சனி, 12 மார்ச், 2022

அனுகூலம் என்ற சொல்.

 அனுபந்தம் என்ற சொல்லைச் சுருக்கமாக இங்கு விளக்கியுள்ளோம்.  அது இங்கு உள்ளது:  

https://sivamaalaa.blogspot.com/2020/12/0-0.html

இனி அனுகூலம்:

அனு:    அண் >  அன் ;   அண்> அணு;  அன் > அனு  என்பவும் அறிக.

அடுத்திருப்பது, அடுத்துவருவது முதலியன இதில் குறிக்கப்படுவனவாகும்.

கூ எனத் தொடக்கத்துச் சொற்கள், பெரும்பாலும் சேர்ந்து இருப்பன, திரள்வனவற்றைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டு:

கூ > கூளம்:   சேர்ந்துவிட்ட குப்பை.

கூ >  கூலம்  சேர்ந்து குவியலாகும் தானியங்கள்.

தான் உழைத்து உண்டாக்கிய நெல் கொள் முதலியன "தானியம்" எனப்பட்டன.

தான் > தானியம்.

அதை உழைத்து உண்டாக்காதவனும் அதைப் பின் தானியம் என்றே குறித்ததனால் பொருள் விரிவுற்றது.

அனுகூலம் என்பது  நன்மை குறிப்பது.  கூலம் என்பது தானியமாகிய நற்பொருள்  குறித்தமையின்,  நெல்லை அணுகி நிற்கும் நன்மைகள் என்று கருதப்பட்டவை  " அனுகூலம்" ஆயின.   சொற்பொருள்:  அணுகிச் சேர்ந்து நன்மை விளைப்பவை என்பது பொருள்.

பக்கவலிமையாக வந்து கூடுபவை.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.


உக்கிரேன் போர் - அமைதி

இந்தக் கவிதை சிலவிடத்து  விடுகதைபோன்றிருக்கும். எனினும் ஊன்றிப் படித்தால் பொருள் தெளிவாகும். உங்கட்கு உதவ,  சிறுதலைப்புகள் உள்ளன. இவை பொருள்விளக்கமாக இருக்கும் என்பது எம் நம்பிக்கை.


விளக்கம் வேண்டுவோர் பின்னூட்டம் செய்க.


உக்கிரேன் நாட்டு நிலை 


உக்கிரேன் தரையின் மட்டம்

கொட்டமே இல்லா வட்டம்.

விற்கிறான் வாங்கு கின்றான்

வீதியில் காண்போமில்லை!

வைக்கிறான் வெளியில் காலை

நடக்கிறான் யாரும் இல்லை!

ஒக்கநிற்   போர்வி ழைந்த

உன்னதம் இதுவே தானோ?


இந்தியா பெற்ற ஆதரவு


ஆறென முறைகள் தப்பி

பார்புகழ் காவல் எய்தி,  

பேரொடும் இந்தி யாதாம்

பிடித்ததோர் பிணியின் நீங்கி

நேர்பட நிற்கும் தெம்பை

உருசியா தந்த தென்பார்.

கூறுவர் இதையும் உள்ளம்

கொள்வது கடனாய்க் கொள்வர்.


தெம்பு - வலிமை

கடனாய் -  கடமையாய்

கொள்வர் -  ஏற்றுக்கொள்வர்.


போர்முனைக் காட்சிகள்


போர்முனை தன்னில் கண்கள்

புலப்படச்  சிறுசு  வர்கள்,

யாருமுன் இருந்த மக்கள்

யாங்கணும் காணற்  கில்லை.

தேர்ந்தவர்  செய்வி ழாக்கள்

தினமுமே  நிகழ்ந்த நாட்டில்

 ஊர்ந்தன  பிணப்பு   ழுக்கள்

உலகுக்கு நேரக்  கேடாம்.  


யாருமுன் - யாரும் முன்

தேர்ந்தவர் -  திறமை உள்ளவர்கள் ( விழச்செய்வதில்)

நேரக் கேடு -   கெட்ட காலம்.

( நமக்குக் காலம் என்பது உலகுக்கு நேரம் )



சண்டைநிறுத்தம்:


உக்கிரேன் உருசியா போடும்

உக்கிரச் சண்டை பார்த்தால்

எக்கரை நடப்ப தேனும்

எம்மனம் கவலை கொள்ளும்.

தக்கதை அமர்ந்து பேசித்

தகுதியில் ஒத்துப் போக

ஒக்குமோர் வழியே தானும்

ஊர்ந்துமே வரினும் நன்றே.


ஊர்ந்துமே -  மெதுவாக


அமைதி வருக

விரைந்தினி வருக என்றால்

சுரந்தது மெலவே தோன்றும்

வருந்தரு ணத்தே வந்து

வண்ணநல் லெண்ணம் வந்தால்

அருந்திறல் உடையோர் என்றும்

அவனியன் னாரைப் போற்றும்.

பெருந்துணை அமைதிப் பெண்ணே

பிறழாது வருவாய் நீயே.


சுரந்தது -  வெளிப்பட்டது.  அமைதி எண்ணம்.

