வியாழன், 10 ஜூன், 2021

சொல்லமைப்புக்கு இலக்கணம் உண்டா?

 சிலர் இப்போது உள்ள தமிழ் இலக்கண நூல்களைப் படித்து, அதன்கண் உள்ள விதிகட்கு உட்பட்டுச் சொல்திரிபுகள் காட்டப்பட்டுள்ளனவா என்று காண முனையலாம்.  ஆனால்,  இலக்கணம் என்பது மொழியைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் கற்பிக்கும் நூல் என்று கா. நமச்சிவாய முதலியார்  (1876 -1936) போன்ற ஆசிரியர்கள் உணர்ந்து சொன்னதே உண்மை.  இலக்கணம் என்பது எவ்வாறு மொழியைத் திருத்தமாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டு பேசவும் எழுதவும் செய்வது என்று தெரிவிக்கிறது.  இலக்கணம் வேறு , சொல்லாய்வு வேறு. மேலும் ஒரு சொல்லைப் பிரித்து அதன் உள்ளுறுப்புகளை கண்டுபிடித்து எவ்வாறு அவ்வுறுப்புகள் புணர்த்தப்பட்டுள்ளன என்பதை இலக்கணம் தெரிவிக்காது.  இலக்கணம் கூறும் புணரியல் முழுச்சொற்களின் புணர்ச்சி பற்றியது. சொல்லமைப்பில் வலி (வல்லெழுத்து )மிகவேண்டுமா, வேண்டாமா என்பது புணரியல் தெரிவிப்பதில்லை.  ஒரு மொழியைத் திருந்தப் பயன்படுத்தக் கற்றுக்கொள்பவர் சொலாராய்ச்சியாளர் அல்லர்.  அவர் வெறும் மாணவரே. புணரியல் கூறும் நிலைமொழி, வருமொழி என்ற குறிப்புகள் ஒரு சொல்லினுள் இருக்கும் கூறுகள் அல்லது துண்டுகளைக் குறிக்காது.  மொழி என்பது ( நிலைமொழி, வருமொழி என்ற சொற்களில் ) முழுச்சொல்லைக் குறிக்கும்.

தகு என்ற வினைப்பகுதி அகரத்துடன் சேர்ந்தால்  தகு+ அ > தக்க என்றும் வரும். தக  என்றும் வரும்.  தக என்பது வினை எச்சமாகப் பயன்படும்.  இரட்டித்த தக்க என்னும் எச்சம் பெயரெச்சமாகப் பயன்படும்.  ஆனால் இரண்டிலும் அகரம் சேர்ந்துள்ளது.  அறு+ அம் என்ற சொல்லமைப்பு,  அறம் என்று ஒருவகையாகவும் அற்றம் என்று இன்னொரு வகையாகவும் சொல்லாகும். 

இலக்கணம் என்பது ஒரு பேச்சுமுறை அல்லது மொழிக்குப் பிற்பட்டது. பேச்சுமுறை முதலில் தோன்றி, அப்புறம் அதில் ஓரளவு ஆய்வு செய்தவர்கள் இலக்கணத்தை உரைத்தனர்.  இதற்குக் காரணம் முன்னோர் பயன்படுத்தியவாறே மொழியை எளிதில்  கையாளவேண்டும் என்ற நோக்கம்தான். இதைத்தான் மரபு என்று சொல்கிறோம்.

இலக்கணம் எழுதியவன் கண்டுபிடிக்காமல் விட்டதெல்லாம் இல்லை என்று நினைப்பது அறியாமை ஆகும்.  பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி என்று ஒருசில இலக்கண நூல்களிலும்   சொல்லப்பட்டிருந்தாலும் அது தொட்டுச்செல்வது போன்றதுதான்.  அதனால் சொல்லாய்வு என்பது இலக்கணத்தின் ஒரு பகுதியாகிவிடாது. தொல்காப்பியமுனி,  சொல்லின் பொருளும் காரணமும் பார்த்தவுடன் தெரிந்துவிடாது என்று மட்டும் சொல்லிவைத்தார்.

இலக்கணம் சொல்வது எல்லாம் சரியென்றால்,  அது சொல்லமைப்புக்கும் பொருந்துமென்றால்,  

மக + கள்  என்பது ஏன் மகக்கள் என்று வராமல் மக்கள் என்று வருகிறது.  மக என்பது தானே பகுதி?  மக் என்பதா பகுதி?  மக என்பதில் இறுதி அகரம் அன்றோ?  அ+ கள் :  அக்கள் என்று வரவேண்டுமே.  மக+ அள் என்பதும் மகவள் என்று வரவேண்டும், எப்படி மகள்?

ஏற்க முடியாது என்பவர்கள் நன்கு சிந்திப்பார்களாக.

மருந்து சாப்பிட்டவன் எல்லாம் பிழைத்ததுமில்லை, இலக்கணம் படித்தவன் எல்லாம் சரியாக உணர்ந்து மொழியை அறிந்ததுமில்லை.  சிலரே அறிந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.







கொரனா குறுகும்

 கொரனா என்னும் முடிமுகி நோய் முற்றிலும் நீங்கிடுமா?  இதற்குப் பதில் சொல்வதானால் முன்வந்த தொற்றுகளெல்லாம் முற்றும் இவ்வுலகினின்று நீங்கிவிட்டனவா என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.  அவ்வாறு கொள்ளுங்கால்  என்னதான் நாம் அதைத் தொலைக்க முயன்றாலும் அதை நூறு விழுக்காடு உலகிலிருந்து விலக்கிவிட இயலாது என்பது தெளிவாகும்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் என்றே நம் நிபுணர்கள்1 நினைக்கிறார்கள்.  கொரனா  (கோவிட்19)  குறுகும்.

