சனி, 12 ஜூன், 2021

மரம் செடிகள் வருவித்த மழை

[இதை நீட்டியும் குறுக்கியும் மாற்றமாகப் பாடி

முடித்துள்ளேன்.  உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சந்தங்கள் மாறிமாறி வருகின்றன.] 



அடிக்கடி வருகுது  மழை ---  நீரின்றித்

துடிக்குமோ மரக்கிளை இலை?

இடிக்கின்ற பரவையின் அலை --- தூதாகி

இவண்சொன்ன தாலிந்த நிலை!    1


பரவை -  கடல்

இவண் - இங்கே


சலவைத் துணியினைப் போட்டேன் ---  அதற்குள்

சட்டென்று கருத்ததே  முகில்!

விலகி ஒளிந்ததே   பகல் ----  வந்து

விளைந்ததே  ஒருசிறு திகில்         2


முகில் - மேகம்

பகல் - சூரியன்


துணிகளைத் துரத்திடும் வேகம் ----  கொண்டு

தொப்பென் றாகுமுன் எடுத்தேன்;

பணிகளை நிறுத்தியே களைத்தேன் ---- நீங்கள்

பார்த்திருந்தால் இரங்கும் மனம்.        3


துரத்திடும் வேகம் - துரத்துவது போன்ற வேகம்.


ஒருமணிக் கூறிதோ  ஓட  ---  என்னுடன் 

ஒன்றி உழைத்ததென் மூளை.

மறுமணிக் கூறுக்குள்  சுடர் ---   இங்கு

வந்ததும்  இல்லையாம்  இடர்.        4


சுடர் - சூரியன்

இடர் - துன்பம்



மீண்டும் கம்பியில் துணி ---  போட்டு

மேல் தொடர்ந்தேன்என் பணி,

மூண்டது மீண்டும்ஓர் மாரி  ---  ஆற்றில்

முங்கி நனைந்தது போலான  [சேலை]        5


மாரி - மழை.

முங்கி  -  மூழ்கச்செய்து


நேயர்களே   இந்தக் கவிதையில்  சேலை என்ற இறுதிச் சொல்லுக்குப் பதில்

சாரி என்று எழுதினால்,  மேலும் நன்றாக இருக்கும்  ஆனால் இது அயல் திரிபு.

ஆகையால் சேலை என்றே போட்டிருக்கிறேன்.  உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.  

சாரி என்று முடிக்கலாமா?   சாரி என்பதும் சீரை என்பதன் திரிபுதான்.  சீரை என்பது 

மரப்பட்டை குறிக்கும் தமிழ்ச்சொல்.






அருள், வரம், கடைக்கணித்தல்

 அருளுதல் என்பது இப்போது பெரிதும் புழக்கத்திலுள்ள சொல்லாகும்.  அருள்மிகு என்ற அடைமொழியுடன் சாமி கும்பிடும் இடங்களும் குறிக்கப்படுகின்றன. ஏறத்தாழ எழுபது ஆண்டுகட்கு முன் வந்த ஒரு திரைப்பாடலும் " அருள்தாரும்..."  என்று தொடங்கிப் பெரிய வரவேற்பைப்  பெற்றது.  அருள் என்ற சொல்லும் பொருள். இருள் என்ற சொற்களுக்கு எதுகையாக வருமாதலின், இதன்  விரி பயன்பாட்டினை உணர்ந்து கொள்ளலாம்.  

இதற்கு ஈடான சொற்களும் தமிழ்மொழியில் கிடைக்கின்றன.  அருளுதல் என்பது ஏதெனும் ஒரு வரத்தைத் தருதல்தான்.  ஆயினும் அருளுதல் என்பதில் உள்ள பொதுப்பொருண்மை வரமென்பதில் இல்லை.  இரண்டு வரம், மூன்று வரம் என்று எண்ணிக்கை உடையதாய் இருப்பது வரமென்னும் தெய்வத்தரவு.  தெய்வத்தினிடமிருந்து வருவது ஆதலின், வரு>  வரு+ அம் >  வரம் ஆகிறது.  வரு என்பதன் இறுதி உகரம் கெட்டு  அம் விகுதி பெற்று அமைவது வரமென்னும் சொல்.  வரமாவது தெய்வத்தினிடமிருந்து வருவது என்னும் பொருளது  ஆகும்.

