சனி, 6 நவம்பர், 2021

சோதிட நம்பிக்கையில் சோர்வில்லை

 பேர்மாற்றம்  செய்தால் நாளும்

கோளுமே  பார்த்துச் செய்க,

நேர்மாற்ற  மாகத் துன்பம்

நேராமை போற்றிக் கொள்க; 

யார்கூற்றுக் கொண்டாய்   என்றே

என்னைநீர்  கேட்பீ ராயின்.

கூர்ஈற்றுக் கோளாய் வோனே

கூறினான்  ஈதென்  பேன்நான்.   


இலக்கத்தி னோடேழ் பத்தின்

ஆயிரம்  கொடுத்தான்  அந்தக்

கலக்கமில் கணியன் தானும்

கழறின யாவும் ஏற்றான்;

துலக்குறப்  பேரைப் பேர்த்தான்

இன்னொரு பேரை வைத்தான்! 

மயக்கறு நம்பிக் கையில்

மகிழ்தலம் ஆர்ந்த  தம்மா.


இதில் பெறப்படும் படிப்பினை யாதென்றால்,  சோதிடத்தை நம்பவில்லை என்றிருப்பவர், நம்பாமல் இருக்கலாம்.  அதில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறார்கள்.  நம்பாதே என்று நீர் சொல்லி அதை நாலு பேர் கேட்டுவிட்டால், உலகம் உம் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது என்று இறுமாந்துவிடுதல் அறியாமை ஆகும்.

இந்தச் செய்தியைப் படித்து இதை உணர்ந்து கொள்ளலாமே. (கீழே, அரும்பொருள் யாப்பியல் குறிப்புகள் இவற்றுக்கு அப்பால்  தரப்பட்டுள்ளது.  சொடுக்கி வாசிக்கவும். )

அரும்பொருள்:

நாளும் கோளும் -   சோதிடம்.

இலக்கத்தி னோடேழ் பத்தின்ஆயிரம்  ---  170000

கணியன் -  சோதிடன்

கழறின - சொல்லியவை

யார் கூற்று -  யார் சொன்னதை

கொண்டாய்-  ஏற்றுக்கொண்டாய்

கூர் ஈறு -  கூரான கடைசி.  அதாவது கூர்மதியால் இயன்ற

இறுதிக் கொள்கை.

நேராமை -  நடவாமல்.

துலக்குற -  விளக்கமாக

மயக்கறு  -   குழப்பம் இல்லாத

ஆர்ந்தது  -  நிறைந்தது

மகிழ்தலம் -  பூமி. மண்ணுலகு


யாப்பியல் குறிப்புகள்:

இது அறுசீர் விருத்தம்.  இந்த அடியைப் பாருங்கள்:

"இலக்கத்தி னோடேழ் பத்தின்

ஆயிரம்  கொடுத்தான்  அந்த"

என்று வந்துள்ளது,  இங்கு முதலடியில் இரண்டாவது மடக்கில்  இகரத்தில் தொடங்கியிருந்தால், ஒரு மோனை வந்திருக்கும்.  நான் வைக்கவில்லை. இப்படி மாற்றினால் மோனை வந்துவிடும்:

இலக்கத்தி  னோடேழ் பத்தின்

ஈரைந்து நூற்றைத் தந்தான்

என்று எழுதினால் மோனை வந்துவிடும்.  வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அதிகம் கணக்குப் போட்டு அது என்ன தொகை என்று வாசிப்பவர் கண்டுபிடிக்க வேண்டும்.  கவிதையில் 170,000 என்பதை தெளிவாக வைப்பதே கடினம். அதை மேலும் கடினமாக்கிப் படிப்பவர் திணறக்கூடாது என்பதானால் வைக்கவில்லை.  கருத்தறிதல் மிகுமழுக்கம் அடைதல் ஆகாது என்பதிலும் சற்றுக் கவனமாய் இருக்கவேண்டியுள்ளது.

