திங்கள், 20 ஜூன், 2016

சுட்டடிச் சொற்கள் : இயங்கு, அவை.

அவை
 == = = =

ஒருவன் இன்னொருவனைக் கேட்கிறான்.

கூட்டத்தை எங்கே வைத்திருக்கிறார்கள்?
=
அங்கே,  அதோ அங்கே, எப்போதும் கூடுகிற இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

அ ‍=   அங்கே.  இது சுட்டுச் சொல்.

வை=  வைத்தல். (அ + வை)

அது  "அவை"   (அ + வை) ஆகிறது.  அங்கு சிறப்பான வேலைகளைச் செய்வோர் கூடியிருக்கிறார்கள்.

அவை என்பது சவை ஆனது.   அகரத்தின்முன் சகர ஒற்று ஏறியது.

"மேலாடை இன்றிச் சவை புகுந்தால் மேதினியில்..."

சவை>  சபை   வ> ப திரிபு. இத்தகு     திரிபுகள் மிகப்பல.


இப்படி மெய் எழுத்துக்கள் முன் நின்று திரிந்தவற்றை இங்கு அவ்வப்போது
காட்டியிருக்கிறோமே, மறந்திருக்கமாட்டீர்களே! மெய் எழுத்து முன் ஏறிநின்று  சொல் திரிந்தால். சிலபொழுதில் பொருளும் சற்று மாறும். சில வேளைகளில் பொருள் மாறுவதில்லை. பொருள் திரிபுக்கோர் எடுத்துக்காட்டாகச் சண்டை என்ற சொல் உள்ளது. பழைய இடுகைகளிற்
காண்க.

அடுத்து: இயங்கு.
================

இங்கிருப்பது இங்கேயே இருந்துவிடுமாயின்  அதில் என்ன இயக்கம் இருக்கிறது. இங்கிருப்பது அங்கு போகவேண்டும். அல்லது  சுற்றி வரவேண்டும்,  அதுவன்றோ இயக்கம் என்பது!

இடப் பெயர்ச்சியும்  இருந்தவிடத்திலேயே தன்னைத்தான் சுற்றிக்கொள்ளலும்  (சுழற்சி )   மற்றும் சுழற்சியுடன் கூடிய இடப்பெயர்ச்சியும்  இயக்கத்தில்  அடங்கும். நேர்கோடாகத் தரை நகர்வும்  மேலெழுகையும்  அடங்கும்.

Horizontal and vertical as well as circular --  all forms of movements are included.

இ =  இங்கு இருப்பது;
அங்கு =  அங்கு போகிறது.

இறுதியில் உள்ள கு என்பதற்கும் பொருள் உள்ளது.  அது பின்பு காண்போம்.

இ+ அங்கு =  இயங்கு.  இதில் யகர உடம்படு மெய் வந்தது.

இ + அ + திறம் >  இயந்திறம்  -   இயந்திரம்.

ஆறு + கரை =  ஆற்றங்கரை என்பதில் அம் வந்தது போலவேதான்.   அங்கு இது  சாரியை.

இ+ அ+ அம் +  திறம்  ( சுட்டு , சுட்டு ,  இடைநிலை, பின்னொட்டு )
இ + அ + ம்+ திறம்  ( ஓர் அகரம் கெட்டது  )
இ + ய் + அம் + திரம்  (யகர உடம்படுமெய் )  (  திறம் -  திரம்  திரிபு )
இயந்திரம்.

இயந்திரம்   - எந்திரம்.   இ > எ திரிபு.

தமிழை ஆய்வு செய்யச் செய்ய அது உங்களுடன் பேசத் தொடங்கிவிடும்.
காரணம் அது மூலமொழி ஆனதே.

Ignore any question marks appearing on your screen.

ஞாயிறு, 19 ஜூன், 2016

நவ்யா நய்யா names.

நல்   -  இது  நன்மை  என்று பொருள்படும் அடிச்சொல்.

நல்  என்பது ந  என்று மட்டும் வரின் அது கடைக்குறை எனப்படும்.

ந என்பது பின் பெயர்களுக்கு முன்  ஒரு முன்னொட்டாக வரும் .