மெலவே:   மெல்லவே.  ( தொகுத்தல்,  அதாவது சொல்லைச் சுருக்குதல்)

அவனி -  உலகம்   (  அ + அன் + இ)  வகரம் புணர்ச்சியில் தோன்றிற்று.

( உங்களுக்கு அண்மையில் இருப்போர் உலகத்தினரே.  

அ = அங்கு;  அன் -  (  இது அண் என்பதன் ஒரு வடிவம்)  அருகில்,

இ - இது இருப்போரையும் இடங்களையும் குறிக்கும்.)

இந்த "அன்" என்பது  அன்பு என்ற சொல்லில் உள்ளது, காண்க.



அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 11 மார்ச், 2022

குறுகிப் பெயராகும் வினைகள்: மண்டை, புவி, புவனம்,

 புவி என்பது யாம் பன்முறை விளக்கிய சொல். இன்று இன்னும் இவ்வலைப்பூவிலும் விளக்குதற் குரித்தாகிறது. இவற்றுட் பல வாய்மொழியின. சில எழுத்தில் உள.

இதன் வினைச்சொல் பூத்தல். இது ஒரு பல்பொருளொரு சொல் எனினும், இங்குக் கருதுதற்குரிய பொருள் தோன்றுதலென்பதே.  பூமி தோன்றியதை நாம் பார்க்கவில்லை;  நாம் தோன்றியதையும் நாம் பார்க்கவில்லைதான் . எனினும் தோன்றினோம் என்பதைப் பல்வேறு கருத்தளவைகளாலும் கேட்பமைதியினாலும் நம்புகின்றோம்.

பூத்தல் வினை, முதலெழுத்து நெடிலில் தொடங்குகிறது. இதிலிருந்து தொழிற்பெயர் அமைகையில் பூ என்ற முதலெழுத்து குறிலாகிவிடுகிறது. ஆகவே முதனிலை குறுகித் திரிந்து பெயர் அமைகிறது என்று அறிதல் கடன். 

இலக்கண நூல்கள் இதுபோல அமைவனவற்றைத். தொழிற்பெயர் என்ற பிரிவில் அடக்கும்.  முதனிலை நீண்டு திரிந்தமைதலே இலக்கணியர் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. முதனிலை குறுகி அமைந்தன எனற்பாலன பேரளவில் அவர்கள் கவனத்தைக் கவரத் தவறினமைக்குக் காரணம் அறிய இப்போது  இயல்வில்லை. எதிர்காலத்தில் இந்நிமிர்தடை சாய்ப்புறலாம்.  ( சாய்>[ சாய்த்து இயல்வதாகி ]> சாத்தியமாகலாம்.

[தடையாக எதிர்நிற்பது ,  நிமிர்ந்து நிற்பது , சாய்க்கப்படுவதே சாய்த்தியம், சாத்தியம்.]

எனினும்,  காண் என்ற வினை, குறுகிக் கண் என்று திரிந்தமை மொழியில் தெளிவாகத் தெரிகிறது.  இதில் விகுதி அமையவில்லை .  ஆனால் சா(தல்) என்பது சவம் என்றமைந்த காலை,  அம் விகுதி பெற்றது.  தோண்டு என்பது தொண்டை என்று அமைந்த போது,  ஐ விகுதியை (ஈற்றில்) பெற்றது. தோண்டு என்பதே வினையாகலின்,  டை என்பது விகுதியன்று.  தொண்டை, தோண்டப்பெற்றது போன்ற ஓர் உறுப்பு அன்றோ?

எல்லா உறுப்புகளிலும் மாண்பு மிக்குடையது மண்டை ஆகும். இதற்குத் தலை என்பது இன்னொரு பெயர்.

மாண் - மாண்+ டை > மண்டை.   மாணுதல் - வினைச்சொல்.  சிறப்பு அடைதல் என்பது பொருள்.

இதில் நாம் சுட்டிக்காட்ட விரும்புவது யாது? அது:  மாண் என்ற நெடில் முதலாகிய சொல், டை விகுதி ஏற்க, மண் என்று திரிந்ததுதான்.  இதுபோல் திரிந்த இன்னொரு சொல்: முன் பன்முறை எடுத்துக் கூறியது போல, சா + அம் > சவம் என்பதுதான். யாவும் தமிழே என்று உவத்தல் கொள்க.

ஒரு குறள் மாண்டதமைச்சு என்று முடியும்.  மாண்டது என்றால் சிறந்தது என்று பொருள். ( செத்துப்போனது என்பதன்று).

இங்குக் கூறிய நெடில் குறிலாகித் திரிந்து பெயரான சொற்களைப் போலுமே, பூத்தல் என்பதிலிருந்து பிறந்த சொல்லாய  புவி  என்பதும்  ஆகும்.

பூ(த்தல்) > பூ + வி > புவி ஆயிற்று.

பூ + அன் + அம் >  புவனம்.  அன் என்பது இடைநிலை.

இரண்டிலும் பூத்தல் என்னும் வினை,  பு என்று குறுகியமை காண்க.

பூ + தலம் > பூதலம்.  இது இயல்பாய் அமைந்தது. இது இருபெயரொட்டு என்றோ வினைத்தொகை என்றோ கொள்ளலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.