திங்கள், 6 பிப்ரவரி, 2023

பிற்பாடு தெரிந்த பண்புநலன்.

 அடிக்கடி அக்காள் வீட்டுக்கு போய்வருவேன்.  அப்போது அக்கள்,    வீட்டிலிருக்கும் பலகாரங்களுடன் கொழுந்து ( தே)  நீரும் தருவாள். நான் போவது பெரும்பாலும் சம்பளநாள் முடிந்து மறுநாளாகவோ அதற்கு அடுத்த நாளாகவோ இருக்கும். கால்வாசிச் சம்பளத்தை அவளிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். அதை அவள் புருடன்1 வாங்கி,  மதுவை அருந்தி மகிழ்வதாகத் தெரிந்தது.  நான் பார்க்கவில்லை.

அப்பால் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில்  ஒரு  நண்பர் எதிரில் வந்தார்.  அவர்பெயர் சுப்ரத்.    சுப்ரத் என்ன உன் அக்காளைப் போய்ப் பார்க்கவில்லையா என்று கேட்டார்.  இப்போதுதான் பார்த்துவிட்டு வருகிறேன் என்று அவரைத் தேற்றினேன்.  அவர் சொந்த அக்காளைப் பற்றிய கவலையைத் தீர்த்துகொள்வது போல பின் எல்லாவற்றையும் கேட்டறிந்துகொண்டார் சுப்ரத்  (  சுப்புரத்தினம்).

பின்பு நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.  வீட்டிலுள்ள வேலைக்காரி,   செடிச்சட்டியில் இருந்த நீரில் கொசு வளர்ந்துகொண்டிருந்ததைக் கவனிக்காமல் விட்டுவிட்டதால்,  அரசுக்குத் தண்டம் கட்டவேண்டி வந்துவிட்டது.  300 வெள்ளி  அதில் போய்விட்டது.   அப்புறம்  எனக்கும் மருத்துவரைப் பார்க்க வேண்டி ஏற்பட்டு   அதில் ஒரு  $120  .(வெள்ளி)  போகவே,  அக்காளுக்கு எந்தத்  தொகையும் கொடுக்க முடியாமல் போய்விட்டது.   அக்காள் புருடன்,  மதுவருந்தக் கிட்டும் தொகையில் குறைவு ஏற்பட்டுவிட்டது.  அக்காள் வீட்டில் சண்டை என்று செவிகளுக்கு எட்டியது.

சில நாட்களில் தெருவில் போய்க்கொண்டிருந்த போது முன் பார்த்த அவரே எதிரில் வந்துகொண்டிருந்தார்.  வாழ்த்து வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டபின்,  அக்காள் வீட்டுக்குப் போய்க் கவனித்தாயா என்றுகேட்டார்.  உன் அக்காவைப் போய்ப் பார்,  போகாமல் இருக்காதே என்று  மென்மையான எச்சரிக்கை செய்தார்.  அதிக வேலைகளாக இருந்ததால் அடுத்தமாதம் தான் போகவேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டேன்.

இவரும் என் அக்காள் புருடனும் ஒரே இடத்தில் வேலை செய்வதால், இருவரும் நண்பர்கள். ஒன்றாக மதுவருந்தும் அளவுக்கு நெருக்கம்.  இதை ஒரு மூன்றாமவரிடமிருந்து  ஒருநாள் தெரிந்துகொண்டேன்.   அக்காள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தாயா என்று அவர் கேட்பதில் " அர்த்தம் "2 இருக்கிறதல்லவா? ஆனால் இது முதலில் எனக்குப் புரியவில்லை.   இதை ஒருவர் சொன்னபின்தான் அதுவும் எனக்குப் புரிந்தது.


பின்னுரை: 

மேல உள்ள எண்களைப் பின்பற்றிய உரை.  இதை அடிக்குறிப்பு என்பர்.  ஆங்கிலத்தில் footnote.(s)

1புருடன் - புருவம் போன்றவன்.  கண்போன்றவன் என்ற பொருளில் வரும் சொல் கணவன். ( கண் அவன் >  கண்ணவன்> கணவன் என்பது இடைக்குறை3) 

2 அர்த்தம் -  இச்சொல்லைப் பெரும்பாலும் அருத்தம் என்றுதான் பேச்சு வழக்கில் சொல்வார்கள்.  அருந்து -  அருத்தம். இதேபோல் பொருந்து - பொருத்தம்.  அருத்தம் -  அர்த்தம்.   சொற்கள் பொருளை அருந்திக்கொள்கின்றன.  Meanings are fed into words.  அதனால் அருத்தம் என்பது பொருள் என்று புரிந்துகொள்ளல் வேண்டும்.  அருந்து >  அருத்து;  இது ஒரு பிறவினைச் சொல்.  பொருத்து , இருத்து என்பன போல.

