ஞாயிறு, 29 நவம்பர், 2020

புறத்தோதிய புரோகிதன்.

 பண்டைக் காலத்தில் அரசரும் அவர்தம் கொடிவழியினரும் விரிவான வாழிடங்களில் வசதிளுடன் வதியும் பாக்கியத்தை அடைந்திருந்தனர். இயல்பான மக்கள்,  குடில்கள், குடிசைகள், செலவமிலார் எனினும் சீருடன் வாழும் வீடுகள் ஆகியவற்றில் குடியிருந்தனர். கடவுட் கொள்கைகள் அப்போதுதான் மெல்ல மக்களிடைப் பரவிக்கொண்டிருந்தன. அவற்றை ஒருவாறு அறிந்த மக்கள், இறைவணக்கம் செய்யத் தலைப்பட்டனர். மரங்களிலும் குகைகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் கட்டத்தைக் கடந்து பலர் சேர்ந்து ஓரிடத்து  வைகும் நிலையை மக்கள் அடைந்துகொண்டிருந்தனர். ( சேரிகள் அமைதல் ). அவர்கள் பேச்சும் கருத்துகளும் வளர்நிலைக்கு வந்துகொண்டிருந்தன. அது மொழிவளர்ச்சி எனலாம். புதிய சொற்கள் உருப்பெற்று உலவின. பயன்படாத காட்டுக் காலத்துச் சொற்கள் மெல்ல மறைந்துகொண்டிருந்தன. மக்கள் தாம் சொந்தமாகச் சாமி கும்பிட்டதுடன், அத்தொழுகையை நன்றாகச் செய்வதாக உணரப்பட்ட சிறப்புச் செயலர்களை அறிந்தணுகி அவர்களிடமும் சென்று இறைவணக்கம் செய்வித்து மனனிறைவு கொண்டனர்.  ஓ ஓ ஓம் என்று ஒலியெழுப்பித் தொழுகைகளை நடாத்திய இவர்கள் ஓதுவோர் ( ஓதுவார்)  என அறியப்பட்டனர்.  ஓ என்பது ஓசை, அதை எழுப்பி இறைவணக்கம் செய்தோர் ஓது ( ஓ அடிச்சொல், ஒலிக்குறிப்பில் தோன்றிய சொல்) > ஓதுவார் என்று சுட்டப்பட்டதன் அமைதிறத்தை நாம் எளிதில் சிந்தித்து அறியலாகும். 

குடியிருப்புகள் இக்காலக் கட்டத்தில் பெரும்பாலும் சிறியனவாய் இருந்தன.ஓதுதொழிலர்கள் வீடுகட்கு வெளியில் இருந்துகொண்டே தங்கள் வேலையைச் செய்தனர்.   வெளியிலென்றால் வீட்டின் முன்பு ஒரு மரத்தடியிலோ அல்லது ஆலமரத்தடியிலோ இவை நடைபெற்றன.   அடிக்கடி மக்கள் குழுமி இத்தொழுகைகள் நடைபெற்ற இடங்கள்  "ஆலயங்கள்" எனப்பட்டன. ஆல் -  ஆலமரத்தடி;  அ - அங்கு;  அம் - அமைந்த இடம்.  எல்லாம் சேர்த்தால்  ஆலயம் (என்னும் சொல்) ஆய்விடும். மரப்பட்டை சீரை > சீலை > சேலை என்று இன்று பட்டுச்சீலையையும் குறிப்பதுபோலவே,  ஆலயம் என்ற சொல்லும் அதன் அமைப்புக் காலத்தைக் கடந்து இன்று பெரும் கற்கட்டிடங்களையும் குறிப்பதாய் வளர்ந்து பொருளைத் தருகிறது.

வீட்டுக்கு வெளியில் அல்லது மரத்தடியில் செயல்பட்டனர் என்பதுதோன்ற இவ் வோதுவார்கள் "புற ஓதிகர்" எனப்பட்டனர். இதுவே பின் திரிந்து,  "புரோகிதர்" என்றானது.

புற ஓதிகர் >  புரோதிகர் > புரோகிதர்.  (திரிசொல்).

புறம்  ஓது  இ  கு  அர். இவை சொல்லுறுப்புகள்.

