வியாழன், 11 மார்ச், 2021

தமிழ் மூலச்சொற்கள்

{ சுல் என்ற மூலச்சொல்லை ப் பற்றி :  இது இம்முன்னுரைக்கும் பின்னர் எழுதப்பெறும். }

தமிழில் இன்னும் தொல்பழங்காலத்து மூலச்சொற்கள்  கிடைப்பதானது  ஒரு வகையில் நமது பாக்கியமே ஆகும்.  தமிழின் மூலச்சொற்கள் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட  அருந்தமிழ்ப் புலவர்களின் ஆய்வு நூல்கள் எல்லாமும் நம்மை வந்தடைந்துவிடவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கை ஞானப்பிரகாச அடிகளாரின் சொல்லாய்வுகள் வெளியீடு  1940க்கு முன் வெளிவந்ததாகத் தெரிகிறது.  இந்த வெளியீடுபற்றிய சில குறிப்புகள் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த புதிய உலகம் இதழொன்றில் குறிக்கப்பட்டுள்ளன.  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தாருக்கு  இவ்வாய்வு முழுதும் கிடைத்துள்ளதா என்று தெரியவில்லை. மறைமலையடிகளாரிடம் ஒரு நூற்படி ஆசிரியரால் தரப்பட்டது என்று தெரிகிறது.  இந்த நூற்படி ஒரு வேளை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடும்.  இது இன்னும் கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை.  இதற்குமுன்  புலவர்கள்  சிலர் சுட்டடிச் சொல் ஆய்வில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.  அவர்களின் ஆய்வுகள் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருக்கலாம்.  வேங்கடராஜுலு ரெட்டியாரின் சொல்லாய்வுகள்  இப்போது கிடைக்கவில்லை. இவர் தம் நூலொன்றில்  "எழுதருகை " என்ற பழந்தமிழ்ச் சொல்லே " எச்சரிக்கை" என்று திரிந்ததாக ஆய்ந்து வெளியிட்டிருந்தார்.  அரியபல ஆய்வு  முடிவுகளை இவர் வெளியிட்டிருந்ததாகத் தெரிகிறது. இவர்தம் நூல்கள் இங்குக் கிட்டவில்லை.

(  சொல்:   எச்சரிக்கை.  ஒப்பீடு:   முடிச்சறிக்கை -  முச்சறிக்கை (  டிகரம் மறைந்த சொல் . ழ - ட போலி  எ-டு: பாழை -  பாடை,   அயல்திரிபு:  பாஷை)

பிற்காலத் தமிழர் என்போர் பெரும்பாலும் தமிழார்வம் மற்றும் மொழியறிவு குன்றிய ஒரு கூட்டத்தாரே என்று நாம் கருத்து மேற்கொள்ளலாம். இவர்கள் தம்முள் கலாய்த்துக்கொள்ளும் குணம் உடையார்.   தம் முன்னோர் தந்த அறிவுச்செல்வங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் திறம்  உள்ளவர்கள் என்று எண்ணத்தோன்றவில்லை. சென்ற இரு நூற்றாண்டுகளில் வெளிவந்த பல நூல்களே இல்லாதனவாயின. திரைப்படங்களில் மிக்க ஆர்வமுடையார் தமிழர் என்ற போதும்  "காளமேகம்" என்ற திரைப்படத்தின் நிழற்படிகள் இப்போது கிட்டவில்லை.  இதை வெளியிட்டவர்கள் காளமேகப் புலவரின் வாழ்க்கை வரலாற்றினை ஆய்ந்து இக்கதையை எழுதியிருந்ததாகத் தெரிகிறது.   இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களால் பல பழைய நுல்கள் அச்சிட்டு வெளிடப்பட்டன.  இவற்றுக்காக நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் உடையோம் என்க.  அகராதிகள் -( அகரவரிசைகள்)  தொகுத்தமைக்கும்  அவர்கட்கு நம் நன்றி.

தென்றிசைக் கலாநிதியான சாமிநாத ஐயரின் உழைப்பு இல்லாதிருந்தால் இற்றைக்கு உலவும் பழந்தமிழ் நூல்கள் பல கவனிப்பாரற்று ஒழிந்திருக்கும். 

