வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சாதுரியம்.

சாதுரியம் என்ற சொல் அறிவோம்.

முதலில் அறிய வேண்டியது சதசத சொத்சொத என்ற  ஒரு வகை " இரட்டைக் கிளவிகள்". கிளவி என்றால் சொல்.  கிளத்தல் - சொல்லுதல்.

சத சத என்பதும் சொதசொத என்பதும் கெட்டியில்லாத பொருளைக் குறிக்கிறது.

இந்த இடத்தில் மண் சொத சொத என்றிருக்கிறது என்பர்.  திண்மையற்ற நிலை.

சத சத என்பதும் அதுதான்.

கெட்டியில்லாத எந்தக் கலவையும் தரையில் எறிந்தால்  சத் அல்லது சொத் என்ற ஒலியுடன் விழும்.  தெறிக்கும்.  மண்ணும் நீரும் கலந்திருப்பதும் கலவைதான்.


இவ் வொலிக்குறிப்புகளிலிருந்து தோன்றிய சில சொற்கள்:

சதி  -    மென்மையானவள்;  பெண்.

சதியுடன் பதிந்து வாழ்பவன் பதி.   இதிலிருந்து சதிபதி.

சதி<> சது.

சது > சதுப்பு.   (சதுப்பு நிலம்)  மெதுமண் நிலம்.

சது >  சதை.   எலும்புபோலன்றி மென்மையானதாகிய தசை.

சொத >  சொதி :   மென்மையான தேங்காய்ப்பால் கலந்த உண்ணும் குழம்பு.

சது  >  சாது.  மென்மையான ஆள்.   ஆண்டி.

சது >  சத்து:  உள்ளடங்கிய மென்மையான  உறைவு.


மென்மாந்தனாகிய ஒரு சாதுவுக்கு உரிய தன்மையைத்தான் சாதுரியம் என்பர்.

சாது + உரி + அம் =  சாதுரியம்.

மென்முறையில் ஒன்றைச் சாதித்துக்கொள்பவன் சாதுரியமுடையவன்.வேறு விளக்கங்களும் இச்சொல்லுக்கு உள. அவற்றைப் பின்னொரு முறை காண்போமே.


குறிப்பு:

சாதுரியம் என்பதில்  (  சாது + உரி(ய) + அம் )=  என்னும் சொல்லமைப்பில் வலி மிகாது  அதாவது வல்லெழுத்துத் தோன்றாது,  இதற்கு  உதாரணம்:  முடிகுடி என்ற சொல்.  முடிமன்னர்குடி என்பது இதன்பொருள்.  குறுமன்னர் குலம் என்பது  குறுமுடிகுடி என்று வலிமிகுதலின்றியே வரும்.  அன்றியும் சொல்லமைப்புக்கு வாக்கிய இலக்கணம் உரியதன்று.



தட்டச்சுத் திருத்தம் பின்.




நோய்கள் பரவினாலும் தமிழ்ப்பற்று.

நோயணுக்கள் விஞ்சி  நுழைவரும் எவ்விடத்தும்
பாயடைவு கூட்டும்‌  மகுடமுகி ---- தூயரையும்

விட்டுவைத்தல் இல்லையே வேறிருந்து   காக்கதனை
குட்டறிந்  திந்நாள்  குலவாமல்  ----- மட்டுறுத்திப்


பட்டறிவா   ளர்வாழ்வார்  பாட்டும்  தமிழுமே
எட்டுவதால் மேன்மையே என்றென்றும்   -------ஒட்டியிங்கு

வந்தே மகிழ்கின்றார்  வாழ்க தமிழன்பர்
தந்தேம் இடுகைகள்  இங்கு.


பொருள்

நுழைவரும் எவ்விடத்தும் --  புகுவதற்கு இயலாத
எந்த இடத்திலும்.  (நுழைவு அரும்)

பாயடைவு -  பாய்ந்து சென்று அடைந்துகொள்ளுதல்.

மகுடமுகி  -  கொரனாவைரஸ்.  (கோவிட் 19)


காக்கதனை -  தன்னைக் காத்துக்கொள்க.


குட்டறிந்து  -   மறைதிறவுகளை அறிந்து

குலவாமல் -  நெருங்கிப் பழகாமல்.

பட்டறிவாளர்  -   அனுபவசாலிகள்

எட்டுவதால் -  (வருவோரைச் ) சென்று சேர்வதால்;

தந்தேம்  -  தந்தோம்

நோய்ப்பரவலால் பல இன்னல்களை அடைந்தாலும்
பாட்டுக்காகவும் தமிழுக்காகவும் அன்பர்கள் வந்தே மகிழ்கின்றனர்
என்பது கருத்து.  வாழ்க தமிழ்


புதன், 1 ஏப்ரல், 2020

தேகமென்றாலே அது பழுதுதான்.