ஓதிகர் > ஓகிதர். 

இதில் எழுத்து முறைமற்றுத் திரிபு ஏற்பட்டுள்ளது. இது போல எழுத்து முறைமாற்று ஏற்பட்ட சொல் , விசிறி > சிவிறி;  மருதை > மதுரை ( எனப்பல). றகரத்துக்கு ரகரம் வந்த சொற்களைப் பழைய இடுகைகளில் கண்டறிக. ரகர றகர வேறுபாடின்றி வழங்கிய சொற்களும் இப்போது வழங்கும் சொற்களும் உள. அவற்றைச் சில இலக்கண நூல்களில் பட்டியலிட்டிருப்பார்கள். அந்நூல்களில் கண்டறிக.

நம்பிக்கை மிக்குவந்த பிற்காலத்தில், வீடுகள் விரிவாக அமைக்கப்பட்டு புரோகிதர் வீட்டினுள் வரவழைக்கப்பட்டுத் தம் சேவைகளைச் செய்தனர். இதனால் அக + ஓதிகர் = அகோதிகர் என்ற ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டு மகிழ்வுடன் இருங்கள். புதுச்சொல்லை அது வழக்கில் இன்மையால் பிறர் அறியார். இது ஒவ்வொரு மொழிக்கும் உள்ள இயற்கையான வரம்பு ஆகும். புற ஓதிகரென்பது திரிந்தமைந்திருந்தாலும் வழக்குண்மையால் பொருள்தருகிறது. மொழியில் உள்ள எந்தச் சொல்லிலும் சரியும் இல்லை, தவறும் இல்லை. எந்தச் சொல்லிலும் பொருள் உள்ளில் இல்லை; பொருள் இருப்பதாக மனிதன் உணருகிறான். பொருள் என்பது சொல்லின் உள்ளுறைவு என்று நீங்கள் நினைத்தால், " சிங்க் சியாங்க்" என்றவுடன் உங்களுக்குப் பொருள் தெரியவேண்டுமே! அதில் ஒரு சீனன் பொருள் உணர்கிறான், தமிழன் விழிக்கிறான்.  காரணம், தமிழில் அந்தச் சொல் இல்லை என்பது மட்டுமன்று;  சிங்க்சியாங்கில் பொருள் ஏதும் உள்ளுறைந்திருக்கவில்லை. என்பதுதான் உண்மை. அமைந்துவிட்ட ஒரு சொல்லில் ஒலிப்பிறழ்வுகள் ஏற்பட்டு அதுவே வழக்குக்கு (பொதுப்பயன்பாட்டுக்கு ) வந்துவிட்டால், அதுவே பின் சரியென்று கொள்ளப்பட்டுவிடும்.  அப்படி ஆனதுதான் விசிறி > சிவிறி. இது தத்துவம்.

புற+ ஓது + இகு + அர் = புரோxகிதர் எனினுமாம். இகுதல் - தாழ்ந்துவிழுதல் ,  இகுத்தல் - (முழவு முதலிய )  ஒலித்தல்.  சுட்டடிப் பொருள்:  இ - இங்கு; கு - சென்றுசேர்தல்.  இங்கு > இகு. இடைக்குறை. இவற்றைக்கொண்டு ஏற்ப வரையறவு செய்தல் ஆகும். அமையும். 

குறிப்பு:

புரோகிதன்

புறஓதிகன்

புறஓகிதன்  (முறைமாற்று:  திக > கித)  இருகுறில் முறைமாற்று

புறஓகிதன்

புரஓகிதன்  ( றகர ரகரத் திரிபு)

புரஓகிதன்

புரோகிதன் -  பு ர்  அ ஓ ~ கிதன்

பு ர் ஓ கிதன் : ( அகரம்) கெட்டு மிஞ்சிய (ர் ஓ) இணைந்தன. 

அமைவு  நன்று.

பாயசம்:

பய அசம் >  பயாசம் > பாயசம்

( குறில் நெடில் முறைமாற்று)

பயறு  ( பய - கடைக்குறை)

அசித்தல் - வினைச்சொல்  பொருள் : உண்ணுதல்.

அசி + அம் =  அசம் ( இகரம் கெட்டுப் புணர்ந்தது): 

உண்பொருள்.


