திங்கள், 22 பிப்ரவரி, 2021

களம் என்னும் சொல்.

 ஒரு கொல்லன் இருப்பு ஆயுதங்களைச் செய்பொழுதில் எரியிட்டு அடித்துத் தட்டி நிமிர்த்தி  வளைத்து இன்னும் பலவும் செய்து அவை உருப்பெற்ற பின்போ தாய் தன் பெற்ற குழந்தையைத் தடவுதல்போல் தடவி  அவ்வாயுதங்கள் அடைந்த உருவினை காதலிப்பதுபோலும் மனநிலையை அடைந்த பின்புதான் அவற்றை மக்கட்குப் பயன்படுத்தத் தருகிறான். எவ்வாறு புழங்கினால் நெடுநாள் உழைக்கும் என்று நமக்குச் சொல்லியபடியேதான் அவற்றுள் ஒவ்வொன்றையும்  விற்பான். ஓர்  ஆயுதத்தை உருவாக்கியவனுக்குத்தான் அதனருமை தெரியும்.   அவனைப்போலவே சிந்திக்கும் அருந்திறலை நாம் அடைந்துவிட்டால் நமக்கும் அதன்  அருமை ஒருவாறு புரியத்தக்கதாய் இருக்கும்.

இலாவகம்  -   விள்ளுதல்

நாம் எம்மொழியைப் பேசினாலும் அம்மொழியில் நாம் காணும் சொற்களை  அவற்றை முயன்று ஆக்கியோரின் வருத்தம் எதையும் நாம் உணராமலே நாம் வெகு இலாவகமாகப் பயன்படுத்துகிறோம். இலாவகம் என்றால் அவ்வுணர்ச்சியாகிய வேதனை ஏதும் இலா - இல்லாத,  அகம் - மனநிலையினராய்,  நாம் எடுத்துப் பேசிக் களைந்துவிடுகிறோம்.  அப்புறம் அடுத்த சொல்லைத் தேடாமலே அது தானே வந்துற உணராப் பிடிகொண்டு  வாய்க்குள் இட்டு ஒலியூட்டி வெளியிடுகிறோம். இதை உணர்த்துவதற்காகவோ விள்ளுதல் என்ற சொல் புழக்கத்திற்கு வந்துற்றது.

வார்த்தை

சொல்லுக்கு வார்த்தை என்பது இன்னொரு பெயர். இதைத் தமிழின் மூலம் பொருளுரைத்தால்,  வாயினின்று புறப்படுதலின் வாய்த்தை >  வார்த்தை என்றாகும்.   வாய் - அடிச்சொல்.  தை என்பது விகுதி.  இரும்பு உற்பத்தித் தொழிலாளி ஆயுதங்கள் சிலவற்றை வார்த்து எடுப்பதுபோலும் வார்த்தை என்னும் சொல்லும் வார்த்து எடுக்கப்படுகிறது. இவ் வொப்புமையாக்கத்தின் வழி,  வார்த்தல் : வார் + தை =  வார்த்தை  என்றும் வந்து சொல்லென்று பொருள் எழும்.  அடிச்சொல், விகுதி, ஏனை உறுப்புகள் அனைத்தையும் நோக்குவான் பொருளை உணர்ந்தகாலை,  சொல்லினின்று பொருள் எழுகின்றது.  ஒலி எழப் பொருள் எழுகின்றது.  ஆதலின் " கிளம்புதல்" என்பதிலிருந்து அதற்குக் "கிளவி" என்பது இன்னொரு பெயராயிற்று.  கிளம்பு - வினைச்சொல்.  கிள - எழுந்திடுதல்.   கிள+ இ =  கிளவி.  கிளம்பு என்பதில் கிள  (>கிளத்தல் )  என்பதே அடிச்சொல்..  ஒலி, பொருள் என இவை எழுந்திடுதல் உடையவை. வார்த்தலின் வார்த்தை;   நாவினின்று எழுந்திடுதலின் கிளவி   இவ்வாறு இச்சொற்களைப் பொருள் உணர்க.  வாய் , வார் என்று இருவகையிலும் வாய்த்தை > வார்த்தை என்று உணரவகை உண்டாதலின் இச்சொல் ஓர் இரு பிறப்பி ஆகும்.

