வெள்ளி, 7 அக்டோபர், 2022

பிரிந்தோர் சேர்ந்துவிட்டால்....

 தொன்மக் கதைகளில் ஓர் அரக்கன் வருவான்.  மிகப் பெரிய ஆற்றலுடையோன் ஒருவன் அந்த அரக்கனை இரு கூறாக்கிவிடுவான்.  அப்புறம் இரு கூறான அரக்கன் இரண்டு பக்கமும் வந்து இருகூறிணையாய்த் தோன்றித் தாக்குவார்கள்.  இத்தகைய கதைகள் என்ன கூறுகின்றனவோ, அவை இன்றும் நடந்துகொண்டுதாம் உள்ளன.  ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்துவிட்டாலும் பின்பு இரண்டும் இணைந்துகொண்டு பிரித்தவனை வந்து தாக்குவதும் நடைபெறக்  கூடியதுதான்.  பிரிந்தவர்கள் சேர்ந்துவிடாமல் இருக்கவும் ஓர் அரசதந்திரம் இருக்கவேண்டும்.  அது தொலைநோக்குடன் செயல்படுத்தப் படவேண்டும்.  முன் காலத்தில் அது சற்று எளிதாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்றைய மக்களாட்சி நாடுகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்வதால்,  நாம் எதிர்பார்க்கும் ஒற்றைத் தொலைநோக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது.  அதனால் பிரித்தவன் அடித்து நொறுக்கப்படுவதும் நடைபெறக்கூடும்.  உலக அரசியல்களைக் கவனித்து இதனை உணரவேண்டும்.


இருகூ றானோர் இணைந்தொன்  றாய்வந்தும்

ஒருசேர நின்றுபோர் நடத்தலும் கூடுவதே;

பிரிவூர நின்றோர் பிரிந்தவா றிருந்துவிட

அறிவார்ந்  தவைசெயல் அரசுதந்  திரமாமே.


இரு கூறு --  இரண்டு துண்டுகள்

ஒருசேர - ஒற்றுமைப் பட்டு

கூடுவதே - சாத்தியமே

பிரிவூர -  பிரிவு ஊர -  பிரிந்து நின்றிடும் வண்ணம்

அறிவார்ந்தவை ---  அறிவோடும் கூடிய உபாயங்கள்.

அறிவார்ந்தவை  =  ராசதந்திரங்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



திங்கள், 3 அக்டோபர், 2022

சேதாரம் என்பதென்ன?

 இன்று சேதாரம் என்பதென்ன என்று தெரிந்துகொள்வோம்..

கத்தி ஒன்று, கத்தரிக்காயை வெட்ட இயலாததாய் உள்ளது.  அக்கத்தியை ஒரு கல்லில் தேய்த்தால் அது கூராகிவிடும்.  ஆனால் தேய்க்கும்போது,  கத்தி கூராவதோடு, சிறிதளவு தேய்ந்தும்போகிறது.  கத்தியைத் தேய்க்காமல் அதைக் கூராக்க முடிவதில்லை.  இதைத்தான் கத்தியில் ஏற்படும் தேய்மானம் என்கின்றோம். இதைச் சேதாரம் என்றும் சொல்வதுண்டு.

நகை செய்யத் தட்டாரிடம் சென்று பேசும் காலை, செய்யும்போது ஏற்படும் தேய்மானத்தை வேறு சொற்களால் கூற முடியுமென்றாலும் பெரும்பாலும் சேதாரம் என்றுதான் சொல்வது வழக்கம்.  

இதன் அடிச்சொல் " செது" என்பது   இதிலிருந்து செதுக்கு என்ற சொல் ஏற்படுகிறது. ஒரு சிலையைச் செய்கையில், எல்லாக் கல்லையும் வீணின்றிச் செய்யமுடிவ தில்லை.  

இதே அடிச்சொல்லில்

செது + ஆர் + அம் >  சேதாரம் என்று அமைகிறது.

ஆர்தல் என்பது சூழநிகழ்தலையும் குறிக்கும்.  இது பரவற் கருத்து.  ஓரிடத்தில் மட்டுமின்றி இத்தேய்மானம் சுற்றிலும் ஏற்படுவதுண்டு. பொன்னோ இரும்போ உருக்கப்படுகையில் எந்த இடத்திலும் செய்பொருளில் தேய்மானம்  ஏற்படும்,

பரவலாக ஏற்படும் சேதம் ஆதலின், சேதாரம் என்பது நன்கு பொருளை விளக்கவல்ல சொல்.

செது + அம் =  சேதமென்றும் ஆகும்.

இவை இரண்டுமே முதனிலை திரிந்து விகுதி பெற்ற சொற்கள்.

சுடு> சூடு என்பது முதனிலை திரிந்து பெயரமைதற்கு எடுத்துக்காட்டு. வினைச்சொல் அல்லாதவையும் இவ்வாறு திரியும்.  இவற்றை பழைய இடுகைகளில் படித்துப் பட்டியலிட்டுக்கொள்க.

பது > பதி ( வினைச்சொல்).  ஆனால் பது என்பது வினையாக வழங்கவில்லை. பது +ஆம் > பாதம் ஆகும்.  இதைப் பதி+ அம் > -பாதம் எனினும் அதுவே.

அடிச்சொல்லிலிருந்து வினையும் தோன்றும். பெயரும் தோன்றும்.

செது என்பது அடிச்சொல்லாயினும் அது வினைச்சொல்லன்று.  உரிச்சொல் ஆகும்.  செது என்ற சொல் எவ்வாறு தோன்றியிருக்கு மென்பதை இன்னோர் இடுகையில் கவனிப்போம்.

