புதன், 14 ஜனவரி, 2009

எண்கணிதப் பலன்

எண்கொண்டு கணித்துச் சொல்வார்
இனிவரும் பலன்கள் எல்லாம்!
விண்ணென்றும் இருந்த தைப்போல்
வேறுபடா திருக்கக் கீழே
மண்ணின்று பலதீ மைசூழ்
மடுவினில் விழுந்து மாளக்
கண்ணொன்றும் இலதாய்ச் செல்லும்
கதியினைக் கணித்தா சொன்னார்?

திங்கள், 12 ஜனவரி, 2009

viiram

வீரமே ஓர்முதலாய் வெற்றியே ஊதியமாய்
வீறுடன் போராடும் வெஞ்சமரில் --- சீருடனே்
நெஞ்சில் விழைந்ததெலாம் நேராம் விடுதலையே
நஞ்சுமே நாடெனின் ஊண்.


போரிடும் மறவர்க்கு வீரமே ஒரு  மூலதனம் ஆகும் 
வெற்றிதான் அவர்கட்குக் கிடைக்கும் இலாபம்.
கடினமான போரில் எழுச்சியுடன் போராடுகிறார்கள் .
அவர்கள் வேண்டியதெல்லாம்  உண்மையான நேர்மையான விடுதலையே ஆகும்.
நீ  நஞ்சை நாடு ( நாட்டம்  கொள் ) என்றாலும் அவர்கள் அதுவே எமக்கு "ஊண் " (உணவு ) எனறு  உண்டு அமைவர் .

இது வீரத்தின் இலக்கணம் ஆம் .

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

காளி தேவிக்கு விண்ணப்பம்

நீரின்றி வாடிடும் ஏழைத் தமிழரை
நீதானே காப்பற்ற வேண்டும் -- வலிந்த
போரொன் றவர்கள் பொறுக்கமாட் டார்மேல்
புகுத்தலை நீமாற்ற வேண்டும்.

வான்குண்டு வீச்சுக்கு வாழ்வு பறிபோகா
வண்ணமே நீயருள வேண்டும் -- அவர்க்கு
ஊண்பண்டு போலக் கிடைத்திட உன்னருள்
அல்லாது வேறென்ன வேண்டும்?

உடைமைகள் யாவும் இடையே களைந்தவர்
ஒயாத போராட்டம் வாழ்வில் -- கண்டு
படையவர் ஆற்றும் கொடுஞ்செயற்கு ஆளாய்ப்
படுந்துயர் நீபோக்க வேண்டும்.

சின்னஞ் சிறிய குழந்தைகள் மூப்பில்
செயலறி யாதவர் மக்கள் -- தம்மைக்
கண்ணுங் கருத்துமாய் முன்காத் தனையவர்
இன்றுசெய் பாதகம் யாதோ?

விரைந்தருள் நீயே புரிந்திடு தாயேநல்
வீரம் விளைத்திட்ட காளி --- அவர்கள்
குறைந்திட்ட வாழ்வின்னும் குன்றாமல் நீவா
நிறைந்திடச் செய்யிந்த நாழி!