திங்கள், 1 டிசம்பர், 2025

கோபம் என்ற தமிழ்ச்சொல்.

 இன்று கோவம் என்ற தமிழ்ச்சொல்லை அறிந்தின்புறுகிறோம்.

ஒரு நல்ல நிகழ்வு நடந்துவிட்டால், நம் மனம் மலர்கிறது.  மனமென்பது ஒரு மலருக்கு ஒப்புமையாகும் ஓர் உறுப்பு.  இது இருதயம் அல்லது இதயமாகுமென்று சொல்வர்.  ஆனால் இதை அறிவியலார் ஒத்துக்கொள்வதில்லை. எண்ணங்கள் மூளையிலிருந்தே உண்டாவதாகச் சொல்வர். கோபம் என்பது  மனம் குவிதல் அடிப்படையில் உண்டான சொல்லே.  அறிவியல் கருத்துக்கு ஒப்ப அமையவில்லை.

குவிதல், வினை.

குவி > கோவி >  கோவித்தல்,  ககர ஒற்றின்மேல் உகரம் ஏறியது,  ஓகாரமாக மாறும் திரிபு.

இவற்றைக் கவனத்தில் கொள்க.

ஊ-  ஊது,   ஓ> ஓது.  காற்றினால் எழும் ஒலிகள்.

ஊடு >  ஓடு.  ஓடுவது காற்றினூடு விலக்கிக்கொண்டு ஓடுவதானன்றோ.

பேச்சில் உகரம் ஒகரமாக ஒலிப்பதுண்டு.    உக்காரு - ஒக்காரு என்று பேசுவது கவனித்துள்ளோம்.

உச்சரி என்பது , உ- உச்சு  ( முன்வருதல்,  ஒலி முனவருதல்;  அரு+ இ>  அருகில், இவண் என்னும் கருத்துகள்,   அரு இ >  அரி.  அருகில் இங்குவருதல். உச்சு என்பதில் முன்வரவு முதலெழுத்திலும் ஈற்றிலும் வந்து  அழுத்தம் தருகிறது. உச்சி என்ற சொல்லிலும் உகரம் முன்வரவையும் இகரம் அண்மையையும் தெரிவிக்கிறது. நிற்கையில் முன்னிருப்பது உச்சி.

குவி என்பதில் குறுக்கத்தைக் குறிப்பது குகரம்.  இகரம் இங்கென்னும் பொருளது.  குறுகி இங்குத் தெரிகிறது குவிதல் என்னும் நிகழ்வு.

கோவம் என்ற முதல் வடிவம், கோபம் ஆவது வகர பகரப்  போலி  அல்லது திரிபு.  வகு> பகு என்பதைப்  போல்.

சமஸ்கிருதம்.

சமஸ்கிருதம் இந்திய மொழியே ஆதலால்,  தமிழுக்குச் சொல்வது சமஸ்கிருதத்துக்கும் ஒப்பதே.  சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பது பிற்கால ஐரோப்பியர் ஆராய்ச்சி. சீனமொழியுடன் ஐரோப்பிய மொழிகளை உறவு கற்பிக்க முயன்று தடுமாறி இறுதியில் சமஸ்கிருதத்தை எடுத்துக்கொண்டனர். இந்தக் கற்பனை மொழியுறவு, ஐரோப்பியர் ஆசியாவுக்கும் உரியவர் என்ற கருத்தை நிலைப்படுத்தவே. இதனால் ஐரோப்பிய மொழிகள் வளம்பெற்றன.  இந்தோ ஐரோப்பிய மூலமொழி என்பது கற்பனை.

திறவிடம் என்பது தென்னிந்தியாவின் திறந்த ( கடலினை எதிர்கொண்ட்)  இடம்.  திரவிடம் என்பதன் மூலமும் திற இடம் தாம். கடல்சூழ் இடத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பிராமணர்  திரவிடப் பார்ப்பனர்.  றகரம் சொல்லாக்கத்தில் வந்தால் ரகரமாகிவிடும்.   திறவிடம் > திரவிடம். மூலச்சொல் தமிழ் அடிப்படை. ஆனால் தமிழுக்காக உண்டானதன்று.  இடப்பெயர்.  கடலால் சூழ்ந்து திறந்த இடம் திற இடம் > திரவிடம். 

குவி (௳னம் குவிதல்,  மலர்ச்சிக்கு எதிர்).

குவி அம் >  கோவம். குவி கோவி திரிபு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

















சனி, 29 நவம்பர், 2025

திவ்வியம் என்பதன் தமிழ் மூலச்சொல்.

 திவ்வியம் என்ற இனிய சொல்லைக் காண்போம்.

திவ்வியம் என்றால் என்ன என்று கேட்டால்,  கேட்டவனுக்கு  திவ்வியமான ஒன்று என்ற பதில்வருமானால்,  முன்னினும் தானறிந்து கொண்டது ஒன்றுமில்லை என்றுதான் கேட்டவன் நினைப்பான். இப்போது  தி + இயம் >  திவ்வியம் என்று புணர்த்திச் சொல்லை உருவாக்கிக்  காட்டினாலும்,  தி என்பது எதைக் குறிக்கிறது மீண்டும் கேட்கத் தோன்றும்.