3 இடைக்குறை.   இதுவும் தொகுத்தல் என்பதும் இங்கு வேறுவேறாகக் கருதப்படமாட்டா/[து].  நன்னூல் முதலிய இலக்கணநூல்கள் வேறுபடுத்தும்.. இலக்கண மாணவர்கள் அதுவே தொடர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

கடைச் சாப்பாடு முடிந்தால் தவிர்

 கடைகளில்  சாப்பிடும்  போது-----  தம்பி,

கையுடன் கண்களும் நன்றாய்,

இடையிடை வைத்திடும்  உணவில் ---- நெடுங்

கவனமும்  கொண்டிட   வேண்டும்.


பூச்சிகள் வண்டுகள்  இருக்கும் ----  நோய்கள்

புசித்தபின்  போர்தரும்  உடலில்;

காய்ச்சல் தலைவலி  வாந்தி  --- எனக்

கண்டவை வந்துனைத் தாக்கும்.


வருமுன் காப்பதே  மேன்மை --- இன்றேல்

வந்தபின் பயன்சிறு பான்மை!

இருவளர்  காலம் காறும்  ---- உனக்கு

இல்லத்து உணவெனில் வான்மை.



வான்மை -  உயர்வு.

இருவளர்....... -  நீண்டகாலம், (வாழ்நாள்)

இன்றேல் -   இல்லாவிட்டால்

காறும்  -  வரை. (  வாழும் காலம் வரை என்பதுபோல் பொருள்)



இதை வாசித்து உணரவும்:

Woman claims she found cockroach in curry rice at Yishun eatery (msn.com)


சனி, 4 பிப்ரவரி, 2023

திருடும் வழிகளும் தடுக்கும் முறைகளும்.

 ஒரு நாள் கோயிற் பூசையின் போது இலவசமாக வசதிகுறைந்த சிலருக்கு வழங்குவதற்காக வென்று அம்மன் அருகில் இருந்த மேசையில் வைத்திருந்த சேலைகள் சில காணாமற் போய்விட்டன  .   தேடிக் கிடைக்காததால் கொஞ்சம் காசுபோட்டு அதை ஏற்பாட்டாளர்களான யாமே வாங்கிக் கொடுக்க வேண்டிய தாயிற்று. கொஞ்சநேரம் கழித்து இடைவேளைபோல் கிடைத்தபோது,  தலைமை தாங்கிய ஐயர் வந்தார்.  "திரைக்கவி பாடிய  :  "திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற வரிகளை வாய்மொழிந்து , என்ன செய்யமுடியும் என்ற ஏக்கத்தை முன்மொழிந்தார்.  யாமும் காசு எப்படி யெல்லாம் நம்மை விட்டு ஓடிப்போகிறது என்று கவன்றவா றிருந்தோம்.  தவறாமற் கண்டுபிடித்துச் சொல்லும் திறந்தெரி சோதிடர்கள் அருகிலே இருத்தப் பட்டிருந்தால்,  ஒருவேளை இத்திருட்டு தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

"கூடுவிட்டு ஆவிதான் போனபின்னே யாரே அனுபவிப்பார், பாவிகாள் அந்தப் பணம்"  என்று ஒளவைப் பாட்டி சொன்னதைக் கேட்டு,  இலக்கிய நயம் தோய்ந்த யாரும்,  இன்னொரு முறை அந்தச் சேலைகளை வாங்கிக் கொடுக்காமலிருக்க,  இயல்வதில்லை.  கோவிட்  என்னும் இந்தத் தொற்றுவளர் காலக்கட்டத்தில்,  பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே திருட்டுகள் மிகுவது இயல்பு என்னலாம்.  வேலையில்லாமற் போய் வீட்டிலிருந்துகொண்டு காய்ந்த உரொட்டியுடன் காலை உணவை முடித்துக்கொள்ளும் இரங்கத்தக்கோர்,  இதைச் செய்துவிட்டனர் என்று நினைப்பதை விட்டு,  கண்டிக்கப்படாமல் வளர்க்கபட்டு, பழக்கத்திருட்டில் ஈடுபடும் அறத்திறம் வேர்க்கொள்ளாத மாக்களில் ஒருவர் இதனைத் செய்திருக்கவேண்டும், என்பதே சரியாக இருக்கும். 

