வெள்ளி, 4 ஜனவரி, 2019

நிவர்த்தி சொல்லமைப்பு.

நிவர்த்தி :  பெயர்ச்சொல்
நிவர்த்தித்தல்  -  பெயர்ச்சொல்.

நிவர்த்தி என்பதொரு புலவர் புனைவாகும்.  இது அமைந்த விதம் உரைப்போம்.

நில்  :  நிற்றல். இதில்  லகரம் போய்,  நி என்று கடைக்குறை ஆனது.

வரு :  வருதல்.   வருத்தி :  வரும்படி செய்தல்.

இது   வர்த்தி ஆனது.

வருந்துதல் குறித்த சொல்லின் வேற்றுமை

இது வருந்து என்ற சொல்லின் வேறானது,  வருந்து,  வருத்து என்பன இதனின்று போந்தவை.

நிவர்த்தி: 

ஒரு சாமி கும்பிடுமிடத்தில் பெண் போகக்கூடாது என்று  என்று விதி உள்ளது.  அங்கு ஒரு பெண் தெரியாமல் போய்விட்டதனால் சாமிக்குற்றம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் அங்கு தொழுமிடம் மாசுற்றது என்று பூசாரி கூறுகிறான்.  அந்த மாசை அகற்றிப் பழைய நிலையை வரும்படியாக அவன் சில சடங்குகளை நடத்துகிறான்.

மாசுற்றது தொடராமல் நிற்கவும்   ( நி  )
பழைய தூய்நிலை வருமாறு செய்யவும் :   ( வரு > வருத்தி > வர்த்தி,   அல்லது வர் > வரத்தி >  வர்த்தி ,   அல்லது வரு>  வர் > வர்த்தி  )  ( வர் )

தி : தொழிற்பெயர் விகுதி.

இப்போது இணைக்க:   நி + வர் + தி :  நிவர்த்தி.

எப்படிச் சொன்னாலும் அதுவே.

இந்தத் திரிபுகளைக் கவனிக்கவும்:

வா   -   ஏவல் வினை
வரு -   வினைப்பகுதி     (  வரு > வருகிறான். வருவான் ).
வ  -   வரு> வ:    ( வ >  வந்தான் ).  ( இங்கு வா என்றபாலது வ என்று குறுகிற்று).
வ  >  வர்:   பேச்சுத் திரிபு..    வர்றான், வர்ரியா
வரு > வார்:   வாராய்,  (விளி )
வார்  :   வாரான், வாரார்  (எதிர்மறை ).
வா > வார் > வாரி :   நீர்வரத்து.  நீரலைகள் வரத்து உடைய இடம்:  கடல்.
வரு +  உடு + அம் =  வருடம்.  கணக்கில் மீண்டும் மீண்டும்  வருதலை உடுத்த அல்லது கொண்ட கால அளவு.   உடு என்ற சொற்பயன்பாடு இலக்கியத் தமிழினைக் கொணர்ந்து முற்படுத்தும் அழகினது ஆம்.  இரண்டு உயிர்கள் வரின் ஒன்று தொலையும்.  ஆக ஓர் உகரம் தொலைந்தது காண்க.
வரு > வர்ஷ:  குறித்த காலத்தில் வருவதாகிய மழை.
வரு >  வரத்து:   து தொழிற்பெயர் விகுதி.    (போக்குவரத்து ).(  நீர்வரத்து  ).

நில் நி:  இது நின்றுபோனதையும் நிலையானதையும் தனித்தனியாகவோ இணைத்தோ  குறிக்கும் கடைக்குறை. நிறுத்துதலையும் சுட்டவல்லது.

வர்த்தி :   வருவித்தல்.

அதுவே நிவர்த்தி என்றறிக.





அடிக்குறிப்பு


விதத்தல்,  விதந்துரைத்தல்  என்பன பண்டைத் தமிழில் நன் `கு  வழங்கிய சொல்.   விதம் என்பது அதனின்று அமைந்த சொல்லாகும்.

வித +  அம் =  விதம்.  வித என்ற  வினையில் இறுதி அகரம்.   அம் என்ற விகுதியில் துவக்கம் அகரம்.  இவற்றுள் அகரத்தின் இரு முளைப்பில் ஒன்று அகற்றப்படும்.    வித் + அம் =  விதம் ஆகு.    விதந்து கூறுதலாவது சிறப்பாக எடுத்துரைத்தல்.

