வெள்ளி, 4 நவம்பர், 2022

விலாசம் - தமிழ்

 

விலாசம் என்பதென்ன? பெயர் என்பதென்ன?

 ஒரு  மனிதனுக்குப் பெயர் என்பது மிக்கத் தேவையானது ஆகும். இதனாலே பெயர் என்ற சொல்லுக்குப் புகழ் என்ற பொருளும் நாளடைவில் மக்களிடையே ஏற்படுவதாயிற்று.  பெயர்தலாவது ஓரிடத்தினின்று இன்னோரிடம் செல்லுதல். இதிலடங்கிய கருத்தை, ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனைப் பெயர்த்து அல்லது வேறுபடுத்தி அறிய உதவுவது என்று விரிவுபடுத்தினர். எவ்வளவு சிறிய இடமாயினும் ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து அப்பால்தான் இருக்கமுடியும். ஒருவனின் கால்வைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் இன்னொருவன் கால்வைக்கமுடிவதில்லை. அதற்குப் பக்கத்தில் கால்வைக்கலாம், இதன் காரணமாகப் பெயர்த்தறிதல் என்பதைத் தமிழன் கூர்ந்துணர்ந்துகொண்டான். இடப்பெயர்வு போன்றதே மனிதக் குறிப்பின் பெயர்வும் ஆகும்.  ஆதிமனிதற்கு மிகுந்த அறிவு இருந்தது என்பது இதனால் புரிந்துகொள்ளமுடிகிறது. The space occupied by an individual  on ground can only be taken up by one person at a time. Different persons occupying the same place at different times must be differentiated. 

ஒருவன் தன் வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் வாழ்கிறான்.  இன்னொருவன் அதற்கு  அடுத்துக் கட்டுவான்.  இப்போது உள்ள அடுக்குமாடி வீடுபோல், அதே இடத்தில் முற்காலங்களில் வீடமைக்கும் வழக்கமோ திறனோ வளர்ந்திருக்கவில்லை என்றாலும் ஒருவீட்டிலிருந்து இன்னொரு வீட்டைப் பெயர்த்தறிதல் நடைபெறவே செய்தது.  வீட்டுக்கும் பெயரிட்டுக் குறித்தான். அந்தப் பெயர்,  அழகாக, "நீவாசம்" என்றோ  " அக்காவீடு" என்றோ இருந்திருக்கலாம். பெயர்ப்பலகை போடாமல் குறிப்பிட்டு அறிந்துகொள்வது  " அக்காவீடு"  என்பது.  மாமாவீடு என்பது வேறுவீடு.  இதன்மூலம், மாமாவீடு என்பது அக்காவீட்டிலிருந்து " விலக்கி"  அறியப்பட்டது.  விலக்குதலுக்கான இந்த சிந்தனைத் தெளிவு 'பெயர்" என்பதன் தன்மையை உணர்ந்ததனால் ஏற்பட்டதாகும். 

இவ்வாறு விலக்கி அறிய ஏற்பட்டதுதான் விலாசம் என்பது.  வில என்பது அடிச்சொல். ஆசு என்பது விலக்க ஆவதான பற்றுக்கோடு ஆகும்.  ஆகவே வில+ ஆசு+ அம் = விலாசம் ஆகும்.   நல்ல தமிழ்ச் சொல் என்று அறிந்து,  உங்கள் மாணவர்களுக்கோ கேட்பவர்களுக்கோ விளக்கிச் சொல்லுங்கள். பிற்காலத்தில் இது முகவரியைக் குறித்தது.  கடைகள் முதலிய இடங்களுக்கு இடப்படும் குறிப்புச்சொல்லையும் முன்நிறுத்தியது.  விலாசம் என்பதை விலாஸ் என்று பலுக்கினால் அது பிற சொல்லைப் போல் தெரியும்.  அன்று என்று அறிக.

ஆசு என்பது முண்டாசில் கூட இருக்கிறதே. முண்டு என்பது துண்டுத்துணி. முண்டு ஆசு முண்டாசு.

வில்லிருந்து அம்பு புறப்படுகிறது.  அம்பை விலகிச் செல்ல உதவுவதே வில். வில் என்பது இங்கு அடிச்சொல் -  பிரிந்து சொல்லுதல் குறிக்கும்.  இதிலிருந்து விலகுதல் என்ற சொல் ஏற்பட்டது.  விலாசம் என்பது இவ்வடியிற் பிறந்ததுதான்.