அன்பர்கள் ஒருசிலர் செய்யும் விளம்பர ஒலிகளால்  தமிழைப் பற்றிய ஆர்வம் மிக்கிருப்பதாக  நீங்கள் எண்ணினால்,  இது ஒரு சிறு கூட்டத்தாரின் எழுச்சிக்குரல்களே ஆகும்.  அவ்வப்போது இவ்வொலி எழுச்சிகள் ஏற்பட்டாலும் பின்னர் அவற்றால் பெரும்பயன் ஒன்றும் விளைதல் இல்லை. அரவங்கள் அடங்கிவிடுகின்றன.  சென்ற இருநூறு ஆண்டுகட்குள் தனிப்பட்ட முயற்சிகளால்  வெளிவந்து மாய்ந்துவிட்டனவாகத் தோன்றும் வெளியீடுகள் எவையும் மறுவெளியீடு கண்டனவென்று கூறற்கியலவில்லை.  இக்கூட்டத்தாரே வெளியிட்ட சிலவற்றையும் வாசிப்பாரில்லை.

இப்போது கூகிளின் ஆதரவினால் இங்கு வெளியிடப்பட்ட ஆய்வுகள் பல உங்களுக்கு இலவசமாகக் கிட்டுகின்றன. இவை எப்போதும் கிட்டவேண்டும் என்பதே நமது அவா எனினும் அவர்களுக்குப் பணச்செலவு ஏற்படுதலால் இவை எவ்வளவு காலம் இவ்வாறு கிட்டுமென்பதை  அறிந்துரைக்க இயலவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

திங்கள், 8 மார்ச், 2021

சுழுமுனை நாடி

 யோகம் என்பது முந்துவடிவில் ஓகம் என்றிருந்தது. இது வெள்ளப் பெருக்கையும் மக்கட் பெருக்கத்தையும்  குறித்தது.  பழைய தமிழ்நூல்களிலும் வந்துள்ளது. உள்ள நலமும் உடல் நலமும் பெருக்கம் அடைதற்கான ஈடுபாடுகளையும் குறிக்கும்.  இறைவனுக்கும் பற்றனுக்கும் உள்ள தொடர்பின் பெருக்கத்தையும் குறிக்கும்.  அடிப்படைக் கருத்து "பெருக்கம்" என்பதுதான். 

இந்தச் சொல்லுக்கான அடிச்சொல் ஓங்கு என்ற வினைச்சொல்.  இதுவும் பெருகுதல், மிகுதல் என்று வருவதுதான்.  ஓங்கு என்ற வினைச்சொல்லில் கு என்பது வினையாக்க விகுதி. இதை விலக்கிவிட்டால் மிச்சமிருப்பது ஓ - ஓம் என்பதுதான்.  இங்கு ஓ+ கு > ஓங்கு என்று விளக்கி,  இடையில் ஒரு மெய் தோன்றியது எனினும்  ஓம்+கு > ஓங்கு என்று நிறுத்தி இறுதி மகர ஒற்று ம்>ங் எனத் திரிந்தது எனினும் ஒன்றுதான்.  எவ்வாறும் விளக்கலாம்.  ஒ ஓ முதலியவை ஓசை, ஒலி என்பவற்றின் மூலச்சொல் ஆகும்.

  அகர வருக்கத்   தொடக்கத்துச் சொற்கள்  யகர வருக்கங்களாகவும் மாறும்.  எடுத்துக்காட்டு:  ஆனை >  யானை.  ஆண்டு >  யாண்டு.  இவ்வாறே  ஓகமென்பது யோகமாயிற்று.  ஓசனை > யோசனை என்பதும் காண்க.


பதஞ்சலி யோகம்

சிதம்பரத்தில் வாழ்ந்து யோகசூத்திரம் செய்த பதஞ்சலி முனிவர்,  மாமூலரின் மாணவர் என்று அறியப்படுகிறது.  மாமூலரிடமிருந்து தாம் அறிந்த யோகமுறைகளைப் பற்றிய நூலை இவர் இயற்றினார்.  ஆன்மாவைக் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று சொல்லப்பெறும் இடமாற்றம் செய்யும் உள்ளடிகளை மாமூலர்  முற்றறிந்து செயல்படுத்தி நெடுநாள் உயிரொடு உலவினார். இவர் அளித்த உயர் செல்வங்களாகிய ஆன்மிக அறிவை பதஞ்சலி உள்ளிட்ட இவர் மாணாக்கர்கள் பரப்பினர்.  மாமுலரின் பாடல்கள் திருமந்திரம் என்ற நூலில் உள்ளன.  

