புதன், 30 மார்ச், 2022

மையம் , இரு கருத்துகள் அடிப்படை

 மையம் என்ற சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அணுகி விளக்கலாம். இதற்கான வசதி தமிழில் மிகுதியாய் உள்ளது.

முன்னரே விளக்கியவற்றை  இங்கு முழுவதுமாகத் தருவிக்காமல்  சில குறிப்பிட்ட பின் மற்றொரு விளக்கத்தை முன்னிறுத்தலாம்.

நடுவில் உள்ள ஓர் இடமோ பொருளோ, நாற்புறமும் உள்ள் இடங்களை மருவி நிற்பதனாலேதான் மையம் ஆகின்றது.  இது நல்லபடியாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டத்தின் மையமானது, அவ்வட்டத்தில் எல்லாப் புள்ளிகளையும் மருவி நிற்கின்றது.

மரு என்பதன் அடி மர் என்பது.

சுருக்கமாக,

மர் > மய்>  மை > மையம் ஆகும்.

இதுபோல் திரிந்த இன்னும் உள்ள சில:

விர் >  விய் > வியன். ( வியனுலகு).  விர்> விரி> விரிவு.

கர் > கை.    கர்> கரம்;    கர்> கை.

அல்லது கை> கர் எனினுமாம்.


மர் > மரு.

மர் > மர் >  மர்த்து.  > மத்து ( இடைக்குறை)  > மத்தியம்.

மர்த்தியம்> மத்தியம் என்பதில்,  இ அம் என்பன இடைநிலையும் விகுதியும்.


மையத்துக்கொல்லை என்பது ஊர்களுக்கு நடுவான இடத்தில் உள்ள புதைகுழி  நிலம் என்று பொருள் விளக்கலாம்.


மாய் >  மய் > மய்யம் > மையம்.  இதில் மாய் , அதாவது இறந்தோரைப் புதைக்கும் இடம் என்று பொருளுரைக்கலாம்.

இங்கு இதை முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர் என்பது சரியாகும்.

ஆகவே சுடுகாடு குறிக்கும் மையம் என்பது முதனிலை குன்றியமைந்தது.

மையம் என்பது இருபிறப்பி ஆகும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 29 மார்ச், 2022

சில காய்கறிகட்குக் காத்திருக்கவேண்டும்.

 

கொள்ளுப்பாட் டன்காலம் வீட்டுத் தோட்டம்

கொடுக்கின்ற காய்கறிகள் தம்மைக் உண்டு

வள்ளல்போல் அரிக்குவியல் வைத்து வீட்டில்

வாழ்ந்திட்ட காலம்போய் விற்க வாங்கி

எள்ளுக்கும் எண்ணெய்க்கும் ஏக்கம் காக்கும்

எழில்நாக ரிகந்தன்னை  ஈண்ட டைந்தோம்.

கிள்ளுக்குக் கீரையுமே கிட்ட வில்லை.

கீரைவரும் நேரமன்று, கிடப்போம் காத்தே.


தெருமூலை கறிகாய்கள் அடுக்கி வைப்பார்

தேடிச்சென் றாங்கவைதாம் வாங்க வென்றால்

வருநேரம் வரவில்லை வாரும் பின்னே

வாய்திறந்து இதுசொன்னார் விற்கும் அன்னார்;

ஒருபடமே எடுத்துவீட்டுக் காங்க னுப்பி

உரைபரப்பி விட்டாங்க கன்று விட்டேம்.

தருபடமே கீழுளதே பார்த்துக் கொள்வீர்

தற்காலம் முற்காலம் பாலம் அற்றோம்.


அரிக்குவியல் - நெற்குவியல் எனினும் ஆம்.

ஏக்கம் காக்கும் -  விற்குமுன் சென்று வாங்கிவிடுதல்

ஈண்டு - இங்கு

கிள்ளுக்குக் கீரை - நல்ல கீரைதானா என்று எடுத்துப் பார்த்தல்

கீரைவரும் நேரம் -  வழங்கல் வண்டி வரும் நேரும்

நேரம் ஆகுமாதலால் படம் எடுத்து அனுப்பிவைத்தோம்.

இது தற்காலம் வேறு என்பதைக் காட்டுகிறது.

வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளில் முற்காலத்தோர் போல் நாம் இல்லை..

வேறு உலகில் உள்ளோம்.  படம்:



கீரைகள் அடுக்கு காலியாய் உள்ளது. ( வழங்குவோர் இன்னும் வரவில்லை).


This line has been changed:  எழில்நாக ரிககாலம் ஈண்ட டைந்தோம்  >  எழில்நாக ரிகந்தன்னை  ஈண்ட டைந்தோம்..  இசை நல்லபடி ஒழுகுதல் பொருட்டு.


ஞாயிறு, 27 மார்ச், 2022

பசலைக்கீரைச் சாம்பாரும் பகலுறக்கமும்

 

பொடிஉரு ளைக்கிழங்கு பொரித்துவை சாப்பாட்டில் 15

கடிதரச் சுவைத்திடக் காய்முருங்கைச் சாம்பாரில் 16

இடுவத னில்பசலைக் கீரையைச் சமைத்துண்பாய் 15

படுபகல் ஒருபாயில்   பகவறியாத்     தோய்வுறக்கம்  16


குறிப்புகள்:

பொடிஉருளைக் கிழங்கு -  ஒருவகைச் சிறு உருளைக் கிழங்கு

கடிதர - கடித்துக்கொள்ள

தோய்வுறக்கம் -   ஆழ்ந்த உறக்கம்

பகவறியா -  பகுதிபடாத

இடைநீங்கா  -  என்றாலும் எழுத்துக் கட்டளை அதுவே ஆகும்.  ஆனால்

மோனை இராது.


இந்த கவியில் முதலடி மூன்றாம் அடிகள் மெய்யெழுத்து நீக்கி   15 

எழுத்துக்கள்.  இரண்டாம் நாலாம் அடிகள் அவ்வாறே  16  எழுத்துக்கள்

உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.


பசலைக் கீரை குளிர்ச்சி என்பார்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.