புதன், 22 மே, 2019

நக்க சாரணர் என்போர் யார்?

அணுகுதல் என்பது அடுத்துச் செல்லுதல் அல்லது அணிமையிற் போதல் என்று விளக்கலாம்.  அணுக்கம் என்ற சொல்லும் அணுகு+ அம் =  அணுக்கம் என்று அமையும். இதில் ககரம் இரட்டித்தது.  "க்+ க் + அ"  என்று சேர்த்தால் க்க என்று  வருகையில்,  அது சேருமுன் இரண்டு ககர ஒற்றுக்கள் ( அதாவது இரண்டு ககர மெய்கள் ) வருதலை அறியலாம். இதைத்தான் இரட்டித்தல் என்று சொல்கிறோம்.  அணுகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதியாகும்.  அணு என்பதே இதிற் பகுதி என்றாலும்  அதை இன்னும் பிரித்து அண்+  உ என்னலாம்.  அப்போது உ என்பது வெறும் சாரியையே  ஆகும்.  ஆனால் அணு என்பது அதனினும் சிறுமை இல்லாத ஒரு பொருளைக் குறிக்க வருங்கால் ஈற்றில் நின்ற உகரத்தை ஒரு விகுதி எனல் வேண்டும்.

அணுகு என்பது உகரத்துக்குச் சுட்டடிப் பொருள் கூறுவதானால் அடுத்து முன் செல்லுதல் என்று கூறல் வேண்டும்.  இங்கு அடிச்சொல்லான அண் என்பதிலிருந்தே  அணம் என்ற தொழிற்பெயர் விகுதி அமைந்தது.  இவ்விகுதி வரும் சொல் :  கட்டணம்.  இன்னொன்று உட்டணம். மற்றொன்று பட்டணம். பல பட்டுகளுக்கு அருகில் அமைந்த சிறுநகரே பட்டணம் ஆகும்.  1930 வாக்கில் எழுதப்பட்ட தமிழ் நூல்களில் சென்னை,  பட்டணம் என்று குறிக்கப்பெறுதல் காணலாம்.  பெரிதும் நாகர்கள் வாழ்ந்த பட்டணம் நாகப் பட்டணம் எனப்பட்டது.  நாகப்பட்டணம், நாகூர், நாகர்கோயில் முதலான இடங்களில் நாகர் மிக்கிருந்தனர் என்று தெரிகிறது.   கடற்கரை ஓரப் பட்டணம் பட்டினம் எனப்பட்டது.  போன்மைச்  சொல்லாக்கமே இதுவும் ஆகும்.   பேச்சு வழக்கில் பலர் பட்டணம் என்றே பட்டினத்தையும் சொல்வர்.  பட்டினம் என்ற சொல் நன்`கு பதிவுபெற்ற வழக்குகள்:  பட்டினப்பாலை;  பட்டினத்துப் பிள்ளையார், காவிப்பூம்பட்டினம்.  இவற்றுள் அண்+அம் என்ற விகுதிகள் வராமல் இன்+ அம் என்பன அமைவுற்றன.  நாகர் யார் என்பதில் ஒருமித்த கருத்து ஆய்வாளரிடை இல்லை.  நாகர் என்போர் நாகத்தை வணங்கியோர் என்று சிலரும்  நாகர் என்போர் ஓரினத்தினர் என்று வேறுசிலரும் கருத்துரைத்துள்ளனர்.  எவ்வாறு ஆயினும் ஒரு சோழ மன்னன் ஒரு நாகக் கன்னிகையை  மணந்துகொண்ட பின் அவர்கள் தமிழரசர்களின் பாங்கில் மிகுந்த பற்றன்பு   (விசுவாசம் )  உடையோராய் மாறிவிட்டனர் என்ப.  நாகர் எங்கும் பரவி இருந்தனர். வட இந்தியாவில் நாகபுரி  ( நக்புர் ) ~ யிலும் இருந்தனர்.  இவற்றை நீங்கள் ஆய்வு செய்வீர்களாக.

இவை நிற்க,  அணம் என்ற விகுதி உணர்க.   ஓரிடத்தைச் சார்ந்து  அணுக்கமாக வாழ்ந்த அவர்கள் சாரணர் என்று குறிக்கப்பட்டனர்.   சார் + அணம் + அர் =  சாரணர்.  இதில் மகர ஒற்று வீழ்ந்தது.   இவர்கள் உடலில் நல்ல நிறமுடையோராய் இருந்தனர்.   ஆதலால்   " நக்க சாரணர் "  எனப்பட்டனர்.  நகுதல் :  ஒளி வீசுதல்.  Gregarious people with good skin colour என்பதே நக்க சாரணர் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு.  ஒளிவீசும் நட்சத்திரங்கள் உண்மையில் நக்கத்திரங்களே.  இருளில் நகுவன அவை.  புகு >  புக்க; நகு > நக்க; தகு > தக்க; பகு > பக்க.

பலர் ஒக்க இருக்குமிடமே ஒக்கம்:  மாறோக்கத்து நப்பசலையார் என்ற சங்கப் புலவர் பெயர் காண்க.   ஒகுதல் என்ற சொல் வழக்கிறந்தது.  ஒக்குதல் என்ற பிறவினையும் ஒக்குவித்தல் என்ற பிறவினையின் பிறவினையும் இருக்கின்றன.

  ஒக்கம் = கிராமம்     கிராமமமா?   இது கமம் என்ற பழந்தமிழ் சொல்லின் திரிபு.

