சனி, 2 மார்ச், 2024

வேசி விபசாரி இன்னும் சில



வேசி என்ற சொல்கூட, வேய்ந்துகொண்டவள் என்ற பொருளில்தான் அமைந்தது. யகர சகரப் போலியில், வேயி என்றபாலது வேசி என்றானது.. ஒப்பனைகள் பல செய்து, அரிய சேலை முதலிய துணிகளை அணிந்துகொண்டிருப்பவள் தான் வேசி. அவ்வாறு அணிந்துகொண்டிருந்த பெண்டிரை, தவறாகக் கருதி, விலைமாது என்று எண்ணி, வேசி என்றனர் என்பது தெளிவு. இப்போது அந்தப் பொருளில்தான் வழங்கி வருகிறது.  தமிழில் விபசாரி என்ற சொல்லும் . விரிந்தும் (வி ) பரந்து ம் ( ப) ஒழுகி, ஆடவர்களைச் சார்ந்து வாழ்பவள் என்ற ( சார் + இ ) பொருளில் இச்சொல் வரும்..

சாரி என்ற இறுதியைக் கண்டவுடன் மற்றவை தெளிவாகியிருக்கவேண்டும், விரிதல். பரத்தல் என்னும் கருத்துகள் மீமிசை  , ஒருவகையில் கூறியது கூறலும் ஆகலாம்.  அல்லது பொருள்திட்பத்தின் பொருட்டுத்  தரப்பட்ட அழுத்தம் என்று ஒப்பவும் கூடும்

அதனால்தான் தொல்காப்பிய முனிவர் சொன்னார் : "மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா " என்று; அவர் கவனமாகவே நூற்பா இயற்றினார். சொல் நூலும் மொழிநூலும் அறியாமல் எளிதில் "விளங்காது" என்றுதான் இதற்குப் பொருள். .

வாயி என்பது வாசி எனத் திரிந்தமை போலவே, வேயி என்பதும் வேசி ஆனது.

வாய் என்றால் இடம். இடத்திலிருப்போன் வாயி. அது வாசி ஆயிற்று. ஆகவே, சென்னைவாசி என்றால், சென்னையாகிய இடத்தவன் என்பதுதான். தோன்றும் வாய் என்றால் அது தோற்றுவாய். தோன்றும் இடம். ஆரம்பம். தொடக்கம்.

தோய்த்த மாவில் சுடும் அப்பம் தோய் > தோயை > தோசை. யகர சகரப் போலி.
 கல்லில் அப்பிச் சுடுவது அப்பம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 1 மார்ச், 2024

கச்சிதம் - சொல்லமைப்பு

 "காரியத்தைக் கச்சிதமாய் முடித்த கருப்பண்ணன் " என்று சிற்றூரார் சேர்புகழ் மிக்குரைப்பர் ,  இதனைக் கேட்டு இது என்ன சொல் என்று நீங்கள் திகைத்திருக்கமாட்டீர்கள்.  காரணம் எந்தச் சொல்லாயினும் அதைப் பயன்படுத்தி, மனத்தெழும் கருத்தினைக் கேட்போனிடம் கொண்டுசேர்ப்பதே நோக்கங்களில் உங்களுக்கு முதன்மையாய் இருந்திருக்கும் என்பதுதான்.

எந்த வேலையாய் இருந்தாலும்,  ஒன்றைப் பிழை பிசகு தவறு வழுவுதல்  குழப்பம், அரைகுறைப்பாடு  என்று அடுக்கி,  எல்லாம் எல்லாம் இல்லாத வேலைதான் கச்சிதம் என்று கூறலாம் எனினும்,  இந்த விளக்கம் -  என்ன என்ன இல்லையோ அவை அனைத்தும் இல்லாமைதான் கச்சிதம் என்கிறது.  ஆனால் இது சொல்லாய்வோனைத்  மனநிறைவுப் படுத்தவில்லை.

இன்னொரு விளக்கம் மிக்கப் பொருத்தம் என்பதுதான் கச்சிதம் என்பதன் பொருள் என்கின்றது.  பொருத்தமென்றால் என்ன?  கூடவும் இல்லை குறையவும் இல்லை -- ஏற்ற அளவு என்கின்றார்கள்.

