திங்கள், 23 செப்டம்பர், 2024

புத்தகம், புஸ்தகம், புக்

 புத்தகம், புஸ்தகம், புக் (ஆங்கிலம்) என்பவற்றினை ஆய்வு செய்வோம்.

ஆங்கிலச் சொல்லான  புக் என்பது நெடுங்காலமாக ஐரோப்பிய மொழிகளில் பயின்று வழங்கி, ஒருவேளை பொக்ஜொன் என்ற இந்தோ ஜெர்மானியச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்தோ ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதி  போகோ என்ற சொல்லை முன்வைக்கிறது. மரங்களிலிருந்து கிடைப்பனவே புத்தகங்களுக்கு ச்  செய்பொருள்களாக இருந்துள்ளன என்று சொல்லுவர்.

இது இப்படி இருக்க, இச்சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களை உருவாக்க முனைந்தவர்களும்  ஆங்கிலச் சொற்களுக்கு ஒலியொற்றுமை உடைய சொற்களைப் படைக்க முயன்றுள்ளனர் என்றும் நாம் காண்கிறோம்.  எடுத்துக்காட்டு: பாராளுமன்றம் என்ற சொல் பார்லிமன்ட் என்ற பிரஞ்சு மொழிச் சொல்லுக்கு ஈடான ஒலிப்பினை உடையதாய் உள்ளது.  "டாங்க்"  என்ற சொல்லும் தாங்கி என்ற சொல்லுடன் ஒலியொருமை உடையதாய் உள்ளது. இன்னும் பல சொற்கள் உள்ளன.  பின்னும் படைத்தளிக்க இயலும்.

புத்தகம் என்ற சொல்,  புதை என்ற சொல்லிலிருந்து ஏற்பட்டது என்பதே உண்மை.  புதை என்றால் வெளித் தெரியாதபடி உள்ளடங்கியிருத்தல்; உட்பொதிந்திருத்தல் என்பதே பொருண்மை ஆகும். புதை என்பதன் அடிச்சொல் புத் என்பதே. புத் ஐ > புதை. இது போல் அமைந்த இன்னொரு சொல்: கத் ஐ > கதை. புதைத்தல், கதைத்தல் என்பன வினைச்சொற்கள் கத்து, கதறு என்பன இதன் மற்ற வடிசொற்கள்.

புதை + அகம் > புத்தகம் ஆகும்,

புத்தகங்களில் பொதிந்திருப்பவை அல்லது புதைந்திருப்பவை  பல என்பது வெளிப்படை.  

பொதி + அகம் > பொத்தகம் > புத்தகம் எனினுமாம்.

பற்பல விடயங்களும் உட்பொதிந்திருக்கும் மரவிழைக் கட்டு.

புதை பொதி என்பன ஒருபொருட் சொற்கள்.

புஸ்தகம் என்பது த் என்ற வல்லொலியை மெல்லிதாக்கப் புகுத்தப்பட்ட ஒலிப்பு ஆகும். இது அயலுக்கு ஏற்ற வடிவம்.

புக் என்ற ஆங்கிலம் புத்தகம் என்பதனோடு ஒலியொருமை உடையது என்றாலும் ஒன்று தமிழ்; இன்னொன்று ஐரோப்பியச் சொல். இவற்றின் ஒலியொருமை முயன்று ஆக்கப்பட்டது. இதில் சொற்கடத்தல் ஒன்றும் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஃபெரா என்ற சின்ன நாய்க்குட்டி பிரான்சு சென்றது


 அடுக்குமாடி வீட்டில்நின்ற

அழகுநாய்க்  குட்டி

நடுக்குகுளிர் நாடுபிரான்சு

நல்லபடி போய்ப்பின்

துடுக்குமிகத் தரைவீட்டில்

துள்ளியோடி  ஆடும்

மிடுக்குதனைக் காண்கநீரே

மேற்படத்தில் நன்றே.


