வியாழன், 22 பிப்ரவரி, 2018

அதுள் > அதுர் > சதுர். சதுரம்



சதுரம் என்ற சொல்லுக்கு “ நாற்கோணம்”  என்று தனித்தமிழிற் சொல்லலாம்.  கோணம் என்பதும் நல்ல தமிழ்ச்சொல்லே ஆகும்.  நேராக வந்து திரும்பிச் செல்லுவதால் , அதாவது கோணிக்கொண்டு செல்வதால் அது கோணமாயிற்று.

சதுரம் என்பதில் கோணத்திற்கான எந்தக் கருத்தும் அமைந்திருப்பதாகத் தெரியவில்லையே; எப்படி இது நாற்கோணம் என்று பொருள்படுகிறது என்று ஆராய்வோம்.

நிலத்திற்கு நாற்புறமும் வேலியமைக்கும்போது அது சதுரமாக அமைவதுண்டு. சதுரத்திற்கு நான்`கு பக்கங்களும் ஒதத நீளமுள்ளவையாய் இருக்கவேண்டும்.  ஒருபக்கம் நீட்டமாகவும் இன்னொன்று குட்டையாகவும் இருப்பதை இப்போது சதுரம் என்பதில்லை.  பழங்காலத்தவர் எவ்வாறு கருதினர் என்பது தெரியவில்லை. ஆனால் இந்தச் சொல் அமைந்த காலத்தில் ஓர் எளிமையான கருத்தினடிப்படையில் படைக்கப்பட்டு,   நாளேற நாளேறப் பிற கருத்துகளால் பின்னப்பட்டுச் சொல் அமைந்தது.  எடுத்த எடுப்பிலேயே பல கருத்துகளும் பின்னியமைந்த சொற்களைச் சொல்லியலில் காணபது அரிது.

நாற்புறமும் வேலி அமைக்கப்பட்டவுடன் நிலம் அதனுள் அடங்கிவிடுகிறது.   ஆடுகளுக்கோ அல்லது கோழிகளுக்கோ அடைப்பு அமைப்பதானாலும் நாற்புறமும் தடைகளை அமைத்து  அவை ஓடிவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள்.  அவை அதனுள் இருந்துவிடும்.

கருத்து:  அது, உள் என்ற இரண்டுசொற்களிலே அமைந்துவிடுகிறது.  அது என்பது அடைப்பையும் உள் என்பது அடைக்கப்பட்ட பொருளையும் குறித்தாலும் இந்த நிலைக்கு வழிசெய்தது நாறபுறமும் இருக்கும் அடைப்புகளே ஆகும்.

அது + உள் என்பது  அதுள் என்று குறுகிற்று. இரண்டு உகரங்களில் ஒன்று வீழ்வது இயல்பு.

உள் என்பது பின் உர் என்று திரிந்தது.

அது என்பது சது ஆனது. இது அகர வருக்கம் சகர வருக்கமாகும் திரிபு.

அதுள் > அதுர் > சதுர்.

இஃது அம் விகுதி பெற்றுச் சதுரம் ஆயிற்று.

பெரும்பாலும் லகரமே ரகரமாகத் திரியும். எனினும் ளகரமும் லகரமும் ஓரினமானவை ஆதலின்,  இரண்டுமே பொருந்தியவிடத்து ரகரமாகத் திரிதற்குரியவை.

இதையே ஆயுர்வேதம் என்ற சொல்லிலும் காணலாம்.

ஆயுள் -  ஆயுர்.

வேய்+து+ அம் =   வேதம்.

ஆயுளைக் காத்துக்கொள்ளற்குரிய வழிமுறைகளைக் கூறும் நூல்.   வேயப்பட்டது அல்லது செய்யப்பட்டது.

ஒரு சதுரம் நாற்புறத் தடைகளால் பொருளை உள்ளடக்கிவிடுகிறது.  இதுவே சொல்லமைப்புக் கருத்து.  நான்`கு பக்கங்களும் ஒத்திருக்கவேண்டுமென்பது  பின்னர் அடைந்த கருத்து வளர்ச்சி ஆகும்.




