சனி, 17 பிப்ரவரி, 2018

பாடம், நெட்டுரு, மனனம், எதுகை,மோனை



மறதிக்கு எதிரான போராட்டம்:

பண்டை மக்கள் மறதிக்கு எதிராகப் ஒரு பெரும் போராட்டமே நடத்தவேண்டி யிருந்தது.  ஒரு பாடலைப் பலமுறை வாயாற் சொல்லி அதனை நெட்டுருச் செய்தனர் கல்வி கற்பவர்கள். அப்பொழுதுதான் பாடல் மனத்திற் பதிந்தது. இதை “  மனப்பாடம் “ என்றனர்.   மனத்திற் படிவதுதான் மனப்பாடம்.   படி+ அம் = பாடம்.  படி(தல்) வினைச்சொல்.  இது முதனிலை (முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்றது.  படி என்பதன் இறுதி இகரம் தொலைந்தது.  கெட்டது  என்பது இலக்கணச் சொலவு ஆகும்.

பாடம் என்பது மனத்திற் படியச் செய்யும் கருவியாகும்.  செந்தமிழும் நாப்பழக்கம் என்பது இதைத்தான் குறிக்கிறது. நாவினால் பலமுறை சொல்ல வேண்டும்.  சித்திரமும் கைப்பழக்கம் என்பதற்கு இது முரணழகு தருகிறது.

படிதல், படித்தல், வாய்பாடு முதலியன

படிதல் என்பது தானே சொல்லச்சொல்ல மனத்துள் படிவது.  படித்தல் என்பது படிதல் என்பதன் பிறவினை.  படித்தலாவது படியும்படி செய்தல். இரண்டுக்கும் படி என்பதே வினைப்பகுதி அல்லது ஏவல்வினை ஆகும்.  படி என்ற சொல் படு என்ற மூலவினையினின்று வருகிறது.

படு > படி.    படுதல்> படிதல். படித்தல்.

படுதல் என்ற சொல்லும் படுதல் (தன்வினை) ,  படுத்தல் (பிறவினை) என வருதல் கண்கூடு

பாடுதல் என்ற வினையும் படுதல் என்பதில் தோன்றியதே ஆகும்.  வாயிற்படு முகத்தான் வெளிப்படுவதே பாடல்,  அது பாடுவது.

எண்சுவடி முறையில் பெருக்கல் வரிகளை வாயில்பட மனப்பாடம் செய்கிறோம். அதுவே “வாய்பாடு”  ஆகும்.    வாயிற்படிந்து மனத்திலும் சென்று கணக்குப் படிகிறது.  வாய்படுதல் > வாய்பாடு.   படு> பாடு:  முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.

நடு > நடி போலவே படு> படி என்பதும்.   இத்தகைய அனைத்தும் ஒப்புமையாக்கமாகும்.  நள் என்ற அடியை விளக்கும் இடுகையை 2 நாட்களின் முன் வெளியிட்டுள்ளோம்.

நெட்டுருச் செய்வதை மன்னம் என்றும் சொல்வர்.

நெடு+ உரு = நெட்டுரு.

( நீளமாக உருப்போட்டு மனத்துள் அமைத்தல்)
மனம்> மனன்  >  மனன்  + அம் =  மன்னம்.   மனத்தில் அமைத்தல்.

திறம் > திறன்  போல மனம் > மனன்  ஆகும்.  மகரனகரப் போலி.
மன்னுதல்:  நிலைபெறுதல்.  எண்ணங்கள் நிலைகொள்ளுமிடம் மனம்.
மன்+அம் =  மனம்.

முன்னுதல் என்பது மன்னுதல் என்று திரிந்ததென்பர்.

மறதியை மாற்ற:

இன்று பாடலுக்கு அழகுறுத்துதலாக எண்ணப்பெறும் எதுகை, மோனை, தளை, தொடை முதலியவும் மறதிக்கு எதிரான போராட்டத்தின்  விளைவே
ஆகும்.