பச்சைப்புல் பின்நிலத்தில்

பாய்ந்துபாய்ந்   தோடி

இச்சைதீர அந்தவீட்டின்

இல்வாணர் உகக்க,

அச்சமின்றி அங்குமிங்கும்

ஆடியோடிக் களிக்கும்

குக்கல்புகழ் கொஞ்சம்சொல்க

குதூகலம்  நன்றே.


குக்கல் - சின்ன நாய்

குதூகலம் - மகிழ்ச்சி

இல்வாணர் வீட்டுக்காரர்கள்

இச்சை - விருப்பம்

பின் நிலம் - வீட்டுக்குப் பின் உள்ள நிலம்

நடுக்கு குளிர் - மிகுந்த குளிர்


இது சிங்கப்பூரில் உள்ள அடுக்கு

மாடி வீட்டிலிருந்து இப்போது

பிரான்சுக்கு வீடுமாறி உள்ளது


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


படம் அனுப்பியது: திருமதி ரதி,  நன்றி.


 


சனி, 21 செப்டம்பர், 2024

சம்பல் சம்போ என்னும் சொற்கள்.

 இது ஒருவகைத் துவையலைக் குறிப்பதாகத் தற்கால அகராதிகள் சொல்கின்றன. சம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை அரைத்துச் சேர்த்துக் குழப்புதல். இது தம் என்ற பன்மைச் சொல்லின் வெளிப்பாடு. தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரைக் குறிக்கும். இது திரிந்து சம் ஆகி ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்சேர்க்கையைக் குறித்தது. பல் என்பது பல்பொருள் குறிப்பதாகவே இருத்தலால்,  சம் என்பது சேர்த்தல் என்று கொள்ளவேண்டும்.

இதன் ஆய்வினை மூலச்சொல்லிலிருந்து தொடர்ந்தால் இன்னும் பொருள் சிறக்கும்,  மூலச்சொல் ஆவது அண் என்பது,  அடுத்திருத்தல் என்பது அண் என்பதன் பொருள். அண் > சண் ,  எனவே  அடுத்தடுத்துச் சேர்த்தல் என்ற பொருள் வருகிறது.  பல் என்பது பல்பொருள் என்பதால் சண்பல் > சம்பல் என்று சொல்லும் பொருளும் பொருந்திவிடுகின்றன. சம்பல் என்பது திரிசொல் ஆகிறது.

சண்பு > சம்பு - இது இயல்பான திரிபே ஆகும்,

சம்பல் என்பது விலைமலிவையும் குறிப்பதாகச் சொல்வர்.  இப்பொருளில் இச்சொல் இதுகாலை வழங்கவில்லை,  ஆனால் இதை நாம் எளிதில் உணர முடிகிறது.  அதே பொருள் அடுத்தடுத்துச் சந்தைக்கு வருமானால் விலை வீழ்ந்து விடும், இதற்கும் பொருள் சரியாகவே உள்ளது.

சம்பு என்பது  அடுத்தடுத்து மக்கள் வணங்கும் தேவர்களாய் இருத்தலால், அவர்களுக்கும் இச்சொல் பொருந்துகிறது. ஒன்றன்பின் இன்னொரு தேவரை வணங்கத் தடை எதுவும் இருந்ததில்லை.  சிவன், விட்ணு, பிரமன் (பெருமான்), அருகன், சூரியன் ஆகியோர் இவ்வாறு வணங்கப் படும் தேவர்கள்  ஆவர்.

அண் என்ற மூலம்,  மக்கள் அடுத்துச் சென்று வணங்குதலையும் மற்றும் மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வணங்குதலையும் ஒருங்கே குறிக்கவல்லது ஆகும்.  ஆகவே சம்போ (மகாதேவா) என்பது  மக்கள் அண்மிச்சென்று வணக்கம் செய்தற் குரிய தேவன் என்று பொருள்படும் சொல்லாகிறது.

இதுவே சொல்லலமைப்புப் பொருளாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்புபின்னர்.

Edited on 22092024 0559