சனி, 25 ஜூலை, 2020

டகர ரகர ஒலிப்பரிமாற்றங்கள்


எழுத்து திரிபு அடைந்தாலும் பொருள் மாறாமையைப் போலி
என்பர். இங்கு யாம் அந்தக் குறியீட்டினைப் புழங்கவில்லை.
பழைய குறியீடுகளையே பயன்படுத்தி மருட்சியை
விளைக்காமல் புதிய தென்றாலாய் உட்புகுத்துதல் வேண்டு
மென்பதும் எம் நோக்கமாகும்.  இலக்கணத்தையும் உள்ளிலங்கும் குறியீடுகளையும் கொணரப் போதகர்கள் போதுமான அளவில் இருக்கிறார்கள். மட்டுமின்றி, நூல்களும் அனந்தம். பல
படிப்பாரற்றுக் கிடக்கின்றன. வேறு வழிகளில் அவர்களுக்கு
ஆர்வமூட்டுதல் வேண்டும்.

மேலும் சொல்லாய்வு என்பது வேறு. சொல்லாய்வு என்பது
இலக்கணம் அன்று.  தெரிந்த இலக்குகளை வைத்துக்கொண்டு
தெரியாத. உணரப்படாத, உணரமறுக்கின்ற பலவற்றை
வெளிக்கொணர்ந்து ஆய்வதுதான் எம் சொல்லாய்வின்
நோக்கமாகும். தெரிந்ததற்கு நூல்கள் உள்ளன. அதை இங்கு
எழுதவேண்டியதில்லை. மாறுபட்டுச் சென்று உண்மை
காண்பதும் யாம் மேற்கொள்வதாம்.

ஓர் எழுத்துக்கு இன்னோர் எழுத்து மாற்றீடு ஆன
போதும் சில நிலைகளில் பொருள் மாறுவதில்லை. இதை
நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மடிதல் என்பது இறத்தலைக் குறிப்பது. இச்சொல்லுக்கு
வேறு பொருளுமுண்டு. இதன் பிறவினை வடிவமாகிய
மடித்தல் என்பது பொருளில் வேறுபடும். இவை ஒரு
பொருளனவல்ல.  இந்தத் துணி மடித்துப்போய்விட்டது
என்றால் அது தரமிழந்து, கையால் தொட்டால் தானே
கிழியும் வண்ணம் அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டது
என்பது பொருள்.

மடிதலென்பது :  மடி > மரி என்று திரியும். இதைப் பிற
அறிஞர்களும் கூறியுள்ளனர்.  மடிதல் எனற்பாலதற்கு
மரித்தலென்பதே ஈடான பொருளுடையது ஆம். ஒன்றில்
வலிமிக்கு வரினும்,  மடி > மரி என்று வினைப்பகுதிகளை
ஈடாக நிறுத்துவதே பொருத்தமாகும்.

இந்த மாற்றம் பழைய இடுகைகளில் தரப்பட்டுள்ளன.  இன்று
இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.

ஒடுக்குதல் என்பது ஒருக்குதல் என்று மாற்றமாய்
நிற்பதுண்டு. இங்கும் டகர ரகர மாற்றீடு காணலாம்.

மேற்காட்டியபடி டகரத்துக்கு ரகரமேதான் வருமென்பதில்லை.
டகரத்துக்கு றகரமும் வருதலுண்டு.  அந்நிகழ்வினை
ஒண்டி >< ஒன்றி என்பதிற் காணலாம்.

இவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தவகையில் டகரம் ரகரமாகவோ றகரமாகவோ
மாறுமென்னும் போது இதை நினைவில் வைத்துக்கொள்ள
வேண்டும். 

இது நினைவில் இருக்குமானால் ஒரு திரிபைக்
காட்டும்போது எடுத்துக்காட்டுகள் கூறாமல் சுருக்கிக்
கொள்ளலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

அறிக மகிழ்க.

கொரனா (முடிமுகி)ப் பரவலில் சிக்கிக்கொள்ள
வேண்டாம்


Edit later 






வியாழன், 23 ஜூலை, 2020

ஒவையுடன்... ஆசை... வைரசுடன் வாழ்க்கை


முன் வைத்த இடுகைத் தலைப்பு:
ஓளவையுடன் அளவளாவ ஆசை, 
ஆனால் வைரசுடன் வந்த வாழ்க்கை.
இந்தத் தலைப்பு மேற்கண்டவாறு
சுருக்கப்பட்டது.

அம்மையும் அவ்வையும்

அவ்வை என்பது ஒரு பழம் பெண்பாற் புலவரின் 
பெயரென்பது தமிழறிந்தார் பலரிடமும் 
குடிகொண் டிருக்கும் ஒரு வரலாற்றுக் 
கருத்தாகும். இதனினும் மேலாக அவர் இப்போது 
நிலவில் காணப்படுகிறார் என்பது பாட்டிமார் 
சிலர் சிறுபிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்த
கதைகளின் ஒரு சுவைத் துணுக்கு என்பதும் 
நீங்கள் அறிந்திருக்கக் கூடும்நமக்கெல்லாம்
எவ்வளவோ நற்கருத்துக்களை அறிவுறுத்திய 
பாட்டி நம்முடனே வைகிவிடாமல் நிலவிலேறித் தனிமையில் இருப்பது நமக்கு வருத்தம் 
விளைக்கும் கதையே  ஆகும்.