வில்லா என்ற இலத்தீன் சொல்லும் இதனோடு தொடர்புடைய இரவல்தான். வில்லாக்கள் தனித்தனியான மாளிகைகள்.

வங்காளத்தில் தாம் கண்ட வளையல்களை  வங்காளம் > பங்காள் > பேங்கள் என்று குறித்த ஆங்கிலேயனும் கெட்டிக்காரனே.

வில் ஆசு அம் என்பது வில்லாசம் என்று லகரம் இரட்டிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால்,  ஒரு லகர ஒற்றை இடைக்குறைத்து விளக்கலாம்.  உங்கள் மனநிறைவுக்கு.  எம் சிந்தனையில் அது தேவையில்லை.

விலகி விலகி அமைந்த உடற் பக்க எலும்புகள் விலா என்ற பெயர் பெற்றன. ஒரு மனிதனிடமிருந்து ஏதேனும் பெற்றுக்கொண்டு அடுத்தவனிடம் சென்ற பொருள்  வில்> வில்+தல் > விற்றல் ஆனது.  வில் > விலை.  வில் பு அன் ஐ > விற்பனை.

ஒரு சொல்லமைவது,  அந்த அமைப்புச் செயலின் முன்நிற்போனையும் அவன்றன் சுற்றுச்சார்பினையும்,  அவன் சிந்தனையையும்  சிறிதளவு அவன் சார்ந்துள்ள மொழிமரபினையும் நிலைக்களனாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.  எடுத்துக்காட்டாக பெயர்தல் என்ற சொல் அவன் சிந்தைக்குள் வரவில்லை என்றால்,  "வேறு" என்பதையே அவன் எண்ணிக்கொண்டிருந்திருப்பான் என்றால், பெயர் இட்டுக்கொள்ளப்படுவதன்று, ஆடைபோல் உடுத்துக்கொள்ளப்படுவது என்று கருதிக்கொண்டிருந்திருப்பான் என்றால்  அவன் அமைக்கும் சொல்:  வேறுடை என்று வந்துவிடும். உடுத்தும் உடையைக் குறிப்பதால் சரியில்லை, அடை என்பதே சரி என்று அவன் மனைவி சொல்கிறாள் என்றால் அதை அவன் வேறடை என்று மாற்றிக்கொள்வான்.இதில் இன்னும் கருதுவதற்கு இடமுள்ளது. இத்துடன் நிறுத்துவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

வியாழன், 3 நவம்பர், 2022

பொருள்--- சொல்லமைந்ததெப்படி?

 பொருள் என்னும் சொல்  ஒரு பகாப்பதம் அன்று.  இஃது ஒரு  தொழிற்பெயர் போல உள்விகுதி பெற்றமைந்த சொல்.  இதன் அடிச்சொல் பொரு  என்பதே. 

உள் என்னும் விகுதி பெற்றமைந்த சொற்கள் தமிழிற் பல. சில சொல்வோம்:  கடவுள்,  இயவுள்,  அருள்,  நருள், செய்யுள் ( செய் என்னும் வினைச்சொல் அடி), பையுள்,  ஆயுள் ( ஆ(தல்) )   உறையுள் எனக் காண்க.

வினைச்சொல்லும் விகுதி பெறும்;  அல்லாதனவும் விகுதி பெறும்.    அல்லாதன விகுதி பெறா  என்னும் விதி இலது  அறிக.

தமிழர் அணுகுண்டு என்னும் ஆயுதத்தைக் கண்டுபிடித்து எவன் தலையிலும் போடவில்லை என்றாலும்,   அணுவை அறிந்திருந்தனர்.   பொருட்களெல்லாம் அணுக்கள் இடையற  அணுக்கமாக  அடைந்து நின்று இயல்கின்றன என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.  அணுவியலைத் தனிக்கல்வியாக அவர்கள் வளர்க்கவில்லை போலும்,  எனினும் இதை அறுதியாய் உரைக்க இயல்வில்லை.  இதற்கான ஏடுகள் இருந்து அழிந்துமிருத்தல் கூடும். இருந்து, அடுத்து இலங்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுமிருத்தல் கூடும். நூல்கள் இலாமை யாது காரணம் என்று இற்றை நாளில் கூறவியலாது.