மறதி என ஒரு பாவி என்று உருவகப்படுத்தினார் வள்ளுவனார்.  மறதியை எதிர்த்துப் போராடப்போன மனிதகுலம் இன்று கணினிவரை வந்துவிட்டது.
வேறுபயன்`களும் இதில் விளைந்துள்ளன.

மீண்டும் சந்திப்போம்.

சமஸ்கிருதப் பாடல்கள் மறைந்தன பல

சென்ற இடுகையிலிருந்து தொடர்வோம்.



அழிந்துபோன நூல்களும் பாடல்களும்

தமிழில் பல நூல்களும் பாடல்களும் அழிந்தன.  இங்கனமே சமஸ்கிருதத்துக்கும்  பல பாடல்கள் எட்டாதொழிந்தன. இதற்குக் காரணம் இறைவனைப் பாடித் துதித்தவர்கள் தம் பாடல்களை எழுதவில்லை.  அவற்றை வாய்மொழியாகவே பாடினர்.  அத்தகைய பாட்டுகள் ஏராளமிருந்தன. வேதவியாசன் உருக்கு வேதமென்ற பெயரில் இவற்றைத் தொகுத்தபோது  அத்தொகுப்பில் அகப்பட்டவை போக மற்றவை அழிந்துபோயின.  இவை எத்துணை இருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.  இவற்றை மீட்க எவ்வழியும் இல்லை.

திருவள்ளுவர் திருக்குறள் இயற்றிய காலத்தின் பின்னரே உருக்குவேதம் தொகுக்கப்பட்டது. பாடல்கள் தோன்றி வழங்கிவந்த காலம் வேறு; அவை தொகுக்கப்பட்ட காலம் வேறு. 

இதற்குச் சான்று.  திருவள்ளுவமாலை 23வது பாடலில் வேதத்தைச் செய்யாமொழி என்று வெள்ளிவீதியார் என்ற புலவர் குறிப்பிடுவது ஒன்றாகும்.  செய்யா என்பதற்கு தொகுப்பாகக் கோவை செய்யாத என்று பொருள். மனிதன் செய்யாத அல்லது கடவுள் செய்த என்று பொருள்கூறுவோருமுண்டு.  பின்னர் அவை கோவை செய்யப்பட்டன. இக்காலத்துக்கு முன்னும் சமஸ்கிருதம் என்ற சொல்லால் குறிக்கப்பெறும் மொழி இருந்தது ஆனால் எழுத்தில் இல்லை.

இதனால் பாணினியின் இலக்கணமும் வாய்மொழியாகவே இலங்கிற்று.

குறுந்தொகையிலும் எழுதாக் கிளவி எனற தொடர் உள்ளது.  இப்பாடல்கள் (குறுந்தொகை )  எழுந்தபோதும் அது  (சங்கதம் )  எழுத்தில்லாத மொழியாகவே இருந்தது.

திருவள்ளுவமாலையில் இன்னொரு பாடலும் இதையே தெரிவிக்கிறது:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்தேட்டின் புறத்தெழுதார் --- ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர்  வின்று
(தி-மாலை, . 15)

மந்திரங்களுக்கு பலுக்குமுறை முன்மையானதாகும்.  
 பிழைபடப் பலுக்குதலால் மந்திரம் பலனின்றி முடியும்.  
 ஆதாலால் எழுத்தில் எழுதி அவற்றைக் 
கெடுக்கலாகாது என்பதே எழுதிவைக்காமைக்குக் 
காரணம்.  ஆனால் பல மறக்கப்பட்டு 
மீட்சியின்றி மறைந்தபின் இக்கொள்கையை
 மாற்றிக்கொண்டு எழுத்துக்களால் எழுதிவைத்தனர்.


  



:


வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கவிபாடத் தெரியாதவன் தப்படிக்கலாம்.....பழமொழி!



