சனி, 11 ஜூன், 2016

பிரேதம்

ஒருவர்  இறந்துவிட்டால் .  அவர்தம் உடலைச்   சிலர்  வீட்டுக்குள் வைத்து வேண்டியவற்றைச் செய்கிறார்கள்.

வேறு சிலர் வீட்டுக்கு வெளியில் பந்தல் போட்டு அங்கு கிடத்தி  வைக்கிறார்கள் .

சிலர் வீட்டுமுன் பந்தல் போட்டாலும்,   பிணத்தை வீட்டிலேயே வைத்து, பந்தலில்  வந்தவர்கள்  அமர்ந்திருக்க வழி செய்வர் .

இங்குச்  சீனர்கள் பிணத்தை வெளிப் பந்தலில்தான்  வைத்து,  சடங்குகளைச் செய்கிறார்கள்.

இந்தியாவில் எந்த இடம்  எந்த வகுப்பினர் என்பதைப் பொறுத்து  இருவிதமாகவும்  நடைபெறுவதும் உண்டு என்று  தெரிகிறது.



சென்ற நூற்றாண்டிலோ அதற்கு முன்போ இருந்த பழக்க வழக்கங்கள்

இந்த நூற்றாண்டில் மாறியிருக்கலாம் . ஆகையால் இப்போது நீங்கள்

கடைப்பிடிப்பது நீங்கள் பழமை என்று நினைக்கும் ஒரு புதுமையாய்

இருக்கக் கூடும் . நம்மனோர் இதை எல்லாம் எங்கே எழுதிவைத்தனர்?

இருந்தால் இலக்கியங்களிலிருந்து சலித்து எடுக்கலாம். இல்லாவிட்டால்

வெள்ளைக்காரன் எழுதிவைத்ததைப் படிக்கலாம். இது நிற்க:



சாவு ஒரு தீட்டு.    அதை  ஒதுக்கமாகக்  கவனிக்கவேண்டும்.  மனத்தாலும் செயலாலும் புறத்தே வைக்கவேண்டும் என்பது பொதுவாகத் தமிழர்  கொள்கை  எனில் அது தவறாகாது என்று நினைக்கிறோம் .  நேரம் ஆகிறது, சீக்கிரமாக  எடுங்கள்  என்று  உறவினர் கூவுவதையும் கேட்டிருக்கலாம்.

இவற்றைத் தவறு என்று  சொல்லவில்லை.  நிலைமை அப்படி .

இவனுக்கு இன்னும் கேடு வராமல் உலவிக் கொண்டிருக்கிறானே என்று சொல்லும் வசையில்  கேடு என்பது சாவையே குறித்தது.

ஏதம் என்பது கேடு.    பிணம் ஒரு ஏதம் .   பிணம் புறத்தே கிடத்த வேண்டிய ஏதம்.  அப்படியா?

புற ஏதம்  >  பிரேதம் ஆகிறது.  புலியைப்  பிலி  என்று சொல்லும் பேச்சுத் தமிழர்  அமைத்த திரிபு.   ஏதம் என்பது இப்போது பேச்சு வழக்கில் மறைந்தது.

ஆங்கிலமும் பிறவும் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி விட்ட இற்றை  நாளில் புறமும் ஏதமும் தாக்குப் பிடிக்குமோ?

Paragraphs: justification fault inherent in this editor. We have tried  but  it could not be corrected.

வியாழன், 9 ஜூன், 2016

கக்கூசு என்ற சொல்.

கக்கு  என்ற சொல் தமிழில் இருப்பது,   அடிப்படைக் கருத்துகளைத்   தன்சொற்களால் தரும் தகுதியுள்ள செம்மொழி இது  என்பதை காட்டுகிறது

இதுபோலவே  ஊசுதல் என்பதும்.  அழுகுதல்,  நாறுதல் என்றும் பெருள் படும்.  வடை முதலியன  கேட்டு விசுவதையும்  குறிப்பதுண்டு,

உ \\- ஊ  என்பன சுட்டடி  மூலங்கள்.   முன்னெழுதல்  மேலழுதல்    முதலிய  குறிக்கும்  தமிழ்.  ஊசல் என்பது  இருதலைக் கருத்து.  Rising and falling between two fixed or flexible points,  (concept ).

நாற்றமென்பது ஓரிடத்தினின்று  இன்னோர் இடத்திற்குப் போகும் கெடுகாற்று. கெட்டதிலிருந்து  கிளம்பும்  காற்று,  அங்கிருந்து  மூக்கைச் சென்று அடைகிறது.   ஆகவே  அது "ஊசல் "  ஆகிறது.

கக்கினது என்பது பெரும்பாலும் வாய்வழி வந்த     வயிற்று உட்கோள்  என்று பொருள்படும்.     ஆனால் எரிமலை தீமண்ணைக் கக்குகிறது  என்றும் சொல்கிறார்கள்.   ஆதலால்  வாயாலேடுப்பதை மட்டுமின்றி  வேறு வழிகளில் வெளிப்படுவதையும்  கக்குதலில் அடக்கலாம் என்பது தெளிவு.