உடலைப் பற்றிய பல மறைதிறவுகளைத் தமிழர்கள் நெடுநாட்களாக அறிந்திருந்தனர். இதைக்கூறிய பல நூல்கள் மறைந்துவிட்டன.  சிலவே இன்னும் கிடைக்கின்றன. சிவஞான  போதமுதலியவை இன்னும் நிலவுதலால் அவற்றை அறிந்துகொண்டு விளக்கம் பெற முயற்சி செய்தல் நம் கடனாகும்.


சுழுமுனை 

சுழுமுனை நாடி பற்றிய உண்மையைத் தமிழர்கள் எக்காலத்திலிருந்து அறிந்திருந்தனர் என்பது தெரியவில்லை.  மிகப்பழங்காலச் செய்திகள் தொன்ம வடிவிலிருப்பன,  அதனால் இத்தகு ஆன்மிக அறிவு நம் நினைவுகட்கு அப்பாற்பட்ட தொல்பழங்காலத்திலிருந்தே வந்துகொண்டிருக்கிறது என்று நாம் முடிபு கொள்ளலாம்.

சுழுமுனை என்ற சொல்லுக்குப் பிற வடிவங்களும் உள்ளன. இவற்றை ஈண்டு விரித்துக் கூறலியலாமை உன்னுக.  தொகுப்பு இதுவே.  அவற்றுள் சுழிமுனை என்பதுமொன்று.  சுழுமுனை என்ற சொல் சுழுனை>  சுழுனா என்று திரியும்.  இதில் மு கெட்டு னை என்பது னா என்று நீண்டது.   இதற்கு நடுநாடி என்ற பெயரும் உள்ளது.   இடகலை,  பிங்கலை இரண்டிற்கும் நடுவில் இருப்பதால் இது இப்பெயர் பெற்றது.  பெரியபுராணம் இதைப் பிரம்மநாடி என்றே குறிக்கிறது.   பெருமம் அல்லது பெரிதான நாடியும் பெருமான் உறையும் நாடியும்  ஆகும்.   பிரம்மம் -  இறைமை.  திருமந்திரம் இதனை மூலநாடி என்று குறிக்கிறது.  இடப்புறத்திருப்பதால்  இடகலை,  இடை என்றும் வரும். நடுவைகிய சுழுமுனைக்குப் பின் எண்ணப்படுவதால்,  பின் கலை > பிங்கலை ஆயிற்று.  இங்கு  னகர ஒற்று  ஙகர ஒற்றானது சந்தித் திரிபு.   பின்பு + அம் =  பிம்பம் என்பது  இத்தகு ஒலித்திரிபே. பின்>பிந்தி என்பதும் அறிக.


சுழுமுனை என்றால் பிற நாடிகளால் சூழப்பெற்று அவற்றுள் முன் நிற்பது  சுழு -  முன் - ஐ..  ஐ என்பது விகுதியாதலோடு,  மேன்மையும் குறிக்கும். பழங்காலத்தில் " உயர்வுப் பொருள்" குறித்த ஐ விகுதி உள்ளபடியால் வெறுமனே விகுதியாதல் அன்றி உயர்வுடையது என்று பொருள்தருதலுமாம்.

சூழ் வினைச்சொல்.  சூழ் + அல் = சுழல். சூழ்ந்து வீசும் காற்று. முதலெழுத்து குறுகி விகுதி பெற்றுப் பெயர்ச்சொல் ஆனது. இலக்கணத்தில் தொழிற்பெயர் ஆனது.  அதாவது ஒரு வினையிலிருந்து அமைந்த பெயர்.  இதில் வினை - சூழ்(தல்).

சுழுமுனை என்பதில் முன்+ஐ என்று இறுதிப்பாதியை விளக்காமல், முனை (தல்)  - முன் நின்றிடுதல் என்று கொண்டு விளக்கினும் அது.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்,  தமிழ் என்பதற்கு 100 பொருள் கூறிப் பாட,  பாரதிதாசன் எழுந்துபோய் அவரை அணைத்துக்கொண்டாராம். புலமைப்பேறு உடையோர் இங்ஙனம் விளக்கலாம்.  யாம் தருவது சுருக்க விளக்கம், தமிழில் மகிழவே.