பற்றன் அருள்வேண்டுங்கால் தெய்வத்திடம் "கடைக்கண் பாருங்கள்"  என்று வேண்டுவதே பெருவழக்காகும். பல தெய்வ வணக்கப் பாடல்களிலும் இத்தகு வேண்டுதல் இடம்பெறுவதைக் காண்கிறோம்.  இதிலிருந்து அமைந்ததே கீழ்க்கண்ட சொல்.

கடைக்கண் >  கடைக்கணித்தல்.   

இது மிக்க எளிமையாக அமைந்த சொல்லாகும். கடைக்கண் பார்வையினின்று அருள் சுரத்தல் என்பது பொருளாகிறது.   தெய்வம் கடைக்கணித்தல் மட்டுமின்றி,   மனிதர்களிடையிலும் பொருந்துமிடத்து இதைப் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறோம்.  எடுத்துக்காட்டாக,  "குடியரசுத் தலைவர் இவ்வழக்கின் தன்மையை ஆராய்ந்தபின் மரண தண்டனையை விலக்கி, கடைக்கணித்துள்ளார்" என்று எழுதலாம்.

கண் என்ற சொல் விழி என்று பொருள்பட்டால் மட்டுமே இப்பொருள் பொருத்தமாகிறது.  அதற்கு இடம் என்ற இன்னொரு பொருளும் உள்ளது. அந்தப் பொருளை மேலிட்டு இச்சொல்லைக் கையாள்வதாயின்,  இச்சொல்லுக்குப் புறக்கணித்தல் என்ற பொருள் வந்துவிடுகிறது.   ஆகவே இருபொருள் படும் இச்சொல்லைப்  பொருண்மையும் இடமும் அறிந்து பயன்படுத்துதல் வேண்டும் என்பது தெளிவு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர் 


வெள்ளி, 11 ஜூன், 2021

. (உல்லாசம்) :அடிச்சொற்கள் உல் குல் சுல்

மேற்கண்ட அடிச்சொற்களை ஆராய்வோம்.

குருள் > சுருள்

 சுருளுதல் என்ற சொல் குருளுதல் என்றும் திரியும்.  முன்னரே நாம் அறிந்துள்ள  சகர ககரத் திரிபுகளை, இது மேலும் உறுதிசெய்வதாகும். இத்தகு திரிபுகட்கு இன்னொரு எடுத்துக்காட்டு முன்வைப்போம்:  கேரளம் < > சேரலம்.  இது லகர ளகர பரிமாற்றுக்கும் உதாரணமே. இன்னொன்று: (இளகியம்) <> இலேகியம். இது அகர ஏகாரத் திரிபுக்கும் ஆகும்.

சுருளுதல் குருளுதல் இரண்டுமே வளைதல் ஆதலின்,   சுல் -  குல் என்ற முந்து வடிவங்களுக்கும் இப்பொருள் இயற்கையாகவே உள்ளதென்று நாம் ஊகிக்கலாம்.  இந்த ஊகத்தை மெய்ப்பிக்க,  குலவு என்பதன் பொருளை ஆய்ந்தால் அதற்கு வளைவு என்ற பொருளும் இருக்கின்றது.  எனவே  சுல் என்பதும் வளைவு,  குல் என்பதும் வளைவு;  பின்னர் லகர - ரகரத் திரிபினால் சுர்  - குர் என்பதும் வளைவு என்பது தெளிவாகிறது. இனி.  குலவுதல் என்பதை நோக்கினால் அதற்கு உலவுதல் என்ற பொருளும் உள்ளது. உலவுதல் என்பது சுற்றிவருதல்.

