புதன், 2 ஜனவரி, 2019

இடைக்குறை தொகுத்தல் முதலிய அணுகும் விதம்

கண் என்பது இடம் என்றும் பொருள்தரும் என்பதை அறிவீர்கள். இங்கு முன் இடுகைகளிலும் இது கூறப்பட்டிருக்கிறது.

உரைநடையில் முக்கண்ணன் என்று தான் வரும்.  சிலர் செய்யுள் நடையில் உரை நடையை எழுத முற்பட்டு முக்கணன் என்று கட்டுரையிலோ கதையிலோ எழுதியிருக்கலாம்.  இவ்வாசிரியர்கள் தாம் செய்யுளில் மிக்க ஆர்வமும் பட்டறிவும் உடையராய் இருக்கலாம்.  இப்படிக் கட்டுரைகளில் எழுதவேண்டியதில்லை.  ஆனால் செய்யுளில் நீட்டம் குறைக்கவேண்டின் வேறுவழியில்லை.  எடுத்துக்காட்டு:

முக்கணா போற்றி   ( தேவாரம் 968.10 ).

பெண்பாலிலும்  முக்கணி என்று வரும்.

என்னுதல் ( என்று சொல்லுதல் ) என்பதும்  குறுகி  எனுதல்,  எனல் என்று எழுதப்படக்கூடும். முதலாம் இரண்டாம் செய்யுளடிகளில் மனுவை என்று தொடங்கி இருந்தால் அடுத்த அடியில் எனுதல் என்று போடுவதற்குத் தடை ஏதும் இல்லை.  ஆனால் அண்மையில் இவ்வாறு எழுதி யாம் அறியவில்லை.

 தெக்கணி -  தக்கணி என்ற மொழிப்பெயரில் கணி என்பதும் இவ்வாறு குறைந்ததே.  இந்தச் செய்யுள் வசதியை மொழிப்பெயர் அமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர் என்று அறிந்து, ஒருவகையில் பெயரமைத்தவர்களைப் பாராட்டவேண்டியுள்ளது.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் காலத்தைக் குறிப்பது. இது வெகுகாலமாய்த் தமிழில் வழக்கில் உள்ள சொல்லாகும்.

குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி ..... கணமேயும் என்ற குறளில் கணமென்பது வந்துள்ளதென்பது நீங்கள் அறிந்ததொன்றே.   கண் + அம் =  கண்ணம் என்று இரட்டிக்காமல் கணமென்றே வந்துள்ளது காண்க.  இதிலொரு வசதி என்னவென்றால் பொருந்தியவிடத்து கண்ணம் என்ற  புத்தமைப்பை வேறொரு பொருளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஒரே அடிப்பிறந்த சொற்கள் இரட்டித்து ஒரு பொருளையும் இரட்டிக்காமல் இன்னொரு பொருளையும் ஏற்றமைதல் உளது.   இதற்கு எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்  (  வாழ்க்கை நெறி விதிகள் அல்லது ஆலோசனைகள் ).
அறு + அம் =  அற்றம்.  ( தருணம் )
தருணமாவது சூழ்நிலைகள் தருமொரு செயல்பாட்டு வசதி ,  நல்வேளை .

தமிழா உனக்கிது தருணமே வாய்த்தது
தாரணிக்கெல்லாம் வழி காட்ட   ( ஒரு பாடல் வரி ).

கோபம் வந்தால் பலர் கத்துவர்.  கத்துவதன்மூலம் தன் ஏற்றுக்கொள்ளா மனப்பான்மையைக் காட்டுவர். 

கத்து >  கது   > கதம் .

கழுதைக்கு ஏற்பட்ட பெயர்களில் ஒன்று காழ் காழ் என்று அது கத்துவதால் ஏற்பட்ட பெயர்.   காழ் என்பது கழு என்று மாறி  ( முதனிலை குறுகித் திரிந்து ) தை விகுதி பெற்றுக் கழுதை என்று அமைந்தது.  ஒப்பொலிச் சொல்.

எப்படிக் கத்துகிறது என்பதைக் குறிக்காமல்,  வெறுமனே அதன் கத்தும் குணத்தைக் குறித்து எழுந்த சொல் கத்து > கத்தை என்பதாகும்.  கத்து > கது > கதை என்பது இதிலிருந்து அமையினும் வேறு பொருள் தருவதுவாம். . இடைக்குறையால் குறிக்கும்பொருள் வேறானது.

அறிந்து மகிழ்க.

திருத்தம் பின்

 

திங்கள், 31 டிசம்பர், 2018

நாம் ஒன்றானோம்.




இது ஹோங்கோங் நகரின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது
எடுக்கப்பட்ட படம்.



எந்நாட்டில் வாழ்ந்தாலும் எல்லோ  ரும்தாம்
இணைநின்று பாசமிடும் ஏற்ற   நண்பர்.
உன்னாட்டில் நீயிங்கு என்னாட்   டில் நான்
ஒதுங்கிவிடு வோமென்றும் எண்ண லாமோ?
பன்னாடும்  பன்மொழியும் பண்ணே போல
பாய்ந்தினிக்கும் நெஞ்சினிலே எண்ணுங்காலே.
இந்நாளில் சுருங்காதீர் விரிந்து செல்வீர்
இகந்தன்னில் அகத்தெண்ணி ஒன்றானோமே.

