வெள்ளி, 6 மே, 2022

உலோகம் என்ற சொல்லுக்கு இன்னொரு காரணம்.

 உலோகம் என்பது இருபிறப்பி என்பதை உணர்ந்துகொள்ளச் சொல்லில் உள்ளமைந்த காரணங்கள் இருக்கின்றன.  இது கடினமன்று.

அதிலொரு காரணம்.  இரும்பை உலையில் இட்டு உருக்கி எடுப்பர். அதன்பின் அது அடிக்கப்பட்டு வேண்டிய உருவினை அடைவிப்பர். அதன்பின்னரே அது   இறுதியுருவிலும் பயன்பாட்டிலும் ஓங்குவதாகும்.   ஓங்குதலாவது, இங்கு இறுதிநிலை பெறுவது.

உலை + ஓங்கு + அம் =   உலை ஓகு அம்  > உல் ஓகு அம் =  உலோகம் ஆகும்.

இன்னோர் ஆய்வும்  இதை ஒட்டியதே.  அதனை இங்கு வாசிக்கலாம்.

https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_15.html

அயம், அயில் என்பன அது அயலிலிருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது.  இந்த இரும்படிக்கும் இடங்கள் குடியிருக்கும் வீடுகட்கு அருகிலில்லாமல்  அயலில் வைக்கப்பட்டிருந்தன என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.  இந்த அயற்கருத்துக்கு அதுவும் ஒருகாரணமாக,  அல்லது அதுவே ஒரு காரணமாக இருந்திருத்தலும் கூடும். எவ்வாறாயினும் அயன்மைக் கருத்து உள்ளடங்கிய சொல் இதுவாகும் என்பதில் ஐயமில்லை. இரும்பைக் கண்டு வியந்தது ஒரு காரணமாக இருக்கும்.  ஐ -  வியப்பு.   ஐ >  ஐ+ அம் > ( ஐகாரக் குறுக்கமாகி )  அ+ அம் > அயம் எனலும் பொருந்தும்.  இரும்பு புடமிட்டுச் செய்யப்படும் சித்த மருந்து " அயச்செந்தூரம்"  ஆனது.

இரும்புக்கு இறைப்பற்று வழிகளில் வேலையில்லை ஆதலால்,  இச்சொல்லுக்கு பூசாரிகளிடம் வேலையில்லை.

அடித்து  ( அடிச்சு)  உருவு தரபட்ட தன்மையால்,   அடிச்சு>  அச்சு என்ற அமைந்தது இடைக்குறை ஆகும்.

ஓகு+ அம் >  ஓகம் என்பது போலும் அமைப்புகள் முன் பழைய இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளன. இவைபோல்வன இவண் மீண்டும் விளக்கப்படவில்லை

உலை என்ற சொல்லின் ஐ விகுதி, ஓங்கு என்பதில் ங்,  கு என்பதில் இறுதி  உ இவை ஒழிக்கப்பட்டாலே சொல் அமைப்புறும். சொல்லமைப்பாளர்கள் இவற்றை வைத்துக்கொண்டு மாரட்டிப்பதில்லை என்பதைப் பலமுறை கூறியுள்ளோம்.  மூலம் அல்லது சொல்லடிகளே இருத்திக்கொள்ளப்பெறும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

செவ்வாய், 3 மே, 2022

நீர்க்குழாய் ஆலோசனைகள்

 நீரலைக்கும்போது  பாதிச் சீரலைப்பே போதும்

நீரிருப்பைச் சேமிக்க இந்தளவே  ஆகும்!


தோய்க்கும்துணி  கூடுவதால் நீர்ச்செலவோ குன்றிக்

குறைவான அளவுநீர் சலவைக்குப் பற்றும்.


சவர்க்காரம்  இடுங்காலை குழாய்நீர்  அடைப்பின்

எவர்க்கெனினும் நீர்ச்செலவு குறைந்திடவே செய்யும்.


பல்துலக்கும் அப்போது அடைத்திடுக குழாய்நீர்

நில்லாமல் ஓடுவதால் நட்டமொன்றே  காண்பீர்.


இவை அரசாங்க ஆலோசனைகள்.  பலர் சொல்வனவும்  இவையே.

பாடலாக்கியுள்ளோம்.  சிவமாலா.


திங்கள், 2 மே, 2022

நெகிழியைப் பாடுவேனோ?

 உழைக்கும் --

கைகளைப்  பாடும்  வாயால்  ----- நெகிழிப்

பைகளைப்  பாடுவேனோ?

வாழ்வினைப் பாடும் வாயால் -----  மண்பெறும்

தாழ்வினைப்   பாடுவேனோ?


தாவிடும் பாங்கறியா  ---  நிலைத்துத்

தவிப்புடன்  பரவும்கொடி

ஓவிய மரஞ்செடிகள்  ----  படும்துயர்

கூவி உரைதரவோ?


ஓரிடம் பழுதுபட்டுவிட்டால் தாவி இன்னோரிடம் செல்லுதற்கு மரஞ்செடிகட்கு திறம் இல்லை. விதை கொட்டைகள் மூலமே பின்வருவனவற்றை ( இனி முளைக்க இருப்பன )  நகர்த்த முடியும்..  பாவம் இவை.  இவற்றையும் பாதுகாக்க வேண்டும்.

நிலைத்து - முளைத்த  இடத்திலே இருந்துகொண்டு.

ஓவிய -   ஒரு சித்திரம்  போல.

கூவி -  யாவரும் அறிய ஒலி எழுப்பி.

உரை -  எடுத்துச் சொல்லி.

இவை தாவுவதற்கு அரியவை ,  ஆகையினால் தாவரம் எனப்பட்டன. வேறு விளக்கமும் உண்டு.  தாவுதல் என்றால் இடம்பெயர்தல்.

தாவு + அரு + அம் >  தாவரம்.   ( தாவிச் செல்ல [ இடம் பெயர]  முடியாதன )

தாழ் + வரு + அம்  >  தாழ்வரம் > தாவரம் :  உயரமாக முளைக்க இயலாதவை.

இச்சொல் இருபிறப்பி.




நெகிழிப்பை.  PLASTIC BAG