செவ்வாய், 24 நவம்பர், 2020

இலக்கணமும் சொல்லாய்வும்

பகுபதத்தில் தொகுத்தல், பகாப்பதத்தில் முக்குறைகள்  என்று  இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். பார்த்தால் இத்தகு வேறுபாடு சொல்லாக்கக் கலையில் அல்லது சொன்மூலக் கண்டுபிடிப்பில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்திவிடுவதில்லை.  ஆகவே இடையில் எழுத்துக் குறைவுகள் அல்லது ஒலிக்குறைவுகள் ஏற்படின், எத்தகு பதமாயினும் இங்குள்ள இடுகைகளில் இடைக்குறை என்றே குறிக்கப்பட்டுள்ளன என்பதை பலகாலும் ஈண்டு வந்து சென்றோர் உணர்ந்திருக்கக் கூடும். ஒன்று சொல் குறுகிவிட்டது  அல்லது நீண்டுவிட்டது : அவ்வளவுதான்.

இலக்கண நூலார் ஒவ்வொருவரும் முக்குறைச் சொற்களுக்குப் பெரும்பாலும் எப்போதும் காட்டப்பெறும் எடுத்துக்காட்டுகளையே காட்டுவர். பாடத்திட்டங்கள் மாறும்வரை, வாத்தியார்களும் அவற்றையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். பல்கலைக்கழக வாத்தியார்முதல் பொடியன்களுக்குக் கற்பிப்போர்வரை எல்லாரும் அவ்வாறே.  தொழில் முறை அவ்வாறு உள்ளது. பாகவதர்கள் பாட்டுகள் போல. பாகவதர் சிலர்மட்டுமே சின்னூரில் பாடிய பாகத்தை  (பாகம் ஒன்று)  குன்னூரில் மறுபடியும் பாடாமல் இன்னொரு பாகத்தை (பாகம் 2)ப் பாடி,  3-வது ஊரில் ( முன்னூரில்) மூன்றாவது பாகத்தைப் பாடுவராம்.  அருகருகே உள்ள ஊர்களில் அதே பாகத்தைப் பாடக்கூடாது என்பதற்காக.

நாம் இங்குக் குறுக்கச் சொற்களைப் பெருவாரியாகக் காட்டியுள்ளோம்.

கிருஷ்ணன் என்ற சொல்கூட இடைக்குறையாய் வந்து முன் நிற்கிறதே.  இசையமைப்பில் புகழ்பெற்ற (சங்கர்-) ஜெய்கிஷன் பற்றி எண்ணும்போது, ~~ ஜெயக்கிருஷ்ணன் என்பதுதான் வடக்கில் இடைக்குறைந்து அவ்வாறு வழங்குகிறது என்று நாம் சொல்வோம். பகர வகரத் திரிபாயின், பன்சாடா என்பது வன்சாடா ஆகும் என்றும் பசந்த் என்பது வசந்தம் என்றும் சொல்வோம்.

நீங்கள் பின்னூட்டமிட்டு வாதிக்கப் பலவுண்டு ஈண்டு.

இரும்பினால் செய்யப்படுவதே ஆணி,  ஆனால் குந்தாணியில் ஆணி எதுவும் இல்லை. அப்புறம் எப்படி அதற்கு ஆணி என்ற பெயர் ஏற்பட்டது?   குந்துவது என்பது உட்காருவது, அமர்வது என்னலாம். உங்கள் ஊரில் உள்ள குந்தாணியில் ஆணி அடிக்கப்பட்டுள்ளதா என்பது யாம் அறியாதது.  அடித்திருந்தால் பெயர் பொருத்தம் என்று விட்டுவிடுவோம். இல்லை என்றால் மேலும் ஆய்வு செய்வோம். உள்ளதுகாறும் மென்மேலும் அறிவினை வளர்த்துக்கொள்ளுதல் நன்று,   இன்றேல் ஊதியமில்லை உயிர்க்கு.

பின்னூட்டமிடுங்கள். உங்களிடமிருந்து அறிய ஆவல்.

நாளை அல்லது பின்பு அளவளாவுவோம்.


சனி, 21 நவம்பர், 2020

தீபத்தம்பம் - தமிழில்?

