வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

நகரனைத்தும் போற்றத்தக்க நல்லழகுச் செடிகள்


 அன்பின் பிணைப்போதான்  ஆர்வளம் சேர்செடிகள்

ஒன்றின் உடல்தன்னை ஒன்றுபற்றி  ----  மென்குழைவில்

தோய்ந்திவ் வுலகின்பம் துய்த்தெழுந்து   தோன்றின

ஆய்ந்துணரா அன்புத்  திறம்.


இதன்பொருள்:  ஆர்வளம் சேர்செடிகள்  -   நல்ல வளமுடன் மேலெழும் இந்தச் செடிகள்,   அன்பின் பிணைப்போ --- அன்பின் பிணைப்பையோ காட்டுகின்றன?    ----  மென் குழைவில்  - மென்மையாக மனம் குழைவினால்,  ஒன்றின் உடல்தன்னை ஒன்றுபற்றி  ---  கட்டிப்பிடித்துக் கொண்டது போல,  தோய்ந்து --  ஆழ்ந்து,  இவ்வுலகின்பம் துய்த்து எழுந்து ---  பற்றின் காரணமாய் வரும் இவ்வுலகின் உடலின்பம் பெறுவதுபோல்,   தோன்றின -  அப்படிக் காட்சி அளிக்கின்றன,  ( இது)   ஆய்ந்துணரா -   ஆராய்ச்சி செய்து உணரவியலாத, அன்புத் திறம் -  அன்பின் வந்த வன்மை.




குவைத்தொட்டி  மூடி  குறுகும் இடத்தில்

நவைதீர்ந்த நல்லழகாய் நட்டார் ---- இவைசீர்த்த

தூயநக  ருக்குத் துளிகவின் சேர்த்தன

மேய நலச்சித்தம்   மேல். 

இதன் பொருள்: குவைத்தொட்டி மூடி(க்குக்)  குறுகும் இடத்தில் -  அடுக்குமாடி வீட்டில் குப்பை கொட்டும் வீழ்பாதையின் மூடி இருக்கும் இடத்தில்,  நவைதீர்ந்த நல்லழகாய் நட்டார் --  குற்றமொன்றும் இல்லாத இனிய அழகினைச் சேர்க்கும் பொருட்டு, இச்செடிகளை நட்டுவைத்தனர்;   இவை -  இவ்வாறு அழகுறுத்துதலானது,  தூய நகருக்கு -  உலகின் மிக்கத் தூய்மையான நகரென்று பெயரெடுத்த சிங்கப்பூருக்கு,   துளி கவின் -  ஒரு சிறு திவலை போலும் அழகையாவது சேர்த்துள்ளன,  மேய -  மேற்கொண்ட,    நலச்சித்தம் -  நல்ல சிந்தனை,  மேல் - மிகவும உயர்ந்தது ஆகும்.

மூடிக்கு :  இது மூடி என்று வந்தது,     குறுகுதல் - சென்று இணைதல் என்னும் கருத்து.  

மூடி குறுகும்  -  மூடி குறுகும் என்பது  வலி மிகவில்லை, காரணம் " மூடிக் குறுகும்" என்றால் பொருள் வேறுபடும்.   மூடியின்பால் குறுகும் எனினும் ஆகும். எனின், இன் , பால் என்பன தொக்கி நின்றன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

இப்பாடல்களை அலகிட்டு நோக்குக.  செப்பலோசையைச் சரிபார்ப்பது இன்னும் நடைபெறவில்லை. வழுவின் தெரிவிக்கவும். 



வியாழன், 3 பிப்ரவரி, 2022

சீராட்டும் ஐயப்பன்

 ஐயப்ப சாமியைக் கும்பிடுவாய் --- பல

அன்றே நலம்வரும் நம்பிடுவாய்.


கோயிலானாலும் குடியிருப்பானாலும்

கும்பிடுவாய் நம் ஐயப்பனை!

