ஞாயிறு, 31 மார்ச், 2019

ரொக்கமும் ரோடாவும் (ரோதையும்)

இன்று "ரொக்கம்"  சொல் எங்ஙனம் அமைந்தது என்பதைப் பார்ப்போம்.

இச்சொல் உரு + ஒக்கு + அம் என்ற மூன்று துண்டுகளில் சேர்க்கை ஆகும்.

இதில் உரு என்ற சொல் மதிப்பின் உருவை முன்வைக்கிறது.  இது வெளி உருவோ "வெற்றுரு"வோ அன்று.  இதை இப்போது விரித்து அறிந்துகொள்வோம்.

ஒரு மாணவன்  தன் பாடங்களைப் படிக்காமல் ஆடிக்கொண்டும் அலைந்துகொண்டு மிருக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.  ஊரார் இவன் உருப்பட மாட்டான்  என்று குறிப்பிடுவார்கள்.  முன்னரே அவன் நல்ல உருவத்துடன் தானே இருக்கிறான்,  இனி என்ன உருப்படுவது? உருப்படுவதற்கு ஒன்றுமில்லை.  உலகில் உள்ள அனைத்துக் காணத்தக்க பொருள்களும் ஒவ்வொன்றும்  ஓர் உருவில்தான் உள்ளன. புதிதான ஓர் உரு ஏற்படப்போவதில்லை.  அப்படியானால் உருப்படுதல் அல்லது உருவு கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?

பண்டமாற்று விற்பனை பொருள்தரவு  வரவு முதலியவற்றில் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உரு இருக்கின்றது.  இவ்வுரு கண்காணாத உரு ஆகும்.   இந்த ஆட்டுக்கு ஐம்பது வெள்ளி விலை என்றால் அது ஓர் உரு,  சடப்பொருள் கொள்ளும் உருவன்று;  மதிப்புரு ஆகும்.   ஐம்பது வெள்ளி என்பது ஆட்டுக்கு ஈடாக வைக்கப்படுகின்றது.  அத்தகைய மதிப்பீட்டினால்தான் வணிகம் நடைபெறுகின்றது.  ஆட்டுக்கு உரு உள்ளது;  மதிப்புக்கு ஓர் உருத்தந்து அதனை ஆட்டுக்கு ஈடாக வைத்து  விற்பனை அல்லது வாங்குதல் செய்ய வேண்டும்.   ரொக்கம் என்ற சொல்லில் முன்னிற்கும் நிலைமொழி அல்லது நிலைப்பகவு:  மதிப்புருவே  என்று உணர்தல் வேண்டும்.

மனிதர்களுகும் ஓர் உரு உள்ளது.  இதை இமேஜ் என்ற ஆங்கிலச் சொல்லும் ஒருவாறு உணர்த்தவல்லது.   உண்மையில் விற்பனைப் பொருள்களில் அல்லது பண்டங்களில்இது  மதிப்பு உரு  ஆகும்.

உரு ஒக்க வேண்டும் அல்லது பண்டமாற்றுக்கு மதிப்பு ஒப்புமை வேண்டும். இதையே விலை என்று சொல்கின்றோம்.  ஒக்குதலாவது ஒத்திருத்தல்.  ஊரில் எங்கு பார்த்தாலும் ஆட்டுக்குட்டிகளாக இருந்தால் ஆட்டு விலை வீழ்ச்சி அடைந்துவிடும்.  எவ்வளவுக்கு  எவ்வளவு ஆடு தேடப்படும் பொருளாகவும் எளிதில் கிட்டாத பொருளாகவும் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது  விலையாக்கம் பெறும். அப்போது பெறும் பணமே ரொக்கம் ஆகும்.  இது பின் பணத்தாள்களின் சேர்க்கை அல்லது கட்டினைக் குறித்தது இயற்கையான அடைவே ஆகும்.

உரு ஒக்கு அம் என்பது பொருள்மதிப்பு ஒக்கும் அமைப்பே ஆகும்.  விலை ஐம்பது உரூபாயாக இருந்தால் உரொக்கம் என்பது அதைக் குறித்துப் பணத்தின் கட்டினைக் குறிக்க வழங்கிற்று.

உரு ஒக்கு என்பன சொல்பகவுகள் அல்லது துண்டுகள். அம் என்பது ஈண்டு விகுதி எனக் கொள்க.