எகு ( இது இப்போது இல்லை) > எகுதல் >  எக்குதல்..  எக்கி ஒன்றை எடுத்தல்.
தன்னை நீட்சி  செய்துகொள்ளுதல்.  எகு > எக்க..

அணுக்கமாக நின்று  அல்லது அணவி நின்று தொண்டு செய்வோரைச் சாரணர் என்றது மிக்கப் பொருத்தம்தான்.

இன்று ஓர் எல்லைக்குள் நின்று சிந்திக்காமல் விடுதலைப் பறவைபோலும் எண்ணியவிடத்துப் பறந்து கருத்துக்களை வீசியுள்ளேன். எனக்கு ஆனந்தம்; உங்களுக்குச் சற்று கடினமானாலும் கூடுமானவரை தமிழைச் சுவைப்பீராக. கடினத்தை மறப்பீராக.

மீள்பார்வை பின்

செவ்வாய், 21 மே, 2019

மொழிச்சிக்கல் : உண்டு என்ற வடிவம்.


தமிழ்மொழிச் சிக்கல்கள்

ஈ என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு.

இந்த வாக்கியத்தைப் படித்தீர்களே. இதில் உண்டு என்பது ஒரு தவறான சொற்பயன்பாடு என்பதை அறிந்தீர்களோ?

உண்டு என்றால் இது ஒருமைச் சொல். து என்னும் அஃறிணை ஒருமை தெரிவிக்கின்றது. பல பொருள் என்று பன்மையில் சொன்னபடியால் உள அல்லது உள்ளன என்றே முடித்திருக்கவேண்டும்.

உள்+ து = உண்டு.

உண்டு என்ற சொல்லைக் கற்றோரும் மற்றோரும் ஒருமை பன்மை என்று பகுத்துப் பார்க்காமல் பயன்படுத்தி மகிழ்வதால், இப்போது இவ்விலக்கண விதி வீழ்ச்சி உற்றது.

இலக்கணம் எத்தனையோ கூறுகிறது. எல்லாமும் ஒட்டிச்செல்கை உடையவாய் இல்லை. பல பின்பற்றுகிறோம். நாமறியாமலே பல வீழ்ந்துவிடுகின்றன. வீழ்ந்த விதிகளில் இதுவும் ஒன்று. உண்டு என்பது திணை பால் எண் இடம் என்ற வேறுபாடு இன்றி வழங்குகிறது.

அவன் உண்டு : ஆண்பாலில் வந்தது.
அவள் உண்டு: பெண்பாலில் வந்தது.
அது உண்டு : அஃறிணை ஒருமையில் வந்தது.
அவை உண்டு: அஃறிணைப் பன்மையில் வந்தது.
நீ உண்டு : முன்னிலையில் வந்தது.
நான் உண்டு: தன்மையில் வந்தது.

இன்னும் பொருந்துமிடத்தெல்லாம் பொருத்தி உணர்க.

உண்டு என்பதை சொற்படியே பார்த்தால் ஒருமையில் அஃறிணையில் மட்டும் வழங்கியிருத்தல் வேண்டும். அவ்விதி தவிடுபொடியாகி வெகுகாலம் ஆகிவிட்டதைச் சொல்லாய்வு மூலம் அறிஞர் உணர்ந்து உண்டு என்பதை வழுவமைதி என்று கொள்வர். ஒழிந்துபோன இலக்கண விதிகளை மீள்நிலைப் படுத்துவதில் பயனொன்றும் இலது.


மோடியே வெல்வாரே முன்வந்த வாக்கினும்...(வெண்பா).

மோடியே வெல்வாரே முன்வந்த வாக்கினும்
கூடி வருமிது கொள்வீரே ----- நாடிவரும்
மக்கள் அனைவருக்கும் மாண்பு மிகச்சேரும்
தக்கநல் ஆட்சியால் தான்.


இந்த வெண்பாவை இந்தியத் தேர்தலுக்கு முன்னரே
எனது கைப்பேசியில் பதிவு செய்திருந்தேன். வெளியிட வேண்டுமென்று அப்போது ஆவலாய் இருந்தது. ஒரு கணிப்புமின்றி வெறுமனே எழுதியதால் வெளியிடவில்லை.

இப்போது கருத்துக்கணிப்புகள் அவர் வெல்வார் என்`கின்றன. என் கவியும் அதையே சொல்வதால் ஏன் வெளியிடவேண்டுமென்று ஓர் எண்ணம் தோன்றியது. அதை ஒருவாறு மீறிக்கொண்டு இப்போது இதைப் பதிவு செய்துள்ளேன். ஓர் எளிமையான பாடல்தான்.

ஊழலின் சொர்க்கமாக இருப்பது இந்தியா. அங்குபோய் கள்ளப்பணம் என்பதை ஒழிக்க முனைந்தால் பலரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். பலர் வரியே செலுத்துவதில்லை. ஜி எஸ் டி என்னும் வரியை அங்கு புகுத்தினால் பலர் வெகுண்டு எழுவர். ஊழலால் பலருக்கு ஊதியமுண்டு. அதை இல்லாமலடித்தால் சினவாரோ என்ன? இந்திய வரலாற்றில் இவரைப் போல இழித்துப் பேசப்பட்டவர் யாருமில்லை என்றுதான் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் நாள்தோறும் ஏசுகின்றன. குற்றங்கள் பலவற்றைச் சாட்டுகின்றன. பாவம்! மக்கள் ஆதரவால் வென்றால் அது உண்மையை மறைக்க முடியாதென்பதை உலகுக்கு உணர்த்துவதாகும்.