எதைச்செய்தாலும் அழகாக இருக்கவேண்டும்.  எடுத்துக்காட்டாக, இந்த இடுகையை எழுதும்போது ஒவ்வொரு வரியும் நீட்டம் ஒத்திருக்குமாறு வரவில்லை.  படிப்போருக்கு அழகு காட்டும்படியாக வரிகள் அளவாக இருந்தால் அது கச்சிதமாக இருக்கிறது என்னலாம் என் கின்றது ஒருவிளக்கம்.  இதையும் ஒத்துக்கொண்டாலும்,  கச்சிதம் என்பது பிடிபடவில்லை.

இச்சொல் யூத மதச்சொல் என்பர். இந்தி மொழியில் ஒரு பெண்ணின் பெயர் என்றும் கூறுவர்.  இணைப்பு என்று  பொருள் என்கின்றனர்.  

இதே பொருளுடைய ஆங்கிலச் சொற்கள்:  accurate, neat,  correct, compact,  perfect.

எந்தப் பாட்டைக் கொடுத்தாலும் பாகவதர் காச்சிதமாகப் பாடிக்கொடுத்துவிடுவார் என்று  ஒரு வாக்கியமும் காணக் கிடைக்கின்றது.

ஆகவே  செய்யும் வேலை வெற்றியாய் முடிவதைக் குறிக்கும் சொல்லாகவே உருவெடுத்தது  இது வாகும். பிழைபடாமல் செய்து முடிப்பதைக் குறிக்கும் சொல். பிறகு பல்வேறு சுற்றுச்சார்புகளுக்கும் இது பயன்விரிந்த சொல்லாகும். செய்வோன் கடமை உணர்வுடன் செய்தாலே இது  நிறைவாகும்.

கடமைச் சித்தம் >   கட + சித்தம் >  கடச்சித்தம் >  (  வல்லொலியாகிய டகரம் நீங்கி)  :   கச்சிதம்   ஆயிற்று.

பல வல்லொலி நீங்கிச் சுருங்கிய சொற்களைப் பழைய இடுகைகளில் தந்துள்ளோம்.  படித்துக் குறிப்பு  எடுத்துக்கொள்ளுங்கள்.   இதில் டகரம் இடைக்குறை.  முன்பு கடமை என்பது தமிழில் கடம்,  கடன் என்றுதான் வழங்கியது.  

கடன் கடமை உணர்த்திய எடுத்துக்காட்டுகள் வருமாறு:

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்          பெரியோர்  ஆயின் பொறுப்பது கடனே.  - காண்க.

அறம் என்பது அறன் என்றும் வரும்.   "  அன்பும் அறனும்.."

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே. இதுவும் கடமையே குறிக்கும்.

கடப்பாறை என்று சொல் அமையுங் காலை கடச்சித்தம் என்று அமைதலில் வியப்பு ஒன்றும் இல்லை.

கடமைச் சித்தம் >  கடச்சித்தம் >  கச்சிதம்  

கடப்பாறை.


பண்பும் பண்ணையாரும்

 பண் என்னும் சொல், தமிழில் கேட்டின்புறுதற்குரிய இனிமையான சொல்.  இச்சொல்லிலிருந்துதான்,  பண்பு என்ற அழகிய  குணம் குறிக்கும் சொல் உண்டாயிற்று.  குணம் என்ற சொல்லும்  ஈராயிரம்  ஆண்டுகட்கு மேலும் பழமையான சொல்.  திருக்குறளிலும் பயன்பட்டு,  "  எண் குணத்தான்",   "குணமென்னும் குன்றேறி  நின்றார்"  என்றெல்லாம் வருகிறது.  குணித்தல் என்பதும் கணித்தல் என்பதும் வினைச்சொற்கள்.  எந்த மொழியில் வினையாக வருகிறதோ,  அந்த மொழிக்கு அஃது உரியது என்பதுதான் சரி என்று மேல்நாட்டு மொழிநூலார் முடிவு செய்துள்ளனர்.  எம்  கருத்துக்கு இது மிக்கப் பொருந்துவது என்று அறிக.