சுரங்கம்: அங்கு ஆங்கு இடைநிலைகள்.

இன்று புத்தாண்டில் சுரங்கம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

நிலத்தில் பள்ளம் தோண்டினால் பல இடங்களில் நீர் சுரந்து மேல் வருகிறது. இரண்டாம் உலகப்போரின்போது  பலவிடங்களில் சுரங்கங்கள் தோண்டி அங்கு மக்கள் வான்படைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒளிந்திருந்தனர் என்று அறிகிறோம்.  கீழே நீர் சுரந்து நிற்குமாதலின் பலகை அடித்து ஒரு போலித்தரையை ஏற்படுத்தி அதன்மீது மக்கள் ஒளிந்திருந்தனர். நிலத்தடி நீர் அருகில் இல்லாதவிடங்களில் நீர்மட்டம் தொல்லைதராது. பலகை இல்லாமல் அமர்ந்திருக்கலாம் என்பர்.

நிலத்தைத் தோண்டினால் நீர்சுரக்கும்.  ஆதலால் இத்தகைய நிலக்குடைவுகளைச் சுரங்கம் என்று குறிப்பிட்டனர்.

சுரத்தல் :  வினைச்சொல்.

சுர +  அங்கு  + அம் =  சுரங்கம்.

இச்சொல்லில் அங்கு என்பது சொல்லாக்க இடைநிலை.

இப்படிச் சொற்களை நன்றாக அமைத்தவர்கள் யாரோ  அவர்களைப் பாராட்ட வேண்டும்.

அங்கு என்பதை   அ=  சுட்டடிச் சொல் என்றும்  கு  என்பது சேர்விடம் குறிக்கும் சொல் ( அதாவது இப்போது பெரிதும் வேற்றுமை உருபாகப் பயன்படுகிறது )
என்று அறிக.  இவை இரண்டும் இணைந்தே இடைநிலையாக நிற்கின்ற தென்பதை உணர்க. எளிதினுணர்தல் பொருட்டு அங்கு என்பது இடைநிலை என்றோம்.

கூடாங்கு.  மூடாங்கி ( மூடி )., நாதாங்கி என்ற சொற்களும் உள்ளன. இவற்றிலும் இவ்விடைநிலை உள்ளதென்றறிக.

கூடாங்கு:  கூடுபோல் கட்டிப் பொருள்களை இட்டுவைக்குமிடம்.

கூடு + அங்கு. இந்தச் சொல் அம் விகுதி பெறவில்லை. அங்கு என்பது ஆங்கு என்றும் நிலவுமென்று அறிக.

மூடாங்கி :  இது மூடி என்பதற்கு மாற்றாகப் பேச்சு வழக்கில் உள்ளது.  பானை மூடி போன்றவை.  சில சட்டி பானைகளில் மூடி பானையுடன் பட்டையில் திருகாணி கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்.  ஒருபுறம் தூக்கித் திறக்கலாம்.  இப்போது அரிசிவேவிப்புப் பானைகள் இவ்வாறு வருகின்றன. இவை மூடாங்கிகள்.  மூடி அங்கே இருக்கும்; அகற்ற முடியாது.

மூடு + ஆங்கு + இ =  மூடாங்கி.   இதில் இகரம் விகுதியாகிறது.

நாதாங்கி :  கதவில் இருபுறமும் தள்ளுதற்குரிய வசதியுடன்  ஒரு நாக்கைப் போல் இருப்பது நாதாங்கி. கதவின் சட்டத்தில் பக்கம் தள்ளினால் இது ஒரு வளையத்தில் போய் மாட்டிக்கொண்டு கதவைத் திறக்க முடியாதபடி அடைத்துக்கொள்ளும். இந்த நாவைத் தாங்கி இருக்கும் இரும்புக் கூடு நாதாங்கி எனப்படும்.  நாதாங்கி கூடு, வளையம்,  அதிலாடும் தள்ளுகோல் முதலிய முழுப்பொறியையும் குறிக்கும்.

நா + து  + அங்கு  + இ:    நாவை உடையது  இப்பொறி.
து : உடையது.   அங்கு / ஆங்கு  என்பது விளக்கப்பட்டது.   இகரம் விகுதி.

நாவைத் தாங்குவது எனினும் ஆம்.

இலக்கணம் கூறுவதாயின்  நாத்தாங்கி எனற்பாலதில் தகர ஒற்று இடைக்குறை என்லாகும்.

இத்தமிழ்ச் சொற்கள் இக்காலத்தில் மறக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள் பெருவழக்கினவாதலே காரணம்.

அடிக்குறிப்பு:

அங்கம்:  உடல் குறிப்பது.   இது அடங்கம் என்பதன் இடைக்குறை.  டகரம் வீழ்ந்தது.  பல உள்ளுறுப்புகளும் அடங்கியதே அங்கம்.


பிழைத்திருத்தம் பின்.