பொரு என்ற அதே அடிச்சொல்லில் பிறந்து  "பொருந்து" என்று வினையாய் அமைந்த சொல் நம்மிடை உள்ளது.  எல்லாப் பொருட்களும்,  தம்மில் தூள், தூசு, பகவுகள், அணுத்திரள்கள்,  அணுக்கள் என்பன  பொருந்தி நின்றதனால் அமைந்து உலகில் இலங்குபவையே  ஆகும்.  ஒரு பொருளாய் ஒன்று இலங்குதற்குக் காரணியாவது, இவ்வணுக்கள் பொருந்தி நின்றமையே  ஆகுமல்லால், மற்றொன்றில்லை. இதனின்று பொருந்தியமைவு எனற்பாலது நன்கு அறியப்படும்.

பொருவு என்ற வினை ( ஏவல் வினை)  பொரு என்ற அடியினெழுந்ததே  ஆகும். ஒத்தல்  நேர்தல் நிகழ்தல் என்ற பொருளில் இச்சொல் இன்னும்  உள்ளது.   பழம்பாட்டுகளில் இது வந்திருந்தாலும்,  இற்றை நாள் எழுதுவோர் பாடுவோரிடை இச்சொல் வழக்குப் பெற்றிலது என்று முடித்தலே சரியாகும். கம்பனிலிருந்து சின்னாள்காறும் இச்சொல் நிலவி வழங்கியிருத்தல் கூடும்.  உன்னைப்போன்ற அறிஞர் என்று சொல்ல விழைந்தோன்,  உன்னைப் பொருவு அறிவுடையோர் என்று கூறினாலும் பொருளதுவே ஆகும்.

புரைய என்ற உவம உருபு தொடர்புடையது.  புரைதல் வினை.  பொரு> புரை.

பொருவு+ உள் >  பொருவுள் என்றமையாமல்,  பொரு+ உள் >  பொரு+ (உ) ள்> பொருள் ஆகும்.    தேவையற்ற  உகரத்தை விட்டமைத்தனர்.   இதேபடி அமைந்த இன்னொரு சொல்:  அரு + உள் >  அருள்  ஆகும்.  இதில் உகரம் கெட்டது என்று இலக்கணபாணியிற் சொல்லலாம். இற்றை மொழியில்,  உகரம் களைந்தெறியப் பட்டது என்க.

தெர் > தெரி.

தெர் >  தெருள்.  (தெருள் மெய்ஞ்ஞான குருபரன் என்ற சொற்றொடர் காண்க)

தெரு என்பது போவார் வருவார் யாவும் தெரியச் செல்லும் பாதை. பிறபொருளும் கூறல் ஆகும்.

பொருள் என்பதே போலும் பொருளில்,    பொருக்கு என்ற சொல்லும் வழங்கும். பொருக்கற்றுப் போயிற்று என்றால்  பொருளில்லாமற் போயிற்று என்பதே. பொருக்கு என்பதில் கு விகுதி.  அடிச்சொல் பொரு என்பதாம். வழியிற் கிடக்கும் பொருக்குகளைப் பார்த்து விலகிச் செல் என்பதில் இது அமையும்.  காய்ந்த மண்ணுக்குப் பொருக்காங்கட்டி என்பதுண்டு. மண்ணாங்கட்டி என்பதும் அது.

தோல் காய்ந்து வெடித்தல்  பொருக்குவெடித்தல் என்று வழங்கும்.

பொருக்கு என்பது ருகரமிழந்து,  பொக்கு என்று குன்றும். இடைக்குறைக்கு நல்ல எடுத்துக்காட்டு.

பொருக்கு எனற்பாலது  இடைக்குறைந்து  பொருகு என்றாகி சோறு குறிக்கும்

பொருக்கு >  பொக்கு >  பக்கு:  இது சோறு முதலியவற்றின் அடிமண்டை.  ( அடியில் மண்டியிருப்பது  அல்லது உறைகுழைவு  )

இவற்றிலிருந்து பொருள் என்ற சொல்லின் திறம்கண்டீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

௳றுபார்வை செய்யப்பட்டது 13112022 0906

 

புதன், 2 நவம்பர், 2022

மதியமும் ( நிலவும்) காலக்கணக்கும்.

