திங்கள், 2 நவம்பர், 2020

குதர்க்கம்... (பேசி மயக்குதல்)

 கவி கா.மு ஷெரிப் ஒரு சிறந்த கவிஞர்.  சீறாப்புராணத்திற்கும் உரை வரைந்துள்ளார் இவர். இவரெழுதிய இருகுரலிசைப் பாடலில் பெண்- ஆண் பாடுவதாக வரும் இரு வரிகளை இங்குக் காண்போம்.

பெண்:  குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்குக் கற்றீரோ?

ஆண்:    உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே!

இந்த உரையாட்டுப் பாடல் நன்றாகவே உள்ளது.

இதில் வரும் குதர்க்கம் என்ற சொல்லையும் அதற்கு முன்பாக தர்க்கம் என்னும் சொல்லையும் இங்கு ஆய்ந்து காண்போம்.

சொல்லுக்குச் சொல், வார்த்தைக்கு வார்த்தை தருதலே " தருக்கம் " ஆகும்.

தருதல் என்பது வினைச்சொல்.

தருக்கு என்ற அடிச்சொல் தருதல் என்பதனடித் தோன்றியதே ஆகும்.  பதிலுக்குப் பதில் பேசிவிட்டால், " நல்லாக் கொடுத்தான் பாரு!" என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.  இத்தகு  சொல்லாடல்களின் தொடர்பில் தருதல் என்பது முன்மை பெறும் கருத்தாகும்.  தருக்கு என்பதில் தரு - பகுதி; கு என்பது விகுதி ஆகும்.

தருக்கு என்பது உலகவழக்கில்  தருதல் என்ற அடிப்படைக் கருத்தைக் கடந்து அகங்கரித்தல், ஊக்கமிகுதல்  என மட்டுமின்றி சில தொடர்புடைய மனவுணர்வையும் நடத்தையையும் குறிக்கலாயிற்று.   பல சொற்கள் இவ்வாறு பொருள்விரிவுறும்.  தருக்கு என்பது செருக்கு என்று கூறுதலும் கூடும்.  வீண்வார்த்தையாடுதலை மக்கள் விரும்பாமையே இத்தகு பொருள்விரிவுக்குக் காரணம்.

தருதல் என்ற வினையடிப் பிறந்த சொற்கள் ஏராளம்.  அகப்பை அல்லது சட்டுவத்துக்குக் கூட இவ்வினையிலிருந்து பெயர்கள் ஏற்பட்டுள்ளன.  அது தருவி,  தறுவி என்பனவாகும்.  சட்டியிலிருந்து குழம்பைத் தருவிப்பது அகப்பை அன்றோ?  தரு என்பது தார் என்று திரிந்து, தாரம் என்று மனைவியையும் குறிக்கும்.

இப்போது தருக்கு என்பதற்கே திரும்புவோம்.  இது அம் விகுதி பெற்றுத் தருக்கம் என்றாகும். அப்போது வாதத்தையும் ( சொல்லாடல்) குறிக்கும்.

தருக்கம் என்பது தர்க்கம் என்றும் குறுக்கி எழுதவும் பேசவும் படும். 

இந்நிலையில்  சிறு சிறு தருக்கங்களைக் குறிக்க ஒரு சொல் எழுந்தது.  அது " குதர்க்கம்" என்ற சொல்.    குதர்க்கம் என்பது  குறு தருக்கம் என்பதன் குறுக்கமாகும்  குறு என்ற சொல்,  றுகரம் இழந்து கு என்று நின்றது,  இது கடைக்குறை ஆகும்.

குறு >  கு

கு + தர்க்கம் >  குதர்க்கம்.

குதர்க்கம் பேசியும் ஒருவரை மயக்கலாம் என்கிறார் கவி.

மெய்ப்பு பின்பு



 


 

சாமந்தன் - புணரியல் விளக்கம்.

 நிலைமொழியும் வருமொழியும் இணைகின்ற போது, சொற்கள் எவ்வாறு மாறும் என்பதற்குப் புணரியல் ( சொற்புணர்ச்சி இலக்கணம்) சில விதிகளைத் தருகிறது. ஆயினும் இதிற்சொல்லப்படும் இலக்கணம்,  ஒரு வாக்கியத்தில் அல்லது கவிதை வரியில் இரண்டு முழுச்சொற்கள் இணைதற்கான இலக்கணமே ஆகும்.  ஒரு சொல்லை அமைக்கும்போது அதில் நிலைமொழி - வருமொழிகள் இல்லை. எடுத்துக்காட்டாக,  என்று என்பது என்+து என்ற இரண்டும் சேர்ந்தமைந்த சொல்லாகும்.  இவற்றுள் என் என்பது நிலைமொழியும் அன்று; து என்பது வருமொழியும் அன்று. எனவே சொல்லமைப்பில் வேறுபட்டு இணைதல் நிகழும்.  எடுத்துக்காட்டாக:

என் + து =  என்று ( தமிழில்)

என் + து =  எந்து   ( மலையாளம்).

தமிழிலும் இவ்வாறு சொற்கள் அமையும்.  உதாரணமாக:

முன் + தி  =  முந்தி

பின் + தி =  பிந்தி.