மருந்தகத்தில் மாத்திரைகள் புதியன வந்தவுடன் அவற்றைக் கேட்பவர்க்கு விற்காமல்,  இதை எவ்வாளவு நாளாக உண்கிறாய், நன்மை ஏதும் கண்டாயா என்று கேட்டுத் தடுமாற விட்டு, காலக்கடப்பினால் அவை அப்புறப்படுத்தப் பட்ட பின்னர் எறியப்படுங்காலை மறைமுகச் சந்தையில் யாரும் வெளிக்காணாத தருணத்தில் விட்டெறியும் விலையில் விற்றுக்கொஞ்சம் கிட்டுமானால்,  அதனாற் பிழைப்பவர்களும் உலகில் இல்லை என்று கூறிவிடமுடியாது.  பிழைப்பு என்பதும் பலதிறப்பட்டது.  பிழைபடு வழிச்செல்வோரும் நன்கு பிழைக்க வழியுள்ளது,  பிழையஞ்சுவார் வாடவும் நேர்தலுண்டு.

திருட்டை ஒழிக்க முயன்ற வரலாற்றின் முதற் பேரரசன்,  ஹம்முராபி என்னும் மத்தியக் கிழக்கினன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அந்தக் காலத்தில் சட்ட நூல்கள் என்று தனியாக யாதும் இல்லை.  ஹம்முராபி, பெரும்கற்பலகைகளில் எழுதி,  யாவரும் காண பலர் நடமாடும் இடங்களில் வைத்துத் திருட்டினைக் கண்டித்தான். பழங்காலத்தில் சட்டம் என்று சொல்லத்தக்கவை, அறநூல்களின் இதழ்களில் பிணைந்திருக்கும்.. மனுவின் சாத்திரம்,  சட்டம் எனத்தகும் முதனூல் என்னலாம். குற்றவியற் சட்டமும்,  மன்பதைச் சட்டமும் ( வாழ்வியல் விதிகள் ) இன்னபிறவும் கலந்துறையும் நூல்கள் இது போல்வன.

எப்படி எப்படி எல்லாம் திருடலாம் என்று கூறும் நூல் யாரும் தனியாக எழுதியதாகத் தெரியவில்லை.   தடுக்கும் முறைகள் பற்றிய நூல்களிலிருந்து அவற்றை அறிந்துகொள்ளலாம். இல்லாவிட்டால் திருடனிடமிருந்து நேராகத் தெரிந்து இன்புறலாம்.  திருட்டு நிகழ்வுகளை  அவை அறியவைக்கும்.  இந்தச் செய்தியைப்  படித்து  சிறிது அறிந்துகொள்ளுங்கள்.

இங்குச் சொடுக்கவும்:-

Woman claims she found cockroach in curry rice at Yishun eatery (msn.com)

விடுமுறைக்குப் போகிறீர்கள்?   வீட்டிலிருக்க முடியாமல். உங்களுக்குப் பாடம் இதோ!

‘Taking a Rolex on a trip like that is asking for it,’ netizens tell actor whose cash & watch worth $20K were stolen in Phuket - Singapore News (theindependent.sg)


நீங்கள் கடிகாரம் அணிந்த உடன், உங்களுக்கு ஒரு பாட்டு வேணுமா?


இன்றொரு நாள் போதுமா?  ---ரோலக்ஸ்சுக்கு

இன்றொரு நாள் போதுமா-  கையில் கடி காரத்துக்கு

இன்றொரு நாள்  போதுமா---- நாளைத் திருட்டுக்கு

எனக்கிது தோதம்மா!


என்று திருடன் பாடிக்கொண்டே வருவான்.


( இந்தச் செய்தியை வாசிக்க இந்தச் செய்திச்செருகலில் சொடுக்குங்கள் )


https://theindependent.sg/taking-a-rolex-on-a-trip-like-that-is-asking-for-it-netizens-tell-actor-whose-cash-watch-worth-20k-were-stolen-in-phuket/?

அறிக.

மெய்ப்பு  பின்