புதன், 23 நவம்பர், 2022

உங்களின் போட்டியாளன்யார்? சொல்: சடுத்தம்.

 நீங்கள் வாழுமிடத்திலிருந்து  ஆயிரம் கல்தொலைவில் உங்களை அறியாத ஒருவன் வாழ்கிறான்.  அவனுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை.  அவன் உங்கள் எதிரியாக ஆகிவிடமுடியாது. உங்களுடன் கூடித் திரிபவன் தான் உங்களுக்கு எதிரியாக வருவதற்கு மிக்கப் பொருத்தமான இயல்புகளை எல்லாம் வெளிக்காட்டி, நாளடைவில் முழு எதிரியாக மாறத் தக்கவன்.

அடுத்திருக்கும் நண்பனே  உங்கள் எதிரி.  அதற்கான கால நேரம் வந்துவிட்டால் கணவனும் எதிரியாவான்; மனைவியும் எதிரியாவாள்.

ஔவைப் பாட்டி என்ன சொன்னாள் என்பது உங்களுக்குத் தெரியும்.

" உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா;

உடன்பிறந்தே கொல்லும் வியாதி ----- உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரு முண்டு"

என்றது பாட்டியின் மூதுரை.  

உறவும் பகையாகிவிடும்; நட்பும் நஞ்சாகிவிடுவதுண்டு.   ஆகவே எதையும் ஒருகை நீட்டத்துக்கு எட்டவிருந்து கையாளுதல் எப்போதும் நல்லது.

இந்தக் கருத்து, சொல்லமைப்பிலும் இடம் பிடித்துள்ளது.

"அகலாது அணுகாது தீக்காய்க " என்கின்றார் தேவர்தம் திருக்குறளில்.  அது நண்பனுக்கும் பொருந்தும். 

இதையே தெரிவிக்கிறது சொல்லாய்வு.   

போட்டி பகைமையாகவும் மாறும்.   சடுத்தம்  என்பது அடுத்தியலும் போட்டி.

அடு (த்தல்) >  சடு >  சடுத்து + அம் >  சடுத்தம் ஆகிறது.

ஒரு காலத்தில் இச்சொல்வழங்கி  நல்ல வேளையாக இன்னும் நிகண்டுகளில் உள்ளது.  நம் நற்பேறுதான்.

நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வீரம் பேசுவதும் சடுத்தம் பேசுதல் எனப்படும்.

இந்தியாவுக்கு அடுத்தது பாகிஸ்தான்.  அதற்கடுத்தது ஆஃப்கானிஸ்தான்.

உக்ரேன் ரஷ்யாவினின்று பிரிந்தது.  அடுத்துள்ளது.

இவையெல்லாம் பிறப்புக்கணிப்புகளின்படி தொடர்வது.

அடு > சடு என்பது உங்களுக்குத் தெரிந்த அகரச் சகரத் திரிபு.   அமணர் > சமணர் என்பது போலும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




சத்துரு என்பது தமிழ்த் திரிபுச் சொல்.

 இன்று சத்துரு என்ற சொல்லைச் சிந்தித்து அறிந்திடுவோம்.

நட்புடன் நம்முடன் இருப்பவனை நாம் நண்பன் என்கிறோம்.  ஆனால் சத்துருவுடன் நட்பு என்பதோ இல்லை.  நட்பு அற்றொழிந்த நிலையில்தான்  சத்துரு இருக்கிறான் என்பது இச்சொல்லுக்குப் போதுமான சொல்லமைப்பு விளக்கமாகும்.

நட்பு அற்று ஒழிந்த நில்லையில் எதிர்ப்பு மனப்பான்மை உருவெடுத்துவிடுகிறது.

அகரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாகத் திரியும். பலசொற்களை முன் இடுகைகளில் காட்டியுள்ளோம்.  ஒன்று இவண் நினைவுபடுத்திக் கொள்வோம்.  

அமண் >  சமண் > சமணர்.

இன்னொன்று வேண்டுமானால்,  அடு> சடு> சட்டி  ( சடு+ இ).

அடு என்பது அடுப்பில்வைத்துச் சூடேற்றுவது.

இனியும் ஒன்று:  அடர்-  அடை > சடை.  இது ஜடை என்று உருக்கொள்ளும்.

அடர்-  அடை முதலிய ஒரு மூலத்தில் தோன்றியவை.  அடிச்சொல்  அடு என்பது.

அடர்முடி > ஜடாமுடி. 

