வியாழன், 28 நவம்பர், 2019

ரோகியுடன் சில சொற்கள்

இன்று "ரோகி" என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

மனிதன் "உறுகின்ற"வற்றுள் முதன்மையாக வெறுத்து ஒதுக்கற்குரியது நோய் என்று சொல்லலாம். இதற்குக் காரணம் நோய் என்பது முற்றினால் உயிரிழப்புக்கு இட்டுச் சென்றுவிடும்.  அப்புறம் அம்மனிதன் உலகின்கண் இலனாகி விடுவதால் நோய் அஞ்சத்தக்கது. நல்லவேளையாக நோய் நீங்கி வாழ மனிதன் பல்வேறு சிகிச்சைகளைக் கண்டுபிடித்துள்ளான். சிகிச்சையாவது சீர்படுத்திக்கொள்ளுதல்.   சீர்ச்சை > சிகிச்சை.  சீர்ச்சை சிகிச்சை என்பவெல்லாம்  "சீர் செய்" என்பதன் திரிபுகளே.   ஆதலின் இவை திரிசொற்கள்.

செய் என்பது சை எனத் திரியும்.  எடுத்துக்காட்டுகள்:

செய்கை >  சைகை.
பூ செய் > பூசை.  (>பூஜை).
நன்செய் >  நஞ்சை
புன்செய் >  புஞ்சை
தண்செய் > தஞ்சை  (ஊர்ப்பெயர்).

சீர் என்ற சொல்லும் சொல்லிறுதியில் சி என்று குறுகிவிடும்.

வன்சீர் >  வஞ்சி.  (வஞ்சிப்பா )

இனி நோய் என்னும் ரோகத்தையும் நோயுடையோனாம் ரோகியையும் சந்திப்போம்.

கெடுதல் குறிக்கும் ஊறு என்ற சொல்லும் உறு என்ற வினை முதனிலை திரிந்தமைந்ததாகும்.  முதனிலை நீண்டுள்ளது.  படு > பாடு எனற்பாலதுபோல் உறு > ஊறு ஆயிற்று.

உறுவது ஓங்குவதே ரோகம்.

உறு ஓங்கு அம் >  உறு ஓகு அம் >  உறோகம்.
இச்சொல் தலையிழந்து  றோகம் > ரோகம் ஆயிற்று.

ரோகமுடையான்  ரோகி.

ரோகம் ரோகி என்பவெல்லாம் திரிபுகள்.

ஒருவேளையே உண்பான்  யோகி;
இருவேளை உண்பான்  போகி;
மூன்றுவேளையும் முடிப்பவன் ரோகி.

இவ்வரிகளில் ரோகி என்ற சொல் இலங்குவதாகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


குறிப்புகள்

இலக்கணம்

ஓங்கு >  ஓகு  (  இடைக்குறை).
ஓகு > ஓகம்.

சீர்ச்சை  >  சிகிச்சை.    பகு என்பது பா என்று திரிந்தன்ன சீ(ர்) என்பது சிகு> சிகி ஆனது.  இது மறுதலைத் திரிபு  மற்றும் உகர இகரத் திரிபு.

இவை போல்வன எம் பழைய இடுகைகளிற் கண்ணுறுக.

ஓகம் என்பதே பின் யோகமும் ஆனது.  பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் வாழ்ந்தவர்.  சூழ்ந்து திறமாக அமைவுற்றது சூத்திரம்.  (சூழ்த்திறம்  > சூத்திரம்,  இது வாழ்த்தியம் > வாத்தியம் போலும் திரிபு ஆகும்.)

தட்டச்சுப் பிழைத்திருத்தம் பின்.

சனி, 23 நவம்பர், 2019

யாதவர்

வகரமும் மகரமும் தொடர்புடை ஒலிகள்.  ஒன்று  மற்றொன்றாக மொழியில் திரிந்து வரும். இப்படித் தொடர்புபட்டு வரும் சில கிளவிகளைக் கண்டு போல வருதலின் போலி என்றனர் தமிழிலக்கணத்தார்.  இலக்கண நூல்களில் இவ்வாறு தெரிவித்த இவ்வாசிரியர் மிக்க நுண்ணறிவுடையோர் என்று நாம் அவர்களைப் புகழலாம். அவர்கள் அதைச் சொல்லாமல் நீரே இதைக் கண்டு உணர்ந்திருந்தால் உம் நுண்ணறிவினுக்காக நீரே உம் முதுகில் நாலு தடவை தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம்.

செய்யுள் இயற்றும்போது முதலில் வகரத்தில் தொடங்கிய ஒரு வரிக்கு அடுத்த வரியிலும் வகரத்தில் தொடங்க ஒரு சொல் கிட்டவில்லையென்றால்
(  மோனை )  மகரத்தில் தொடங்கிக்கொள்ளலாம்.  மோனை கிட்டிவிட்டதென்று தட்டிக்கொள்ளலாம் உம் கைகளை.

பொருள் மாறாமல் எழுத்துமட்டும் மாறியிருந்தால் ஆனந்தம் தான். எடுத்துக்காட்டு:   மிஞ்சுதல்  > விஞ்சுதல்.  பொருள் அதே.

சில வேளைகளில் எழுத்தும் மாறிப் பொருளும் சற்று மாறியிருக்கும். உதாரணம்:

மிகுதி  > விகுதி.

விகுதி என்பது சொல்லில் இறுதியாக மிகுந்து நிற்பது.