 இச்சொல்லை இக்காலத்தில் நாம் பெரும்பாலும் எதிர்கொள்வதில்லை. இக்காலங்களில் மிகுதியானோர் வான்வழிச் செலவு  என்னும் பறந்து செல்லுதலை மேற்கொள்வதுதான் காரணம். கப்பலில் சென்றால் ஒரு துறைமுகத்தை அடையுமுன் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களைக் காணவேண்டிவரும். கலம் என்பது நீர்மேலூர்தி. கரைதல் ஆவது அழைத்தல். விளக்கு -  இங்கு எரியும் நிலைப்பந்தம். இது ஓர் அழகான சொல்தான்.

நீர்மேலூர்திகள் -  ஓடம், படகு, கட்டுமரம்,  தோணி, கலம் எனப்பலவுள்ளன. இதைப் படிக்கும் நேயர்கள், நிமேதி என்பது என்ன ஊர்தி என்று எனக்குத் தெரிவியுங்கள். (பின்னூட்டமிடுங்கள்).

கப்பல் என்பது நல்ல தமிழ்ச்சொல் என்று ஒரு  தமி ழாசிரியர் வெளியிட்டிருந்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்திருந்தார். அதை அவர் நூலில் கண்டுதெளிக. ( உரிமைப்பதிவு செய்த நூல்: அதிலுள்ளதை இங்கு விரித்தல் இயலாது, , மன்னிக்கவும் ).

கப்பலென்பது  "கப்பு கப்பு" ஒலிசெய்த வண்ணம் புகைவிட்டுக்கொண்டு  சென்றதால்  (  அந்தக்காலத்தில் எல்லாம் நீராவிக் கப்பல்கள்)  ஏற்பட்ட பெயர் என்று சில மூத்த பெருமக்கள் கூறுகின்றனர்.  இருக்கலாம்.

இயங்கு ஈருருளிகள்  வந்த காலத்தில் வாழ்ந்த அம்மையார் ஒருவர்,   "மோட்டோர் சைக்கிள்" என்பதை "திக்குதிக்கு வண்டி" என்றாராம். இதிலிருந்து "திக்குருளி" என்ற சொல் ஏற்படவில்லை.

அதைப்போல ஒலிக்குறிப்புகளிலிருந்து சொற்கள் எல்லாமொழிகளிலும் ஏற்பட்டுள்ளன.  காவ்காவ் என்று குலைப்பதால் (குரைப்பதால்)  காவ் என்பது சீனமொழியில் நாய்க்குப் பெயராய் உள்ளது.  குர்ர்ரோ குர்ர்ரோ என்று கத்துவதால் காக்கைக்குக் குரோ என்று ஆங்கிலத்தில் பெயர் அமைந்தது.  கப்பல் என்ற சொல்லும் ஒலிக்குறிப்பு அடிப்படையில் எழுந்த பெயராயும் இருக்கலாம்.  பெயர்கள் பல காரணங்களால் ஏற்படுவன ஆகும்.

ஆனால் கப்பலென்பது பெரிய கடல்களைக் கடத்தலுக்கு (கடந்துசெல்லுதலுக்கு)  உதவும் பொருட்டு ஏற்பட்ட நீர்மேலூர்தியாம். கடப்பு+ அல் = கடப்பல் என்ற பெயர் இடைக்குறைந்தும் கப்பல் என்ற பெயர் வந்துற்றது.  இச்சொல் ஒரு பல்பிறப்பி ஆகும். இது, பல உள்ளுறுப்புகள் அடங்கிய உடலின் மேற்பாகம்,  அடங்கம் > அங்கம் என்று இடைக்குறைந்து பெயர் ஏற்பட்டது போலுமே. இடைக்குறைச்சொற்கள் மிக்கு மிளிரும் மொழி தமிழாகும்.  இத்தகைய சொற்கள் (திரிபுகள்) மிக்கிருந்த காரணத்தால், தொல்காப்பியர் செய்யுளீட்டச் சொற்களில் திரிசொற்களையும் உள்ளடக்கினார். இயன்மொழியாம் தமிழ் தன் திரிபுகளால் பலமொழிகளைப் பிறப்பித்துத் தாயானது.

வருகிறான், போகிறான் என்பவற்றில் { இடைநிலைகள்  கிறு (கின்று, ஆநின்று) } ---- கிறு என்பது கு+இன்று என்பதன் புணர்வில் விளைந்த இடைக்குறையாகிய இடைநிலை என்பதை அறிஞர் வரதராசனார் கண்டுரைத்துள்ளார். இஃது நுண்மாண் நுழைபுலம் ஆகும்.