நாளடைவில் இச்சொல் தன் தலையிழந்து,  அரங்க சாமி ரங்க சாமி ஆனது போல  உரொக்கத்திலிருந்து ரொக்கமாயிற்று.
 ஆகவே இங்கு உரு என்பது மனக்காட்சி  ஆனது. மதிப்பீடு என்றும் கொள்க.

பின்னாளில் இது  காசோலையாக இல்லாமல் பணத்தாள்களாக இருத்தல் என்ற பொருளைத் தழுவியது. இதை ஆங்கிலத்தில் "கேஷ்" என்பர்.  ஆயின் "கேஷ்" என்பதோ காசு என்பதன் திரிபு ஆகும். காசினெட்டு என்ற மலையாள வழக்கும்  "காஷியுனட்"  என்று திரிந்தது காண்க.


அதனுடன் இன்று ரோடா அல்லது ரோதை என்பதையும் நுணுக்கி அறிவோம்.

உருண்டு ஓடுவது ரோதை அல்லது ரோடா.

இது எப்படி அமைந்தது என்றால்:

உருள் + ஓடா.
=  ரு + ஓடா    ( உகரமும் ளகர ஒற்றும் கெட்டன).
=  ரோடா.

இது அருமையாய் அமைந்த சொல்.  எடுத்தெறிந்தது இரண்டு எழுத்துக்களைத்தாம்,. ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது.

ஆ என்பது ஒரு சொல்லிறுதி.    எடுத்துக்காட்டு:  வில் > விலா ( வில்போல் வளைந்த எலும்புள்ள பகுதி ).  பல் > பலா ( பல பழங்கள்  பதிவான ஒரு பொதிவினைக் காய்க்கும் மரம் ). உல் > உலா  ( வளைந்து செல்லும் பயணம்).
கடு > கடா:  ( கடுமை சார்ந்த மாட்டுவகை, ஆண்மாடு;  கேள்வி).

இர் > இரா (  இரவு)  ( ஆ விகுதி).
இர் > இருள்  (  உள் விகுதி)

உல் > உரு> உருள் > உருளை   ( வளைவு).

ரோட்டா, ரோட்டேட் முதலிய இந்தோ ஐரோப்பியச் சொற்கள் திராவிட மூலத்தன.

அமைதியுடன் ஆய்ந்தமைக்கு நன்றி..

பிழைகள் புகின் செப்பம் பெறும். 
ஒரு சில தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பெற்றன: 2.4.2019










சனி, 30 மார்ச், 2019

பீடம் என்பது

வரிசையாய்ப் பல வந்து முன் நிற்கின்றன சொற்கள் என்றாலும் எல்லாவற்றையும் எழுதிவிட முடிவதில்லை. இன்று ஒன்றை மட்டும்
கவனிப்போம்.   இச்சொல் பீடம் என்பது.

இதன் முந்து   அடியாய் இருப்பது பீடு என்னும் சொல்லாகும்;

பீடு என்பது பெருமை என்று பொருள்படும்.

பழங்கால மனிதனுக்கு மேடு, பள்ளம்,. உயரம், தாழ்வு என்பன போன்ற கருத்துக்களே பல சொற்களைப் படைக்க உதவின. மலை, மடுவு போன்ற
இயற்கை நில அமைவுகளும் இவ்வாறு உதவின.

பிடுதல் என்ற சொல்லே பீடு என்பதன் முன் உள்ளது ஆகும். தரை நிலையிலிருந்து பிடப்பட்டு அல்லது வேறுபாடுற்று உயரமாய்க் காணப்படும்  உயர்நிலம் பீடு > பீடம் ஆனது.   பீடு என்பது பிடு என்றதில் விளைந்த முதனிலை திரிந்து  நீண்ட தொழிற்பெயர் ஆகும்.

பிள் என்பது இதன் மூல அடி.  பிள் > பிளவு.  பிள் > பிடு என்று திரியும். இது சுள் > சுடு, பள் > படு என்பன போன்றவையே.   பள்: >பள்ளம்;  பள் > படு> படுகை என்பன அறிக.

தரையின் மட்டத்திலிருந்து பிளவு பட்டு மேலெழுந்து  பீடம் அமைகிறது. இஃது இயற்கையில் அமைந்தாலும் மனிதனால் அமைப்புற்றாலும்  சொல்லமைப்பில் ஒரு வேறுபாடில்லை.

பிடு என்பது கையால் பிடுவது மட்டுமின்றித் தானே பிடுதலுண்டதையும் குறிக்கும் என்பதறிக.

