திங்கள், 3 டிசம்பர், 2018

கபாலி

ஆலமரமென்பது சொல்லமைப்பில் பொருள்கொண்டால் அகலமரமே.    அகல மரம் என்பது திரிந்து ஆல மரமாயிற்று.  பண்டை நாட்களில் அரசர்களால் அமைக்கப்பட்ட கோயில்கள் தவிர மற்றையவை ஆலமரத்தடி கும்பிடுமிடம்,


கோ எனில் அரசன்;  இல் எனில் இடம் அல்லது வீடு. கட்டப்பெற்றது என்பதாகும்   கோயில்கள் அரசர்களால் கட்டப்பெற்றவை.  இன்று இச்சொல் பொதுப்பொருளில் வழங்குகிறது.

ஆல் + அ + அம் =  ஆலயம். யகரம் உடம்படு மெய்.  ஆலமரத்து இடம்.  பொருள்:  ஆலமரத்தடியில் அங்கிருக்கும் தொழுமிடம்.

அகல் >  ஆல்.  இதுபோல இன்னொரு சொல் கூறவேண்டின் பகல் > பால்.  பகல் என்றால் பகுக்கப்பட்டது என்பது சொற்பொருள். சூரியன் ( <சூடியன்,  வெம்மை தருவோன் )   காயும் நாளின் பகுதியே பகல்.  பகு+ அல் = பகல். இது பின் பால் என்று திரிந்தது.   அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால், அப்பால், இப்பால், அவள்பால்.   அறத்துப்பால் என்பது அறத்தைக் கூறும் பகுதி, நூலினது ஆம்.    அகல்> ஆல் போலவே பகல் > பால்.

இப்போது கபாலி என்ற சொல்லுக்கு வருவோம்.

கவை >  கபா.   இது வகர பகரப் போலி.   இன்னொன்று:  வசந்தம் > பசந்த்.
தவம் > தபம் என்பதுமாம்.

அகல் > ஆல் .

இ என்பது விகுதி.


பொருள்:

கழுத்தை இரு நேர்கோடுகளால் காண்புறுத்தினால் ( பிரதிபலித்தால் )  அவற்றின் மேல்புறத்தில் ஒரு வட்டத்தை வரையவேண்டும்.  கழுத்தைக் காட்டும் இரு கோடுகளும் கவைகள் போலிருக்கும்,  மேலுள்ள வட்டம் தலையைக் காண்புறுத்துகிறது.   தலை இடம் அகன்றது.  ஒரு கவையிலிருந்து இடமகன்று இருப்பதால் தலை கப+ ஆலி ஆகிறது. ஒரு கவையில்  ஓர் அகன்ற தலை வைக்கப்பட்டுள்ள நிலையே கபாலம் ஆகும்.

ஒரு கவையோடும் அகன்ற தலை :  கபாலம் ஆகும்.  அதை உடையோன் கபாலி.

கபா+ ஆல் + இ =  கபாலி.

கவை என்பது ஒரு குச்சி அல்லது நீள்பொருள் இரண்டாகப் பிரிந்து வேறுபொருள்களை அகப்படுத்தும் அல்லது அதில் மாட்டிக்கொள்ளும் திறனுடையதாவதான ஒரு நிலையைக் காட்டுகிறது.  ஒரு கவையால் ஒரு கொடியைப் பிடித்து இழுக்கலாம். அல்லது அப்பால் தள்ளலாம்.  கபடு, கவடு என்பவை இதுபோலும் பிறரை மாட்டிவிடும் நேர்மையில்லாத குணத்தைக் குறிக்கிறது. கவை என்பது கவ்வு என்ற வினைச்சொற்குத் தொடர்பு உடைய சொல்லே.  இது பிறமொழிச் சேவை ஆற்றிய சொல். ஆங்கிலம் "கவட்" என்பதுவரை போயிருக்கிறது. Thou shalt not covet thy neighbour's wife என்பது பத்துக் கட்டளைகளில் ஒன்றாக வருகிறது.   பிறன்மனையாளைத் தன்வலைக்குள் சிக்கவைத்துவிட்டுக்   குற்றமின்மைக் குறிகாட்டும் ஆடவரும் உலகில் உளர்.  கவைகள் மரங்களில் காணப்பட்டுப் பெயரிடப்பட்டன.  இப்போது செயற்கைக் கவைகளும் உள.  கழுத்தாகிய கவையில் மாட்டப்பட்டிருப்பதே மண்டை ஆகும்.  ஆகவே " கபாலி" பொருத்தமான சொல்லமைப்பு. கவையாகிய கழுத்தில் அகல் ஓட்டு மண்டை அமர்ந்துள்ளது என்பது அறிதற்குரித்தாம்.

அறிந்தின்புறுக.

திருத்தம் பின்


ஞாயிறு, 2 டிசம்பர், 2018

ஐயப்ப பூசைகள் தொடக்கம் வீடுகளில்.







இல்லங்கள் தோறும் உள்ளங்கள் போற்றி
உயர்த்திடும் ஐயப்பனார்
சொல்லவும் வேண்டுமோ சூடலங் காரத்தை?
சோறுண்டு  நீருமுண்டு;
நல்லவர் செவிகளில் பாய்ந்திடும் பாட்டிசை
தன்னொடு நிறைவுகண்டு,
வெல்லுவர் சபரியில் இருமுடி கொண்டேற்றி
விரதமும் சாதிப்பரே.




supplied some missing punctuation:  19.2.2019

சனி, 1 டிசம்பர், 2018

ளகர ணகரத் திரிபும் அடிச்சொற்களும்.

