று சொன்னது கல்வியுடையார் செய்த திரிபு என்று முடிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.

எழுத்துப் பிழைகள்  - பின்னூட்டமிட்டு உதவுக.

திருத்தம்: சொற்கலைதான், " சொற்களை"  அன்று. கற்கப்படுவது எதுவென்றாலும் அது கலை. கல்( கற்பது என்பதன் வினைச்சொல்) > கலை.


சடிதி, மற்றும் சடுதி, ஜல்தி

 அடு >  அடுத்தல் என்பதன் வினை எச்சம்  அடுத்து என்பது.

அடுத்து நடைபெறும் நடனக் காட்சி என்ற தொடரில்  அடுத்து என்பது நடைபெறும் என்பதற்கு அடைவாக வந்தபடியால் அஃது வினை எச்சம் ஆகும்.

ஒன்றற்கு அடுத்து இன்னொன்று நிகழுமானால் அது விரைவாக நடைபெறுதலைக் குறிப்பதனால்,  அது விரைவு குறித்தது.  ஆகவே அடுத்தது விரைவுமாகும்.

இதிலிருந்து,   அடு>  சடு >  சடு+ இது + இ >  சடிதி என்ற சொல் பிறந்தது.  இடையீடு இன்றி அடுத்து வருதலை உடையது எனவே, விரைவு ஆகும்.

சடு என்பது தி விகுதி பெற்று சடுதி என்றுமாகி விரைவு குறிக்கும்,

இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பீடு மன் > பீடுமன் > பீமன் ( வீமன்).  பீடுடைய மன்னன். 


சடுதி அல்லது சடிதி என்பது ஜல்தி என்று திரிந்து விரைவு குறித்தது. சடுதி அல்லது சடிதி என்பது மூலச்சொல் ஆகும்.  அடுத்து நிகழ்தலால் கால தாமதம் இன்றி நடைபெறுதல் குறித்தது.

காலம் தாழ்த்தாமல் ஒன்று நிறைவேறினால்,  காலம் தாழ்த்தி மதிப்புறவில்லை என்று பொருள். ஆகவே,  தாழ்+ மதி >  தாமதி என்பது காலம்தாழ்வுறுத்தலைக் குறித்தது.  தாழ் என்ற சொல்லில் ழகர ஒற்று கெட்டது.

தாழ் + கோல் > தாழ்க்கோல்> தாக்கோல்.   கதவில் தாழ ( கீழ்ப்பகுதியில் உள்ள) கோல்.

இங்கும் ழகர ஒற்றுக் கெட்டது. 

தாழ்க்கோல் என்பது தாட்கோல் என்றும் திரியும். தாட்பாட்கட்டை என்றும் வரும்.  தாட்பாள் என்றும் வந்துள்ளது.

தாழ்க்கோல் என்பது தாழக்கோல் என்றுமாகும்.

இக்கோலைச் செறிக்கும் வாய் மூட்டுவாய் எனப்படும்.

கதவிற் சேர்ந்தபடி ஒரு மூட்டும் கதவுப்பலகைக்கும் மூட்டுக்கும் இடையில் ஒரு செறிவாயும் இருப்பதால்,  மூட்டுவாய் ஆயிற்று.

தாழ்ப்பாள் உ

ள்விழும் இரும்புக்கூடு "முளையாணி"  ஆகும்.

கதவை முடுக்கி இருத்தும் ஆரம்  ( வளைவு)  ஆதலால் அது முடுக்காரம் என்று அமைந்து  பின் முக்காரம் என்றும் ஆனது.

இனிச் சதி என்பதைக் காண்போம்.

அடுத்திருந்து செய்வதே சதி.

அடு > சடு >  சடுதி >  ( இடைக்குறைந்து )  > சதி.   ( அடுத்துக்கெடுத்தல்).

சதி > சதித்தல் ( வினையாக்கம்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


சனி, 26 நவம்பர், 2022

திருட்டுப் போனால் என்செய்வது?பூசைக்குரிய நகை!

( இது ஒரு பழைய நிகழ்ச்சியைக் கூறும் வரிகள்) 


கோவி   லென்பது பொதுவிடம் --- அங்கேயும்

கோணல் புத்தியர் வருவதுண்டு!

ஆவி  போயினும் பிறர்பொருள் --- ஏலா

அன்பர்  தாமுமே  வருகின்றனர்.

திருடர் இயல்பு:

நீட்டும் கைக்கெது கிடைகுதோ  ---  எண்ணம்

நீங்கா முன்னதை எடுத்திடுவர்

பாட்டின் நல்லொலி திரும்புமுன் ---  எடுத்துப்

பக்கெனப் பைக்குள்  போட்டிடுவர்.

நகைகள்

அம்மன் போட்டிட  அணிசெய  ---   பற்றர்

ஆழ்ந்தும்  எண்ணியே  வாங்கினவே!

எம்மின் கண்களை மறைத்தவர்  --- திருடர்

கொண்டு   சென்றிடில் செய்வதென்னே?


போனவை போனவையே  ஆகட்டும் நீநெஞ்சே

ஆனவைக்கு  நீமகிழ்  ஆவன --- ஈனுபயன்

நீயறிந்து  மேற்கொள்வாய்  ஆயம்மை தானறிவாள்

ஓயாத தொண்டுசெய் வா.



 

பல நகைகளில் எது தொலைந்தது என்று இப்போது தெரியவில்லை. இருந்தாலும் இதுவும் அங்குகொண்டுவரப்பட்டவைகளில் ஒன்று.


கோணல் புத்தியர் -   நேர்மையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர்.

ஆவிபோயினும்  - உயிர் இழக்க நேர்ந்தாலும்

ஏலா - கொடுத்தாலும் ஏற்க மறுக்கும்

எண்ணம் நீங்கா முன் -  திருடத் தீர்மானித்து,  வசதி இல்ல்லாமல் அதை

மாற்றிக் கொள்ளுமுன்.

பாட்டின் நல்லொலி :  பாடிக் கொண்டிருப்பவர்கள் நிறுத்திவிட்டால்

மற்றவர்கள் பார்க்கக்கூடும்,  அதன் முன்பே திருடிவிடுதலைக் குறிக்கிறது.

ஆழ்ந்தும் எண்ணியே -  நல்லபடி யோசித்து.

ஈனுபயன் -  பிறப்பிக்கும் பயன்.

ஆய் அம்மை -  துர்க்கை அம்மன்.


அறிக மகிழ்க

மெய்ப்பு   பின்னர்