ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஆலகால விடம் (விஷம்).



இன்று  ஆலகால விஷம் என்பதை ஆய்வு செய்யலாம்.

இந்தப் புனைவுச் சொல்லில் இரண்டு சொற்கள் இருத்தலாலும் இரண்டுமிணைந்து ஒரு சொன்னீர்மைப் பட்டு ஒருபொருளுணர்த்துவதாலும் இதையொரு கூட்டுச்சொல் என்னலாம்.
ஆலகாலம் என்பதில் ஆலம் என்பது அகலம் என்பதன் திரிபு.  எக்காலத்திலும் தன் நச்சுத்தன்மை நீங்காதது என்பதைக் குறிக்க, ஆல், ஆலம் என்ற சொல்வடிவம் பயன்படுகிறது.  ஆல மரத்தைக் குறிக்கும் ஆல் என்பதும் அகல் (அகலம்) என்பதினின்று வந்ததே ஆகும். விழுதுகளைப் பரப்பிக்கொண்டு இடம் கொண்டு நிற்பதால் அதற்கு ஆல், ஆலமரம் என்ற பெயர் உண்டானது.

சில பொருள்கள் நச்சுத் தன்மை உடையவாய் இருந்தாலும், வேறு ஒரு பொருளை அதிலிடும்போது நஞ்சு மாறிவிடும். அப்படி எந்த மாற்றமும் அடையாததே  ஆலகால விடமாகும். இதனை  7 அல்லது 8 ஆண்டுகட்குமுன் யாம் விளக்கியதுண்டு.
காலம் என்பது நீட்சி குறிக்கும் சொல்.  கால நீட்சி.
எனவே ஆலகாலம், பொருட்டன்மை பற்றி உண்டானதொரு பெயர்.
விடம் என்பதென்ன? விடுதல் என்பதனடிப் பிறந்த சொல் இது. இங்கு ஊற்றுதல் அல்லது கலத்தல் பற்றி ஏற்பட்ட பெயர்.
சோற்றில் மோர் விடுதல் என்றால்,  அதை ஊற்றுதல். பாம்பு அதன் விடத்தைக் கொத்துமிடத்தில் விடுகின்றது.  விடு> விடு+அம் > விடம்.  இதுபின் விஷம் ஆனது.  நச்சுப்பொருள் என்பது இதன் பொருள்.  இது காரண இடுகுறிப் பெயர்.

விடங்களை விடமல்லாததுடன் கலந்தே கொடுத்து வந்தபடியால். “விடம்”கலக்கும் நஞ்சு என்று பொருள்பெற்றுப் பின் நஞ்சு என்ற பொதுப்பொருளில் வழங்க்கிற்று.




அமெரிக்காவைப் பார்த்து வடகொரியா......!

உலகளந்த நாடுஅ   மெரிக்காவைப் பார்த்துச்
சிறிதாம் வடகொரியா சீரழிப்போம் என்றால்
பலபோரும் வென்ற வலம்சேர் பழமையைப்
பார்க்காக் குருடர்- தென் கீழ்த்திசைப் பக்கம்
உளவாய மக்கட்கோ உள்ளத்தில் அச்சம்;
வட கொரியன் நம்தலைக்கு வைத்தான்  வெடியே !
தளவாடம் ஆக்கும்  தலைதெரித்த போதையோன்;
தாரணி ஓரணியில் நிற்க அமைதிக்கே.

குறிப்பு:


1.மூதலடி: "உலகளந்த நாட மெரிக்காவைப் பார்த்து "
என்று வெண்டளையாகும்.
2. குருடர்தென் என்று சேர்த்திசைக்க. (புளிமாங்காய்ச் சீர்)

3. தென்கீழ்த் திசை: தென் கிழக்காசியா.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தத்து என்ற சொல் அமைந்தது எங்ஙனம்?



இப்போது தத்து என்ற சொல்லைப் பற்றிச் சிந்தித்து அறிவோம்.

 பிறர் பிள்ளை ஒன்றினைத் தன் பிள்ளையாக்கிக் கொண்டு வளர்த்தலையே தத்து என்று சொல்லுவர்.  இப்போது ஆங்கில மொழி மிகப் பரவி விட்டதால் “அடோப்ட்” என்ற சொல்லையே கேட்க முடிகிறது.  ஆங்கிலம் படித்திராவர்களும் அம்மொழிச் சொற்களை நன்கு  பயன்படுத்துகின்றனர்.
தத்து என்பது இரண்டு சிறு துண்டுகளை உடையது.   தன்,  து என்பவை அவை.

தன் என்ற சொல்லில் இரண்டே எழுத்துக்கள் உள்ளனவாகையால்,  தன் என்பது த-  என்று குறையும்போது,  அதை கடைக்குறை என்று இலக்கணத்தில் சொல்வர்.  மேல் என்ற சொல் மே என்று குறைந்து, பின் கறி என்ற சொல்லுடன் இணையும்போது, மேங்கறி என்று வழங்குவதுபோல்,  தன் என்ற சொல், " த " என்று குறைந்து, பின்  "து " என்பதனுடன் இணைகிறது.

து என்பது இப்போது ஒரு விகுதியாகவே பயன்படுகிறது.  விழுது என்ற சொல்லில் அது வருகிறது.  இப்படி இவ்விகுதி வருஞ்சொற்கள் பல.  மேலும் அஃறிணை விகுதியாகவும் வரும்.

உடையது என்பதையும் “து”  குறிக்கும். 

எனவே “த+ து”  என்ற சொல் “தன்னுடையது” என்று பொருள்படும்.
தத்து எடுப்பது எனின் தன்னுடையதாக்கி எடுத்துக்கொள்வது என்பதாகும்.   இனி “எடுப்பு”    “வளர்ப்பு” என்ற வழக்குகளும் உள்ளன என்பது நீங்கள் அறிவீர்கள்.

பிற சார்பு இல்லாமல் தன் சொந்த வலிமையால்  நிற்கும் ஒரு கருத்து “தத்துவம்” எனப்பட்டது என்பதை நீங்கள் இதிலிருந்து சிந்தித்தறியலாம். இங்கு  த+து+அம் என்பன (3 துண்டுகள்)  புனையப்பட்டுள்ளன.  து, அம் விகுதிகள்.
தத்துவம் என்பதில்  வ் வருவது சொல்லிணைப்பின் பொருட்டு. இதைத்தான்
வகர உடம்படு மெய் என்று இலக்கணம் சொல்கிறது.

தத்துவம் என்பது மேற்கண்டவாறே வரையறை செய்யப்பட்டு உணர்ந்து
கொள்ளற்குரித்தான சொல்.

இது 05072020 மெய்ப்பு செய்யப்பட்டது.