தணி > தணிக்கை.  இங்கு கை என்பது தனிப்பொருள் ஏதுமின்றிச் சொல்லை மிகுத்து  வேறு பொருளை வருவித்தமை காண்க.

இது நல்ல உது+ஆர்+ அண் +அம்.  ( நிறைவாக அண்மி முன் நிற்கும் ஒரு சொல் ). உது - முன் நிற்பது.  ஆர்(தல்) : நிறை(தல்). அண் : அண்மியது.  அம்: விகுதி.

சரி. இனி யாதவர் என்ற சொல்லைக் கவனிப்போம்.

ஆகரத்தில் தொடங்கிய சில சொற்கள் யாகாரத்திலும் தொடங்கிடலாம்.

ஆனை > யானை.
ஆடு > யாடு.
ஆதல் >  யாத்தல். ( மாறித் தொடங்கியது மட்டுமின்றி தகர ஒற்றும் தோன்றிற்று ). யாத்தல் எனின் தானே ஆகுவதன்றி ஆக்கப்படுவதாகும். புலவன் பாவினை ஆக்குகின்றான்.  அவனே ஆக்கியோன்.
ஆக்குதல் > யாக்குதல்
ஆண்டு > யாண்டு
ஆறு > யாறு.
ஆமை > யாமை.
ஆய் > யாய்

யாதவர் என்ற சொல்லில் முன் நிற்பது உண்மையில்   "ஆ" தான்.   ஆ என்றால் மாடு.  ஆ என்பதே யா ஆகி நின்று உம்மை மயக்குகிறது.

தவர் என்பது தமர் ஆகும்.  மேலே வகரம்<> மகரம் பரிமாற்றம் கூறினோம்.  அதை மீண்டும் பார்த்து மனப்பாடமாக்கிக் கொள்க.

மொழி இடை வரு இத்தகு பரிமாற்றத்திற்கு இன்னொரு காட்டு:

அம்மையார் >  அவ்வையார்  ( மகரம் வகரமாகிப் பரிணமித்தது.)

*ஆகவே  தமரே தவர்.   தமர் எனின் தம்மவர்.

ஆக்களை மேய்க்கும் தம் பெருமக்களே யா+தமர் >  யா+தவர்.

தவர் என்பதைத் தவமுடையார் என்று விளக்கினும் ஒக்கும்.

வட இந்திய மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் அன், அர் . அள் முதலிய ஒழிந்து வழங்கும். அவ்வதே நிகழும் ஈண்டுமென்றுணர்க.

தமிழ் மொழி இயன்மொழி ஆயினும் பற்பல - எண்ணிறந்த திரிபு வசதிகளைத் தன்னகத்தே இயக்கிக்கொண்டு உலக மொழிகளையும் வளப்படுத்தியுள்ளமை உணர்க.


அறிவீர்  மகிழ்வீர்.

திருத்தம்
7.12.2019 ஓர் எழுத்துப்பிழை  * (அ - ஆ) திருத்தம் செய்யப்பட்டது.

வெள்ளி, 22 நவம்பர், 2019

கடற்பரப்புக் குறிக்கும் சொற்களும் பிறவும்.

பரவை என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கடல் என்று பொருள். கடல் மிகப் பரந்தது (பரப்பு உடையது ) என்று     நம் முன்னோர்கள் 6எண்ணியதால் இச்சொல் மொழியில் எழுந்தது.  இதேபோல் கடவுளும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவி நிற்பதாக உணரப்படுபவர் என்னும் கருத்தினால்  அவர்க்குப்  '"பரம்பொருள்"   என்ற பெயர் ஏற்பட்டது. இதன் முதலாகிய பரம் என்பதும்  "பரன்" என்று மாறி அக்கடவுளுக்கு ஆண்பாற் பெயரானது.  இன்னும் பரம் என்பதே  அன் விகுதி பெற்று  பரம்+ அன் = பரமன் என்று அக்கடவுளையே குறித்தது.

மனிதர் உள்ளிட்ட மரம் செடி கொடி விலங்குகள் என எவற்றின்பாலும் அன்பும் அருளும் உடையவனாகிப் பரந்த நோக்குடன் வாழ்ந்தவன் :  பர >  பார் > பாரி எனப்பட்டான். ( முல்லைக்குத்   தேர்   கொடுத்தோன்   )

கடலைக் குறிக்கும் பரவை என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லே மீனவரைக் குறிக்கும் சொல்லாம்  "பரதவர்:" என்ற சொல்லும்.  மீன்விலைப் பரதவர் என்பதும் காண்க.  இது பர + து + அ + அர் என்ற உள்ளீடுகளை உடைய சொல்லாகும்.  இதில் வல்லொற்று வரல்வேண்டும் என்று வாதிட்டாலும், அது  பயனின்மை கருதிப் பின் குறைவுறும். அஃதன்றியும் பரத்தவர் எனின் பரத்துக்கு உரியோர்  என்று பொருள்பட்டு   பொருள்  மயக்கம் விளைக்குமென்றும் அறிக.  பரதவர் என்பதே ஏற்புடை வடிவம்.   [பரத்துக்கு  =  கடவுட்கு]

முப்புறமும் கடல் சூழ்ந்த ---   கடல் நாகரிக ----  நாடு என்பதே பாரத நாடாயிற்று.
பரதவ மக்களின் நாகரிகத்தில் ஓங்கிய நாடே பாரத நாடு.  பாரதம் என்பதும் அது.  இம்மக்கள் அரசோச்சிய பண்டை நிகழ்வுகளை நினைவுகூர்வதும்   மகாபாரதம் ஆகும்.

மறுபார்வை பி ன்