குணி + அம் . இவற்றைப்  புணர்த்தினால், முதலில் குணி என்பதிலுள்ள இகரம் கெடும்,------என்றால் விலக்குறும்.  குண் என்பதே அடிச்சொல்.   இதனோடு அம் ( அமைப்பு) என்பதன் அடியான விகுதியை இணைக்க,  குணம் என்று வந்துவிடும்.  குணியம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர் அமைக்கவில்லை என்று தெரிகிறது,   இதன் காரணம் இது எந்த நூலிலும் யாமும் கண்டறிய இயலவில்லை.  சிந்தித்துக் கண்டறியும் ஏதேனும் பொருளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டவேண்டின்  அதற்குக் குணியம் என்று  பெயரிடலாம்.  ஆனால் குண்ணியம் என்று ணகர இரட்டிப்புச் சொல்,  பெருக்கப்படும் எண்ணைக் குறிக்கப் பயன்படுகிறது.  (  multiplicand ).

பண்டைக் காலத்தில் பாணர்களே வீடுவீடாகப் போய்ப் பரிசில் வாங்கிச் சென்றனர்.  பரிசில் கிட்டினால் கூடவருபவனுடன் பகிர்ந்து கொள்வதால்,  பயன் சிறிதாகிவிடும். இதைச் சரிக்கட்ட, போகும் வீடுகளை மிகுத்துக்கொள்ளுதல் வேண்டும். வீட்டுக்கு வருகிறவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது வீட்டிலுள்ளோர் கருதுவதற் குரியதாகிவிடுகிறது.  பரிசில் கொடாத மன்னன்பால் பாவலன் சீற்றம் கொள்கிறபோது,  அவன் தன் பண்புநலனைக் காட்டுகிறான். இதைப் பிறர் அறியின், அச்செயலைக் குணிக்கின்றனர். பாவலன் பண்பு யாது?  வீட்டுக்காரனின் பண்பு யாது?  என்பதெல்லாம் அறிதரு பொருளாகிவிடுகிறது.  பண்பு என்ற சொல்லே இவ்வாறு தோன்றியதுதான்.  

இவ்வாறு, பாடியவர்களுக்குப்  பெருஞ்செல்வம் கிடைத்ததும் உண்டு. நிலம் வழங்கிய வள்ளல்களும் இருந்தனர்.  நன்கு பெருஞ்செல்வம் பெற்றவன், நாளடைவில் பண்ணை அமைத்துக்கொண்டு, நிலையான வாழ்வினனாகியதால்,  அவன் இடம் "பண்ணை"யாயிற்று.   பண்ணன் என்றோ பாணன் என்றோ அறியப்பட்டவன்,  பண்ணையார் என்று பின்னர் அறியப்பட்டான்.  பாணர்கள் அரசர்களாகவும் ஆகினார். பிற்காலத்து, பாணர்களும் போர்களில் ஈடுபட்டு,  தோற்றுவிட்டகாலைத்  தம் அரசை இழந்தனர். பாடிப் பிழைத்தவர்கள் செல்வம் வந்துவிட்டபின் பாடுதலொழித்து அமைதியாக வாழ்ந்த காலத்து வந்த சொல்லே பண்ணை என்பதாகும்.  பண்ணையின் கட்டிய வீடு  பண்ணைவீடு  ஆயிற்று.  பண்ணை ஐய( ர் ) வீடு  என்றும் இது  குறிக்கப்பட்டது.  ரகர ஒற்று வீழ்ந்த கூட்டுச்சொல்,  இது பண்ணைய வீடு ஆனது.(பண்ணை ஐயா வீடு என்று இதை உணர்ந்து கொள்ளலாம்).

பாடுவோர் இருந்த, --------  பாடி  வெளியில் வந்து கேட்போர் அவர்களின் இல்லமாய்க் கருதிய இடமே பண்ணை.  அந்தப்  பொருண்மை கால ஓட்டத்தில் ஒழிந்தது.  பாணர் விளைச்சல் வேலைகளில் ஈடுபட்டதால்,  பொருள்  மாறிற்று.

பாண்பெண்,  சிறந்த குணத்தினள் ஆகி.  பாண்+ சால்+ இ > பாண்சாலி> பாஞ்சாலி  ஆயினாள். தெய்வமாயினாள்.   சாலுதல் நிறைவு.  சால்பு என்ற சொல்லும் அறிக.  தண்+ செய் >  தண்செய்,  தஞ்சை  ஆனதுபோல்.

இன்னும் சொற்களைப் பின் அறிவோம். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சில திருத்தங்கள்: 03032024 0328