வளைவு -  அடிப்படைக் கருத்து

இப்போது இந்த அமைப்பு விதியை நாம் அறிகிறோம்:

உல் -  குல் - சுல்.  எல்லாம் வளைவு குறிக்கவல்லவையாகும்.

வு என்னும் தொழிற்பெயர் விகுதியை இணைக்க,

உலவு, குலவு, சுலவு  ஆகும்.

ஆ என்னும் விகுதி இணைத்தால்:

உலா,  குலா,  சுலா என்று அடுக்கலாம்.

உலா,  குலா என்ற சொற்கள்  உள்ளன.  குலா என்பது மகிழ்ச்சி என்று பொருள்படுவது.  மகிழ்ச்சி வந்துவிட்டால் மனிதனும் விலங்கும் வளைவளைந்து ஆடுவதால் ,  இம்மகிழ்ச்சிப் பொருள் பெறுபொருள் என்பது தெளிவு.

சுல் அடிச்சொல் சிறப்பு

சுல் என்பதை எடுத்துக்கொண்டால்,  சுலவுதல், சுலாவுதல், சுளாவுதல் என உள்ளன.  சோலையில் சுலாவினான்  என்ற வழக்கு உண்டு.  தேவாரத்திலும் உண்டு.   சுளாவு = சுழலுதல்.  இங்கு லகர - ளகரப் பரிமாற்றமும் காணலாம்.  சுலாவுதல் என்பது சிலாவுதல் என்றும் திரிந்துள்ளதால்,  பொருள் அணுக்கமும் இருப்பதால் இங்கும் நாம் பெருவெற்றியை  அடைகின்றோம். மனம் மகிழ்வு என்பதே வெற்றி.

இப்போது சொல்லாய்வு சுவைதருகிறது.

குலவு:  புதுப்பதம் அமைவு -  காரணம்: மறைவு

ஆனால் இது ஆடுதல் ( வளைதற்) பொருள் நாளடைவில் மறைந்துவிட்டதனால்,  குலா +  ஆட்டு =  குலாட்டு என்ற ஒரு சொல் ஏற்பட்டு,  அது உற்சாகம் என்ற பொருளை அடைந்துள்ளது.

எடுத்துக்காட்டு:  நீம் என்ற சொல்லில் பன்மைப்பொருள் மறைந்துவிட்டபடியால் கள் விகுதி சேர்த்து நீங்கள் என்ற சொல்லைப் படைத்துக்கொண்டது போலுமே இது.

இன்று கண்டுபிடிப்பதற்கு

இப்போது உல் என்பதனடித் தோன்றிய உல்லாசம் என்பதைக் கண்டறிவோம். இது தொடக்கத்திலே நுழைவாயிலைக் கொண்டுள்ளது என்னலாம்.  அதுதான் உல் என்பது.  உல் என்பது சுற்றுதற் கருத்து -  வளைதற் கருத்து இவற்றை உள்ளடக்கியுள்ள படியினால்  அது குலவு, குலாட்டு என்பனபோல் மகிழ்வுக் கருத்தை வெளிப்படுத்தியது வியப்பு அன்று.  உல் ஆயது  >  உல்லாயம் > உல்லாசம் என்று யகர சகரப் பரிமாற்றப்படி வந்துவிடுகிறது.  உலவுதல்  குலவுதல் எல்லாம் உள்ளடக்கமாய் இச்சொல் அமைகிறது.  ஆயது எனின் ஆகியது.  அவ்வளவே.  சொல்லமைப்புக்கு அடிப்படை : உலவலும் குலவலும். மற்ற மகிழ் வகைகளை நீங்கள் உள்ளடக்குவதை இந்தச் சொல் தடுக்க அதனிடம் ஒன்றுமில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்..