கலை:

கலை என்பது இந்நாடிகள் உடலில் கலந்து உள்ளவை என்பதைத் தெரிவிக்கிறது..  கல + ஐ  என்பது  வகர உடம்படு மெய் பெற்று கலவை என்றும்  கல + ஐ > கல் + அ + ஐ > கல்+ ஐ என்று அகரம் கெட்டு லகர ஒற்றுடன் ஐ புணர்ந்து கலை என்றும் வரும். இதன் மூலச்சொல் குல் என்பது.   கலந்திருத்தலாவது இணைந்து இருத்தல். ஓரிடத்திருத்தல். குல் > குலவு: ஓரிடத்திருந்து தொடர்பு பழகுதல். குல் > குலை :  வாழைக்குலை.   திராட்சைக் குலை.  குல் என்பதன் பொருளும் இணைந்திருத்தலே  ஆகும்.  குல் >கல். கல்லும் பாறையும் இணைந்து திரண்டு, மணல்போல் சிதறலாக இல்லாமல் கிடைக்கிறது. இவ்ற்றின் உதவியால் கலை என்ற சொல்லின் திறமறிக. 

இந்தக் "கலை" வேறு.  கல்வியுடன் தொடர்புடைய கலை ( இசைக்கலை,  நடனக் கலை) போல்வன வேறு .  ஒன்று சேராமல் கலைத்து விடும் "கலை" என்ற வினைச்சொல் வேறு.   இவை அமைந்த விதமும் பொருண்மையும் வெவ்வேறாம்.


நாடி:

நாடிகள் பத்து என்ப.  ஆகவே  " பதின்மநாடிகள்"  "தசநாடிகள்"  என்று கூறுதலும் அமையும்.

நாடி என்பது உடலில் நடப்பட்டது போலும் இணைந்திருப்பது.  நடு(தல்) + இ > நாடி,  முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்.  தொழிற்பெயர் என்பது ஒரு வினைச்சொல்லிலிருந்து அமைந்த பெயர்ச்சொல்.  தொழில் என்பது செய்கை அல்லது வினையைக் குறிக்கிறது. நாடி என்பதில் இ விகுதி. படி+ஆம் = பாடம் என்று அம் விகுதி பெற்று முதல் நீண்டு அமைதல். 

மாடி என்ற சொல்லும் காண்க.  மடுத்தல் என்பது வினை.  ஒவ்வொரு மாடிக்கும் அல்லது நிலைக்கும் மேல்தரைகள் பக்கச்சுவர்களுடன் சேர்ந்து இருக்கும்.  இச்சேர்வின் காரணமாக,  மடு> மடு+ இ > மாடி என்று முதலெழுத்து நீட்சி பெற்று இகர விகுதியும் பெற்று  "  மாடி" என்ற சொல் அமைந்தது. இது நாடி போல்வதான சொல்லமைப்பு.  தரை அல்லது நிற்கும் பரப்பு,  மடித்து மடித்து மேலெழுப்பியது போலுமிருப்பதால்,  மடி> மாடி என்றும் விளக்கலாம். அப்போதும் அது முதலெழுத்து நீண்டு விகுதி பெற்ற சொல்லே. 

இதுகாறும் கூறியவற்றால் சுழுமுனைக்குப் பெயர் அமைந்த விதம் அறிந்தீர்.

அறிக.மகிழ்க.

மெய்ப்பு  பின்பு.

முகக் கவசம் அணிந்து

இடைவெளி கடைப்பிடிக்க.





ஞாயிறு, 7 மார்ச், 2021

சில சொல்லியல் நெறிமுறைகள், தத்துவங்கள். சுழு> சூழ்

 ஓடுதல் என்ற சொல்லில் வினைப்பகுதி   "ஓடு"  என்பதுதான்.  ஆகவே ஓடுதல் என்பதில்  தல் என்பது விகுதி என்று முடிவு செய்துவிடில், ஓடு என்பது முதனிலை அல்லது பகுதி ஆகி,   தெளிவாகவே உள்ளது.  ஆடல் என்ற சொல்லில் ஆடு என்ற சொல்லே வினை.  ஆதலின்  வினைச்சொல் அதற்குரிய பொருளுடன் தனியாகவும் அழகாகவும் கிடைத்துவிடுகிறது.   அல் என்பதே விகுதி.

ஆனால் சுழல் என்ற சொல்லில்  அல் என்பது விகுதி என்று வைத்துக்கொண்டால் அதில் சுழு என்றொரு   பகுதி மொழியில் இல்லை. (காணாமற் போய்விட்டது). விழு என்பதில் பகுதி விழு.  இச்சொல் விகுதி பெறாமல், தனியே நின்று பொருளுணர்த்துகிறது.   ஒப்பிட சுழு என்பது தனியே பொருளுணர்த்தவில்லை. எனினும்  சுழுமுனை,  சுழுத்தி என்று சொற்கள் உள்ளன.