இப்போது தீபத்தம்பம் அல்லது தீப ஸ்தம்பம் என்ற சொல்லைக் காண்போம்.  ஸ்தம்பம் என்பது தானாய் நின்றுகொண்டிருப்பது. தன்+பு+அம் = தம்பம்.  இச்சொல் பின்பு +அம் = பிம்பம்  போலும் அமைந்தது.  பிம்பம் என்பது பின்வீழ் ஒளிநிழல்.  தன்பம் - தம்பம் தானாய் ( ஒற்றையாய்) நிற்பது.  தன் பின் பிறந்தவன் தம்பி (தன்பின்) என்றானது கண்டு தெளிந்துகொள்க. பின்னாளில் தீபத்தம்பம் தீபஸ்தம்பம் என்று மெருகுற்றது.

தீபம் என்பது தீ  பற்றி எரியும் கோலைக்குறித்தது.  தீ + பற்று + அம் > தீப(ற்ற)ம் > தீபம் என ஆகிய இடைக்குறைச் சொல்.  தமிழில் இடைக்குறைகள் கூடுதல்.

இதைச் சுருக்கமாக ஆய்வாளர் தீ + பு+ அம் :  தீபம் என்று விளக்கிக்கொள்ளலாம்.  மோசம் இல்லை.

இதைப் பாருங்கள்

பத்தினோடு ஒன்று >  பத்தின் ஒன்று > பதினொன்று.( பதுனொண்ணு ). நன்றாக இருக்கின்றது.

பன்னிரண்டு:  பத்தினோடு இரண்டு > ப(த்தி)ன் இரண்டு > பன்னிரண்டு.

பத்து என்ற சொல் பல் என்பதிலிருந்து வருகிறது.  பல்>பன் திரிபு. இன்னொரு வகை விளக்கம்.

விளக்கம் பலவென்று துளக்குறா நெஞ்சம் வாழ்க.

மெய்ப்பு பின்.

வெள்ளி, 20 நவம்பர், 2020

சூழ்தருதனம் அல்லது செல்வச்சூழல்.- சுதர்சனம்

 பண்டமாற்றுப் பொருளியல் தேய்ந்து பணப்புழக்கம்  நாட்டில் ஏற்பட்ட பின்பு மக்கள் தாங்கள் தேட்டினை உலவும் பணத்தாள்களாக மாற்றிவைக்க முனைந்துவிடவில்லை. நகைபகை1*யெல்லாம் ஒரு குடத்துக்குளிட்டுப் புதைத்து வைத்துக்கொள்ளவே தலைப்பட்டனர். கல்யாணம் காட்சி என்று வரும்போது தோண்டி எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள இவ்வழக்கம் உதவியது.

ஓருவனின் செல்வம் குடத்துள் இட்டுப் புதைப்புறாமல்,  அவனிடத்துச் சூழப் பலராலும் காணப்படுமாயின், அத்தனத்தைச் சூழ்தரு தனம் என்று சொல்வதே சரி.  புதையல் அன்று என்பது யாரும் அறிவார்.  தனம் என்பது தன் சொந்தச் சேமிப்பில் தான் வைத்திருப்பது.  தன் + அம் = தனம்..  இதைத் தனம் என்க.  த என்பதை எடுத்தொலிக்கவேண்டாம். இது பெர்சனால்டி என்பதுபோலும் சொல்.

இனித் திரிபு காண்போம்.

சூழ் >  சூ > சு. (கடைக்குறையும் முதனிலைக் குறுக்கமும்).

தரு -  தர். உகரம் கெட்டது.

தனம் > சனம்.    முன் இடுகைகளில் த ச திரிபு கண்டுகொள்க.

சு + தர் + சனம் = சுதர்சனம்.( பாக்கியவான்.)

சுதர்சனம் > சுதனம்


குறிப்புகள்:

1*நகை என்பது பெரும்பாலும் பொன்னாலான அணிகலன்கள் அல்லது ஆபரணங்கள்.  பகை என்பது எதிரிகள் அல்லர்.  ஒருவர் வைத்திருக்கும் முழு நகைத்தொகுதியிலும் ஒரு பகுதி.    பகு > பகு+ ஐ > பகை. --  எனில் பகுதி.  பகை என்ற பகுதி  எதிரியைக் குறிக்கக் காரணம் அவன் நம்மிலிருந்து பகுந்து வேறுபட்டு நிற்பதுதான்.  இப்பொருளும் சொற்பொருண்மையுடன் தொடர்புபட்டதே ஆகும்.

எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.