ஞாயிறு, 29 மார்ச், 2009

1.புதுமை, 2. தமிழன்

1. கலைகள் அனைத்திலுமே -- வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவையூண் -- எனில்
ஏற்க மறுக்கும் நா உண்டோ?

-----------------------------------------------------
வேறு:
2
தமிழன் எனச்சொன்னால் பாவமோ? -- இந்தத்
தரையில் குடிவாழ்தல் நோகுமோ -- நீரில்
அமிழ்ந்தும் அவன்சாக வேணுமோ -- தீயில்
அழிந்தால் புவிக்காவல் ஆறுமோ?

குழந்தை முதியோரும் பெண்களும் -- ஒரு
குற்றம் அறியாநோ யாளியும் -- உயிர்
இழந்தும் உடல்கள்புண் ஆகியும் ---போர்
இனியெத் தனைநாட்கள் போகுமோ?

இரத்த வெறிகொண்ட மாந்தர்கள் -- இங்கு
இயற்றும் சமர்நிற்க வேண்டுமாய் -- ஓர்
உரத்த குரல்தந்துஇஞ் ஞாலமும் ---அமைதி
ஓங்கச் செயற்பால காலமே!

புலிக்கே வலைவீசும் வேட்டுவன் -- வந்த
பொன்மான் முயல்தம்மைச் சாட்டுதல்,--- ஒர
நெறிக்குள் அவனில்லை காட்டுமே --- உலகு
நில்லா தவன்மன்றில் ஏற்றுவீர்!

[சாட்டுதல் = கொல்லுதல் என்னும் பொருளில்.]

புதன், 25 மார்ச், 2009

ஒன்றுபட முடியுமா உன்னால்?

(புதுக்கவிதை )

இன்றைய புத்துலகில்,
நாட்டுக்கு நாடு,
ஊருக்கு ஊர்.
எண்ணற்ற  அரசியல் கட்சிகள்;
கட்சித் சண்டை---, மற்றும்
கட்சிக்குள் சண்டை!
ஆளுக்கு ஆள்,
கருத்து வேற்றுமை!

தமிழருக்குள்ளும் இதுதான் நடக்கிறது!
ஒப்பமுடிந்த அனைவருக்குமான நிலையில்
தப்ப முடியுமா தமிழன் மட்டும்?

ஒன்றுபடு நீ என்றும்
ஒப்பற்ற நல்லறிஞர் எவர் சொன்ன போதிலும்
ஓன்றுபட்டுவிட முடியுமா உன்னால்?

பாவம் நீ!
உலகின் தலைவிதிக்கு நீ என்ன விதிவிலக்கா?

சனி, 14 மார்ச், 2009

புதுமை

கலைகள் அனைத்திலுமே -- வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவையூண் -- எனில்
ஏற்க மறுக்கும் நா உண்டோ?