ஆகவே சுழு என்ற ஒரு வினைச்சொல் ஒரு காலத்தில் வழங்கி,  தன் தனிநின்று பொருளுணர்த்தும் ஆற்றலை இழந்துவிட்டது என்று முடிவு செய்யவேண்டும்..  ஒரு மொழியில் ஏற்பட்ட எல்லாச் சொற்களும் ஏற்பட்டு முன் வழங்கியவாறே இருந்துவிடுவதில்லை.  சில இன்னும் உள்ளன.  சில தம் ஆற்றலை இழந்துவிட்டன. இவ்வாறு வினைத்தன்மையை இழந்த சொற்கள் மொழியில் இன்னும் இருத்தல் வேண்டும்.  அவற்றை நீங்கள் தேடிக் கண்டுபிடித்தல் நன்று.

சுழு என்பது ஒரு தனிச்சொல்லாகவும் இல்லையாதலால்  அதையும் அதன் பொருண்மையையும் மீட்டுருவாக்கமே செய்ய இயலும். சுழு என்பதினின்று அதனுடன் இணைந்து வேறு சொல் தோன்றியிருப்பதால்  அதை  ஓர் அடிச்சொல்லாகக் கொண்டு விளக்கிவிடலாம்.  ஆனால் அல் என்னும் வினையாக்க விகுதி பெற்ற சுழல் என்ற சொல் உள்ளது.  அது முதனிலைப் பெயராகவும்  சுழலுதல் என்று வந்து " சுழல்" என்பதே பகுதியாகவும்   வருகிறது.   சுழு என்பது தன் வினையாற்றலை இழந்தபின் அடுத்து அதற்கு ஏற்படும் வடிவமைப்பு சுழல். என்பது தானே வினையாகிவிடுகிறது. எனவே சுழலுதல் என்பது நல்ல தொழிற்பெயராய் மொழியில் ஏற்கப்பட்டுள்ளது.

சூழ் என்பது வினைப்பகுதியாகவும் உள்ளது.  சூழ்தல்,  சூழல் என்று  தல், அல் என்ற விகுதிகளை ஏற்று,  ஒரு வினைப்பகுதி மொழியில் பெறும் ஆற்றல்நிலைகளைப் பெறுகின்றது.  விழு , வீழ் என்ற சொற்கள் போல சுழு என்பது தனிவாழ்வு பெறாமல்  வீழ் என்பதை ஒக்க சூழ் என்றுமட்டும் வடிவம் பெறுகின்றது.  ஏற்கெனவே  நாம் பார்த்தபடி  சுழு என்பது ஓர் ஒட்டுவாழ்வு பெற்று இயல்வதை  அறிந்துகொள்கிறோம்.  இன்று அது ஓர் அடிச்சொல் என்ற தகுதியை மட்டுமே பெறுகிறது. சுழு+ அல் > சுழல் என்பதும் தன் தொழிற்பெயர்த் தன்மை மறைந்து தானே ஒரு வினையாய் முடிகிறது.  முயல்+சி என்பது முயற்சி என்று தொழிற்பெயராய் அமைந்தபின், முயற்சித்தல் என்று மீண்டும் ஒரு தொழிற்பெயராய் ஆகி முயற்சி என்பதை ஒரு வினைப்பகுதி ஆக்குவதற்கு முற்பட்டதுபோன்ற நிலையே இதுவாகும்.

சுழு >  சூழ்

விழு > வீழ்

(வழு) > வாழ்   (வழுத்து,   வாழ்த்து )

( அழு) >  ஆழ்  ( மேலிருந்து கீழாக உட்செல்வது)   அழுந்து, அழுத்து, ஆழ்தல்.

(குழு ) > கூழ்   அடிப்படைப் பொருள் : ஒன்றாக ஒட்டியிருப்பது.

(உழு) > ஊழ்   [ உள் > உழு }

இவற்றின் வளர்ச்சியும் பொருண்மையும் அவ்வளவு எளிதில் வெளித்தெரிவதில்லை.  ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இதைத் தான் தொல்காப்பியர் ஒரே தொடரில் " விழிப்பத் தோன்றா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

உடல்நலம் காக்க.