போர்க்களம் என்ற சொல்லிலும் நெற்களம் என்ற சொல்லிலும் களம் என்பது காண்கின்றோம்.  களம் என்பது ஒரு வேலை அல்லது நிகழ்வுக்காகக் குறித்த இடன். அவ்விடம் அடையாளங்கள் பொருத்தி அமைக்கப்பட்டும் இருக்கலாம்.  அல்லது நினைப்பில் மட்டும் அறியப்பட்ட ( அடையாள) இடமாகவும் இருக்கலாம்.  இது " எல்லை" வகுக்கப்பட்ட இடம். எல்லையானது  இடத்திலோ அல்லது அவ்விடத்தின் நினைப்பிலோ "கட்டப்பட்டது".  அதனால் கள் என்ற சொல்லினின்று உருவானது களம் ஆகும்.

கள் >  கள்+து  > கட்டு > கட்டுதல்..

கள் >  கள் + சி > கட்சி. ( சில கொள்கைகளால், வரையறையால். கட்டுப்பாட்டு விதிகளால் ஒன்றுபட்ட கூட்டம் ).

கள் > களம்.  ஒரு நிகழ்வு நடைபெற ஒதுக்கிய இடம்.

முற்காலப் போர்க்களங்கள், போருக்காக ஒதுக்கிய இடங்கள்.  எடுத்துக்காட்டு:  தலையாலங்கானம்.

வீடு என்பதும் இல்லற வாழ்விற்கு ஒதுக்கப் பட்ட இடம். அல்லது களம். அங்கு தலைவியாய் இருப்பவள் களத்திரம்.  (களத்து இரு அம்).

சகக் களத்தி  சக்களத்தி ஆனதால்.   களம் என்ற சொல்லின் பயன்பாட்டினைக் கண்டுகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.



 


வியாழன், 18 பிப்ரவரி, 2021

குணம் குணித்தல்

 குணமென்ற சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.

மனித உடலுக்குள்ள வாசல்களில்  கண், காது, மூக்கு, வாய் ஆகியவை உட்புகவுக்கான உறுப்புகள்.  கண் வழியாகக் காட்சியும் ( ஒளி ), காதின் வழியாக  ஒலியும்,  மூக்கின்வழிக் காற்றும் வாயின்வழி உணவும் உடலுக்குள் புகுவன ஆகின்றன. தோலும் ஓர் உறுப்புதான். அதன்மூலம் உற்றறிகிறோம். 

உள் என்ற மூலத்திலிருந்து,  பக்கம் குறிக்கும் உள் என்பதும் மற்றும் உண் என்ற சொல்லும் வருகின்றன.  ளகர  ஒற்று இறுதிச் சொல் ணகர ஒற்றிறுதியாக மாறும்,  பொருள் திரிதலும் ஏற்படும்.    எ-டு:  ஆள் -  ஆண்.  பள் -  பண். உள்-உண் என்பதும் அது போல்வதே  ஆகும்.  

கண் என்ற சொல்,  உள் >  உண் > குண்>  என்று வந்தது. எனவே, உள் வரப்பெறுவது  குண் என்பதறிக.  குண் என்பதிலிருந்து குணம் என்ற சொல் வந்துற்றது.

"திண்ணம் பன்றியொடும்

சேர்ந்த கன்று கெடும்"

என்று பண்டை மக்கள் எண்ணினர்.  தந்தை, தாய் ஆகியோரின் குணங்களும் கருவிலிருக்கும் காலத்திலிருந்தே குழந்தை உள்வாங்கிக் கொண்டது என்றும் சொல்வதுண்டு. குழந்தையின் வளர்ச்சியில் அது தக்க காலத்தில் வெளிவரும் என்பர்.

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி"  என்று தொடங்கும் குறளில் "குன்றேறி" என்ற அதனால்,  நல்ல குணமென்பது ஒரு மலை,  ஒருவன் தானே முயன்று ஏறுதற்குரியது , அடைவதற்குரியது என்று நாயனார் கருதியமை தெளிவாகின்றது.

குணம் என்பது இவ்வாறு அடையப்பெறுவது ஆயினும்  அது பிறரால் அறிந்து கணிக்கப் பெறுவதும் ஆகும். ஒருவன் உள்வாங்கிக்கொண்டது எவ்வளவு, அது உள்ளமைந்தபின் வெளிப்படுவது குணம். அதைப் பிறர் அறிந்துகொள்வர் அல்லது குணிப்பர்.    குணித்தல் எனற்பாலது பின் கணித்தல் ஆயிற்று..

உகரச் சொற்கள் அகரமாதலும் மொழியிற் காணப்பெறுவதே. இதுபோலும் திரிபுகளை இங்குப் பழைய இடுகைகளில் காண்க.

