ஞாயிறு, 20 மே, 2018

தென்றல், வாடை.

தென் திசையிலிருந்து வீசும் காற்று  தென்றல் எனப்படுகிறது.  இது இந்தியத் துணைக்கண்டத்திலுள்ளோர்க்கு மிகுந்த இன்பம் விளைவிப்பது என்பது பல பாடல்கள் உரைகளிலிருந்து நாம் தெரிந்துகொண்டது ஆகும். தென்றல் என்பதற்கு நேரான சொல் ஆங்கிலத்திலோ மலாய்மொழியிலோ இல்லை.  ஆனால் இனிய காற்றின் வீசுதலைக் குறிக்கும் வேறு சொற்கள் பிறமொழிகளில் இருக்கும்.  தட்பவெப்ப்ப நிலையும் காற்று போம் திசையும் புவியின் எல்லா இடங்களிலும் வேறுபடுகின்றன. இதேபோல்  சீனாவில் வீசும் காற்று வகைகளுக்கு உள்ள பெயர் தமிழில் இல்லை.

தென்றல் என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதானால்  த சதர்ன் ப்ரீஸ் ஃபரம் த சௌத் வெஸ்ட் மன்சூன் இன் ஜூன் -  செப்டம்பர் பீரியட் (   the southern breeze from the south west monsoon in June -  September period  )என்று சொன்னால்தான் பொருந்துவதாகத் தெரிகிறது.

இதேபோல வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை எனப்படுகிறது. இச்சொல் அமைந்தது எப்படி?

வட > வடக்கு.
வட >  வட+ ஐ = வாடை.

இந்த வாடை என்னும் சொல்லானது  முதனிலை திரிந்து  -  அதாவது பல சொற்களில்போல நீண்டு -  ஐ என்னும் விகுதி பெற்று "வாடை" என்றாகி இருக்கிறது.  இறுதி அகரம் கெட்டது.   இறுதியில் நிற்கும் எந்த உயிரெழுத்தும் கெடும் அல்லது மறையும். ( எ - டு  : படி + அம்  = பாடம் ,  அறு + அம்  =  அறம் )( இங்கு இ உ முதலிய உயிர்கள் மறைந்தன ) .  அப்படிக் கெடாமல் இருக்குமாயின் வடவை, வடயை, வாடவை, வாடயை என்று எதாவது பொருத்தமான ஒன்று வந்திருக்க் வேண்டும்.  அவை எதுவும் பொருந்தாமையினால் வாடை என்ற அகரம் ஒழிந்தமைந்த சொல்லே மொழியில் வழங்குவதாயிற்று. உடம்படு மெய்கள்   ( யகர வகரங்கள்  )  எவையுமின்றி நீண்டமைந்து நன் `கு உருவெடுத்துள்ளது.

ஆனால் வாடை என்பது வடக்குக் காற்றை மட்டும் குறிப்பதாக இல்லை.  அது ஒரு கெட்ட வீச்சத்தையும் வழக்கில் குறிக்கிறது.  அது வடக்கு என்னும் சொல்லிலிருந்து வந்த சொல் அன்று.  அது அமைந்தது பின்வருமாறு.

வாடிப்போன இலை தழைகள்  நீரில் நனைந்து அழுகத் தொடங்கிவிட்டால் அது ஒருவித  வீச்சத்தை உண்டுபண்ணுகிறது.

வாடுதல்.  ( சற்றே நீர் வற்றிப் போவது ).
 வாடு :   கருவாடு:   மீன் காய்ந்து வாடி உப்பிட்ட உணவு. சிலர் உண்பர்.
(  இது முதற்குறைச் சொல்).
வாடு + ஐ =  வாடை.
நீர் வற்றிய -  காய்ந்த மரம் செடி கொடி விலங்குடல்கள் எழுப்பும் வீச்சம்.

வாடை என்ற வடக்குக் காற்று வேறு.
வாடை என்ற வீச்சம் வேறு.
இருவேறு தோற்றத்தின ஆகும்.


ஊழல் வேண்டுமோ? தூய்மை வேண்டுமோ?


(கலிவெண்பா )

ஊழலை முன்வைத்து  வாழ்வ  தெலியது
பாழுடை வீடெனில் கொள்வது துள்ளலே!

ஓட்டைகள்  போட்டுமே  மாட்டுவ தின்றியோர்
கோட்டையில்  போல குதூகலம் கூட்டுதல்..

நாட்டிலும் ஆதிறம் நாடிடு  மாந்தர்கை
யூட்டி னில்  ஓங்குதல் எங்கும்கண்  கூடு்ணர்!