   

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

சதிர் என்பதன் சொல்வளர்ச்சி.



நள் > நடு என்பதினின்று வளர்ந்த சில சொற்களை நாம் முன் 
இடுகையில் கண்டு உவந்தோம்.   

அதேதொடர்பில் சிலவற்றை இன்று தெரிந்துகொள்வோம்.

தமிழில் நடு,  நடுங்கு, நட என்பன மிகப் பழங்காலச் சொற்களாகும்.   ஆடை நெய்வதற்கு அறியாமுன் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த முந்தியல் மாந்தன், இலை தழைகளைக் கோத்து அணிந்துகொண்டு குளிரால் நடுங்கியிருப்பான் என்பது கற்பனையன்று.  இந்த வேதனையை மாற்றுவதற்கே அவன் அரிதின் முயன்று ஆடைகளை உருவாக்கினான்.  இன்றோ உடைநாகரிகம் என்பதுபற்றிப் பேசுவதற்கு நமக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

இதேபோல் மிக்கப் பழமையிலே அவன் நடத்தலைக் கற்று வல்லவனாய் இருந்தான் என்பதும் கற்பனையன்று.  ஒரு குறிப்பிட்ட அகவையை அடைந்தவுடன் குழந்தை நடக்கத் தொடங்கிவிடுவதால் நட என்பதும்  ஒரு முந்தியல் மாந்தனின் சொல் என்பது அறியப்படும்.  ஊர்திகளைக் கண்டுபிடிக்கா முன் அவன் எங்கும் நடந்தே திரிந்தான்.

கருத்தறிவிப்பு வளர்ச்சி:

ஒருவன் குளிரால் நடுங்கினான் என்பதைத் தெரிவிக்க அதேபோல் நடுங்குதலைச் செய்துகாட்டத் தொடங்கியபோதே நடிப்பு என்பது தொடங்கிவிட்டது.

அதேபோல சிலர் அழகாக நடந்தனர்.  ஒருவனின் நடை சிறப்பான அசைவுகளுடன் அமைந்திருந்ததை இன்னொருவனுக்கு அறிவிக்க நேர்ந்தபோதே நட என்பதிலிருந்து நடனம் என்பதும் தொடங்கிவிட்டது.

ஒருவன் செய்ததுபோல இன்னொருவனுக்குச் செய்துகாட்டியபோதே நடிப்பும் தொடங்கிவிட்டது. இதில் என்ன சிறப்பு என்றால், சிலரே இப்படிச் செய்துகாட்டுவதில் வல்லவராய்த் திகழ்ந்தனர்.  இதுவும் கருத்தறிவிப்பில் ஒரு
வளர்ச்சிநிலையே ஆகும்.

நடு> நடுங்கு என்பதுடன் நடிப்பின் தொடர்பு:
தமிழின் தொல்பழமைச் சான்று:


சொல்லமைப்பைப் பொறுத்தவரை,  நடப்பதிலிருந்தும் நடுங்குவதிலிருந்தும் நடிப்பு, நடனம் முதலியவை தோன்றின.  இன்றும் தமிழில் நடனம், நடிப்பு, நாட்டியம் முதலியவை  நடு என்ற மூலத்துடன் தொடர்பு காட்டிக்கொண்டிருப்பது தமிழின் தொல்பழமையை விளக்கிக்கொண்டிருக்கிறது.

நடு > நடுங்கு.
நடு > நட
நடு > நடி.
நடு > நடு+ இயம் =  நாட்டியம். (முதனிலை திரிந்து விகுதிபெறுதல்).

முதனிலை திரிதல்:  ந என்ற முதலெழுத்து நா என்று நீளுவதன்மூலம் திரிந்தது.  விகுதி : மிகுதி -  சொல்லின் நீட்சி.
( நடி+ இயம் =  நாட்டியம் எனினுமது).
நடு+ அன்+ அம் =  நடனம்.  ( நடி+அன்+அம் = எனினுமது).