எங்கள் மனங்களை வென்றாய் --- மறந்தே
எளிதாக நீங்கி நிலவிற்கோ சென்றாய்?
தங்க நிலவுடன் ஒன்றாய் --- கருப்பாய்
எங்கள் விழிகளில் தோன்றினை நன்றாய்!
-- சிவமாலா

ஆய்வு:

அவ்வை அல்லது ஒளவை என்பது அம்மை என்ற 
சொல்லிலிருந்து வந்ததாக அறிஞர்கள் கூறி
யுள்ளனர்.மகர வகரத் தொடர்புத் திரிபு இது
வென்பர். அம்மா என்ற சொல்லும் பிற தமிழின
(திராவிட) மொழிகளில் அவ்வா என்று திரிதலும் 
காணலாம். செய்யுளில் வகரத்துக்கு மகரம் 
மோனையாகவும் நிற்கும்மிஞ்சு(தல்) என்பது 
விஞ்சுதல் என்று திரிதலும் காண்க
மிகுதி எனற்பாலது விகுதி என்று திரிந்து 
இறுதிநிலையைக் குறிப்பதும் அறியலாகும்
மகர வகரங்கட்குச் சொன்னது அவற்றின் 
வருக்கங்கட்கும் பொருந்தும்.

ஒளவை என்ற பெயருள்ள புலவர்கள் ஒன்றுக்கு
மேற்பட்டோர் இருந்ததாகக் கூறுவர். ஒன்றுக்கு 
மேற்பட்ட பட்டினத்தார்கள் இருந்தது போலுமே 
இது.

அவ் + ஆய் = அவ்வாய் என்பது குறுகி அவ்வை 
என்று வருதல் கூடுமெனலும் கருதற்குரியதே 
ஆகும். ஆய்= தாய்.

அரசன் அதியமான் அருநெல்லிக்கனியை 
ஒளவைக்கு அளித்து, இதை உட்கொண்டு 
அதனால் நெடுநாள் நீங்கள் உயிர்வாழ்வது 
தமிழுக்கும் உலகுக்கும் நல்லது என்று தலையை 
வருடிவிட்டான் என்பர். அதிக அளவில் 
கள் கிடைக்குமானால் இருவரும் ஓரிடத்தமர்ந்து 
அதை அருந்துவராம். சிறிதே கிடைத்தால், அதைத் 
தானுண்ணாமல் ஒளவைப் பாட்டியிடமே தந்து
மகிழ்வானாம் அதியமான். அவ்வேளைகளி
லெல்லாம் அவர்களிடைத் தமிழ்ப்பாக்களே வழிந்து செழுந்தேனாய் ஓடுமாம். யாம் பாடத் தான்மகிழ்ந்
துண்ணு மன்னே என்று பாடுவார் ஒளவை
அம்பொடு தடிபடு வழியெல்லாம் தானிற்கு 
மன்னன் அவன்.

அப்போது நாம் அங்கிருந்திருந்தால் நம் 
மகிழ்ச்சிக்கும் ஓர் எல்லை இருந்திருக்காது.
இப்போது  நம் வாழ்க்கை மகுடமுகி 
நோய்நுண்மி எனும் இக்கொரனா வைரசுடன்
ஒன்றாகி விட்டதுஎன் செய்வோம்?

மெய்ப்பு: பின்




செவ்வாய், 21 ஜூலை, 2020

தூது தூதன் தூதுவன்

தூது என்பது அழகிய சொல். இன்று தொன்றுதொட்டுத்
தமிழில் வழங்கி வந்துள்ளது. இந்தச் சொல் வேறு 
இந்திய மொழிகளிலும் உலவுவதுடன் மலாய்மொழி
யிலும் வழங்கிவருகிறது. அயல்நாட்டுத் தூதர்கள்
செயலகம் அமைந்துள்ள சாலைக்கு "ஜாலான் துத்தா" 
(தூதுவர்கள் சாலை) என்று பெயரிட்டுள்ளனர்.

தூத(ன்) > தூதா > டுத்தா.

தூதன் என்பவன் ஒரு பதிலாளன் ஆவான்.  இன்னோர்
அரசுடன் எதைப்பற்றியும் பேசுவதென்றால், அதை 
விழைகின்ற அரசன் நேரடியாகப் போய்ப் பேசலாம் 
என்றாலும் இது கடினமான காரியமே. செலவும் பிற
இடர்களும் விளையலாம்.  அதற்கு ஒரு தூதுவனை
அனுப்பிவைப்பதே சரியாகும்.


அரசனுக்காக அடுத்த அரசினரை அண்மிச் செல்வோன்
"ஆகமைவன்"   ( அரசுக்கு ஆக அமைதல்) என்றோ, 
அடுத்த அரசை அண்முகிறவன் என்ற பொருளில், 
" அடுத்தண்மி " " அடுத்தரசண்மி" என்றோ,  இன்னுமுள்ள
பலவழிகளில் ஏதாவதொரு வகையிலோ ஒரு சொல்லைப்
படைத்துக் கையாண்டிருக்கலாம். அரசணவர் என்றால்
நன்றாக இல்லையா?  அரசை அணவி நிற்பவர் என்பது,
முயன்றால் பல நூறு சொற்களை வடிவமைத்து 
அதிலொன்றைப் பற்றிக் கொள்ளலாம். ஊடுருவன்
எனலாமோ? அரசுகளுக்கிடை நின்று பணிபுரிதலால்
அரசிடைஞர் எனலாம்.1  இதிலெதுவும்.  கடினமுள்ளதாய் எமக்குத் 
தெரியவில்லை. அமைத்த சொல் வழக்குக்கு வந்து 
அன்றாடக் கிளவியாய ஆகிவிட்டால் அப்புறம் 
தடையுணர்ச்சி கழன்றுபோகும்.

ஆக ( முழுமையாக ) அண்டிவந்து  ( அண் - அண்டு - 
அண்மு), இங்கு எடுத்துச் செல்லும்   ( இகு), அவனுக்கு 
 (அன்)  [ பொருளைத் திருடிச் செல்வோனை]  "ஆக+ 
அண்+இகு + அன் "  ஆகணிகன் என்று சொல்ல
வில்லையா? சொல் படைக்கவில்லையா?
அதைப் போன்றதே மேலே யாம் சொன்னவையும். 
இங்கு என்பது இகு என்ற குறைவதில்லையா?  
முமுமையாக அமைந்த இறைப்பற்றுச் செயல் 
அமைப்பு,  ஆக+ அமை+ அம் என்று காணப்பெற்று
ஆக+அம்+அம் = ஆகமம் ஆகவில்லையா?
இவைபோல்வனவே உரைக்கப்பட்டனவும்.

அரசாணை பெற்று இத்தகு பணியினை
 மேற்கொண்டு அடுத்த அரசனிடம் செல்வோன்,  
தூயவனாய் இருக்க வேண்டும். மேற்குறித்தவாறு 
பருப்பொருள்கொண்டு சொல் லமைப்பதினும்  
பண்புப்பொருள்கொண்டு அமைத்தலே
தகுமென்று கருதி  தூய்(மை)+ து >  தூய்து > 
தூது > தூதன், தூதுவன் என்றனர்.2  தூய்  என்ற 
அடியின் யகர மெய் வீழ்ந்தது.இவ்வாறு 
வீழ்ந்தனவற்றைப் பழைய இடுகைகளில் காண்க.

அவனுக்குக் கட்டுப்பாடுகள், எல்லைக்கோடுகள்
 இருந்தன. அவன் யாருக்குப் பதிலாளனாகச் சென்றானோ
அவனுக்குத் தீங்கு நினையாத தூயவனாக என்றும்
இருக்கவேண்டும். 

அறிக மகிழ்க

தட்டச்சுத் திருத்தம் பின்பு.


===========================

1 ஒருவரை அடைந்து அண்டிச் சாப்பிடுகிறவனுக்கு
:'அடையுணி" ( அடை + உண் +இ). என்னும் சொல்
வழங்கிற்று.  இதைப்பின்பற்றினால் தூதுவருக்கு
"அடையுறவர்" என்றும் சொல்லலாம். இன்னோர்
 அரசினைச் சென்றடைந்து உறவினை வளர்ப்பவர்
என்று பொருள்தரலாம்!! நீங்கள் சில சொற்களை
உருவாக்கிப் பின்னூட்டம் செய்யுங்கள். 

2.  தூது என்பதில் இறுதி -து விகுதி.  இது எல்லா
 வகைச் சொற்களிலும்  ( பெயர், வினை பிற) வரும்.
எ-டு:   விழுது (விழு),  கைது( கையிலகப்பட்டுத் தடுத்து
வைக்கப்படுதல்),  வேது  ( வெம்மை),   இது,  யாது, மாது.

3 சங்கதம்:  தூத,  தூதக, தூதமுக, தூத்ய ( தூதுவ 
அலுவலகம்) முதலியவை;  இனி அம்மொழியில் இது
ஒரு குருவியையும் குறிப்பதாலும்  மற்றும் தேவி
துர்க்கையின் ஒரு சேடியையும் குறிப்பதாலும், இச்சொல்
பலவழிகளில் அம்மொழிக்கு வந்து சேர்ந்துள்ளது
என்பது தெளிவாகிறது.

தமிழில் தூது என்பது ஒரு நூல்வகை;  ஒரு சிறுகல்;  செய்தி;
தூதன் என்பவை. நூல்வகையானது,  தூதுபோவதாகப் 
புனைந்து பாடினமையால்;  செய்தி, தூதன் என்பவை 
சொல்லுடன் தொடர்புகொண்டவை.