 சட்டப்  படிவழிக்  கிட்டா  உரிமமே
கொட்டிக் கொடுத்தால் வசதியே கிட்டுதல்.

ஊழல்  வளாகத்தும் நன்மை உளதெனில்
வாழும் நலம்பெற வாய்ப்புறா  ஊழல்.

திறமொன் றிலாதார் பெறுவர்  முனைவர்
திறமுடை யோர்கீழ் இருப்பவர் காண்கவே..

ஊட்டினைப் பெற்றோரும் ஓட்டுவர் காலமே
காட்டில்  விலங்கென நாட்டிடும்  ஆட்சியே.

ஊழலைப் போற்றுவோர் பாதி உலகினில்
வாழ்முறை போற்றுவோர் பாதி உளரிவண்,

ஊழலும் ஆங்காங்கு வெல்லுமே ஓங்கிட
யாழிசை மீட்டுவர்  மூளை இலாதவர்.

ஈற்றினில் வீழ்ச்சியோ காற்றில் நெருப்புபோல்
கூற்றினை  ஆக்கும் குறிதவ றாதே.

கறுப்ப்புப் பணத்தை வெறுப்பவர் உண்டு;
கறுப்புப் பணத்தொடு  வாழ்பவர் உண்டுகாண்

ஊழல் இலாமை  உயர்பவர்  ஆயினோ
ஆழ்ந்தநற் சிந்தையர் போற்றுக  அஃதினை;

வெற்றி  கருப்புப்  பணத்தவர் பெற்றிடில்
சற்றும் அதனை   ஒழிகவே  .ஒற்றுதல்

உண்மை உலகினில் வெல்க  அதுகொண்டு
வண்மை பெறுமே உலகு.


Will edit and make some changes later.You may
enjoy this poem for now and you may
give your critical appraisal.




 
 



சனி, 19 மே, 2018

ளகர லகர ஒற்றுக்கள் விடுபடல்.

ஆள் என்ற சொல்லை நாம் இங்கு சிலமுறை ஆய்வு செய்துள்ளோம்.  இன்று அதை வேறு கோணத்தில் ஆய்கிறோம்.

கண்டாள். வந்தாள்,  சென்றாள் என்று வருவன அனைத்தையும் வாழ்மொழியாய் உதிர்க்கும்போது  கண்டா.  வந்தா,  சென்றா என்று பலர் பேசுகின்றனர். அவ  ஆடுவா,   ஆனா நல்லா இல்ல என்கின்றனர்.

இதில் நாம் காண்பது யாதெனில்  இறுதியில் வரும் ளகர ஒற்றினைப் பலரும் உச்சரிப்பதில்லை. இப்படிப் பேசுதல் தமிழருக்கு இயல்பாகும்,  வேறு மொழிகளைப் பேசும்போது இறுதியில் வரும் ரகர ஒற்றினை விட்டுப் பேசுதல் என்பது சீனர்களிடையே இயல்பாக உள்ளது.

இப்படி இறுதி ஒற்றினை விட்டுப் பேசினாலும்  (   எ-டு:  அவள்  - அவ),  ஆள் என்ற சொல்லைத் தனியாக உச்சரிக்கும்போது  ஆள் என்பதை ஓர் உகரம் சேர்த்து ஆளு என்று நீட்டிக்கொள்வது பழக்கம். ஆக ளு என்பதில் இறுதி உகரம் சாரியையாக நிற்கிறது.

ஆள் என்பது பெண்பால் விகுதியாய் வருவது ஒருகாலத்தில் பெண்கள் குடும்பங்களில் மேலாண்மை செலுத்தியதைக் காட்டுவது என்பதை யாம் முன்பே கூறியுள்ளோம்.

அவாள் இவாள் என்பது  அவ்  ஆள்  இவ் ஆள் என்பதன் குறுக்கம்.  சிலர் இங்கும் ளகர ஒற்றினை விட்டுவிடுவது இயல்பு.

முட்டாள் என்ற சொல்லிலும் ளகரத்தை விட்டுப் பேசுதல் இயல்பு.

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவ ராயா காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவராயா

என்று பாடலில் வரும்.

முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே

என்ற கண்ணதாசனின் வரியிலும் ளகர ஒற்று விடப்பட்டுள்ளது.

லகர ஒற்றும் இவ்வாறே விடுபட்டுப்  போவதைக் காணலாம்.

அத விட்டா வேறே  வழி என்று பேசும்போது  விட்டால் என்பது
விட்டா என்று வருகிறது.

போனால் போகட்டுமென்பது போனாப் போகட்டும் என்று வரும்,