நடு> நடு+ஆங்கு+அம் = நட்டுவாங்கம்.

இத்தகைய சொற்கள் உண்மையில் கருத்துச் சுருக்கங்கள்:  “அங்கே ஆடிக்கொண்டிருக்கிறார்கள் “ என்பதே கருத்து.

நடு என்பது நட்டு என்று இரட்டித்தது.   இது இங்கு வந்த திரிபு.  ஆங்கு என்பது வாங்கு என்று வகர உடம்படுமெய் பெற்றுத் திரிந்தது.   இதில்  ஆங்கு
என்பதை ஆ + கு என்றும் பிரித்துரைக்கலாம்.  ஆ - சுட்டு, அங்கே என்பது.  கு என்பது சேர்விடம் குறிக்கும் ஓர் உருபு.   இங்கு ஆ என்பதனுடன் இணைந்து
நின்றது.   இறுதி விகுதி அம் என்பது.

இன்னோர் ஆய்வாளர் வந்து நட+அன்+ அம் எனினும் அதேதான்.  நட என்பதும் நடு என்பதிற் பிறந்த சொல்தான்.  எனவே இதுவுமது.

நடு > நடு+அன்+ ஆர் =  நட்டுவனார்.
“ஆட்டத்துக்கு அவர்” என்பது கருத்து.( சொல்லமைப்புப் பொருள் ) அவர் நடன ஆசிரியர் என்பது வழக்குப் பொருள்.  காரண இடுகுறி ஆகிறது.

காரணம்:  ஆட்டம்.
இடுகுறி:  ஆசிரியர்.  ( என்றால் அது உலகவழக்கில் நடனஆசிரியனுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது) எனற்பாலது பொருள்.

அசைவுக் கருத்துகள்:

உடலை நடுக்கிக் காட்டுவதும் ஒரு நாட்டியம் அல்லது நடனமே.  நோயினால் நடுங்குவதுபோல் செய்வதும் ஒரு நடிப்பே. மொத்தததில் இவை அசைவுச் சொற்களே. A transformation in word formation.

சதிர் என்ற சொல்லும் இங்கனம் அமைந்ததே ஆகும். ஆடும்போது உடல் அதிர்ந்து  அசைவுகள் உருவாகின்றன. இவ்வசைவுகள் நேரப்பகவுகளை ஒட்டி முறைப்படுத்தப்பட்டு வெளிக் கொணரப் படுகின்றன.  ஆகவே இதுவே நடனம், நாட்டியம், நட்டுவாங்கம் ஆகின்றது.   பெரும்பாலும் இவ்வசைவுகள்  இசையுடன் ஒருங்குசெல்கின்றன.

முறைப்பட்ட அதிர்வுகள் சதிர்.

ஆகவே அதிர்தல் முறைப்படுத்தப்படுகிறது. அதுவே சதிர் ஆகிறது.   அதிர் > சதிர்.
சதிர் என்பது முறைப்பட்ட அதிர்(வு).
நடனம் என்பது நடு> நடுங்கு என்பதுடன் தொடர்பு உடைமை போலவே இதுவும்.

பொதுவாக எல்லாம் அசைவுகளே.

சிறப்பியல்பில் வேறுபடுவன.  ஆயினும் மொழியில் சொற்படைப்படைப்பில் பொதுவிலிருந்தே சிறப்புக்குச் செல்வது காணலாம்.

அகர வருக்கம் சகர வருக்கமாம் என்பது முன்னர்
நிலைநாட்டப்பட்டது.  பழைய இடுகைகளை நல்லபடி
வாசித்துக் கற்றுக்கொள்ளலாம்.

அடிக்குறிப்புகள்.
இந்த இடுகையில் வந்துள்ள அருஞ்சொற்களுக்கான
விளக்கம்:

முந்தியல் மாந்தன் - primitive man
உடைநாகரிகம் - fashion of apparel.

Note:  Some extra dots  and changes (errors )
introduced by  hackers after posting  have
been rectified.  These may reappear.
Pl read with caution. Inconvenience regretted.