விதம் என்பது சிறப்பான ஒரு அல்லது இன்னொரு தோற்றம்.

தட்டெழுத்துப் பிழைகள் இருப்பின் பின் திருத்தம் பெறும்.

வியாழன், 3 ஜனவரி, 2019

அவசரம் ஒரு விளக்கம்

இப்போது அவசரம் என்ற சொல்லைப் புரிந்துகொள்வோம்.
இச்சொல்லில் அவம்  எனற்பால தொரு சொல்லும் சரம் எனற்பாலதொரு சொல்லும் இணைந்துள்ளன.  ஆகவே இதைக் கூட்டுச் சொல் என்று கூறலாம். அதாவது இருசொல்லொட்டுக் கிளவி ஆகும்.  ( ஆங்கிலம்:   compound word             ).

அவம் என்ற சொல்லை நுணித்துப்  பார்க்கின்  ( focus செய்யின்)  அதன் பகுதி  அவி என்பது புரியும்.

அவி + அம்   =   அவம்.

சில சமயங்களில் நெருப்பில் இடாமலே சில இலைகள், கீரைகள் காய்கறிகள் வெம்மையினால் அவிந்து விடுதல் காணலாம்.   அவிதலின் பின் பயன்பாட்டுக்கு ஒத்துவராதனவாகிவிடும்.   ஆகவே  நாம் வைத்திருந்தவை அவமாகிவிட்டன.

அவி அம் > அவம் என்பதில் அவி என்பதன் இகரம் கெட்டது அல்லது தொலைந்தது.    அதனால் அது அவ் என்ற தற்காலிக உருவைஅடைகிறது.  வ்+ அ =  வ ஆதலால் அ (வ் + அ ) ம் =  அவம்   ஆகிறது.

அவல் (  அவி + அல் ) என்பதும் இத்தகு அமைப்பினதே.   அவியல் என்ற சொல் இகரம் கெடாது நின்று இன்னொரு சொல்லைத் தந்தது அறிக.

மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு வெண்பாவில்:

" நாடகமே செய்தற் கிசைந்தாய்  அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம் "  என்பார்.

இதற்கு நாணம் கெடுதல் தரும்,   வேண்டா என்று பொருள்.

இனிச்  சரம் என்பதென்ன?

ஒரு மலையிலிருந்து நீர் சரிந்து விழுந்து அருவியாகிறது.  நீர் சரமாக ஒழுகுகின்றது.   சரம் என்பது சரி+ அம். இதுவும் ரிகரத்தில் நின்ற இகரம் கெட்டு அம் என்னும் விகுதி பெற்று அமைந்த சொல்லே ஆகும்.  திருமண வீட்டில் சரமாக அலங்கார விளக்குகள் ஒளிர்கின்றன.   வரிசையாக இருத்தலால்   சரம் என்று சொல்கிறோம்.  சரஞ்சரமாய்க் கோத்து வைத்தேன் என்று பேசுவதைக் கேட்டிருக்கலாம்.  நீர் போன்றவை சரமாகவே ஒழுகும் ( சரியும்). இதனாலே சரம் என்பது வரிசை என்ற பொருண்மை பெற்றது.

அவசரம் அல்லது விரைவில் சரம் கெட்டுப்போகிறது.  வரிசை ஒழுங்கு இல்லையாகிறது. இதன் காரணம் விரைதல் அல்லது வேகமாதல்தான்.

விரைவும் அதன் காரணமாகிய வரிசைக் கேட்டிலும்  இது வரிசைக்கேடு என்ற சொல்லமைப்புப் பொருளைக் கொண்டு, அதைக் குறிக்காமல் அதன் காரணத்தைக் குறித்துப்    பொருள்தாவல் மேவிய சொல்.

இதன் அமைப்புப் பொருளில் இது இல்லையாதலின் இது திரிசொல் ஆகும்.
தொடர்புடைய வேறுபொருள் மேய நிகழ்வினால் என்றுணர்க.

இப்படி அமைப்புப் பொருளில் விலகி நின்று தொடர்புடைய வேறுபொருள் சுட்டிய சொற்கள் மொழியில் மிகப்பல.  அவ்வப்போது வந்துழிக் காண்க.

மறுபார்வை பின்.