தித்தி என்ற சொல்லில் தி  என்பது இனியது என்னும் பொருளதாய் உள்ளது. இதைத் தீந்தமிழ்  என்ற சொல்லின்மூலம்  அறிந்துகொள்வோம்.  தீம்பூ என்ற சொல்லில்  பூ என்றால் வினைப்பகுதியாக வந்து முதனிலைத் தொழிற்பெயராக நின்று  '' தோன்றிய ஒன்று''  என்று பொருடரும். (பொருள்தரும்).  பூ என்பது நறுமணத் தொடர்புடையது என்பதால் தீம்பூ என்பதற்கு  வாசனை என்று பொருள் சொல்லவேண்டும். தீந்தமிழ் என்றால் இனிய தமிழ் என்பது பொருள்.  இதைத் தீத்தமிழ் எனலாகாது. வலிமிகின் கெடுபொருண்மை உடையதாகிறது.

ஆனால் தீம்பு என்பது  தீமை என்று பொருள்படுகிறது.  ஆகவே இங்குக் கவனம் தேவையாகிறது.  தீயது என்பது இனியது என்றும் பொருள்தருவது.  ஆனால் இற்றை வழக்கில் கெட்டது என்று பொருள்கொள்ளவேண்டும்.  தீயம் என்றால் இனிமை உடையது என்பதாகும்.  தீயம் என்பது இடைக்குறைந்து தீம் என்று வருகிறபோது இனிது என்பதே பொருள்.

தீவிய என்றால் இனியது என்பதே.  இது குறுகி,  திவ்விய என்றால் அதுவே பொருள். இனிமைப் பொருளதான தீயளி என்பது பசுங்காய் என்றாகும். தீவு என்பது நன்மைப் பொருள் தந்து , தீவாம் வாழ்வு என்றால் இனிய வாழ்வு என்றுதான் பொருள்.

இப்ப்டி முயன்று பொருளறிந்து கொள்வதினும்,  சுருக்கமாகத் திவ்வியம் என்பதை அறிந்துகொண்டுவிடலாம்.

திருவியம் ( திரு+ இயம் ) >   திருவியம்> தி( ரு )வியம் > திவ்வியம்.

திருவமைந்து நிற்பது,  இனிமையானது,  மிக்க உயர்வானது. இடைக்குறைச் சொல்.

மூலச்சொல் எது என்பது தானே புரிந்துகொள்ளத் தக்க விளக்கம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.









புதன், 26 நவம்பர், 2025

சாதுரியம்

 சாதுரியம் என்ற சொல்லிற் புதைந்துள்ளன காண்போம். 

இதன் பொருள்,   நிதானம், நினைவு, பின் தொடர்தல், பாவனை, கிரகித்தல் என்று கூறுவார்,  அகரவரிசை செய்த  அறிஞர்  கதிரைவேற்பிள்ளை.

சாதுக்கள் என்போர்,  பெரும்பாலும் சிந்தனைகளில் ஈடுபடுவோர். அதாவது கைவேலைகளில் ஈடுபடுவோர் அல்லர். மனத்தில் தோன்றும் சிந்தனைகளே இவர்கள் மக்களுக்குத் தருவன ஆகையால்,  இவர்களுக்கு உரியன சிந்தனைகளே. இவர்கள் பிறருக்குச் செயலாற்ற  உதவுவனவும் அவையேயாம்.

சாதுக்களுக்கு உரியன >  சாது + உரியன >  சாது உரியம் > சாதுரியம்.

நிதானம் தவறாமை,  நினைவுகளில் ஆழ்ந்திருத்தல், சிந்தனைகளை மேலானவையாய்க் கொள்ளுதல்,  பாவித்துரைத்தல்,  மனத்தில் வைத்தல் என்று விரித்தல் கூடும்.

யோகக் கலையில் தன்னை இறந்தவன்போல் பாவித்து  ஆசனம் கொள்ளுதலும் ஒன்றாகும்.  இது சவாசனம் எனப்படும். செத்த பொருள்போல் கிடப்பதால் சா- சாதல் எய்தியவர் போல்,  து -  தொடர்பவர். சாதல் என்ற சொல்,  இறந்தோனைக் குறிக்கையில், சவம் என்றாகும்.  சாவு+ அம் > சவம்,  முதனிலை நெடில் குறுகி சா- ச என்று குறிலாகித் தொழிற்பெயர் ஆயிற்று.  தோண்டு> தொண்டை என்பது இன்னொன்று. இவ்வாறு முதனிலைக் குறுக்கத்தை யாம் பலகாலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.  ''வாய்'' இடமென்றும் பொருள்.  அம் விகுதி வர வயம் ஆகும். வாய்> வயம்.  ஓர் இடத்திலிருத்தலே வயப்படுதல்.  இவ்வாறு சிந்தித்து அறிந்துகொள்க. இதுவும் முதனிலைக் குறுக்காய் ஆன தொழிற்பெயர்.

இறந்தோன்போல் கிடக்கையிலும் சிறந்தோனாய்ச் சிந்தனைகளுடன் இருப்பவர் சாது.

து என்பது அஃறிணை விகுதி.  சாது - செத்தது (போல்). ஒப்புமையில் உண்டான சொல்லாக்கம். ஒப்புமையால் உருப்பெற்ற சொற்கள் பல.  பழைய இடுகைகளை ஆய்ந்து பட்டியலிட்டுக் கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை