வெள்ளி, 4 டிசம்பர், 2020

அட்சரம் சொல் உட்பொருள்

 சரியக்கூடியவை சரியும்போது, ஒன்றன் அழுத்தத்தால் அடுத்து உள்ளது முன்னது பட்டு வீழ்கின்றது. இவ்வாறு சரிதலைச் சரம் என்றனர். சரி + அம் = சரம் ஆகிறது. இங்கு வினைச்சொல் சரிதல். இகரம் கெட்டது.

படி+ அம் = பாடம். இது முதலெழுத்து நீண்டு, டி என்பதன் இகரம் கெட்டு அமைந்தது.

வரிசையாகச் சரிவது, வச்சரம்.  வரிச்சரம் என்பதே இடைக்குறைந்து வச்சரம் ஆனது. சரிதலென்பதன் அடியாக  விழாமல் ஒன்றன்பின் ஒன்று வருவது சரம் என்றே குறிக்கப்பட்டது.  இது ஓர் ஒப்புமையாக்கம் ஆகும். சரவிளக்கு என்பதில் எதுவும் விழுவதில்லை என்றாலும் அது சரிந்து விழுதல் போலவே கற்பித்துச் சொல் அமைந்தது.  விழுக்காடு என்ற சொல்லை நோக்கின்,  எதுவும் விழுதல் இல்லை;  எனினும் விழுதற்கு இணையான நிகழ்வு ஆகும். எனவே. ஒன்றன்பின் ஒன்றாய் விழுதல் என்ற கருத்திலிருந்து (விழாமல்) வருதல் குறித்தது ஒரு கருத்துவளர்ச்சியே ஆகும்.

வீதம் என்ற சொல்லைக் கவனியுங்கள். இது விழுக்காடு என்று பொருள்படும். (பெர்சன்டேஜ் என்பர் ஆங்கிலத்தில்). இதுவும் விழு என்ற சொல்லின் இன்னொரு வடிவமான வீழ் என்பதனடியாய்,  வீழ்தம் என்று உருப்பெற்று, ழகர ஒற்றுக் கெட்டு  வீதம் என்றாயிற்று. விழு> விழுதம் > (முதனிலை நீண்டு) வீதம் எனினும் அதுவே. இதையறியாத சிலர், இது தமிழன்று என்று அலமரலாயினர். நுழைபுலம் இன்மைதான் இந்த வழுக்கல் முடிவுக்குக் காரணம் என்போம். ழகர ஒற்று வீழ்தல்,  வாழ்த்தியம் என்ற சொல்லிலும் நிகழ்ந்துள்ளது கூறுப.  அது வாத்தியம் ஆனது காண்க.

சுருங்க உரைப்பின்:

சரிதல்   விழுதல்;  அடுத்துவரல்.

ஒரு மரம் சரிந்தது என்றால், நின்ற நிலை மாறி, தரையை அடுத்துவந்துவிட்டது என்பதுதான் பொருள். அம்மரம் ஒரு நிலையில் நீங்கி மறுநிலைக்கு வந்தது. ஆகவே கருத்துவளர்ச்சியில் தவறில்லை.

சரி > சரம். ( அடுத்துவரல்.).

எழுத்துக்கள் அடுத்தடுத்து வருதலை உடையவை.  அகரம்  ஆகாரம் இகரம் ஈகாரம் என.    இது அடு + சரம் =  அடுச்சரம்,  டுகரம் இடைக்குறைந்து, அச்சரம் ஆகும். அடுத்தடுத்து வரிசையாய் வைக்கப்படுவன.  டுகரத்தை முழுமையாக நீக்கிவிடாமல்,  டுகரத்தில் உகரம் மட்டும் குறைத்து,  அட்சரம் என்பது இன்னொரு வடிவமாகும்.

இவற்றைத் தந்திரம் என்றும் வருணிக்கலாம்.  அல்லது  இயல்பான சொல் அமைப்பு என்றும் சொல்லலாம்.  எப்படிச்சொன்னால் என்ன?

அட்சரம் என்பது உண்மையில் alphabet தான்.

அடுக்குச் சரம் என்று வந்திருக்கவேண்டுமோ?  அடுக்கு என்பதில் அடு என்பதே அடிச்சொல். கு என்பது சேர்விடம் காட்டும் விகுதி.  சென்னைக்கு என்பதில் அது உருபு.  அந்த விகுதியை ஏன் கட்டி அழுதுகொண்டிருக்கவேண்டும் என்று அந்தச் சொல்லை அமைத்த அறிவாளி அதை விட்டுவிட்டான். அவ்வளவுதான் கதை. எல்லாவற்றையும் வைத்துக்கொண்டிருந்தால், வாக்கியம் ஆகுமே தவிர சொல்லாகாது.

அறிக, மகிழ்க. 

மெய்ப்பு பின்

வியாழன், 3 டிசம்பர், 2020

ஏடன், ஏலன் - தோழமைப் பொருள்.

 எடுத்தல் என்பது அன்றாட வழக்கில் உள்ள சொல். எழுதுகோலை எடுத்தல், இலையை எடுத்தல் என்று பொருள்களை எடுத்தலுக்கும் இதை ஆள்வர். பெண் எடுத்தல், மாப்பிள்ளை எடுத்தல், விழா எடுத்தல் என்றும் வழக்கில் வரும். ஒரு நண்பனையும் எடுக்கலாம், நல்லபடியாக எண்ணிப்பார்த்த பின் நண்பனை எடுக்கவேண்டும். " நாடாது நட்டபின் வீடில்லை"  என்பதிலிருந்து நன்கு ஆய்ந்தபின்னரே ஒருவருடன் நட்புக்கொள்ளுதல் வேண்டும் என்பது தெளிவாகிறது.  நட்பும் எடுக்கவும் விடுக்கவும் கூடிய ஒன்றே ஆகும்.

எடுத்தல் என்பது வினைச்சொல்.

எடு + அன் =ஏடன். (தோழனாய் எடுக்கப்பட்டவன்)

இது முதனிலை திரிந்து (நீண்டு)   அன் விகுதி பெற்றது. அன் என்பது ஆண்பால் விகுதி.  தோழன் என்பது பொருள்.

ஏடன் -  ஏடி :  ஏடி என்பது  தோழி என்று பொருள்படும். இன்று பொருள் இழிந்துவிட்டதனால், இதைப் பொருள் வீழ்ச்சி அடைந்த சொல் (இழிபு) என்னலாம். இ என்பது பெண்பால் விகுதி.

ஏடன் என்பது  ஏடே. ஏடா என்றும்  ஏலே. ஏலா என்றும் திரியும்.

ஏல் என்பதற்கும் ஏற்கப்படுதல் என்னும் பொருள் உள்ளது.

ஏலன்( ஏலா) என்பது இதன்படி உரிய பொருள்பெறும்.

எனவே எவ்வாறு நோக்கினும் தோழமைப் பொருள் காண்பது இயலும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


ஏலா - இது விளிவடிவம்


புதன், 2 டிசம்பர், 2020

வினை மற்றும் பெயரில் விளைந்த வினைகள் (முயற்சித்தல்)

இக்காலத்தில் பார் என்ற சொல்லின் உண்மைப்பொருளைப் பெரிதும் மக்கள் கவனிப்பதில்லை. இதற்குக் காரணம் நோக்குதல் என்ற சொல் ஓரளவு மக்கள் மொழியிலிருந்து (பேச்சு) நீங்கிநிற்பதுதான். நாம் ஒன்றைக் கூர்ந்து "பார்க்குங்கால்" அதை நோக்குதல் என்றே சொல்லவேண்டும். பார்வை பரந்து செல்லுமாயின் "பார்த்தான்", "பார்த்தேன்" என்றெல்லாம் பார் என்ற வினைச்சொல்லினடிப் பிறந்த முற்றுக்களையும் பார்த்த, பார்த்து என்ற எச்சவினைகளையும் பயன்படுத்தலலாம்.


பார்வை பரந்து செல்லுதல் என்று குறிப்பிட்டோம். பர (பரத்தல்) என்ற வினையினின்றுதான் பார் என்ற வினைச்சொல் விளைந்தது. பரத்தல் என்பதும் வினை குறித்தது, பார்த்தல் என்பதும் வினைகுறித்தது, எனவே வினையினின்று இன்னொரு வினை தோன்றுவதற்கு இதுவும் ஓர் உதாரணம் ஆகும்.


பர > பார்.


ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றுவதுண்டா என்று யாரும் வினவின் இந்தச் சொல்லமைப்பினை நீங்கள் சுட்டிக்காட்டுவது சரி.


இன்னும் பல வினைகள் வினைகளிலிருந்தே திரிந்துள்ளன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் பெருகும். இன்னும் ஓர் எடுத்துக்காட்டு மட்டும் காண்போம்.


இறுதல் என்றால் முடிந்துவிடுதல் என்று பொருள். இதைக் கண்டுகொள்வது எளிது. இறுதி என்ற சொல்லைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.


இறு என்ற வினைச்சொல்லிலிருந்து இற என்ற சொல் தோன்றியது. இறத்தல் என்றாலும் முடிவுதான். ஆனால் உயிருடன் வாழ்வோன் அல்லது வாழும் ஓர் உயிரியின் முடிவு. இச்சொல் ஒரு சிறப்புப் பொருளில் வருகின்றது. இறுதல் என்பது பொதுப்பொருள்:


இறு > இற.


இறத்தல் என்பதும் பின்னர் பொருள் விரியத்தான் செய்தது. உயிரற்றவை இறுதியடைதலையும் குறிக்க விரிந்தது. -டு: ஒரு சொல் வழக்கிறந்தது. இது "வழக்கு" என்பதை உயிருள்ளதுபோல் பாவிக்கிறது. --- உயிர்ப்பொருள் போல் ஒப்புமையாக வைக்கப்படுகிறது.


முயற்சித்தல் என்ற வழக்கில் உள்ள சொல்லைப் பார்ப்போம்.


முயல் (முயலுதல் ) என்பதே வினைச்சொல் ஆம். சி என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து, அஃது முயற்சியாகும். தொழிற்பெயரானபின் இகர வினையாக்க விகுதி பெற்றும் அது முயற்சித்தல் ஆகுதல் இயலாது என்றனர் தமிழ் வாத்தியார்கள். எனினும் தமிழ்ப்பேரகராதி இதனை பேச்சுமொழிச் சொல் என்று குறித்து பதிவு செய்துள்ளது. இது இப்போது அறிஞர் மொழிநடையிலும் இடம்பெற்றிருப்பதால் தொழிற்பெயரானபின்னும் மீண்டும் வினைச்சொல் ஆதலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இதன் எழுச்சியை மறுக்கின்ற முயற்சியால் பயனொன்றும் இல்லை என்றே நாம் சொல்லவேண்டும். முயற்சியெடுத்தல் என்பதன் இடைக்குறை என்றும் கொள்ளலாம். (யெடு) என்பது குறைவுற்றது என்று முடித்தல் கூடும்.


மெய்ப்பு பின்னர்