ஆயிஅப்பன் பிள்ளை  குட்டிகள்

அத்தனை பேரையும் காப்பாத்துவான்,

மாயமும் இல்லே மந்திரம் இல்லே

மனத்திலே வைத்தாய் அன்பதனால்

தாயின்நாட்டில் மலைக்குப் போய்வர

தடையிருந்தால் வீட்டில் தாள்பணிவாய்.


மலையில் பார்த்தாலும் அழகானவன்

ஊரில் பார்த்தாலும் அழகானவன்

சிலையில் பார்த்தாலும் அழகானவன்---- உன்னைச்

சின்னப் பிள்ளைபோல் சீராட்டுவான்.





சிலையில் இருப்பதோர் அழகு ---  அதைச்

சிந்தித்து  அடங்கிச் செவ்வனே பழகு..


( எந்த வீட்டுச் சிலை என்று தெரியவில்லை.

எங்கிருந்தாலும் ஐயப்பனே.)


தாயின் நாட்டில் -  தாயின் இன் நாட்டில் :  தாய் பிறந்த இனிய நாட்டில்.

  

புதன், 2 பிப்ரவரி, 2022

அடுக்குமாடி வீட்டிலும் பசுமை



 


அடுக்கு மாடி வீட்டினில் வாழ்பவர்கள் ----   அவை

விடுத்தே  எங்கும் செல்லுதற் காவதில்லார்,

ஒடுங்கி  ஆங்கே உள்கிடப்  பாரெனினும்---- சட்டிச்

செடிகள் வைத்துச் சீர்பெறற்  கானவரே.


சட்டிச் செடிகள் பட்டென வளர்ந்தனவே ----   தம்மில்

கட்டிப் பிடித்து  நிற்புறும் நெருக்கமுடன்,

ஒட்டிப்  பசுமை  உற்றுநிற் கிறபடியால் --- காண்மனம்

எட்டிப் பிடிக்கும் எல்லையை மகிழ்வினிலே. 


பொருள்:

விடுத்து -  விட்டு நீங்கி 

செல்லுதற்காவது இல்லார் --  செல்ல முடியும் நிலைமை இல்லாதவர்.

ஒடுங்கி உள்கிடப்பார் ---  அந்த வீடுகளுக்குள் நடமாட்டமின்றி இருப்பவர்கள்

பட்டென -  பட்டுத் துணி போல

நிற்பு - நிற்கும் நிலை

உறும் -  அடைகின்ற 

மகிழ்வினிலே -  களிப்பின்மூலமாக.

இது ஆசிரியத்தளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தனிச்சொற்கள்

வந்துள்ளன.  வெண்டளை விலக்கப்படவில்லை.









காலை எழுந்தவுடன் உள்ளக் கனிவுடனே

சோலைப்  பசுமைதனைச் சொந்த  அகத்ததன்முன்

வேலை  அழுத்தமெனும் வேண்டாத் துயரமில்லா

மாலைச் சரமகிழ்வை மாந்தத்  தருவனமே. 


பொருள்:

அகத்ததன்முன் ----  வீட்டின் முன்பக்கத்தில்

வேலை அழுத்தம்  - -- நீங்கள் செய்துமுடிக்கும்வரை உங்களை வருத்தும்

சோலிகளின் சுமை.

மாலைச் சர மகிழ்வை --- பூமாலை  அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்டுக்

காட்சிதரும் களிப்பைப் குறிக்கும் தொடர்.

தரு -  தருகின்ற

வனமே -  பசுந்தோட்டம் ஆகும்.


இது செப்பலோசை  தழுவி வெண்டளையில் பாடப்பெற்றுள்ளது.

மாந்தத் தருவனமே என்பதை   மாந்து என்று நிறுத்தினால் ,  இது இன்னிசை

வெண்பா போல் சென்று முடியும்.  ஆனால் துள்ளலோசை பிறக்க 

முடிந்துள்ளது. இது  சீர்கள் நிரலால் எழுகிறது.






செடிச்சட்டிகளின் படம்.

அறிவீர் மகிழ்வீர்.

மீள்பார்வை பின்னர்.