இன்று சதிர் என்ற சொல்லைத் தொட்டுறவாடி மகிழ நினைத்தேன்.

ஆனால் இதைச் செய்யுமுன் ஓர் உண்மையை நாமுணர்ந்து கொள்ளல் நலமாகும். அந்த உண்மை காலக்கழிவு பற்றியது.  தமிழ்மொழியின் நீண்ட வரலாற்றில் எழுதப்பட்டவை பலவாகும்.  சங்கப்புலவர் சிலர் பெயரால் ஒரே ஒரு பாட்டுத்தான் கிட்டுகிறது.  அந்த ஒரு பாட்டை நல்லபடியாக ஆய்வு செய்து அறிந்துகொண்டால் ஓர் அயிர்ப்பு உருவாகிறது.  இத்தகைய இனிய செந்தமிழில் பாடிய அந்தப் புலவர், ஒரே ஒரு பாட்டுமட்டுமே பாடினாரா என்பதுதான் அது. 

வாத்தியாரிடம் கற்றுக்கொண்டது முதல் பல பாடல்களை எழுதியிருக்க வேண்டும்.  அவர் வாழ்ந்த ஊரிலே அவர் மிகவும் பெயர் பெற்றவராய் இருந்திருத்தல் வேண்டும். சொந்த ஊரிலே பாடிப் பொருள் கிட்டாமையினால் அரசனைப் போய்ப் பார்த்துப் பாடலைப் பாடிப் பொருள்பெற்று வரலாம் என்று புலவர்கள் கூடும் தமிழ்ச்சங்கத்துக்குச் சென்றிருக்கவேண்டும். அங்கு அவர் பாடிய ஒருபாடல்மட்டும் நமக்குக் கிடைத்த நற்பேறு இன்று உடையவர்களாய் விட்டோம்.  பிற அவருடையன யாவுழிந்தன. 

அந்த ஒரு பாடல்மூலமே நாம் அவரை அறிந்தின்புறுகின்றோம். மொழியிற் புலமை என்பது ஒரே ஒரு பாடலில் அடைந்துவிடக் கூடியதன்று. இலக்கணம் கற்பதற்குப் பல ஆண்டுகள். பின்பு கவிதைகள் எழுதிப் பழகிய ஆண்டுகள் பல. பின் திறமை உச்சமடைந்த படி ஓங்கி நின்ற ஆண்டுகள் பல.   அப்புறமே சங்கச்செலவு நிகழ்ந்திருக்கும்.

நாம் படிக்கும் புலவர்கள் பற்றிய கதைகளில்  திடீரென இறையருளால் புலமை பெற்றவர்கள் சிலரைக் காண்கிறோம். இவர்களைப் பற்றிய முழு விவரமும் நமக்குத் தெரியவில்லை.  இத்தகு புலவர்களில் ஒருவர் அரசவையில் தோன்றிப் புகழ் நாட்டிய பின்பே அவர் பற்றி நாடே அறிந்தது.   நாடு அறிந்துகொண்டது  அவர் பாடிய பாடலையும் அல்லது அவர் வரைந்த நூலையும்  கூறப்படும் பெயரில் அவர் இருந்து வாழ்ந்து மறைந்ததையுமே.  இவை மேலெழுந்த வாரியான விவரங்கள்..  ஏனை விவரங்கள் தெரிந்துகொள்ள முடிவதில்லை. 

அவரைப் பற்றி எல்லாம் அறிய முடியவில்லை என்றாலும் அதைவிட மோசமாக, அவர் எழுதிய எல்லாமும் கிடைப்பதில்லை. எல்லாம் கிடைத்திருந்தாலும் எல்லாவற்றையும் படித்துக் கிழித்துவிட நம்மாலும் முடிவதில்லை.  அவர் பாடிய பாடல்களை அவர் தம் வீட்டில் வைத்துவிட்டு மறைந்துவிட்டாலும் வீட்டிலிருப்பவர்களுக்கு அவைபற்றி ஏதும் தெரிவதுமில்லை.  குப்பை என்று வீசிவிடுவதே பெரும்பான்மை. அழிக்கப்பட்டவை பலவாய் இருக்கலாம்; அழிந்துபோனவையும் அவற்றைவிடப் பலவாகும்.