குண் என்பது கண் எனத்  திரிந்து  விழி என்று பொருள்கொண்டது. கணக்கு முதலியவை மிகுந்த கவனத்துடன் பார்க்கப்படுவது.  இதிலிருந்து கண் > கணித்தல் என்ற சொல் பிறந்தது.

கண் > கண்+ அ + கு = கணக்கு

கண் >  கணி > கணி+ இது+ அம் = கணிதம்.

அது இது என்பன சொல்லாக்க இடைநிலைகளாக வரும்.  பரு+ அது + அம் என்பதில் அது என்ற இடைநிலை வந்தது.  புனிதம் என்பதிலும்  இது என்பது சொல்லாக்கத்தில் இடைநிலையாய் வந்தது. புனிதம் என்பது நீரால் நன் கு கழுவப்பெற்றது என்ற பொருளைத் தரும்  இதன் அடிச்சொல்: "புன்" என்பது.

புல்லுதல் -  பொருந்துதல்.

புல் என்பது புன் என்று திரியும்.  இது லகர 0னகரப் போலி.

புன் > புனல்.  பொருள் நீர்.  நீரென்பது எதிலும் பொருந்தும் தன்மை கொண்டது.  எதையும் ஈரமாக்கிவிடும்.. திரளும் தன்மையும் உள்ளது.  திரள்:  அடிச்சொல்  - திர.  திர- திரை;  திர+ அம் > திரவம்.  வகர உடம்படுமெய்.

புன் > புனல்  ( நீர்)

புன் >  புன் + இது + அம் >  புனிதம். ( புனிதம் எதற்கும் பொருந்தும் குணம். யாரும் ஏற்கத் தக்க குணம். புனலால் கழுவித் தூய்மை செய்தால் புனிதமாம் ).

ஒன்றுடன் ஒன்று இணைவதே திரட்சியும் ஆகும்.

ஆதலின்.  இது அது என்பன இடைநிலைகளாய் வந்து சொல்லமைதல் கண்டுகொள்க.

இகரம் உகரம் இரண்டும் சொல்லாக்கத்தில் வினையாக்க விகுதிகளாய் வரும்.

எடுத்துக்காட்டு:

குண் > குணித்தல்.  இங்கு இகரம் வந்தது.  (குணி,  கணி )

பொறு,  வறு,  இறு ( முடிதல்) இவற்றுள் உகரம் இறுதியாய் வந்தது.

பொல்  > பொறு.  (பொருந்துதல்  அடிப்படைக் கருத்து).

வல் > வறு   (தீயிட்டு வன்மை செய்தல்)

இல் > இறு.  ( இல்லையாவது).

இருத்து,   பொருத்து,  அழுத்து என்பதிலும் உகர இறுதி வினையாக்கம் உளது.

இவையும் இன்ன பிறவும்  உகர இறுதி வினையாக்கம்.

இதுகாறும் உரைத்தவற்றால்,  கணித்தல் குணித்தல் என்பவற்றை  உணர்ந்து, கூறிய பிறவும் அறிக மகிழ்க.

மெய்ப்பு - பின்னர்.






புதன், 17 பிப்ரவரி, 2021

பல திற விளக்கம் - சொல்லாக்கத்தில்

 பச்சைக் கிழங்கைப் பிடுங்கித் தின்றுகொண்டு,  விலங்குகட்கு அஞ்சிக்கொண்டு மரத்தின்மேல் வீடுகட்டிக்கொண்டு ஏறத்தாழ இலைகளால் தழைகளால் தன்னை மூடிக்கொண்டு குளிரிலிருந்து அல்லது வெம்மையிலிருந்து விடுபட வழியில்லையோ என்று வாடியவனே மனிதன். அன்று அவனைக் கண்டு அப்பால் மறைந்துவிட்ட அவனின் கடவுள் இப்போது வந்து கண்டாலும், வியப்பில் ஆழ்ந்து மலைத்து நிற்பார் என்பதில் ஐயமொன்றில்லை.  அன்று அவனிடம் இருந்த சொற்கள்,   அ, இ, உ,  பின்னும் சொல்வோமானால்  எ, ஏ,   ஓ எனச்  சில இருக்கலாம்.

அதனால்தான்  உ  - உள்ளது என்று தமிழிலும்  ஊ -  இருக்கிறது என்று சீனமொழியிலும் அடிச்சொற்கள் பொருளொற்றுமை உடையவாய் உள்ளன.

