வெள்ளி, 31 ஜூலை, 2020

கஷாயம். கசாயம்

இவண்  இனிமை தெரிவிக்காத ஒரு சொல்லைப் பற்றி
ஆய்ந்தறிவோம்.

அது கஷாயம் என்ற சொல்தான். பாயசம் குடிக்கப்
பலர் விரும்பும் இந்நாளில் யார் கஷாயம் குடிக்க
விரும்புவார்?

கஷாயம் எத்துணை கசப்பாய் இருக்கும் என்பது 
உண்மையில் யார் அதைத் தயாரிக்கிறார்கள் 
என்பதைப் பொறுத்ததே ஆகும். சித்தவைத்தியரே
அதைத் தயாரித்தால் மிகக் கசப்பு உடையாதாய் 
இருக்குமென்று நாம் எண்ணலாம்.

கஷாயம் என்பது உண்மையில் கச ஆயம் தான். 
கசப்பாய் ஆயது கசாயம்.

இச்சொல்லில் முன் நிற்பது கசத்தல் என்ற 
வினைச்சொல்.

கச என்பது கஷ என்று திரிந்துவிட்டதால் பலருக்குத்
தடுமாற்றமாய் உள்ளது. வடவெழுத்து என்ற அயல் ஒலி
நீக்கி, உரிய ஒலியோடு (எழுத்தொடு) புணரின் அது சரியான
சொல்லாகிவிடும். தொல்காப்பியம் சொல்வது இது,

ஆயம் என்பதையும் இவ்வாறு அறியலாம்:

ஆதல் - வினைச்சொல்.
ஆ வினைப்பகுதி.

ஆ + அம் =  ஆயம்,  யகர உடம்படுமெய் தோன்றியது..

ஆய என்ற எச்சவினையினின்று இதை அறிய:

ஆய + அம் =  ஆயம்,  இங்கு ஆய என்பதன் ஈற்று அகரம் 
கெட்டது.
ஆய் என்ற வினை எச்சத்திலிருந்து அறிவதானால், 
இன்னும் எளிதாகிவிடும். ஆய்+அம் = ஆயம்.

எச்சங்களிலிருந்து பிற பாலி, சங்கதம் போலும் 
மொழிகளில் சொற்கள் பல பிறந்தனவென்று சொல்வர்
ஆய்வாளர்.

சொற்களில் ஒவ்வொன்றும் வினைப்பகுதி, விகுதி
என்று இணைந்து தோன்றியிருக்கும் என்பது 
இலக்கண ஆசிரியர்கள் கருத்து. இலக்கணம் 
காணப்படுமுன்னரே சொற்களும் மொழியும் 
தோன்றிவிட்டமையால், இப்படிக் கருதுவது
மொழிவரலாற்றுக்கு முரண்பட்ட தவறான 
கருத்து அல்லது கொள்கை. இலக்கியம் அல்லது
மொழியில் காணப்பட்டதற்கே உண்மை கண்டு
இலக்கணம் உரைக்கவேண்டும். விடப்பட்டதை
சொந்தபுத்தியில் அறிக.

பெய்ப்பு பின். 



வியாழன், 30 ஜூலை, 2020

இனி யாம் செய்யவிருப்பது

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே
பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே
இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே
நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 


இதன் பொருள்:

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே:
மூன்று நாட்களுக்கு முன்பு யாம் இடுகை ஒன்று
உங்களுக்காக இட்டிருந்தோம்;

பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே--
அதன்பின் யாம் எழுதியவை எல்லாம் எம் சொந்த
வேலைகளை முன்னிட்டு; அதனால் அவை 
மக்கள் படிக்கத் தக்கவை அல்ல;

இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே-
இன்று ஒன்று எழுதப்போகிறோம்;  அது உங்களுக்குக்
கிட்டும்;  ஆனால் அந்தச் சொல்லில் இனிமை எதுவும்
தேடாதீர்கள், இனிமை என்பது இராது.

நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 
நல்லபடியாக எழுதியபின்புதான் அயர்ந்து
உறக்கம் கொள்ளுவோம் என்றபடி.

அதைப் படிக்கத் தயாராய் இருங்கள். நன்றி

மெய்ப்பு - பின்...


திங்கள், 27 ஜூலை, 2020

மருத்துவர் உயிரிழப்பு.

பீடிக்கும்  எந்த வயதிலும் 
நோயிம் மகுடமுகி
மாடியில் வாழினும் மண்குடில்
வீழினும்  பார்ப்பதில்லை
ஓடி உழைத்த மருத்துவர்
ஒய்ந்துயிர் விட்டகன்றார்
கூடும் இருபத் துடனேழில் 
நோய்நுண்மி கூடியதே

உரை:

பீடிக்கும்  எந்த வயதிலும் நோய் -  எந்த
வயதிலும் நோயானது பற்றிக்கொள்ளும்;

இம் மகுடமுகி மாடியில் வாழினும் மண்குடில்
வீழினும்  பார்ப்பதில்லை - கொரனா வைரஸ்
நோய் மகுடமுகி என்பது  மாடியில்
வாழ்பவரையும் மண்குடிலில் வாழ்க்கையில்
வீழ்ச்சி காண்பவரையும்
வேறுபடுத்தி நடத்துவதில்லை;

(டெல்லியில்) ஓடி உழைத்த மருத்துவர்
  -  முன்னணியில் இருந்துகொண்டு
 ( இந்த நோயாளிகளைக்) 
கவனித்துக்கொண்ட மருத்துவர்,

கூடும் இருபத்துடன் ஏழில் -  அடைந்த
தன் இருபத்து ஏழாம் (வயதில் )

ஓய்ந்து  -  மருந்துவமனையில் படுக்கையில் 
நடமாட்டம் இன்றிக் கிடந்து;

உயிர்விட்டு அகன்றார் -  இறப்பினை எய்தி
உலகினைப் பிரிந்தார்;

நோய்நுண்மி கூடியதே -  நோய்க்கிருமிகள்
அதிகம் ஆகிவிட்டன.

( அதனால் )  என்றவாறு.



செய்தி:
கொரனா நோய் மருத்துவர் 27 வயதில்
தொற்றின் காரணமாய் மறைந்தார்.
டில்லியில்.

கவனமாய் இருங்கள்.
நோயிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.

மெய்ப்பு பின்