ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பகிரங்கம் என்னும் சொல்

இங்கிருப்பதை அங்கு போய்ச் சொல்வது,  என்றால் உமக்குத் தெரிந்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறீர் என்றுதான் அர்த்தம். இக்கருத்தினின்று
பகிரங்கம் என்ற சொல் புனைவுற்றது.

பகிர்தல்,
அங்கு
அம் விகுதி அமைப்பும் குறித்தது.

பகிரங்கம்   -   பகிர் + அங்கு + அம்.

மிக்க எளிமையாய் அமைந்த சொல்.

அறிந்து மகிழ்க.

சொல்லியல் நெறிமுறைகள்: கழுதைச் சொல்

கழுதை என்ற சொல் ஓர் ஒலிக்குறிப்புச் சொல் ஆகும்.

கழுதை காழ் காழ் என்றுதான் கத்துவதாகச் சொல்வர்.  ஆனால் கழுதைஎன்றசொல்லில் கழு என்பது பகுதியாகவும் தை என்பது விகுதியாகவும் உள்ளன. ஆகவே அது "கழு கழு" என்று கத்துவதாகச் சொல்லலாம் என்றால் பொருத்தமாகத் தோன்றவில்லை.

கத்துமொலி  காழ் என்பதுதான். சொல்லமைப்பில் காழ் என்பது குறுக்கப்பட்டு, கழு என்று அமைத்துள்ளனர். அதுவே சரியென்றும் சொல்லவேண்டும்.

இனி, கழு+ தை என்று பகுதியையும் விகுதியையும் புணர்க்கும் போது, கழுத்தை என்று வலிமிக்கு வராமல் கழுதை என்று மெலிந்தே (அதாவது தகர ஒற்று இரட்டிக்காமல்)   சொல்லில் வருகிறது.  இதே வலிமிகாமையை விழுது, பழுது,  முதலிய வேறு சொற்களின் அமைப்பிலும் காணமுடிகின்றது.

சொல்லமைப்பில் புணரியல் ( சந்தி) இலக்கண விதிகள் பின்பற்றப்படுவதில்லை. நிலைமொழியும் வருமொழியும் புணர்வது வேறு.  அடிச்சொல்லும் விகுதியும் இணைவது வேறு.  விகுதி  வருமொழி அன்று.

மேலும் ஒரே பகுதி விகுதி, இருவேறு விதமாக இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பிறப்பிக்கலாம். எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்.
அறு + அம் =  அற்றம்.

குறு + அம் =  குறம்.  ( குறி சொல்லுதல்)
குறு + அம் = குற்றம் (  குற்றச்செயல்.)  (  சிறுமைசேர் செயல்).

குறு = குன்று.  சிறிய மலை.
குறு = சிறு(  மை )

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுப் பிழைகள் -   திருத்தம் பின்.


சனி, 7 டிசம்பர், 2019

ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ (ஆடகம்)

ஆட்சி செய்தல் என்பதைக் கருதுகையில் இது மனிதனை மட்டுமின்றி ஏனைப் பொருள்களையும் ஆளும் பொருளாகவும் ஆளப்படும் பொருளாகவும் உட்படுத்தும்.  நக்கத்திரங்களும் மனிதனை ஆட்சிபுரிவதாகச் சோதிட நூல்கள் கூறும்.  நக்கத்திரம் சொரிகின்ற அல்லது சோர்கின்ற கதிர்கள் நம்மை வந்தடைந்து நம் நடவடிக்கைகளை  ஆதிக்கம் புரிவதனால், சோதிடக் கலைக்கு அப்பெயர் வந்தெய்தியது.

சோர் + து + இடு + அம் =  சோர்திடம் > சோதிடம் ஆயிற்று. அல்லது
சோர்+ திடம் > சோதிடம் எனினுமது.

சோரும் அல்லது சொரியும் கதிரலைகள் நம்மேல் இடப்படுவன, நம்மை ஆள்வன.

மேகநீர் இடைந்து தளர்ந்து உருகி மழையாகச் சோர்ந்து சொரிகிறது...!!!

குளிர்க்கட்டி சோர்ந்து நீரைச் சொரிகிறது.

சொரி <> சோர்.

சேர் > சோர் > சார்.

இவை நிற்க.

இப்போது ஆடகம் என்ற யாம் கருதிய சொற்கு வருவோம்.  இதை ஆள்+தகம் என்று பிரிக்கலாம்.   தகமென்பது தகு+ அம் = தகம். மற்றும் தக+ அம் = தகம்.

தக, தகத்தக என்பது ஒளிவீச்சுக் குறிப்பு.  பொன்னும் தங்கமும் ஒளிவீசுவன.

தகத்தக என ஒளிவீசி நம்மை ஆட்சிசெய்வது,  எனவே:  ஆள் + தக+ அம்.

இது "ஆடகம்"  என்றாகும்.

ஆடகமாவது பொன்.  இது பொன்னில் ஒரு வகை என்ப.

ஆடகம் என்பது ஆடுமிடம் என்றும் பொருள்தரும்.  இது ஆடு+ அகம்  எனப் பிரிப்புறும்.  கூத்தாட்டு அவைக்குழாம் எனினுமது.

ஆக இருபொருளது இச்சொல்.

சிலப்பதிகாரத்திலும் சைவத்திருமுறையிலும் ஆடகப் பொன் பற்றிய குறிப்புகள் உள.

"ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றுமின்றும் என்றுமே என் ஆவியடி நீ"

(கண்ணதாசன் வரிகள் .)

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் திருத்தம்  - பின்.