செவ்வாய், 8 டிசம்பர், 2015

வாய்தா

வாய்தா என்ற சொல் உருது மொழியிலும்    வழங்குகிறது.   தமிழ்  நாட்டிலும்  சிற்றூர்களில் வழங்குகிறது.  நிலம் வைத்திருப்போர் கட்டவேண்டிய வரியை இது குறிக்கின்றது.

வருவாயின் அல்லது நிலத்தின் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை  இறுத்தலே வாய்தா ,   இது மிகவும்  அழகாக அமைந்த ஒரு சொல்.  நாட்டு வழக்காகிய இச்சொல்லை  அமைத்து  அசத்தியவர் யார் என்பது தெரியவில்லை,  உருதுமொழிச் சொல் என்று தமிழாசிரியர் கருதினர்.

இந்தச் சொல்லைப் பற்றித்   தமிழ் வாத்தியார்கள்  சிந்திக்கத் தொடங்கியது முஸ்லீம்  அரசர் காலத்தில்.  ஆகவே   அவர்கள் உருது என்றனர்.  அதற்குமுன் சங்க காலத்தில் பேச்சு வழக்கில் அது இருந்ததா என்பதை  அறிய வழி ஒன்றுமில்லை.  சங்கப் புலவர்களின் சொற்றொகுதியில்  இலக்கியங்கள் வாயிலாக கண்டுகொள்ளப்படாத சொல்லைப்   பேச்சில் வழங்கியதா என்று கண்டுபிடிக்க வழி இல்லை.  தமிழாகவும்  இருக்கலாம்.  அல்லாமலும் இருக்கலாம்.

உருது மொழி பிற்காலத்தது.  தெக்காணி  மொழியில் இருந்து உருவாகியது
என்பர்.  இப்படிச் சொன்னால்  மேன்மைக் குறைவாகப் படுவதால்  இதைச் சிலர்  மறுப்பர்.  தென் + கணம்  >  தெற்கணம்  >  தெக்கணம் >  Deccan >  DeccANi >  தெக்காணி  > தக்காணி.   எனவே  தென் கணத்தே தோன்றி வளர்த்ததே உருது,  இதைப் பேசியவர்கள் முஸ்லீம்கள்.   அரபி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதினர்.  அரபியில் குர் ஆன்  வாசிக்க அறிந்தோருக்கு இந்த நிலை மிகவும் வசதி,

வருவாயிலிருந்து தரப்படும் தொகையை  வருவாய் + தா      என  அமைத்து    அதைச்  சுருக்கி   (வரு என்பதைக்   குறைத்து )  வாய் + தா  =  வாய்தா என்றனர்.
கணக்கு எழுதும்போது   வருவாயில் தந்தது  என்று  முழுவதையும் எழுதி நேரத்தை  ஒழித்துக்கொள்ளாமல்  வாய்*தா  என்று எழுதிக்கொண்டு  மிச்ச நேரத்தில் சுக்கு நீர் அருந்தி மகிழலாம்.  இலக்கணம் விளக்கெண்ணெய் எல்லாம் புலவன்  பேசிக்கொண்டிருப்பான்.     என்ன என்ன விளைந்தது என்று எழுதவேண்டுமானால்  து பரு ;  க பரு  என்று எழுதினால் போதாதா?     துப் பரு =  துவரம்பருப்பு ;  கப்பரு =   கடலைப் பருப்பு. என்று  புதுமை  செய்துகொள்ளும் திறனுடையார்  வணிகர்.

உபரு :     உளுத்தம்பருப்பு. என்றும்  எழுதலாம்.   தாள்  மிச்சம்.

வாய்தா   என்ற சொல் போல் அமைந்தது தான் che'Gu  என்ற மலாய்ச் சொல்லும்,    Incik  Guru   ( Mr  Teacher)     என்பதே  அங்ஙனம் அமைந்தது,   இதில்   பாதி.  அதில் பாதி.   இதைப் பற்றி  முன் எழுதியுள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html

You will find more examples of similar word formation at the above post,



திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னை வாசிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி......

சென்னை வாசிகள்,
மிகுந்த  நெஞ்சுரம் கொண்ட மக்கள்.
ஊரையே உருட்டிப்  புரட்டிப் போட்ட வெள்ளத்தில்
உள்ளே வீடுதேடி வந்த பம்புக்குட்டியை
ஈரத்  துணியை முறுக்கிப் பிழிவதுபோல்
சூரத் தனமாய்த் திருகிக் காட்டுகிறார்கள்.