வயப்படு வயதும்
அகப்படு அகவையும்


உலகம் வயதாகிக் கொண்டு வருகின்றது.  வயது என்ற துகரவிகுதிச் சொல்லை  ஆய்ந்து  சில முறை வெளியிட்டுள்ளோம்.  இதற்குமுன் வெளியிட்டது இன்னுமுள்ளது. நாமெல்லாம் காலத்தின் வயப்பட்டுக் கிடந்து மூப்பு அடைவதனால்  " வயம் > வய > வயது"  என்பது எவ்வளவு பொருத்தமான அமைப்பு.

வயது என்ற கால ஓட்டத்தைப் பற்றி நாமெதுவும் செய்ய முடிவதில்லை. ஊட்டச் சத்து, உயிர்ச் சத்து என்று இருக்கும் எதைத் தின்றாலும் காலம் ஓடிக்கொண்டு நம்மையும் அதில் இழுத்துக்கொண்டு தான்  சென்றுவிடுகிறது.
கால ஓட்டத்தில் நாம் அகப்பட்டுக் கிடக்கிறோம்.  அதனால் " அகவை " என்ற இன்னொரு சொல்லும் நம்மிடம் உலவுகின்றது..

வயப்பட்டதனால்  அது வயது.
அகப்பட்டுக் கிடப்பதனால் அது அகவை. இதை மேலும் அறிய:



தேகமும் திரேகமும்


குழந்தையாய் இருந்து இளமை பெற்ற ஒருத்தி  முழுவளர்ச்சி அடைந்தபின்,  அவள் உடல் தேய்ந்து இல்லாமை அடைகிறது.   அதற்குத்   தேய் >  தேய் + கு+ அம் =  தேய்கம்,  >  தேகம்,   திரை(தல் )  > திரை  +  ஏகு + அம் >  திரேகம்,  என்று சொற்கள் வருதல்,  பொருத்தமே.  ஆன்மா  இவ்வுடலை உடுத்துக்கொண்டு உள்ளது.  அதனால் உடல்.    இது பிடிக்கவில்லையென்றால்,  உள்ளுறுப்புகள் இவ்வுடலை உடுத்துக்கொண்டுள்ளன எனினும் அமையும். இறையிருப்புக் கொள்கையருக்கும் இறைமறுப்புக் கொள்கையருக்கும் பொருந்துமாறு உடல் என்ற சொல் அமைந்திருக்கிறது. எக்கொள்கையரையும்  இணைத்துச்செல்லும் இனிமைத் தமிழின் ஏற்றம்தான் என்னே என்போம்


சரீரம்:

 உடல் என்பது திடப்பொருள் ஆனாலும் அதன் பாதி நீர்கலந்து உள்ளதே. ஆகவே உடலின் சரிபாதி ஈரம் என்னலாம்   நீர் குன்றிவிட்டால் மருத்துவமனைகளில் உடலுக்குக் குழாய்கள் மூலமாக நீரூட்டுகிறார்கள் மருத்துவர்கள்.  Dehydratiion   தொல்லைதருமே.  சரி + ஈரம் உடையதுதான் இவ்வுடல்.  ஈரம் சரியாகவும் இருக்கவேண்டும்.  இவ்வுடலைச் சரி+ ஈரம் = சரீரம் என்றதும் எத்துணைப் பொருத்தமடி தோழி!.

சற்று விரிவாக ஈண்டு  காண்பீர்.



தேகமும் பழுதும்:


பழுது என்ற சொல்லும்  உடல் நாளடைவில் பழுதடைவதை உடையதென்பதை விளக்குகிறது.  இச்சொல்லுக்கு நிகண்டுகளிலும் அகரவரிசைகளிலும் காணப்படும் பொருள்விளக்கம் காண்க.  தேகம் (தேய் + கு+ அம்) என்னும் யகர ஒற்று இடைக்குறைச்சொல்லும்  பழுது என்ற சொல்லும் தமிழர் யாக்கை நிலையாமையை ஒர் வாணாட்கோட்பாடாக வைத்திருந்தனர் என்பதை உறுதிசெய்கின்றது.   இலக்கியத்தும் கண்டுமகிழ்க.


தட்டச்சுத் திருத்தம் பின்


 [இன்று மகுடமுகி என்னும் கொரனா நோய்நுண்மி  யாண்டும் பரவிவிட்டது. இன்று ஒரு துக்க நிகழ்வுக்கும் வீட்டிலுள்ளோர் சென்றுவந்தனர்.  எமக்கு மீண்டும் அதுபற்றிய சொல்லமைப்புகள் நினைவுக்கு வந்துவிட்டன. அதனால் இவ்வரைவு.  இதில் பழுதே புதிது.]