அறிக மகிழ்க. 


மெய்ப்பு பின்னர்.

சனி, 28 நவம்பர், 2020

"ஒரு" -வில் விளைந்த இனிய சொற்கள்.

 ஒத்திடம் கொடுத்துக்கொண்டிருந்த எப்போதாவது ஒன்று, ஒரு என்பவற்றை நீங்கள் நினைத்துக்கொண்டதுண்டா? எங்காவது விரைவாகப் போகமுயன்றபோது இடித்துக்கொளவதுண்டு. இதனால் வீக்கம் ஏற்பட்டால் இப்போது குளிர்க்கட்டி ஒத்திடம் கொடுக்கச்சொல்வார்கள்.  சுடுநீர் ஒத்திடத்திலும் குளிர்க்கட்டி ( ஐஸ்) ஒத்திடம் நல்லது என்பார்கள். எதற்கும் மருத்துவரின் பரிந்துரைப்படி நடக்கவேன்டும்.

    ஒத்தி ஒத்தி இடுவதே ஒத்திடம். (ஒத்தடம் அன்று).

    ஒத்திடம் என்பதில் ஒ என்பதே அடிச்சொல் ஆகும். ஒ  எனின் ஒன்று.

    ஒ என்பதனுடன் து என்ற விகுதியைச் சேர்த்தால் இருவகையாய்ச் சொற்கள் ஏற்படும்.

    ஒ + து =  ஒத்து  >  ஒத்துதல். (வினைச்சொல்).

    ஒ + து  >  ஒன்று.  அல்லது ஒ > ஒன் > ஒன்று.  ஒன்+ து > ஒன்று.

    இனி ஒரு மூன்றாவது வடிவமும் தோன்றும்.

    ஒ > ஒல் > ஒல்+து > ஒற்று.

    ஒல்லி என்ற சொல்லில் ஒல் உள்ளது. இரு இணைகோடுகள் ஒன்றாவதுபோல்,  பக்கங்கள் ஒன்றாதல் நோக்கிய நெருக்கத்தால்  ஒல்லியான தன்மை ஏற்படுகிறது. ஒ என்னும் ஓரெழுத்துச் சொல்லை  ( ஒ+த்த)  உணர இவ் வரையறவு தேவையாகிறது.

  ஒப்பு என்ற சொல்லில் பு விகுதி. இது பெயரும் வினையுமாகும். தொழிற்பெயர் ஒப்பு முதனிலைத் தொழிற்பெயர், ஒப்புதல் விகுதி பெற்ற தொழிற்பெயர்.

   ஓங்குதல் என்ற சொல்லில், ஒன்று பிறவின் மிக்குநின்றதே கருத்து. ஒப்புமைக் கருத்து ஈண்டு கரவுகொண்டு நிற்கின்றது. உலகில் ஒரே பொருளாய் அது இருப்பின் ஓங்குதற் கருத்துக்கு வேலையில்லை.

 முடிவனவும் ஒருவனுக்கு ஒன்று பின் ஒன்றாக நிகழுதலே பெரும்பான்மை ஆதலின் ஓண்ணு > ஒண்ணுதல் என்பதும் முடிதற் கருத்தைக் கொண்டிருக்கிறது.

   ஒ > ஒரு என்பதும், கு என்னும் வினையாக்க விகுதி ஏற்று, ஒருகுதல் ஆகும். இதன் பிறவினை ஒருக்குதல்.  ஒன்றை இன்னொன்றில் சொருகும்போது இச்சொருகுதலால் இருபொருள் ஒருவித இணைப்பைப் பெறுகிறது. இவ்விணைப்பு  ஒருமை உறுத்துவதால்,  ஒருகு -  சொருகு என்பன உறவுடைய சொற்கள்.  அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாதல் பழைய இடுகைகளில் தெளிவுறுத்திய கருத்து.  அவற்றை மீண்டும் வாசித்துக்கொள்க.

    ஒருகு > சொருகு.

    ஒ.நோ:  அமண் > சமண்.

                    அடு > சடு> சட்டி.

ஒருகு உருவம் > சொருகு உருவம் > (சொரூவம்) >  சொரூபம்.

உருவம் > ரூபம்.