ஆசிரியர் சிலர் இவற்றையும் காட்டுவர்:

மன் + திரம் =  மந்திரம்.  

தன் + திரம் = தந்திரம்.

இங்குத் திரம் என்பது  திறம் என்பதன் திரிபு.  இது விகுதியாய்ப் பயன்பட்டது.  இறைவன்முன் வைக்கப்படும் ஒரு வேண்டுதலை  ஓதுவதன் மூலம் நிலைபெறுவித்தலே மந்திரம் என்பது.  மன்னுதல் -  நிலைபெறுவித்தல். தன் சொந்தத் திறமே தந்திரம் என்பது.  மந்திரம் என்ற சொல்லை அமைக்கக் காரணமாகியது ஓதுவோன் அதனை வேட்போன் ஆகியோரின் நம்பிக்கையாகும்.  

மன் என்ற அடியிலிருந்தே மனிதன்  ( மன்+ இது + அன் ). மாந்தன் ( மன்> மான்; மான்+ து +அன்),  மன்+ தி > மந்தி முதலிய சொற்களும் அமைந்தன.  மாந்தன், மந்தி முதலியவை, மான்றன், மன்றி என்று அமையவில்லை. மாறாக, பல்> பன் > பன்றி (பன்+தி) என்று அமைந்தாலும்,  பல் > பன் > பன்னி என்ற சொல்லும் வழக்கில் உள்ளது.  வென்றி என்ற சொல்,  வெல் > வென்> வென்றி,  வெல்+தி : வெற்றி என்று இருவகையில் வருமெனினும் வெந்தி என்று வரவில்லை.

இனிச் சாமந்தன் என்ற சொல் காண்போம்.

சாமந்தன் என்போன் சார்பாக ஓரிடத்தை ஆள்பவன்.  இது:

சா : சார்பாய்,

மன் - ஒரு மன்னனின் கீழ்

தன் - தன் ஆளுகையை மேற்கொள்பவன்.  அல்லது சார்பு மன்னன்.

இங்கு,  சார்மன்னன் என்று சிந்தித்து சாமன்னன் என்று அமைத்திருக்கலாம். அப்படியானால் செத்துப்போகும் மன்னன் என்று அமங்கலப் பொருள் தோன்றுமாகலின், அதை மாற்ற ஒரு து இடையில் வந்தது.

சார் + மன் + து + அன் ,  இதில் ர் என்பதை விலக்க, சாமந்தன் என்று அமைந்தது புனைந்தோன் திறனே.

இது சாமன்றன் என்று அமையவில்லை. 

இடைநிற்கும் ரகர ஒற்று மறைதற்கு எ-டு:  சேர்+ மி > சேமித்தல்.

(சேர் + ம் + இ ).

இவ்வாறு ஓர் உத்தியைக் கையாண்டுள்ளனர்.


மெய்ப்பு பின்



 

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மயிர் என்பது

மா என்பது கருமை நிறத்தையும் குறிக்கும்.  இச்சொல்லுக்குப் பல பொருள்கள். ஆதலால் "நிறத்தையும்" என்றோம்.

பேச்சு  வழக்கில் மாநிறம் என்றால்,  மிகுந்த கறுப்பைக் குறிக்காமல், இடைப்பட்ட ஒரு நிறம் குறிப்பதாகும்.

மா நிறம் என்பதனுடன் தொடர்புகொண்ட இன்னொரு சொல்லைக் கவனிப்போம்.

மா இர் >   மை இர் >  மயிர்.

இதில் மா என்பது மை ஆகிவிட்டது. மை என்பது "ம" ஆனது. 

சொல்வரலாற்றில் மைக்கு முந்தியது மா. அதனால் அதைக் காட்டினோம். நீங்கள் மை+ இர் என்ற முடித்துவிடலாம் என்று நினைக்கலாம். அப்படியே நீங்கள் வைத்துக்கொள்வதில் எமக்கு மறுப்பு ஒன்றுமில்லை. மை எப்படி வந்தது -- யாரும் கேட்டால் அப்போது நீங்கள் விரித்துக்கொள்ளுங்கள்,

இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:   மை+ இல் =  மயில் ஆகும்.   இல் என்பது
இடம் என்ற பொதுப்பொருள் உடைய சொல் மைப்புள்ளிகள் போலும் இடங்களை உடைய தோகைப் பறவை.

இர் என்ற இறுதி,  இரு என்பதோடு உறவுற்ற சொல்    இரு > இர்; அல்லது இர்> இரு. எவ்வாறு ஆயினும் உணர்ந்துகொள்வதே முதன்மை யானது ஆகும். இரு என்ற வினைச்சொல் முன்மை வாய்ந்தது.  வினைச்சொல் எந்த மொழியில் உள்ளதோ அங்குதான் பெயர் ஏற்பட்டது என்பது சொல்லியலார் முடிபு.

மை இர் என்பது இணைந்து,  மயிரானது.  முதனிலைக் குறுக்கம்..

மயிர் என்பது மசிர் என்று வழங்குவது  ய- ச திரிபு.  இது பல மொழிகட்குப் பொதுவான திரிபு.  தமிழில் வாயில் > வாசல்,  காண்க.

மெய்ப்பு - பின் வரும்.