முன் காலத்தில் தமிழ் மொழி, பெரிதும் பாடல்களால் சிறந்து நின்ற மொழியாய் இருந்தது.  உரைநடை யென்பது  பாடல்களுக்குப் பொருள்கூறுவதற்குப் பயன்பட்டது.  உரைநடை வளராமைக்குக் காரணம், உரையாக வரைய நிறைய ஓலைகள் தேவைப்படுமென்பதும் அவற்றில் எழுதிக்கொண்டிருப்பது அத்துணை எளிமையானதன்று என்பதுமே.  இவற்றுக்கெல்லாம் சொந்தமாகவே ஓலைகளைத் தயார்செய்துகொள்ள வேண்டும்.  இவற்றை விற்பனை செய்தோர் யாரும் இருந்ததாகக் கேள்விப்படவில்லை.  சொந்தக்கவி பாடின வல்லவர்கள் பலர் இருந்தனர்.  அவர்கள் எழுதியவை அவர்களுடன் மறைந்துவிட்டன. 

எழுதுவதைவிட மனப்பாடமாக ஒப்புவித்தவர்களே மிகுதி என்பது தெளிவு.  கற்பிப்போரும் வாய்மொழியாகவே கற்பித்தபடியால் அவர்கள் வாய்த்திகள் எனப்பட்டனர். இதுபின் வாத்தி > வாத்தியார் ஆயிற்று. உப அத்தியாயி என்ற உபாத்தியாயி வேறு  என்பதறிக.

பலரும் நல்ல நினைவாற்றல் கொண்டவர்களாக இருந்தனர்.  இதற்குக்காரணம் அவர்கள் நினைவாற்றல் தருகின்ற மூளைப்பகுதியை நன்`கு பயன்படுத்தியமையே  ஆகும்.  இன்று நாம் நினைவாற்றலைப் பெரிதும் பயன்படுத்துவதில்லை.  நம் சொந்தக் கைபேசி எண்ணைக் கூட கைபேசியில் பதிவுகளைப் பார்த்து நினைவுகூர்கின்றோம்.  மனப்பாடம் செய்யும் பழக்கம் இன்று குறைந்துவிட்டது.  காலம் மாறிவிட்டது.

பலரும் சொந்தக்கவி புனைந்துகொண்டனர் என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு?  அவற்றில் சில இன்று நாட்டுப் பாடல்கள் எனப்படுகின்றன. கொஞ்சத்தைத் திரட்டி வைத்திருக்கிறோம்.  இங்கு மட்டுமோ? சீன நாட்டுப் பாடல்களும் மலாய் நாட்டுப் பாடல்களும்  உள்ளன. இவை இன்று எழுத்தில் கிடைக்கின்றன.  இவற்றைத் தேடிப் பிடித்துப் பதித்தவர்களைப் பாராட்டுதல் வேண்டும்.

காரிகை கற்றுக் கவிபாடாதவன் பேரிகை கொட்டிப் பிழைக்கலாம் என்பது தமிழ் நாட்டின் பழமொழி.  யாப்பு பயிலவேண்டும். கவிபாடவேண்டும். இல்லையென்றால் அவன் பயிலாமையினால் பறைகொட்டப் போய்விடுவான்! கவிபாடுவதன் முதன்மை இதன்மூலம் வெளிப்படுகிறது.  பலரும் பாடினர்.
இவற்றை எழுதிவைத்துக்கொள்ளாதோரே அதிகம்.

இனி  மொழியின் நிலையை மேலும் கவனிப்போம், அடுத்த இடுகையில்.