கவிதையின் முதற்பாடலில் தொடக்காத்தில்:

பேர்மாற்றம்  நாளும் கோளும்

பிழையாது பார்த்துச் செய்க

என்று பாடினால் மோனை வந்துவிடும்.

பார்த்துச் செய்க என்ற  1.பேச்சுவழக்குத் தொடரில்  ஒரு கவனம் வேண்டும், 2. வேறு ஈர்ப்புகளும் கவர்ச்சிகளும் கவிதைக்கு வேண்டும் என்பன " செய்" என்ற வினை இரண்டாம் முறை வருவதால்  உணர்த்தப்படுகிறது என்னும் காரணியால் மோனையின்பால் மோகம் விடுபடுகிறது.  அதனால் மோனையை விழைந்து மாற்றவில்லை.  

இந்தச் சிந்தனைகளை அறிந்தால் கவிதைபால் ஈர்ப்பு மிகும் என்பதால் இதைத் தெரிவிக்கிறேன். அறிவீராக. 


HK star Jordan Chan paid fortune-teller S$170,000 to change his name for good luck

https://theindependent.sg/hk-star-jordan-chan-paid-fortune-teller-s170000-to-change-his-name-for-good-luck/

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வியாழன், 4 நவம்பர், 2021

தொற்றுநிலை மாற்றாமல் போய்விட்ட தீபாவளி இராசி

[தீபாவளி வந்தாலும் சென்றாலும் கோவிட்டின் கொடுமை

மாறவில்லை. மாற்றும் இராசிநலம் தீபாவளிக் கில்லாமல்

போய்விட்டதே!  அடுத்த தீபாவளிக்கு மாறிச் சென்றுவிடுமோ கோவிட்

தொற்று?    இக்கவிதை அந்த ஏக்கத்தைப் பதிவிடுகிறது. ]


எண்சீர்  ஆசிரிய விருத்தம்.


வருகின்றாய் வருகின்றாய் என்றார் மக்கள்

வந்தாயே தீந்தமிழால் வரவேற் றோமே

இருவருக்கு மேல்போகும் வருகை யாளர்

இருந்திடுதல் ஆகாதென் றியம்பக் கேட்டே

இருவருக்கு மேலாயின் கொடையே தந்தோம

எல்லோரும் மகிழ்ந்தேந்தும் வல்ல காலம்

கரவுருக்கும் செறிவுடனே அழகு காட்டிக்

கடுகியநீ கனிவின்றிச் சென்று விட்டாய்!


நோய்காலம் வந்திணைய நினைத்தி ருந்தார்

நுகர்ந்திடவே வடைமுறுக்குப் பலகா ரங்கள்

வாய்ச்சுவைக்கே கிட்டவில்லை அயர்ந்து விட்டார்

வணிகர்களே நலம்பெற்றார் என்றார் சில்லோர்

தாய்பிள்ளை என்றபலர் தனித்து வைகத்

தரணியெலாம் தாறுமாறாய்ப் போயிற் றன்றோ?

காய்களிலே கனிந்தவையோ சிலவே யாக

காண்பலவும் பயன்சுருங்குற் றனவே கண்டாய்.

 

அடுத்தநாடு செல்வதற்கு அணிய மானோர்

அதன்பயனை அடைந்திடவே கதவை மூடிப்

படுத்தனைய  நிலைதனிலே  இருந்த தாலே

பாரினிலே ஓர்நலமும் வாரா மையால்

கெடுதலையாய் யாவுமின்று முடிந்து போச்சே

கேடுகளை அகற்றாமல் ஓடிப் போனாய்

விடுதலையும் வியனுலகில் விஞ்சி  வந்து

விடம்களைந்து நடம்படுமோர் கடம்கா  ணோமே.


மனமாற்றம்:


தீபா வளியென்ன செய்யும்  கடுந்தொற்று

தீவை அலைக்கழிக்கும் போது.


