வெள்ளி, 6 ஜூலை, 2018

முகமாவு பூசிக் கவின்பட்ட சொற்கள். word cosmetics

வாஸ்தவம்:

வாஸ்தவம் என்பதை பலமுறை பேச்சில் கேட்டிருக்கிறோம்.  வாய்மை என்ற சொல்லும் அதையே குறித்தது.  என்றாலும் அது பெரும்பாலும் இலக்கிய வழக்கில் மட்டுமே உண்டு.  ஓய்வாக நண்பர்கள் வந்து பேசும்போது வாய்மை என்று சொல்வதில்லை. ஒருவேளை இலக்கியத்தைப் பற்றிய உரையாட லானால் வாய்மை என்ற சொல்லைக்  கற்ற நண்பர்கள் பயன்படுத்துவ துண்டு,

வாய் > வாய்மை.

வாய் >  வாய்த்துவம் > வாஸ்துவம் > வாஸ்தவம்.

இதில் இறுதியில் வந்த தவம் என்ற சொல்லை நோக்குங்கால், வாயினால்கூட ஒரு தவம் மேற்கொள்ளலாம்போல் தெரிகிறது!!   உயர்த்தி என்பதை ஒரு தொழிற்பெயராகக் கொண்டு இதுவரை யாரும் போதிக்கவில்லை என்று தெரிகிறது.  எல்லா போதனை இடங்களிலும் யாமில்லை ஆதலால் எமக்குத் தெரிந்தவரை இல்லை.  உயர்> உயர்த்தி என்ற சொல் நாளடைவில் ஒரு முகமாவு பூசி அழகடைந்த பெண்ணைப் போல் ஒஸ்தி என்று சிலரால் உச்சரிக்கப்படுகிறது.   உயர்த்தி இல்லையென்பது அவர்களுக்கு  ஒஸ்தி யாகவே உள்ளது. அது எவ்வாறாயினும் வாய்த்துவம்  (வாய் > வாய்த்து;  இங்கு து = உரியது உணர்த்தும்;   +அம் என்பது விகுதி. ) பின் வாஸ்தவம் ஆனது. துவம்> தவம் . தவமொன்றுமில்லை; து அம் > துவம் தான்.  இரண்டு விகுதிகள்.

வாய்த்துவம் என்பதே முன்வடிவு ஆதலின்  வாஸ்தவம் என்பதை வாய்த்துவம் என்றே எழுதினால்தான் என்ன?  வாய்மை என்ற செந்தமிழ்ச் சொல்லின் "வாய்" என்ற அடிச்சொல் கொண்டுதானே  வாய்த்துவம் எனற்பாலதும் அமைந்துள்ளது காணீரோ?

 நெய்த்தோலி:

நீங்கள் நெய்த்தோலி சாப்பிடுவதுண்டோ?  அப்படியானால் நெய்த்தோலியில் யகர* ஒற்றுத் தொலைந்து,  நெத்தோலி > நெத்திலி ஆனதை  வாய்த்தி > வாத்தி   (teacher ) யுடன் ஒப்பிட்டு மகிழ்ந்துகொண்டே சாப்பிடுங்கள்.

ஓகாரம் இகரமாகுமோ?  ஆகாது என்றால்  நெய்த்தோலியின் தோ(ஓ) பின் தி (இ) ஆனதைப் பார்த்து ஆகுமென்று உணர்வது கடனே.

உடல்,  தேகம். :