ஒரு சாலை மேம்பாலத்தைத்  தொட்டுச் செல்லும்
பெருவெள்ளமும்  ஏற்படக் கூடுமென்பதை
இப்போதுதான் கண்டிருக்கிறோம்.

உயிரிழப்புகளும்  பொருளழிவுகளும்  நேர்ந்து
பஞ்சு படாத பாடு படுகின்ற மக்களையும் காண
நெஞ்சு சுக்கு நூறாகிவிடும்
உணவுப் பொருளும் உதவிப் பொருளும் கொண்டுவந்தோரை
உதைத்தனர்  சிலர்;   அது
பதைத்து  நிற்கும் மக்களை
மறைத்து முன் நிற்கும்  காட்சி !
இதைத் தானா நாகரிகம் என்பது?

விரைவில் இயல்பு நிலைக்குத்   திரும்பி
துன்பம் களையப்பட்டு
அன்பு நிலையமாய்ச்
சென்னை செழிக்க
இன்னருள் இறைவன் தருக .


.


வியாழன், 3 டிசம்பர், 2015

சாமர்த்தியம்

இப்போது சாமர்த்தியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இதனை சா+ மரு(வு) +  து + இயம் என்று பிரிக்கவேண்டும்.

ஒரு மனிதன் சாவை மருவி நிற்கும் சூழ்நிலையிலும் எதிர் நீச்சல் போட்டு, அந் நிலையினின்று
வெற்றிகரமாக விடுபட்டு, இயல்பு நிலைக்குத் திரும்புவதே சாமர்த்தியம் எனப்படும்.

சொல் இக் கருத்தில் புனையப்பட்டபின்,  ஏனைத்  திறன் வேண்டும் சூழ்நிலைகளையும் குறிக்க வழங்கப்பட்டுப்,
பொருள் விரிவடைந்தது.

இப்போது சொல்லமைப்பை  மீண்டும் கவனிப்போம்.

சா + மரு + து+  இயம்.

சா + மருத்து + இயம்.

சா + மர்த்தியம்

சாமர்த்தியம்.

இயம் என்பது ஈண்டு விகுதியாய்ப் பயன்படுகிறது.  எனினும் இவ்விகுதி  இயங்கு என்பதன் அடிச்சொல்லும் ஆகும்.   சாவு மருவு நிலையிலும் இயங்கி வெல்லுதல் என்று  இயம் என்பதற்கும்  பொருள் விளங்கும்படியாக  அமைந்துள்ளது  அறிந்து மகிழற்பாலதாம். பின் நாளில்  இயம் என்பது வெறும் விகுதியாகவும்  சொல்லமைக்கப் பயன்படுவது காணலாம்.

து என்பது பலசொற்களில் இடை நின்று சொல்லமையும்.  எ-டு:  பரு (த்தல்) +  (அ)து +   அம்  =  பருவதம்.  பரிதாகிய மலை,  1

சொல் அமைந்த விதமே இங்கு விளக்கப் பட்டது.   அமைந்த சொல் எம்மொழிக்குரிய து என்பதை  இவ்விடுகை தொடவில்லை.  இச்சொல் தமிழிலும் வழங்குவது.

இதனை  வேறு வழியிலும் விளக்கலாம்,    ஆங்கு புகாது விடுப்போம், 2


-----------------------------------------------------------------------------------------------

Notes:

1.   அது , இது  என்பன  "து "  வெனக்    குறைந்தியலும் . மலாய்  மொழியிலும் இங்ஙனம்   தலைக்குறையும்.  cf.   itu  >  tu.   e.g.  Sakitnya tu  disini.  (Cita Citata ). இது  (Tamil) =   itu  (Malay)  >  tu.   In English :   it is  >  'tis  (in poetry).   இது  (Tamil)  compares with  it (English).  There is no doubt Tamil இது  is original.

2.  சம(ம்) +  ஆர்த்து  +  இயம்  = சா மர்த்தியம் ;   ஆர்த்தல்  (வினைச்சொல் ).. 
also  சம + அறுத்து +  இயம் .   அறுத்தல் (வினைச்சொல் ). In each case 'sama'  would be shown to have become elongated as  'saama'.  On the other hand,    ஆர்த்து    shortened to  அர்த்து.   &  அறுத்து   transformed  to  அர்த்து. respectively  in such proposals.