செய்துதருதலில் வரும் தேய்மானம்,  ஆதலின் செய்தாரம் > சேதாரம் எனினுமாம்.  செய் > சே என்றும் திரியும் ஆதலின் இது ஓர் இருபிறப்பிச் சொல்.

எ-டு:  செய்தி >  சேதி. குறில்முதல் நெடில்முதலாதல்.

பருவதம் > பார்வதி.

அறிக மகிழ்க

மெய்பு பின்னர்.

சனி, 1 அக்டோபர், 2022

கிழவர்களுக்கே உரிமை இளைஞனுக்கோ இல்லை

 எந்தச் சொல் எதற்காகப் புனையப்பட்டதோ,  அந்தப் பொருளிலே அது காலமும் கடந்து தொடர்ந்து வழங்கிவிட்டால்,  கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வுகளில் அதுவும் ஒன்று என்று துணிந்து  எடுத்துக்கூறலாம். தேவதாசி என்ற சொல் இறைவனை வணங்கி வாழும் பெண்களுக்கு என்று உண்டாக்கப் பட்ட சொல் என்றாலும்,  பின்னாளில் அதன் அமைப்புக்கு ஒவ்வாத பொருளில்  அது பேசப்பட்டது.  

வேசி என்ற சொல்கூட,  வேய்ந்துகொண்டவள் என்ற பொருளில்தான் அமைந்தது. யகர சகரப் போலியில்,  வேயி என்றபாலது வேசி என்று திரிந்தது. தமிழன்று என்றும் தவறாக எண்ணப்பட்டது.  ஒப்பனைகள் பல செய்து, அரிய சேலை முதலிய துணிகளை அணிந்துகொண்டிருப்பவள் தான் வேசி. அவ்வாறு அணிந்துகொண்டிருந்த பெண்டிரை,  தவறாகக் கருதி,  விலைமாது என்று எண்ணி,  வேசி என்றனர் என்பது தெளிவு. இப்போது அந்தப் பொருளில்தான் வழங்கி வருகிறது. இவற்றை எல்லாம் கேட்டு கவலைப் பட்ட ஒரு தமிழன் விபசாரி என்ற சொல்லைப் படைத்தான்.  விரிந்தும் (வி ) பரந்து ம்  ( ப) ஒழுகி, ஆடவர்களைச் சார்ந்து வாழ்பவள் என்ற ( சார் + இ ) பொருளில் இச்சொல் வந்தாலும்.  இதை அறியாமல் இதையும் தமிழன்று என்று சொல்லிவிட்டனர்.

அதனால்தான் தொல்காப்பிய முனிவர் சொன்னார் :  "மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா "  என்று;  அவர்  கவனமாகவே  நூற்பா இயற்றினார். சொல் நூலும் மொழிநூலும் அறியாமல் உனக்கு விளங்காது என்றுதான் இதற்குப் பொருள். விளக்கவேண்டாம்! ஒரு சொல்லின்பால் கொஞ்சமாவது விளக்கு வெளிச்சம் பட்டால்தான், அது விளங்கும் ( ஒளி வீசும்).

வாயி என்பது வாசி எனத் திரிந்தமை போலவே,  வேயி என்பதும் வேசி ஆனது.

வாய் என்றால் இடம்.  இடத்திலிருப்போன் வாயி.  அது வாசி ஆயிற்று.  ஆகவே, சென்னைவாசி என்றால்,  சென்னையாகிய இடத்தவன் என்பதுதான். தோன்றும் வாய் என்றால் அது தோற்றுவாய்.  தோன்றும் இடம்.  ஆரம்பம்.  தொடக்கம்.

தோய்த்த மாவில் சுடும் அப்பம் தோய் > தோயை > தோசை.  யகர சகரப் போலி.

இவ்வளவும்,  சொல்லும் பொருளும் திரிந்துவிடுதல் நடைபெறுவதுதான் என்று உணர்த்தவே கூறினோம்.

கிழ என்றால் உரிய என்று பொருள். கிழம் + அன் > கிழவன்.  இதற்குப் பொருள்:  உரியோன் என்பதுதான்.  கிழவி  என்றால் உரிமை உள்ளவள்.  இவை எல்லாம் முதுமை காட்டும் சொற்களாய்த் திரிந்துவிட்டன.  கிழார் : இது வேளிர் பட்டப்பெயர்.  ஆலங்கிழார்,  மூலங்கிழார்  என்பன எடுத்துக்காட்டுகள். பயிர்த்தொழில் முதலாளிகள் என்னலாமா?   சனிக்கிழமை என்பதில் கிழமை என்றால் ( சனிக்கு) உரிய நாள் என்பது.  கிழான் என்பது வடமாநிலங்களில். கிஸான் ( கிசான்) என்று திரியும். 

ஒரு செடிக்கு உரிய இடம் அது வேரைக் கீழிறக்கும் ( மண்ணிற் செலுத்தும்) தரைதான்.  கிழங்கு என்பதும் வேர்தான். கீழிருப்பது.  கீழ் > கிழங்கு.  உரிமைப் பொருள் தாவரங்களின் வளர்ச்சிகளால் ஏற்பட்டது. நிலத்தில் நிலைகொள்வதுதான் எல்லா உரிமைகளிலும் மூத்த உரிமை.  கிழவர்களை கிழவியரை  மூதுரிமையர் என்ற புதுத்தொடரால் புகழவேண்டும்.

இந்த உரிமைக் கருத்து இளையர், இளைஞர் என்ற சொற்களில் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்