நம் உடலின் உள்ளுறுப்புகள் மேலாடைபோல் தோலைப் போர்த்திக்கொண்டு  , அதாவது உண்மையில் தோலை உடுத்துக்கொண்டிருப்பதால்,  அது உடலாகிவிட்டது.  உடு> உடல்.  அல் என்பது ஈற்று விகுதி,  என்புதோல் போர்த்த இவ்வுடல் தேய்வு கண்டு தேவு காணும்.  தேய்ந்து அழிவதாகலின், அது தேய்+கு+அம் =  தேய்கம் ஆனது.  வழக்கம்போல் இதுபோலும் சொற்களில் யகர ஒற்று வீழ்தலின்,  தேகம் என்று இருக்கை கொண்டது.   யாக்கை நிலையாமையைத் தமிழ் நூல்கள் பல்லாற்றானும் கொணர்ந்து நிலைநாட்டுகின்றன.  இதன் பின்னணியில் அமைந்த சொல்லே தேகம். ஏனை மொழியிலும் சமயங்களிலும் வலியுறுத்தப்படுவதும் இதுவாகும்.  சொல்லமைந்த தொடக்கத்தில் இது இறுதியழிவு வலியுறுத்தும் சொல்லாதலின் பெரிதும் வழங்கப்படவில்லை.  ஒரு மணமகன் புதுப்பெண்ணைத் தொடும் காதல் காட்சிக்கு இச்சொல் பொருந்தாத சொல்லே.  காரணம் ஆயிரம் காலத்துப் பயிரான மணத்தைக் குறிக்க எழும் காட்சியில் மங்கலமற்ற எண்ணத்தை அது முன்னிறுத்துகிறது.  காலம் செல்லச் செல்ல அதன் தேய்வு அல்லது அழிவுக் கருத்து  மறைந்தபின்னரே இது வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே பொருத்தமாகும்.  இச்சொல் ஏனை மொழிகளில் ஏறிய காலை இம் மனத்தடை இருக்கவில்லையாதலால் அவ்விடங்களில் இச்சொல் நன்`கு  ஏற்றுக்கொள்ளப்பட்டதென்று கருதுதலே உண்மையோடு ஒட்டியதாகும்.

இராமலிங்க அடிகள் இச்சொல்லை நன்`கறிந்து பயன்படுத்தியுள்ளார். அவர்:

"உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உன்னை மறவேன்..."

என்று இறையிடம் இறைஞ்சுகின்றார்.  அழிவு பற்றிக் கூறுமிடத்து இச்சொல் பெய்யப்பட்டிருப்பதால் மிகுந்த பொருத்தமுடைத்தென்று ஒப்புதலே அறிவாம்.

இந்த உள்ளுறுப்புகள் யாவும் தோலை மேலாகப் போர்த்திக்கொண்டதனால் உடலாகியும்   தேய்ந்தழிதலால் தேகமும் ஆனது.   இன்னும் சொல்லப்போனால் ய ர  ல வ ழ ள ஆகியவற்றில் ஒற்றுக்களும்  பிற ஒற்றுக்களும் கெட்டுத் திரிசொற்களும் அமையும்.   எவனாவது வந்து சொல்வான் தெரிந்துகொள்ளலாம் என்றிருக்காமல் சொந்தமாகவே கண்டுபிடியுங்கள். அதுவே நன்று.

உடலின் மேற்புறத்தையே நாம் கண்டு அதனை உடல் என்று அறிகிறோம்.  அதற்கு அழகுப் பூச்சுக்களும் வாசனைகளும் தடவுகின்றோம்.  அதனால் மேனி என்ற சொல் இத்தகு சூழ்நிலைகளில் பொருத்தமுடைய சொல்லாகும்.  சந்தனத்தைத் தேகத்தில் பூசிக்கொண்டாள், யாக்கையில் பூசிக்கொண்டாள் என்பதை விட  மேனியிற் பூசிக்கொண்டாள் என்பது பொருத்தமான சொல்லாட்சியாகும்.   மேல்> மேலி> மேனி என்றமைந்தது இது.  "மேல"  என்ற முற்றுச்சொல் மேன என்றே தொல்காப்பியனாரால் ஆளப்படுகிறது.  லகரம் னகரமாவது சொன்னூல்படி அமைந்தது ஆகும்.  பிற மொழிகளிலும் இத்திரிபு உள்ளது. மேலோன் என்ற சொல்லும் மலையாளத்தில் மேனோன் எனவும்,  மேலன் என்பது மேனன் எனவும் வருமென்பதறிக.

மேனகை என்ற பெயருக்கு வேறு சொல்லமைப்பைப் பிறர் தந்திருப்பினும்,  மேல்+நகை = மேனகை எனவரும்;  அது ஆகுபெயராய் மேலான நகை அல்லது சிரிப்புடையாள் என்று பொருந்தும் பொருள் தரும்.  ஆனால் இதில் வரும் "ன" என்பது புணர்ச்சியினால் தோன்றியதாகும். மேனகை என்பது கிட்டாதவருக்கு மேல் வருத்தம் தருபவள் என்றும் தமிழ்வழிப் பொருள் கூற ஒக்குமெனினும் அது ஈண்டு சொல்லப்படாது.