ந + பின்னை  = நப்பின்னை   ( நப்பின்னையார் )

ந + செள்ளை  = நச்செள்ளை   (  நச்செள்ளையார் )

பழமை   காரணமாக    பொருள் கேடுறுமாதலின் ,  அது பழுது எனப்பட்டது.   இதற்கு மாறானது   நல்லது, பழுதற்றது.  பழுதில்லாதது  பழையதல்லாதது   ஆகவே புதியது.  

எனவே  நல்லது என்பதில் இயற்கையாகவே புதுமைக் கருத்துத் தோன்றியது.

நல்  >  ந >   ந +  அம்  =  நவம்  .   நல்லது.   புதுமை. :

ந +  அம்  =  நயம் . (நன்று )

ஆய்  >    ஆயா  >  ஆயாள் (  அம்மா )
ஆய்  >  ஆயி .

ஆயா என்பது முதற்குறைந்து   - யா   ஆகும்.

ஆயாவை  யா  என்றும் விளித்தல்  உண்டு.

ந +  யா =   நவ்யா    :   நல்ல  அம்மா ,   நல்ல ஆயா ,  புதிய  பெண் .  புதுமைப் பெண் .

ந + யா  =  நய்யா .  அதே பொருள் .

வகர யகர உடம்படு மெய்கள் .

நவ்யா   நய்யா என்ற பெயர்கள் வழங்கும்  -  சில இடங்களில் . 




அவள் அலையவில்லை; அவன் அலைகிறான்.

htps://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_17.html

மேற்கண்ட இடுகையிலிருந்து நாம் தொடர்கிறோம்.  நாம் சுவைத்துக் கொண்டிருப்பது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியத்தில் உள்ள சத்திநாதனார் என்னும் புலவர் இயற்றிய ஒரு பாடலை.

சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையளெம் அணங்கி யோளே.

இஃது பாங்கன் பால் ஒரு தலைமகன் கூறியதைக் கொண்ட பாடல்.

இதன் பொருளை முதலில் அறிவது நல்லது.

வெள் அரவின் ‍  =  வெள்ளைப் பாம்பின்;   சிறு அவ் வரிக் குருளை =
அழகிய வரிகளை உடைய ஒரு சிறிய  குட்டியானது ;  கான யானை = காட்டகத்தே உள்ள ஒரு பெரிய யானையை;   அணங்கியாங்கு ‍  பிடித்துக்கொண்டு கடித்துத் துன்புறுத்தியது  போல; இளையள் ‍  சிறு அகவையினள்; முளைவாள் ‍=  முளைத்து ஒளியுடன் விளங்கும்; எயிற்றள் ‍ =  பற்களை உடையவள். அதாவது: பல்லழகி;
வளையுடைக் கையள் =  வளையல்கள் அணிந்த கையை உடையவள்;
எம் =  எம்மை; அணங்கியோளே =  வருத்தியவள் ஆவாள்.
என்றபடி.

அவள்தன் ஈர்க்கும் இளமையும்  அழகிய பளிச்சிடும் பல்வரிசையும்,
கைவளைகள் எழுப்பும் ஒலியும் தம்மை வருத்தித் தாக்குவனவாகி,
த‌ம் ஆண்மை அவளுக்கு அடிமைப்பட்டதனால் "தந்நிலை தடுமாறித் திரிகின்றேம்"  என்கிறான் தலைவன்  பாங்கனிடம். 

 அவள் நிறம் வெண்மை. அவன் வயதிற் சிறியவள். அவள் வரிகளை
உடைய குட்டிப்பாம்பு.  வீரிய்த்தில் யாம் காட்டு யானை ஆயினும் அவள் கடிக்கு ஆளாயினேன். வரிகள் அவள் அழகினை உறுதிப்படுத்தும் குறிப்பு. வீழ்ச்சி எமதே என்கிறான்.

அவன் வீழ்ந்தபின், அவள் தேடி வரவில்லை போலும்.  மேலும்
வந்து சந்திக்கவில்லை போலும்.

வெள்ளைப் பெண்ணிடம் ஒரு சந்திப்பில் கெட்டான் அவன்.
அவன் பரிதவிப்பைப் காட்டுகிறது இப்பாடல்.

குட்டிப்பாம்புபோலும் ஒருத்தியிடம் தன் கட்டிளமை இழந்தவன் கதை இது. 

அவள் அலையவில்லை; அவன் அலைகிறான்.