கக்கினது   நாறும் . அதாவது   கக்கினது  ஊசும் .

கக்கு  +  ஊசு   =  கக்கூசு  ஆகிறது.

நாறும் வாந்தி என்பது,  மலக்கழிப்பு  இடத்திற்குப் பயன்படுத்தப்படுவது ஒருவகை  இடக்கர் அடக்கல் ஆகும்.  வெளிப்பட்ட கழிவு  அது கழிக்கப்படும் இடத்திற்கு ஆனது  ஆகுபெயர்.

வறுமையில் துன்புறுவாரை  " நல் கூர்ந்தார் "    " தரித்திரர் "   ( தரித்திறர்   அல்லது  திறம்பட  அணிந்தவர் " )   என்பதுபோன்ற மாறுபட்ட பயன்பாடு ஆகும்,

கக்கூசு  என்ற சொல்.   


செவ்வாய், 7 ஜூன், 2016

குறுந் : கேள்விக்கென்ன பதில்?



இது கீழ் வரும் இடுகைகளின் தொடர்ச்சி:

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_6.html

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_11.html

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_46.html


பாடிய புலவர், இந்தக் குறுந்தொகை அகப்பொருட் பாட்டில் என்ன சொல்கின்றார் எனில், தெளிவாக ஒரே ஒரு கேள்வியை மட்டுமே தோழி  வாயிலாக விடுக்கின்றார். அந்தக் கேள்வி நாடன் நம்மை விட்டு அமையுமோ என்பதுதான். அதாவது தலைவன் நம்மை விட்டு நீங்கிவிடுவானோ என்பதுதான். நீங்கான் என்பது எப்படிச் சொல்வது ?


பாட்டில் உள்ள மற்ற யாவும் விலங்குகள் பற்றிய செய்தியும் முகில் பற்றியதும் ஆகும். இயற்கையை மட்டும் அழகு வரணனை செய்த பாட்டுகள் சங்க இலக்கியத்தில் இல்லை. இயற்கை எப்போதும் அகம் புறம் என்று வகைப்படும் செய்திகளில் பின்புலமாகவே நிற்கும்.


ஒரு கேள்வியே பாட்டில் உள்ள படியால் வேறெதுவும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. கேள்வியும் பதிலை உள்ளடக்கியதாகத் தெரியவில்லை/ .

பாட்டின் கேள்வி எப்போது நிகழ்கிறதென்றால், வடக்கு தந்த வாடையும் முகிலும் தெற்கு நோக்கி வந்து தண்மை செய்யும் பனி தொடங்கிவிட்ட காலத்திலேதான்.

வடக்கு வாடை வந்து சேர்ந்துவிட்டது, பிரிந்து அயற் புலம்
சென்றுவிட்ட தலைவன். திரும்பிவிடுவானென்பதை நன்கு குறிப்பால் உணர்த்துகின்றது. திரும்பாமல் அங்கேயே இருந்துவிடுதல் கூடுமா என்ன:? பனியோ வந்து படர்ந்துவிட்டது, முகில் வந்து மேலூர்கிறது. அவன் வந்துவிடாமல் அமைதல் இயலுமோ:?


பெண்மரையை நீங்கிப் போய் நெல்லிக்கனியை மேய்ந்து பசியாறிய காட்சி போன இடத்தில் சம்பாதிக்க வேண்டியதைச் சம்பாதித்து விட்டனன், மீண்டு வருவன் என்பதைத் தோற்றுவிக்கிறது. குடல் நிறைவும் மன நிறைவும் அடைந்த நிலையில் மரை ஏறு பெண்ணிடத்துத் திரும்பிவிடும். மீண்டும் இரு மரைகளும் ஒன்று சேரும்/ அதுவே இன்ப நாளாகும். உள்ளம் இன்னிசையில் மயக்குறும் என்பது குறிப்பால் உணர்த்தப் படுகின்றது.

ஓங்குமலை ஊற்று ஓடையில் நீர் அருந்தி விடாய் தீர்ந்த நாடன் அல்லனோ அவன். அந்த ஊற்றின் தண்மையையும் பசுமையையும் அது அவனுடலுக்குத் தரும் தெம்பையும் அவன் மறந்துபோதல் எங்ஙனம்? மீண்டு வந்து அஃது அவனருந்துவன் என்கிறது பாட்டு - குறிப்பினால்.

சொல்லாமலே எல்லாம் சொல்லிவிட்ட நல்லிசைப் புலவனின் பாட்டு இது.
இயற்கையையே சித்திரமாக்கி, எழுப்பிய கேள்விக்குப் பதிலையும் அதனுள் வைத்துத்] தந்த இன்னிசையாளன் அவன்.

தலைவிக்குத் தோழி கூறுவதாய் அமைந்த இந்தப் பாடலைப் பல முறை படிக்கவேண்டும். அதனழகும் பொருளும் அப்போதுதான் தெளிவாகும்..

பயில் தொறும் நூல் நயம் போலும் ........என்றான் வள்ளுவன்.

குறுந் : கேள்விக்கென்ன பதில்?