யாக்கை என்பது யாத்தல் அல்லது கட்டுதல் என்ற பொருளி லமைவுற்றதாகும். யா+கை என்று கூடிய இச்சொல்லின் கை என்பது தொழிற்பெயர் விகுதி.

சோகம்,  மேகம், வாத்தியம்,

சோர்தல் என்பது உடல் சோர்தல், மனம் சோர்தல் என்றிரு வகை.இதைக் குறிக்க எழுந்த சொல்லே சோகம்.  சோர்+கு+அம் =  சோர்கம் ஆகி, பின் ரகர ஒற்று வீழ்ந்து சோகம் ஆயிற்று. (  ரகர ஒற்று ).   மேலிருப்பது மேகம். மேல்+கு+அம் =  மேகம்  ஆயிற்று.  (  லகர ஒற்று ).   பழங்காலத்தில் இசைக்கருவிகளை எல்லாம் ஒன்றாக வைத்து இயக்கி  மணவிழா போன்றவற்றில் வாசித்தார்கள்.  இயம் என்றாலே இசைக்குழு.   வாழ்த்திப் பாடி இசைத்தால் அது வாழ்த்தியம்.   அது பின் திரிந்து வாத்தியமானது.  (  இங்கு ழகர ஒற்று வீழ்ச்சி ).  பின்னாளில் செத்தவீட்டில் வாசித்தாலும் வாத்தியம் ஆகிவிட்டது.  இது ஒரு சிக்கன நடவடிக்கை.  வாழ்த்தி இசைக்கும் கருவிகள் வாழ்த்தியமானால் அழுது இசைக்கும் கருவிகள்  அழு+ இயம் =  ஆழியம் என்றோ சோர்+கு+ இயம் = சோர்கியம் > சோகியம் என்றோ ஒரு சொல்லை நம் மக்கள் படைத்துக்கொள்ளவில்லை. உள்ள சொற்களையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.   பிழைத்த வீட்டில் தேநீர் அருந்தினால் அது தேநீர்; இறந்த வீட்டில் தேநீர் அருந்தினால்  அதுவும் தேநீர்தான். இன்னொரு சொல் தேவை இல்லை.  வாழ் என்பதில் ழகரத்தை எடுத்துவிட்டால் போதும் என்று விட்டது ஒரு கெட்டிக்காரத் தனம் என்றே நாம் சொல்லிக்கொண்டிருப்போம்.

ஆனால் எல்லா இசைக்கருவிகளும் பங்குகொள்ளும்படியாக முழுமையான குழுவாய் வாசிப்பது ஆரியம் என்று சொல்லப்படும்.  அப்போது ஆடும் கூத்து ஆரியக் கூத்து.   ஆர் = நிறைவான; இயம் = வாத்தியங்கள் அமைந்த;  கூத்து = நடனம்.  ஆரிய என்பது   ஆர் இய(ம்).  மனிதர் எவரையும் குறிக்கவில்லை.

ஆரிய என்பது உயர்ந்தோன்; அறிவாளி என்ற பொருளில்தான் இந்திய நூல்களில் காணப்படுகிறது.  அதுவே சரியான பொருள்.  ஆர்   -  வந்தார் போனார் என்பதும் தமிழில் பலர்பால் விகுதியாய், இன்றளவில் பணிவுப் பன்மையாய் அன்றோ பயன்படுகிறது.   ஆர்தல் என்பது நிறைவை அன்றோ குறிக்கிறது.  வளமார் தமிழகம் என்றால் வளம் நிறை தமிழகம்.   வளம் ஆர்ந்த தமிழகம்;  வளம் ஆர்கின்ற தமிழகம்;  வளம் ஆரும் தமிழகம் என்று முக்காலத்திலும் வரும்.  அறிவார்ந்த விளக்கம் இதுவே.

ஆரிய என்பது இனப்பெயர் அன்று.  வெளிநாட்டான் எப்போதும் வந்துகொண்டிருப்பான்;  முன்னும் வந்தான். இப்போதும் வருகிறான்; இனிமேலும் வருவான்." வந்தவன் "  எல்லாம் அறிவாளி என்று ஒப்புவீரோ?  அவர்களில் எத்தனை அறிவாளிகள்?  எத்தனை மடையர்கள்?