அதனால்தான்,  அடா  ( அங்கிருக்கிறது) என்ற அகரச் சுட்டில் மலாய் மொழியில் உள்ளது.   அட் ஆ >  அடா.  அதே காரணத்தால் ஆங்கிலத்தில் அட்  என்பது இடத்திலிருப்பது குறிக்கிறது.

உலக மொழிகளை ஆராய்ந்து எத்தனை சுட்டடிச் சொற்கள் கிடைக்கின்றன என்று நீங்கள் ஏன் ஆய்வு செய்யக்கூடாது.  செய்து நீங்கள் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம்;  அல்லது எங்காவது வெளியிடலாம். ஆனால் பிறருக்கு உரைப்பதால் தெளிவு மேம்படலாம் ஆயினும் உங்களுக்கு அதனால் பயன் குறைவுதான். பிறன் போற்றினும் போற்றாவிடினும் நீங்கள் இருந்தபடி இருப்பீர்கள். மாற்றமெதுவும் இல்லை.

விள் என்பது ஓர் அடிச்சொல்.  அதிலமைந்த வினைச்சொல்தான் விள்ளுதல் என்பது. இது சொல்லால் வெளியிடுதலைக் குறிக்கும்.   விள் திரிந்து வெள் > வெளி ஆனது.   விள் திரிந்து விண் ஆதனது.  இதுவும் ஆள் திரிந்து ஆண் என்று ஆனது போலுமே.   விள் திரிந்து அய் இணைந்து விளை ஆனது.  ஒரு விதை முளைப்பது  விள் ( தரையிலிருந்து வெளிவருதல் ). அப்புறம் அது செடியாய் மேலெழுவது ஐ.    இது அருமையான பழைய விகுதி.  அதே மேலெழுதற் கருத்து இன்றும்  ஐ - ஐயன் - ஐயர் என்ற பல சொற்களில் உள்ளன. அந்தக் காலத்தில் மனிதன் தனிமையை வெறுத்தான்.  அங்கிருப்பவர் இங்கு வந்து நம்முடன் நின்றால், நமக்கும் உதவிதான்.  கரடி வந்துவிட்டால்  அவருடன் சேர்ந்து நாமும் கரடியை எதிர்க்க வலிமையில் மேம்பட்டுவிடுவோம்.   அதுதான் ஒற்றுமை:  அது ஐ+ இ + கு + இ + அம்  :  அங்கிருப்பவர் இங்கு வந்துவிட்டார்,  இங்கு அமைந்தது ( நம் வலிமை)  என ஐக்கியம் உண்டாகிவிடுகிறது.  கழிபல் ஊழிகள் சென்றொழிந்திட்ட காலையும் நம் தமிழ் அடிச்சொற்கள்  இன்றும் கதிர்வரவு போல இலங்குகின்றன.   

இவ்வடிச்சொற்களால் ஒரே சொல்லை பல்வேறு வழிகளில் பொருளுரைக்கும் வழி தமிழ் மொழிக்கு உரித்தாகிறது.  பிறமொழிகளிலும் மூலம் காணுதல் கூடும்.  ஆனால் ஒட்டிக்கொண்டிருக்கும் தோல்போலும் ஒலிகளை விலக்கிவிட வேண்டும்.  எடுத்துக்காட்டு:  ஹியர் (ஆங்கிலம்).   இ = இங்கு.  அர்  - ஒலி உள்ளது குறிக்கக்கூடும்.  அருகில்  என்பதிலும் அர் உள்ளது.  இ என்பது ஹி என்று வீங்கி நிற்கிறது. என்றாலும் முயன்று பொருள்கூற இயலும் என்றே கூறவேண்டும்.

இனி விளை என்பதில் து விகுதி இணைத்தால் விளைத்து ஆகிவிடும்.  து என்பது பெரிதும் "எச்ச விகுதி" யானாலும்  ( தோலை உரித்து என்பதில் உரித்து போல ,  ஆனால் விழுது என்னும் பொருட்பெயர் அல்லது சினைப்பெயரில் து போல ) அதில் ளை என்பதை விலக்கி இடைக்குறையாக்கினால் வித்து ஆகிவிடும்.  ஒன்று பெயரெச்சம், மற்றது  பெயர்ச்சொல். (பொருட்பெயர்).  இவை பயன்பாட்டுக் குறிப்பெயர்கள்.  வேறொன்றுமில்லை.  விளைத்தல் போலும் அறிவும் கல்வியும்.  ஆகவே ஒப்புமையாக்கம்.  விளைத்து > வித்து > வித்துவம் > வித்துவன் > வித்துவான் எல்லாம் விளக்கம் அடைகின்றன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்