திங்கள், 19 பிப்ரவரி, 2018

அன்னை நோய்...(யாப்பியற் குறிப்புகளுடன்)



அன்னைக்கு நோய்கண் டதனால் மருத்துவர்
தம்மைப் பலமணிக்கூ றண்மியே ==  எண்மையொடு
யாம்பரிய நின்றோமே  யாதும் செயலறியத்
தீம்பெரிய தேவுபணிந்  தோம்.


அடிக்குறிப்புகள்:

அன்னை -  தம்மை எதுகை

அகரமும் தகரமும் ஈண்டு மாத்திரையில் ஒத்தன.  
இரண்டாம்  எழுத்தாகிய  னகரமும் மகரமும் 
ஒன்றினவாகவே  கொள்ளவேண்டும். ஏனெனில் 
னகரமும் மகரமும் போலியாவன.  எடுத்துக்காட்டு: திறம் -
திறன்.  போலி எதுகையாகிறது எனலாம் என்றாலும் மூன்றாம் 
எழுத்தாகிய ஐகாரம் ஒன்றுகிறது.  எனவே எதுகையில் 
கேடொன்றுமில்லை  யாகிறது. இவ்வெதுகை நிற்பதே.

அன்னைக்குத் தன்னை எதுகையானால் ஒருமை
பன்மை மயக்கமாகும்.  எனினும் பலர் அப்படி
எழுதுவர்.

அன் :  றண் : எண் என்று ஒருவாறு ஒன்றுவதுடன்
மகர மிகர மைகாரங்களும்  ஒன்றி நயம்தருவனவாயின. 


யாமுருகி நின்றோமே  யாதும் செயலறியத்

யாமுருகி என்பதும் பொருந்தும் சீர்தான்.  தீம்பெருகு
என்னும் சீருக்கு எதிராக நிற்கும் தகுதி உடையதே
ஆகும். இதையே முதலில் பெய்து பாடியிருந்தோம்.
இருப்பினும் யாம்உருகி என்பது  அப்படியே நில்லாது
புணர்ச்சி இலக்கணத்தின் காரணமாக யாமுருகி
என்று  கலந்துவிடுகின்றது. இதனால் பாதகம்
ஒன்றுமில்லைதான்.  என்றாலும்:

இதற்குப் பதிலாக "யாம்பரிய" என்று பாடினால்
பொருந்தும் என்பது எம் துணிபு.  பரிய என்பது
நான்காவது சீரில் வரும் செயலறிய என்பதுடன்
ஓர் நயம் பயக்கின்றது.  யாம்பரிய :  செயலறிய என்று
இரண்டிலும் உள்ள இறுதி அசைகள் ஓர் ஒன்றுதலைத்
தருவனவாகின்றன.

 தீம்பெருகு தேவுபணிந்  தோம்.

இதுவே இறுதியடியாய் இருந்தது.  இதை "தீம்பெரிய 
தேவுபணிந்  தோம்"  என்று மாற்றினால் இன்னும்
இனிய நயம் உண்டாகுமே என்று தோன்றியது.  
இங்ஙனமே  இறுதிவடிவம் தரப்பட்டது.

கவி பாடுங்கால் ஓசைநயத்தையும் பாடுவோன்
கவனிக்கவேண்டியுள்ளது.

எத்தகு சொற்களால் புனைதல் அழகு என்பது
கவிபாடுவோன் தானே தீர்மானித்தற்குரியதே.
இதைக் கேட்போனுடன் பகிர்ந்துகொள்வது
அரிது.  எனினும் ஈண்டு பகிர்ந்துகொள்வோம்.
நீங்களும் அறிந்துகொள்ளலாம்.

அரும்பொருள்

பலமணிக்கூறு :  பலமணி நேரம்
அணிமியே -  நெருங்கிச் சென்று
எண்மை -  எளிமையுடன்,
பரிய -  இரங்கலுடன்; மனமிரங்கிய நிலையில்.
தேவு -  கடவுள்;  தேவன்.