ஆரியமும் ஆசிரியமும்.

ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும்.   எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக  ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது.  வாத்தியார் அறிவாளி என்பதை  ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி,  ஆசிரியறிவாளி என்றாக்கி,  அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி,  ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் நல்ல களிப்பாக்குமன்றோ?
ஆசிரிய மேதகை என்பதினும் வேறன்று  அது.

எழுத்துக்களைத் திருப்பிப்போடும் தந்திரம்

 பல சொற்கள் வெறும் ஏமாற்றுவேலைகளாகியுள்ளன என்று எண்ணத்தக்கவை யாகலாம், இவற்றில் எப்படி விளையாடியிருக்கின்றனர் என்று உணர்ந்தால் உலக முற்றுகாறும் ஆனந்தமாய் இருக்கலாம்.  எ-டு:  காவல் (கா)   ஆகும்  (ஆ)     இல்லம் (  இல் ) >   (திருப்பிப் போட்டு)  இல்+ஆ+கா =  இலாகா.  நடவடிக்கைகள் தொடருமாறு அத்தொடர்வினைக் காக்கும் இல்லம் : இலாகா. .   இது எந்த மொழிச்சொல் என்று கேட்டவன் மடையனானான்.  அவனை ஏமாற்றியவன் அறிவாளி,


*பிழைத்திருத்தம்.

பிழைகள் பின் திருத்தம் பெறும்.



வியாழன், 5 ஜூலை, 2018

ஆரூடம்.

இன்று ஆரூடம் என்பதென்னவென்று அறிந்துகொள்வோம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுடன் ஊடு, அம் என்ற பிற தமிழ்ச்சொற்களும் இணைந்து உருவான சொல்லே ஆரூடம் ஆகும்.  இவற்றுள் ஊடு என்பது துருவிச் செல்லுதல்போல புகுந்து செல்லுதலைக் குறிக்கும்.  ஊடகம் என்ற சொல்லில் இந்த ஊடு என்ற சொல் முன் நிற்பதை அறிந்திருப்பீர்கள்.  ஊடுருவுதல் என்ற சொல்லிலும் இச்சொல் இருக்கின்றது.

அம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாய் இருப்பதனால் அதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றோம்.

ஆர்தல் என்பதை அறியவேண்டியது அகத்தியமாகிறது.

நுகர்தல் அல்லது அனுபவித்தல்;
அன்புகாட்டுதல்
நிறைதல்
உண்ணுதல்
பொருந்துதல்
அடைதல்
குடித்தல்
ஒத்தல்
தங்குதல் 
அணிதல்

இதன் பிறவினை ஆர்த்தல் என்பது.  இது அணிதல், ஆட்டுதல், ஆரவாரம் செயல், ஒலித்தல். கட்டுதல் , பொருதல், பொருத்துதல், தொகுத்தல், ஒளிவீசுதல், மின்னுதல் என்றும் பொருள்தரும்.

மொத்தத்தில் ஆர் என்பது உயர்செயல்களைக் குறிக்கும்.  ஆரியர் என்ற சொல்லும் இதனின்று வந்ததாக பிற தமிழறிஞர் கூறியதுமுண்டு.

வந்தார், சென்றார் என்பன போலும் வினை முற்றுக்களில்  வரும் ஆர் விகுதி இச்சொல்லே ஆகும்.  ஒரு வினைச்சொல் விகுதி என்னும் தகுதி பெறுவதென்றால் அச்சொல் மொழியில் மிக்கப் பழமை தொட்டே வழங்கி வந்துள்ளது என்பது சொல்லாமலே புரியும்.  

ஆரியர் என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள "ஏரபல்"  என்ற சொல்லுடன் இலத்தீன்வழித் தொடர்புடையது என்று வரலாற்றாசிரியர் ரோமில தாப்பார் கருதுகிறார்.  ஏர்த்தொழில் தொடர்புடைய ஏர் என்ற தமிழ்ச்சொல்லும் ஆர் என்பதனுடன் தொடர்புடையதாய் இருந்தால் அதில் வியப்பில்லை.  ஏர்த்தொழில் ஒரு காலத்தில் மிக்க உயர்வானதாகக் கருதப்பட்ட தொழில். இதற்குக் காரணம் அது மக்களுக்கு உணவளிக்கும் தொழில். உணவின்றேல் மனிதர் மடிவர்.