பெருமை குறிக்கும் பீடு என்ற சொல்லும் இயற்கை அமைப்புகளிலிருந்து உருவான கருத்தே ஆகும்.

பீடம் என்பது பிடு+ அம் என,  நேரடியாகவும் காட்டப்பெறுதல் கூடும்.  முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று அறிக.

பீடம் என்ற உயர்தரை அல்லது நிலம்  பல வேறு சொற்களிலும் கலந்து வரும்.
எடுத்துக்காட்டு:  தலைமைப் பீடம்.  பீடாதிபதி.  (பீட  அதிபதி).

ஆனால் பீடி என்ற சொல் தொடர்புடையதன்று:  பிடி> பீடி.  புகைப் பிடிப்பதற்காவது.

அறிவோம் மகிழ்வோம்.

செவ்வாய், 26 மார்ச், 2019

சொப்பன வாழ்வு

உறக்கத்தின்போது கனாக்கண்டு நல்லபடியாக ஒலிப்புறாத சொற்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையே சொப்பனம் ஆகும்.

கருத்து:  சொற்களைப் பன்னுதல்.
பன்னுதலாவது பலமுறை  நன்`கு ஒலிக்காமல் வாய் அசைவுறல்.

பல் > பன் (லகர 0னகரத் திரிபு).  ( பல தடவை என்னும் அடிப்படைக் கருத்து)
பன் > பன்னு:  வினைச்சொல் ஆக்கம்.
பன்னுதல் :  தொழிற்பெயர்.

இன்று உள்ள பொருள்:

கனவு,  குறைச் சொல்லொலிக் கனா.

சொல்+ பன்னு + அம் > சொற்ப(ன்)னம் (  இடைக்குறை:ன்  )>  சொற்பனம் > சொப்பனம்

இங்கும் விளக்கம் சிறிது உள்ளது.

.https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_27.html


இதன் அடிப்படைப் பொருள் சொற்களைப் பன்னுதல் என்பதே ஆதலின், இன்று இதன் பொருள் மாறிவிட்ட நிலையில் இது திரிசொல்லாகும்.

சொல்லிலும் திரிபு; பொருளிலும் திரிபு.

இத் திரிசொல்லைப் பயன்படுத்திப் பாபநாசம் சிவன் எழுதிய:

" சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய  சாமி உனை மறந்தார்!  ---  அந்தோ
அற் பப் பணப் பேய் பிடித்து  அறிவிழந்து
அற்பர்களைப்  புகழ்வார்."

இங்கு  சொற்பன, அற்பப்பண என்ற எதுகைகள் மிக நன்று.

நாவால் பொய்மொழிவார் ---- தனுதுவாழ்
நாளெலாம் பாழ்செய்வார்.  ----  உன்
பாவன நாமமதை ----- ஒருபொழுதும்
பாவனை செய்தறியார்

அந்தோ விந்தை இதே -----  அறிந்தறிந்து
ஆழ் நரகில் உழல்வாரே  ---- இவர்
சிந்தை திருந்தி  உய்ய  ---- குகனே
உந்தன் திருவருள் புரியாயோ.

இந்தப் பாடலை எம்.கே  தியாகராஜ பாகவதர் ( மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராசன், இசைவலர் ) படத்தில் பாடியிருந்தார்.

இனி அந்தோ என்ற சொல்லாட்சியைப் பார்ப்போம்.

என்ன (தமிழ்)  >  எந்து  ( மலையாளம்)
வந்து (த )  .>   வன்னு  (மலை)

இவ்வாறு   0ன்ன > ந்த  மாறுதலுடைமை காணலாம்.

இதுபோலவே 

அன்னை > அன்னோ  (தாயே )  என்பது
அன்னோ > அந்தோ என்று மாறிவந்துள்ளது.

இடையில் இந்த ஒலிமாற்றினை விளைப்பது து அல்லது த் என்னும்
இடைநிலை தான்.

அன்+ ஓ = அன்னோ.  ( அன்+ஐ = அன்னை) இதைப் பின் காண்போம்.
அன்+ த் + ஓ =  அந்தோ.

இரண்டிலும் அன் என்பதே அடிச்சொல்.

அன்னில் உள்ள 0னகர ஒற்று  அம்மில் மகர ஒற்றாகும்.

ம்>ன்  போலி.   திறம் > திறன்.  அறம் > அறன்.

இவ்வாறு அறிந்து மகிழ்வீராக.