ளகர ஒற்றில்  ("ள்") முடிந்த சொற்கள் சில "ண"  (ணகர ஒற்றாக) மாறுவதைக் கண்டுகொள்க.   உதாரணம்: 1

ஆள் >   ஆண்.

(  இந்த  "ஆள் " என்னும் சொல் விகுதியாகப் பெண்களுக்கு முதலில் பயன்பட்டது.  எ-டு:  வந்தாள்( வினைமுற்றில்).    கண்ணாள் ( பெயர்ச்சொல் நீட்சி ).

ஆள் என்பதிலிருந்து திரிந்த  ஆண் என்ற சொல் பின் ஆடவருக்கு  உரிய ஒரு
பெயர்ச்சொல் ஆனது.

ஆள் என்பதை நோக்க ஆண் என்பது பிந்துவடிவம் ஆதலின்,  பெண்கள் மேலாண்மை  முன் நடைபெற்றது.  பின்னரே  அது திரிந்து ஆண்களுக்கு உரிய பொதுப்பெயர் ஆனது.  ஆணாட்சி ஏற்பட்டது.

ளகர ணகரத் திரிபுகள்:

வள் > வண்.

துணிகள் புதியனவாய் இருக்கையில் வளமாய் இருக்கும்.  உறுதியுடையதாயும் நல்ல நிறமுடையதாகவும் இருப்பதுடன் கண்டோர் புதியவை என்னும்படியாக இருக்கும்.  துணிகள் பயன்படுத்தப் பட்டபின் பழையனவாய்த் தெரியுமாதலின், அவற்றினை மீண்டும் வளப்படுத்தவேண்டும்.இதைச் செய்வோன் வண்ணான் என்னும் சலவைத் தொழிலாளி.  சலசல என்று ஓடும் ஓடை ---ஆற்று நீருள்ள இடங்களில் அவன் துணிகளைத் துவைத்து  (தோய்த்து )  வளப்படுத்தினான் -    வண்ணப்படுத்தினான்.

வள் > வளம்.   வள் > வண்.   வண் > வண்ணம்.

வண் + ஆன் =  வண்ணான்.   வண்ணமூட்டுவோன்.

வண்ணான் என்பதில் சாதி எதுவுமில்லை.  வண்ணம் தந்தவன் வண்ணான். சொல்லுக்குள் நுழைந்து பார்த்தால் சாதி இருக்காது.  சாதி என்பது சுற்றுச்சார்புகளால் தோன்றியது ஆகும். அந்தச் சுற்றுச்சார்பின்  மேடையில் அரசனுமிருந்தான்.

சலசல நீரில் இவன் (வண்ணான் )  செயல்பட்டதால்:  " சலவை";  இதைச் செய்தோன் சலவைத் தொழிலன்.


தூய்மை, உறுதி, பளபளப்பு இவை காணக்கிடைக்கவேண்டும். துணிகளை மீண்டும் இவன் வண்ணம் பெறுவிக்கவேண்டும்.

யாம் இங்கு கூறவந்ததை மறத்தலாகாது.   வள் என்ற ளகர ஒற்றிறுதி ணகர ஒற்றிறுதியானது.   ஆள் > ஆண் என்பதுபோல.

ஒன்றை உட்கொள்ளுதலைக் குறிக்க ஏற்பட்ட சொல்  உண் என்பது.  சோற்றை வாய்வழி உட்கொள்வது இயல்பு. இப்போது சில நோயாளிமாருக்குக் குழாய்மூலம் வயிற்றுக்குள் மென்னீருணவு செலுத்தப்படுகிறது, எப்படியாயினும் :

உள் > உண் என்று ளகர ஒற்றுச்சொல் திரிந்தமைந்து  தொடர்புடைய மற்றொரு செயலைக் குறித்தது. வேறுபாடு சிறிது.   உள் என்ற சொல்லாலும் உண் என்பதைக் குறிக்கலாமேனும்  கொள் என்ற துணைவினை தேவைப்படும்.

உள் > உண்.

பள் > பண்.  ( பள்ளு பாடுவோமே).

விள் என்பது வெளிப்படுதல் குறிக்கும் சொல்.  விள்ளுதல்: வாய்ச்சொல் வெளிப்பாடு.   விள் > விண்.  இறைவனிலிருந்து அல்லது  இயற்கை ஆற்றலிலிருந்து   வெளிப்பட்டது விண்.( ஆகாயம் ).

இவ்வாறெல்லாம் சொற்கள் திரிபுற வில்லையெனில் பல திராவிட மொழிகள் ஏற்படக் காரணம் யாதுமிருந்திருக்காது.

சொற்புணர்ச்சியிலும் ளகர ஒற்று ணகர ஒற்றாக மாறுவதுண்டு:

தெள் + நீர் =  தெண்ணீர்  (தெளிந்த நீர் ) .  தண் நீர் > தண்ணீர் வேறு.





அடிக்குறிப்புகள்


1.  உது + ஆர் + அண் + அம் :  உதாரணம்:    உது : சுட்டுச்சொல். பொருள்: முன் நிற்பது.    ஆர்தல்:  நிறைவு.   அண்:  அண்முதல். நெருங்குதல்.  அம் : விகுதி.
ஒரு பொருளின் முன்னிலையில்  இன்னொரு பொருள் நிறைவாகவும் நெருங்கியும் நிற்பது.   இதை அமைத்தவன் ஒரு தமிழ்ப்புலமை பெற்றவனாக இருக்கவேண்டும்.   அடிச்சொற்கள் மூன்றை அடுக்கி அமைத்துள்ளான்.

பிழை திருத்த இப்போது நேரமில்லை.
பின் செய்வோம்.