ஆர் என்ற சொல் தரும் பல பொருள்களில் பொருந்துதல் அல்லது நிறைவு என்ற பொருளைக் கருதுவோம்.  ஆர  ( நிறைவாக ) ஊடு சென்று கண்டுபிடித்துச் சொல்லும் திறனே ஆரூடமாகும். ஆரூடத்திலுள்ள மூன்று  துண்டுச்சொற்களும் தமிழே ஆகும். உதாரணமாக வீட்டில் கெட்டுப்போன சாமான்`களை வைத்திருந்தால்  அவற்றிலுள்ள ஒரு மறைவான ஆற்றல் வெளிப்பட்டு நன்றாக இயங்குபவையும் கெட்டுப்போகும் என்பது ஆரூடம்.  இது சீனாவில் "ஃபோங்க்  ஸ்வே" என்று சொல்லப்படுகிறது.  இதைப்பற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. உங்கள் உந்துவண்டியின் கெட்டுப்போன பகுதிகளை அதன் பின்னடைப்பில் போட்டு வைத்துக்கொண்டிருந்தால் உங்கள் வண்டி மேலும் மேலும் கெட்டுப்போகும் என்பது  சொல்லப்படுகிறது.  இது மூட நம்பிக்கை என்று நீங்கள் நினைத்தால் நாலைந்து கெட்டுப்போன சாமான்`களை வண்டியின் பின்புறத்தில் போட்டுவைத்து ஓட்டிக்கொண்டிருங்கள்.  அடிக்கடி கெட்டுப்போனால் அது ஆரூடத்தில் ஏதோ உண்மை இருப்பதைப் புலப்படுத்தக்கூடும். இன்றிலிருந்து இதை நீங்கள் ஆய்வுசெய்யுங்கள். அப்புறம் முடிவு மேற்கொள்ளுங்கள். வீட்டில் மின்`குமிழ் எரிந்துவிட்டால் உடனே சிலர் மாற்றிவிடுவர். இதுதான் காரணம் என்று சொல்வர்.  கெட்டுப்போவதைச் சீர்ப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ஆரூட அறிவாளிகள் சொல்கிறார்கள்.  நாம் முற்றிலும் அறியாதவையும் உலகில் இருக்கக்கூடும் அன்றோ?   அம்மையார் ஒருவர், கோவில் பூசைக்காக நூற்றைம்பது வெள்ளிகள் கேட்டார். என்னையும் சேர்ந்துகொள்ளும்படி கேட்டார்.  நான் உடனே அதைக் கொடுத்துவிட்டேன். அது அப்படி இது இப்படி என்று சாக்குப்போக்குச் சொன்னால் நாளை ஒரு சளிக்காய்ச்சல் வந்து அது செலவாகிவிடத்தான் போகிறது.  ஆகும் என்பதுதான் ஆரூடம். நோய்க்குச் செலவிடுவதைவிட ஒரு பூசைக்குச் செலவிட்டால் நன்மை விளையும் என்பதும் ஒருவகை ஆரூடமே.  கடன்பத்திரங்களைச் சேமித்து வைத்துக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால் மேலும்  கடன்பல வரக்கூடும்.  இதுவும் ஆரூடமாகும்.

இப்போது ஆரூடம் என்பதை நன்றாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.இவற்றிலெல்லாம் சிந்தனை செலுத்தி அதை  ஓர் ஆய்வுக்கலையாக்கி உள்ளனர்.

எனவே  ஆர = நிறைவாக;  ஊடு = உள் நுழைந்து மறைந்துள்ள ஆற்றல்களை;  ----அறிந்துகொள்வதே ஆரூடம் .  அம் விகுதி என்பது முன்னரே சொல்லப்பட்டது. 

வீழ்ச்சி வருவதாயின் அது வரத்தான் செய்யும். சில முன்னறி குறிகளைக் கண்டு அவற்றை விலக்கிக் கொள்வது அறிவுடைமையே ஆகும்.

சில பொருள்கள் நிறைவலைகளை ஏற்படுத்துகின்றன;  சில பொருள்கள் அழிவலைகளை ஏற்படுத்துகின்றன.  இவை கண்காணா அலைகள். இப்போது இவற்றை உணரத்தான் முடிகிறது.  பின்னொரு காலத்தில் கண்டுபிடித்துப் பயன் பெருக்கும் அறிவை மனிதர்கள் அடையக்கூடும்.  யான்  அறியேன். இன்று நாமறிந்துள்ள பலவற்றை ஆயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்த மனிதர் அறிந்திருக்கவில்லையே.