நட்பு அற்று உருவெடுப்பவன் :  அற்று உரு>  அற்றுரு>  அத்துரு>  சத்துரு.

இப்போது இதன் தமிழ்மூலம் நல்லபடி புரிந்துகொள்ளும் நிலைக்கு உங்களைக் கொண்டுசெல்கிறது.

இன்னொரு சொல்:  சகி என்பது.  ( தோழி).

அகம் >  அகி > சகி.

தலைவியுடன் அகத்தில் தங்கிப் பார்த்துக் கொள்பவள்:  சகி.

அகக் களத்தி >  சகக்களத்தி > சக்களத்தி.   அ - ச.

இயற்சொற்களுக்கு அடுத்து திரிசொற்களைக் கூறினார்  தொல்காப்பிய முனிவர்.  காரணம் என்ன?   திரிசொற்கள் இயற்சொற்களுக்கு  அடுத்துக் கூடுதலாக இருந்தமைதான்.

இன்று யாம் கணக்கெடுக்கவில்லை. திரிசொற்கள் பெருகி, இனமொழிகளும் தோன்றிவிட்ட படியால், திரிசொற்களே மிகுதி. 

எடுத்துக்காட்டு:  

வரு  ஓ >  ( பரு ஓ) > பாரோ    (  வருவாய், வாராய்).

இன்று, அற்று ( நட்பு அற்று) உருவெடுப்பவனே சத்துரு என்றறிக.

இந்த மாதிரித் திரிபுகளெல்லாம் இலக்கணங்களில் காட்டப்பெறா.

( மா = அளவு. திரி =  திரிக்கப்பெற்றது.   மாதிரி - அளவாகத் திரிக்கப்பட்டது.).

சத்துரு:  பிற வகையில் திரிந்ததாகவும் கொள்ளும்  இச்சொல் ஒரு பல்பிறப்பி.

"சத்துராதிப்பயல்" என்பது சிற்றூர்வழக்கு. சத்துரு என்பது சோதிடர்களுக்குப் பிடித்தமானது  ஆகும்.  சத்துரு தொல்லை என்பர்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



வெள்ளி, 18 நவம்பர், 2022

காரணம், காரணி சொல் புரிதல்.

 கரு என்பது ஒரு பெண்ணின் உள்ளிருப்பது. அதை வெளித்தெரியும் பிற அறிகுறிகளால் தெரிந்துகொள்கிறோம்.

கருமேகத்தில் உள்ளிருக்கும் நீர் நமக்குக் கண்ணுக்குத் தெரியவில்லை. அதிலிருந்து மழைபொழிவதால்,  நாம் நீரிருப்பதை  அடையாளம் கண்டுகொள்கிறோம்.

கரு >  கருது > கருதுதல்.

கருவுற்ற மானிடப் பிறவியும்  கருக்கொண்ட மேகமும் நம் முன்னறிவினால் அறிந்துகொள்ளப்படுவன போலுமே,  கருதுதல் என்பது மனவுணர்வினால் நடைபெறுகிறது.  கருது ( வினைச்சொல்) > கருத்து ( பெயர்ச்சொல்) noun formed from a verb.

ஒரு நிகழ்வுக்கான காரணம் காரணி எல்லாம் இத்தன்மையவாம்.

கரு என்பதிலிருந்து காரணம், காரணி என்ற சொற்கள், தமிழில் அருமையாக அமைந்தவை.  வெளியில் தெரிவன அல்ல.  சுழியனுக்குள் பாசிப்பருப்பும் சர்க்கரையும் போல.  மேலுள்ள மாவுத்தோலை நீக்க,  இனிய உள்ளிருப்பு நாவில் பட்டு இனிமை தருகிறது.

கருது என்ற வினையமைப்பை உணர்ந்து யாம்  இன்புற்றோம்.

தமிழ் என்ற சொல்லுக்கே 100 பொருள் சொன்னார் பெரும்புலவர் கிருபானந்த வாரியார்.  என்னே சொற்களின் இனிமை.

கருத்தினை அண்மி  ( நெருங்கி அணைந்து)  நிற்பன காரணம், காரணி எல்லாம்.

கரு +அண் + அம் >  கார் + அண் + அ,ம்>  காரணம்.

கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய் காலமே கார்காலம்.

கார்மழை  -  இவ்வழக்குகள் தெளிக.

காரணங்கள் உடன் தெரிவதில்லை.  சிந்திக்கத் தெரிவன---- கண்களுக்கு,  கருத்தும் மனத்துக்கு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.