உரு என்பதில் முதல் உகரமும்  இறுதி உகரமும்  தோன்றற் கருத்தின் வெளிப்பாடு.

உரி என்றால் தோன்றி இங்கேயே இருப்பது. ஆகவே உரியது.  உர்+இ

ஒர் உ > ஒரு என்பது வேறுபடா முன்னிருத்தல் குறிக்கிறது.

இவை சுட்டடி வளர்ச்சிகள்.

அறிக மகிழ்க

மறுபார்வை பின்.


 



வியாழன், 26 நவம்பர், 2020

தனிமையில் கிடந்து இறந்தவர்கள்

என்பொடு தோலுமாய் இளைத்த உடம்பினர்

எண்பது போல்பலர் எண்ணிடு அகவையர்

பண்புடை யவர்கள் பாவம் ஒற்றையாய்

நண்பர் உறவினர் யாருமி  லாதவர்


நகர்களில் நாட்களைக் கழித்தோர் இவர்கள்

பகர்வதும் இலர்தம் துயர்தரு தனிமை;

புகர்மலி மானிட வாழ்க்கை! ஒருநாள்

தகர்ந்துயிர் நமற்குத் தந்துல ககன்றனர்.


போயபின் ஆரும்  அறியாப் புகுதியாய்

மாயவிவ் வாழ்வில் மயங்குல கசங்காச்

சாயுறு கூடாய்க் கிடந்தனர், சாவினை

வாய்கொடு சொல்வார் வையகத் தில்லை.   


தனிமைத் துன்பம் முடிவிலும் தொடர்வது;

மனிதன் சாவில் இணைந்திடு பின்பும்

புனிதமும் புனலா டுதலும் வேண்டுமே;

இனையதோர் காப்பும் இனிவரல் நாடுவம்.


உள்ளார் தனியெனில் உள்ளவர்  கூடி

மெள்ள அவரை மன்பதை புகுத்தித்

தள்ளா அணைப்பினில் தகையுறக் கூட்டிப்

பிள்ளைகள் போலும் பிழையற நின்றும்


இறுதிக் கருமமும் இனிதாய்ப்

பெறுகபின் செல்கெனப் பீடுறச் செய்வமே.  


பகர்வதும் -  சொல்வதும்

இலர் - இல்லை 

நமன் - எமன். நமற்கு - எமனுக்கு.

புகர்மலி -  துன்பம் நிறைந்த;

புகுதி -   நிகழ்வு, சம்பவம்.

அசங்கா(த) - (இரங்கி) அசையாத 

சாயுறு கூடாய் - இறந்த (சடலமாய்)

வாய்கொடு சொல்வார் - அறிவிப்பவர்கள்

தனிமைத் துன்பம் - ஆதரவின்றி வாழும் இடர்

முடிவிலும் -  இறந்துவிட்ட பின்னரும்

புனிதமும் புனலாடுதலும், - சடங்குகளும் பிணம் குளிப்பாட்டுவதும்

இனையதோர் காப்பு - இத்தகைய ஒரு காவலுடைய சூழல்

நாடுவம் -  நாடுவோம்.

உள்ளார் தனியெனில் உள்ளவர் கூடி - தனியாக வாழ்ந்து வருந்துகிறவர்களைப் பக்கத்தில் வாழ்பவர்க்ள் ஒன்றுசேர்ந்து;

மன்பதை புகுத்தி -  சமூகத்துக்குள் கொண்டுவந்து;

தள்ளா அணைப்பினில் - (இத்தகு தனியவர்களை) விலக்கி விடாமல் உதவிக் கரம்   நீட் டி      உடன் சேர்ந்து;

பிள்ளைகள் போலும் - ( பிள்ளைகுட்டி இல்லாதவர்கள் ஆகையால்)

நாமே பிள்ளைகள் போலச் சுற்றி நின்று;

இறுதிக் கருமம் -  இறுதிக் கடன்களை [முடித்து அவர்

உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வோம்.]


இதுபற்றிய ஒரு துன்பச் செய்தியைக் காண

கீழ்க்கண்ட தொடர்பினைச் சொடுக்கவும்: 


https://theindependent.sg/remains-of-elderly-woman-dog-found-in-condo-unit-over-a-year-after-she-was-last-seen/


எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும்.