புதன், 2 ஜனவரி, 2019

இடைக்குறை தொகுத்தல் முதலிய அணுகும் விதம்

கண் என்பது இடம் என்றும் பொருள்தரும் என்பதை அறிவீர்கள். இங்கு முன் இடுகைகளிலும் இது கூறப்பட்டிருக்கிறது.

உரைநடையில் முக்கண்ணன் என்று தான் வரும்.  சிலர் செய்யுள் நடையில் உரை நடையை எழுத முற்பட்டு முக்கணன் என்று கட்டுரையிலோ கதையிலோ எழுதியிருக்கலாம்.  இவ்வாசிரியர்கள் தாம் செய்யுளில் மிக்க ஆர்வமும் பட்டறிவும் உடையராய் இருக்கலாம்.  இப்படிக் கட்டுரைகளில் எழுதவேண்டியதில்லை.  ஆனால் செய்யுளில் நீட்டம் குறைக்கவேண்டின் வேறுவழியில்லை.  எடுத்துக்காட்டு:

முக்கணா போற்றி   ( தேவாரம் 968.10 ).

பெண்பாலிலும்  முக்கணி என்று வரும்.

என்னுதல் ( என்று சொல்லுதல் ) என்பதும்  குறுகி  எனுதல்,  எனல் என்று எழுதப்படக்கூடும். முதலாம் இரண்டாம் செய்யுளடிகளில் மனுவை என்று தொடங்கி இருந்தால் அடுத்த அடியில் எனுதல் என்று போடுவதற்குத் தடை ஏதும் இல்லை.  ஆனால் அண்மையில் இவ்வாறு எழுதி யாம் அறியவில்லை.

 தெக்கணி -  தக்கணி என்ற மொழிப்பெயரில் கணி என்பதும் இவ்வாறு குறைந்ததே.  இந்தச் செய்யுள் வசதியை மொழிப்பெயர் அமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர் என்று அறிந்து, ஒருவகையில் பெயரமைத்தவர்களைப் பாராட்டவேண்டியுள்ளது.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் காலத்தைக் குறிப்பது. இது வெகுகாலமாய்த் தமிழில் வழக்கில் உள்ள சொல்லாகும்.

குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி ..... கணமேயும் என்ற குறளில் கணமென்பது வந்துள்ளதென்பது நீங்கள் அறிந்ததொன்றே.   கண் + அம் =  கண்ணம் என்று இரட்டிக்காமல் கணமென்றே வந்துள்ளது காண்க.  இதிலொரு வசதி என்னவென்றால் பொருந்தியவிடத்து கண்ணம் என்ற  புத்தமைப்பை வேறொரு பொருளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஒரே அடிப்பிறந்த சொற்கள் இரட்டித்து ஒரு பொருளையும் இரட்டிக்காமல் இன்னொரு பொருளையும் ஏற்றமைதல் உளது.   இதற்கு எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்  (  வாழ்க்கை நெறி விதிகள் அல்லது ஆலோசனைகள் ).
அறு + அம் =  அற்றம்.  ( தருணம் )
தருணமாவது சூழ்நிலைகள் தருமொரு செயல்பாட்டு வசதி ,  நல்வேளை .

தமிழா உனக்கிது தருணமே வாய்த்தது
தாரணிக்கெல்லாம் வழி காட்ட   ( ஒரு பாடல் வரி ).

கோபம் வந்தால் பலர் கத்துவர்.  கத்துவதன்மூலம் தன் ஏற்றுக்கொள்ளா மனப்பான்மையைக் காட்டுவர். 

கத்து >  கது   > கதம் .

கழுதைக்கு ஏற்பட்ட பெயர்களில் ஒன்று காழ் காழ் என்று அது கத்துவதால் ஏற்பட்ட பெயர்.   காழ் என்பது கழு என்று மாறி  ( முதனிலை குறுகித் திரிந்து ) தை விகுதி பெற்றுக் கழுதை என்று அமைந்தது.  ஒப்பொலிச் சொல்.

எப்படிக் கத்துகிறது என்பதைக் குறிக்காமல்,  வெறுமனே அதன் கத்தும் குணத்தைக் குறித்து எழுந்த சொல் கத்து > கத்தை என்பதாகும்.  கத்து > கது > கதை என்பது இதிலிருந்து அமையினும் வேறு பொருள் தருவதுவாம். . இடைக்குறையால் குறிக்கும்பொருள் வேறானது.

அறிந்து மகிழ்க.

திருத்தம் பின்