தீபாவளிக்கு வேண்டுகோள்:


மீண்டும் வருங்கால்   மிகுதிறன்  காட்டிவிடு

தாண்டித் தடம்கண்  டிட.



மகிழ்ந்தேந்தும் -  உவகையுடன் எதிர்நோக்கிய

கரவுருக்கும் -  கரவு உருக்கும் -  மறைவானவற்றை நெகிழ்த்தி அதன்
மறை தீமையை வெளிப்படுத்தும்.

கடுகிய - விரைந்த

கனிவு -  அன்பு  (இல்லாமல் )

வந்திணைய -  வந்து கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள

காய்களிலே கனிந்தவை - காய்களில் உண்ணத்தக்கவை

கேடுகளை -  தொற்று,  பொருளியல் சரிவு முதலியவற்றை

வியனுலகில் - விரிந்த உலகில்

விஞ்சி  -  மிகுந்து

காண்பலவும் -  பார்க்கின்ற பல நிகழ்வுகளும்

கடம் -  கடமை

விடம் - தொற்று

தடம் -  செல்லும் பாதை

விடுதலையும் வியனுலகில் விஞ்சி  வந்து

விடம்களைந்து நடம்படுமோர் கடம்கா  ணோமே.

இது தடம் கண்டு மேற்செல்லாவியலாத நிலையைக் காட்டுவதால் கவிதை

கரடுமுரடாக முடிக்கப்பட்டது அறிக. எல்லாம் வல்லொலியில் வந்தது.




மெய்ப்பு பின்னர்

மறுபார்வை 09112021 1422


கதி என்ற சொல்.

 கதி என்பது செல்லுதல், செல்வழி குறிக்கும் சொல்.  

இது கடுகுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது.

கடு > கடுகு~தல்   விரைந்து செல்லுதல்..

அடிப்படைக் கருத்து:  கடுமை.

கடுகு+ தி >  (டு என்ற ஈற்று எழுத்தும் கு என்ற வினையாக்க விகுதியும் கெட்டு ) >  கதி ஆகின்றது.

கதி என்பது பேச்சில் கெதி என்றும் திரியும். " என் கெதியைப் பாரையா" என்று அழுதல் கேட்டிருக்கிறீர்களா?

கதி > கதி+ இர் >  கதிர்.  இகரம் கெட்டது.

கதிர் > கதிரவன்.

பண்டை நாட்களில் ஆறுகள், குளங்கள், மேடு பள்ளங்கள், மலை, கல்மேடுகள் என்று பல தடைகள் இருந்தன.  இவ்வாறிருந்தது மனிதனின் நகர்வினைக் கடினமானதாக்கியது.  அதனால் ஒன்றைக் கடத்தல் என்பது ஒரு கடின வேலையே  ஆயிற்று.

அதனால் கடு ( கடுமை ) என்பதிலிருந்து கடு+ அ > கட என்ற வினைச்சொல் தோன்றிற்று.  கடு என்பதன் ஈற்றுகரம் கெட்டது.

கட > கடத்தல்.

ஒன்றைக் கடந்து செல்லுதலும்  "கதி" என்றே ஆகும்.

கட > கடதி > ( இடைக்குறைந்து ) கதி.

நோக்கின், கடு+தி > கதி என்பதும் கட+ தி > கதி என்பதும் ஒன்றுதான்.

கட + தி என்ற சொல்லாக்கப் புணர்வில் வலி மிகவில்லை.

வலி மிகும் இடங்களும் உள. எ-டு:

இரும்புக் கம்பி நல்ல வெப்பக்கடத்தி.

கடத்தி என்பதில் ஏன் இங்கு  வலி மிகுகின்றது? கடத்தி என்பது பிறவினையினின்று தோன்றுவதால்.

கடத்து + இ > கடத்தி.

அறிக  மகிழ்க

மெய்ப்பு பின்பு.