வியாழன், 30 ஜூன், 2016

தீதும் உளதே

இரண்டாம் தலைமுறைக் கைப்பேசி  களைக‌,
மூன்றாம் நான்காம்  தலைமுறை கொள்வாய்
திரண்ட நலம்பல தேர்ந்திடும்  உனக்கே
முரண்டு செய்யாமல் இதற்கினி இணங்கே.

என்கிற படிதொலைத் தொடர்புக் குழும்புகள்
எழுச்சிப் பரப்புரை இசைத்திடல் கண்டோம்.
நன்கிது யாமும் எண்ணிடும் பொழுதினில்
நயப்பது நாற்புறம் வினாவெனும் விழுதுகள் /

புதிய தலைமுறைப் பேசிகள் வாங்கிடப்
புரப்பவர் பணத்தினை யாரிது காண்கிலம்
நிதியே நிற்க,  கரந்துறை மென்பொருள்
நின்று குலைத்திடும் தளம்பல இவற்றுள்.

மூன்றாம் நான்காம் தலைமுறைப் பேசி
முயன்று யாம்பெற நன்மைகள் பலவே
ஆன்ற அறிவுரை:  அணிபெறு இவற்றில்
அடைதகு நலத்தொடு தீதும் உளதே .

மக்கள் தொண்டினில் மூழ்குபவர்

அரசுப் பதவியில் இருந்தாலும்
அதிலும் துன்பம் பலப்பலவாம்.
குறைச்ச விலையில் எதையாரும்
குற்றம் கொடுப்பக் கொள்வதுவாம்,

இருந்திட வீடொரு முதற்பொருளே
என்றுமே இருப்பதோ வாடகைக்கு?
தகுந்ததைப் பார்த்து வாங்குகையில்
தருவிலை தீதடி தட்டுதலே.

சந்தை விலையின் தாழ்ந்ததனை
சட்டென வாங்கிப் போட்டிடிலோ
குந்தக முய்க்கும் அதுபிறகே
குலைத்திடும் நிற்கும் நிலைதனையே.

மன்றம் முறையே பகர்கையிலே
முற்றும் விடுவித் தசத்திடினும்
இன்றும் நாளையும் நினைவகல
என்றும் துணையாய் இசைத்திடுமோ?

மக்கள் தொண்டினில் மூழ்குபவர்
மாநில மிசையே வாழ்பொழுதில்
தக்கது யாண்டும் செய்திடுக!
தயங்கா மனக்கட் டுய்வுறுவீர்.

திங்கள், 27 ஜூன், 2016

வயோதிகன்.


கிழவன் என்ற சொல் இருக்கும்போது வயோதிகன் என்னும் சொல் ஏன்
தேவைப்பட்டது என்ற கேள்வி எழலாம். கிழவன் என்பது நாளடைவில் சற்று பணிவுக்குறைவானதாகத் தென்பட்டிருக்கலாம். கிழடன், கிழம், கிழடு, என்பனவும் இவற்றினின்று விளைந்த பிற தொடர்களும் முதியோரின்
ஆளுமையை இளைஞர் வெறுத்திருக்கக் கூடுமென்று காட்டுகின்றன. நாளடைவில் மூத்தோர் தம் மேலாண்மையை இழக்கவே, அவர்களின் மதியுரைகள் புறந்தள்ளப்பட்டிருக்க்க் கூடும். கம்பனின் அறிவுரையை அம்பிகாபதி கேட்கவில்லை, அரசன்மகளை விட்டு நீங்கவும் இல்லை, அதனால் அவன் மரணதண்டனைக்கு ஆளானான் என்பது போலும் கதைகள், மூத்தோரை இளையவர்கள் புறந்தள்ளியமையைத்தான் காட்டுகின் றன . மேலும் உவச்ச்ர் குலத்தவனுக்கு அரசர் குலம் பெண் கொடுக்க ஒருப்படவில்லை என்பதும் தெளிவானது.

இதுபோலும் குமுகச் சூழல்களால் கிழவன் என்ற சொல்லுக்கு ஈடாக வயோதிகன் என்ற சொல் தேவைப்பட்டிருக்கலாம்.

காலத்தின் வயப்படுவதே வயது என்பது. கால ஓட்டத்தில் அகப்படும் நிலையே அகவை. வயம் > வய > வயது. இங்கு வய என்பது அடிச்சொல். காவலனின் கைபட்ட நிலை கைது இதில் து என்பது விகுதி. கால அளவின் வயப்பட்ட நிலை வயது இங்கும் து என்பது விகுதி.

வய + அதிகன் = வயோதிகன் ஆகிறது.
வய + அதிகம் = வயோதிகம்.

இது இங்ஙனம் விளக்கமுற்றாலும், வய + அ என்பது வயோ என்று மாறியது தமிழ் மரபன்று என்பதே இதிலுள்ள மறுப்பு.    அன்றாயினும்,
தமிழ் மூலங்களைப் பயன்படுத்தி விளைந்த சொல்லே இதுவாகும். அதிகன் என்பது ஓதிகன் என்று நீண்டது குலைவு என்பதாம். ஆயின்  சங்கதத்தில்  அது இயல்பு  ஆகும் .

இந்தோ ஐரோப்பிய மொழிகட்கும் இது இயல்பே ஆகும்,   ஆங்கிலத்தில் politico-economics என்ற பதத்தை எடுத்துக்காட்டலாம்.  முன்னொட்டாக வருங்கால் politico என்று  நீண்டுவிடுகிறது.  மனுவின் நூல் என்னாமல் மானவ ஸாகித்யம் என்றால் மனு என்ற சொல் நீட்சி பெறுகிறது. இது தத்திதாந்தம் என்ற 1சந்திமுறையுட் படும். அர அர என்பது அரோஹர என்று வருவதும் இவ்வகையே.  அர்  என்பது இறைமை குறிக்கும் ஓர்  ஒலிக்குறிப்பு,   அர்  > அரன்\. 1 அர் >  அரி  (ஹரி ).  தமிழிலும் இவை போல்வன உண்டு.  காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்;  வேளா வேளைக்குத் தின்றுவிட்டுத் தூங்குகிறான்  என்பன காண்க.  இவை    தமிழ்ப் பேச்சு வழக்கை ஆராய்ந்து எடுக்கப்பட்டு அதினின்று நிறைவு செய்யப்பட்டு இந்தோ ஐரோப்பியத்தில் இப்போது தனிவளர்ச்சி பெற்றுப் பெருவழக்காகி விட்டது.

ஆகாரம்  ஓகாரம் ஒன்றிற்கு ஒன்று  ஈடாக நிற்குமிடங்களும் உள .


----------------------------------------------
1  அரித்தல் என்ற வினையினின்று பிறந்ததென்பர் மறைமலையடிகள்.
அரித்தலாவது, தீவினைகளை அரித்தெடுத்து விலக்குதல்.

தரா தரம்;  பிள்ளையோ  பிள்ளை .   ஆய்க . தமிழில் பெரும்பாலும் இரட்டித்து  வரும்   சொற்றொடர்களில் சொல்லிடையில்  வரும்.



========================================================================
It appears that a third party add-on is causing some interference and disruptions resulting in  some posts to disappear and others to be duplicated/  This matter is being looked into.  Apologies/