புதன், 4 ஜூலை, 2018

கம்மல் கம்மி என்பன கருமைத் தொடர்பு

வானம் கம்மலாக இருக்கிறது என்பதைப் பேச்சுவழக்கில் நீங்கள் எதிர்கொண்டிருக்கக் கூடும்.  கம்மல் என்பது ஒரு காதணியையும் குறிக்குமென்றாலும் இன்றைய நம் பார்வை அது பற்றியதன்று,  மழை வரும்போல் தோன்றுகிறதென்பதற்குக் கம்மல் என்பார்களே அதையே இங்கு எடுத்துக்கொள்கிறோம்.

சிறிது இருட்டிக்கொண்டிருப்பது போன்ற நிலை ;  அதாவது கருமேகங்கள் மூடி வானம் ஒளிகுறைந்த நிலை.  அதுவே கம்மல் ஆகும்.

இதற்குமுன் வந்த இடுகைகளில் கரு என்பது கம் என்று திரிவதை உரைத்துள்ளோம்.  ருகர மறைவை அறிந்துகொண்டோம்.

கருங்கண் >  கருங்கணம் > கங்கணம் என்று திரிந்தமை போல,  கம்மல் என்பதும் கரு என்று தொடங்கும் ஒரு சொல் திரிந்ததனால் ஏற்பட்டதே என்பது தெளிவு.

கரு > கருமல் > கம்மல் என்றாகிறது.

பண்டைத் தமிழ்ப் பேச்சில் வானம் கருமைகொள்வதைக் கருமல் என்று கூறினர் என்பதை ஆய்ந்து தெளிந்துகொள்ளலாம்.  பேசியோரும் மறைந்து அவர்கள் எப்படிப் பேசினர் என்பதும் மறைந்துவிட்ட நிலையில் நுட்பங்களை நுணுகி ஆய்ந்துதான் தெரிந்துகொள்ளமுடியும்.

வட்டக்கரிய விழி ---- கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ

என்ற பாரதியின் பாட்டில் வானக் கருமை குறிப்பிடப்படுகிறது.

கம்மல் என்பது ஒளி வீசிக்கொண்டிருந்த நிலை மாறி, வானம் கருமை கொண்டு மாறுவதைக் குறிக்கும்,

கம்மி என்ற  சொல்லும் தொடர்புடையதே.  முதலில் இது ஒளி குறைந்த நிலையைக் குறிக்க வழங்கிப் பின்னாளில் பொதுவான குறைவைக் குறித்ததென்பதை அறிந்துகொள்ளலாம்.

கரு என்பதே கம் ஆகும்.

கரு+ ம் + அல்  =  கருமல் > கம்மல்.

மல் என்பதைச் சொல்லிறுதியாகக் கொள்வதில் தப்பில்லை. அது ஆய்வினை எளிதாக்கும் என்பதை உணரலாம்,

மான் என்ற ஆண்பால் சொல்லிறுதியும் இப்படி அமைந்ததே ஆகும்.

பெரு + ம் + ஆன் =  பெருமான்.     இய  + ம்  + ஆன் =  இயமான் > எசமான் > எஜமான்.
இயக்கும் திறமுடையோன் ஆதலின் இய என்ற சொல் பயன்  கண்டது.  இய> இயவுள் என்பது காண்க.

மான் என்பது ம்+ஆன் என்பதே;  ம் தொடர்புறுத்த வந்த இணைப்பு ஒற்று ஆகும்.  ஆன் என்பதே ஆண்பால் விகுதி.  ஆனாலும் மான் என்பதோர் இறுதி எனக்கொள்ளுதலில் பெரிய தவறொன்றுமில்லை.

கம்மல் என்பதில் இறுதி விகுதி அல் என்பதே.   கம் என்பது பகுதி என்பதினும் கரு என்பதே பகுதி என்று உணர்தல் தெளிவு ஆகும்.

கஞ்சன் என்பதும் கரு என்பதனடிப் பிறந்த சொல்லென்பது முன் இடுகையில்
கண்டு உவந்தோம்.