 மாதம் என்ற சொல்லின் பொருண்மையைப் பலவாறு ஆய்ந்துள்ளனர்.  காலத்தை அளவிடற்கு பண்டையர்க்கு ஓர் அளவை அல்லது "அளவுக் கருவி" இருந்ததென்றால்  அது நிலவு அல்லது நிலா எனப்படும் மதியமே  ஆகும்.  சைவ ஏடுகளில்  மதியம்  ( மாலை மதியம்)  என்ற சொல்லமைப்பு காணப்படுகிறது. காலத்தை மதிக்க அல்லது மதிப்பீடு செய்ய மனிதற்குக் கிட்டிய கருவி அதுவாம்.

அது புவிக்குத் தெரியாமல் இருக்கும் காலம் "அமாவாசை" எனப்படுகிறது. நிலவு இல்லாமற் போய்விட்டது என்று பண்டை மக்கள் நினைக்கவில்லை. அது இருளில் மூழ்கிவிட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது இருட்டிடமாக மாறிவிட்டது,  ஆனால் நிலவு அங்குதான்* உள்ளது!  இந்த இடுகைகளைப் படித்து அறிந்துகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html

 https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html 

இதற்குப் பொருள்:  அந்தப் பெரிய இருள் இடம்,   அழகிய இருள்சூழ் இடம்.  அ(ம்) என்பது சுட்டாகவுமிருக்கலாம்,  அழகுப் பொருள் படுவதாகவும் இருக்கலாம், ஏன் இவ்வாறு இருவழியிற் சொல்கிறோம் என்றால்  இவை அச்சொற்களிலே காணப்படுவதால். மா என்ற சொல்லும் பெரிது என்றும் பொருள்தரலாம்.  இருள் என்றும் பொருள்தரலாம்.  அளவு என்றும் பொருள்தரலாம். மாதம் என்ற சொல்லில் மா என்பது அளவு,  பேரளவு என்று பொருள்தரும்.  அமாவாசை என்ற சொல்,  கவிதைக்கு உரிய சொல்லாக கையாளப்படவில்லை. இதை "அம்மா வாசெ" என்றே சிற்றூரார்  ஒலித்தனர் என்று தெரிகிறது.  அமா~ என்று ஒலிப்பது பிற்காலத்தில் வந்த திருத்தம்.

அமாவாசை என்பதில் இடையில் தோன்றும் மா என்ற சொல்லும்,  மாதம் என்பதில் முதலில் வரும் மா என்ற சொல்லும்,   அளவுச் சொற்களே.  நிலக்கணக்கிலும் " மா"  என்பது "ஒரு மா நிலம் "என்று அளவே குறித்தது.  மாத்திரை என்ற சொல்லிலும் " மா" என்பது அளவுதான்.  மா என்பது பல்பொருள் ஒருசொல்.  பெருமை என்று பொருள்தரும் " மானம் " என்ற சொல்லும் அளவு, மதிப்பீடு என்பவை குறிக்கும் சொல்லே.   மதிப்பு என்ற சொல்லிலும் மதி என்பதிலும் மதி என்பது அளவு, அளவிடுதல் என்னும் பொருளதே.

மா - மதிப்பு.  மாமன் - மதிக்கப்படுபவன்,  மாமா.  பெரியோன்.

மாகக்கல் -  கானகத்தில் கிடைத்த ஒரு கனிமக்கல்.

மாக்கடு -  போற்றப்பட்ட ஒரு கடுக்காய் வகை.

மேஷர் ,  மீட்டர் என்ற பலவற்றிலும் அளவு உள்ளது.  அவற்றை இங்கு விட்டுவிடுகிறோம்.

எல்லாம் மகர வருக்கச் சொற்கள்.

மதித்தல் என்பதே இவற்றுக்கெல்லாம் உறவுச்சொல். வினைச்சொல்.

மதி -  வினைச்சொல்.  ஏவல் வினை.

மதி+ அம் =  மாதம்.  [  முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல்.]

எடுத்துக்காட்டு:  சுடுதல் , வினைச்சொல். verb.  சுடு> சூடு ( முதனிலைத் திரிபு), சூடு> சூடம்> சூடன்.  காம்ஃபர் என்னும் எரிக்கத் தகுந்த வெண்பொருள்.  அம், அன் விகுதிகள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

*அங்குத்தான் - not favoured.  வலிமிகல்

ஒரு திருத்தம்: 3.11.2022 11.17