நலம் விளையும் என்பதற்கு ஒரு கவிதை:


வருநாளில் வான்துயரம் வற்றியொரு வண்மைவரும்;

கொரனாவின் கோரப்பிடி குறுகியொரு நன்மைபெறும்

இருகாலும் பெருமக்கள் இன்னலற ஒண்மைதரும்

திருநாளும் வருகிறதே தெள்ளுலகும் சீர்பெறுமே.


பொருள்:

வருநாளில்  - எதிர்காலத்தில்;

வான் துயரம் -  மிகப் பெரிய துயரம்.

வற்றி -  குறைந்து

வண்மை  -  வளமான நிலை

கோரப்பிடி -  கொடுமையான நீக்கமில்லா நிகழ்வு

குறுகி -  ஒடுங்கி;

இருகாலும் -  இரவு பகல் இரு காலங்களிலும்;  நெடுங்காலம் எனினுமாம்.

பெருமக்கள் - உலகின் மக்களைச் சுட்டியது.  உலகம் பெரிதாதலின் அதன் மக்கள் பெருமக்கள்  எனப்பட்டனர்.   புவிமக்கள்.

இரு - பெரிய என்ற பொருளும் உண்டு.

திருநாளும் - நாம் மகிழ்வுறும் நாளும்;

தெள்ளுலகும் -  அறிவியல் உலகமும்.  ( தெள் - தெளிவு)


குறிப்புகள்:

1. நிபுணர் -    நிற்பு + உணர்.   நிற்பு என்பது நிலை. தம்துறையின் நிலையையும் கலையையும் முற்ற உணர்ந்தவரே  நிற்புணர் >  (  இடைக்குறைந்து) - நிபுணர் எனப்படுவார்.

செவ்வாய், 8 ஜூன், 2021

சுலோகம் என்பதில் லோகம் இல்லை.

 சில மொழிகளில் சுலோகங்கள் உள்ளன.  ஆயின் இச்சொல்லில் ஒரு பகுதி லோகம் என்று முடிகிறது.  லோகம் என்பது உலகம் ஆதலின், இதில் உலகம் என்னும் கருத்து உள்ளதாக நீங்கள் நினைக்கலாம்.  இச்சொல்லில் உலகம் இல்லை.  

இங்கு வரும் சுல என்பது உண்மையில் சொல் என்ற பதத்தின் திரிபுதான். [ பொருள் பதிந்தது பதம் .  பதி+ அம்.]

சொல் + ஓங்கு + அம்

>  சொல் + ஓகு + அம்  

>  சொலோகம் 

> சுலோகம்.

சொல்லப்படும் எதுவும் ஓர்   உயர்ந்த -  மேம்பட்ட நிலையை அடையுமானால்,  அது ஓங்கிய சொல் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். "சொலோகங்கள்" என்பவை கருத்துக்களை நன்கு எடுத்துரைப்பவை.

இச்சொல் ( சொலோகம் > சுலோகம் )  மிக்க அருமையாகவே அமைக்கப்பட்டுள்ளது.  இதுவும் பாராட்டக்கூடிய வகையிலேதான் அமைப்புற்றிருக்கிறது.

எனினும் இதன் அமைப்பை அறிந்தார் ............

இச்சொல் சிற்றூராரிடை வழங்குவதை  அறிந்துள்ளோம்.

" அந்தக் காலத்தில் சொலோகம் சொல்லுவாங்க......." என்று தொடங்கி, ஒரு கதையைச் சொல்லுவார்கள்.  எனவே இது ஒரு பேச்சுவழக்குச் சொல் .  பின்னர் மற்ற இடங்களிலும் பரவி உயர்நிலை அடைந்துள்ளது.

ஓங்கு என்ற சொல் ஓகு என்று வருவது இடைக்குறை.  இது அம் விகுதி பெற ஓகம் ஆகும்.

சொல் என்ற சொல் அல்லது பதம், வு என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று சொலவு என்று வரும்.  இச்சொல்லை யாம் சில இடுகைகளில் பயன்படுத்தியுள்ளோம்.   சொற்களை ஆய்ந்து காணாருக்கு இது ஒரு கடினச் சொல்லாய்த் தெரியும்.  மிக்க எளிய சொல் இது.

ஆய்வு செய்யச்செய்ய பல்லாயிரம் சொற்கள் உங்களின் வயப்படும்.  எனினும் சிறந்த உரைநடை  வரைவு ஆவதற்கு நல்ல ஆசிரியர்களின் நூல்களையும் கற்கவேண்டும்.  எடுத்துக்காட்டு:  நச்சினார்க்கினியரின் உரைநடை.  அடியார்க்கு நல்லார் உரைநடை.  இவை இணையத்தில் கிட்டுகின்றனவா என்று தெரியவில்லை.

சொல்+ ஓகு+ அம் என்பதை சொல்ல + ஓங்கு + அம் >  சொல ஓகு அம் > சொலோகம் என்று காட்டினாலும்  இதுவுமதே.  ஒன்றும் வேறுபாடில்லை. யாரேனும் சற்று வேறுபடக் காட்டினால் அது வேறு என்று நினைத்துவிடவேண்டாம்.

இந்தச் சொல் ஆங்கில மொழிவரை சென்றுள்ளது.  ஆங்கிலத்தில் slogan  என்ற சொல் உள்ளது.  ஏனை ஐரோப்பிய மொழிகளிலும் இதன் மாறுதல் இருந்தால்அவை சென்றேறிகளே.  slogorne,  sluagh,  sluagh, slough என்று வேறுபட்டுக் காணப்படலாம்.  ஆய்வாளரையும் மருட்டலாம்.

ஓங்குக,  வெல்க என்பனவெல்லாம் கரையொலிகளாகலாம்.  அவை பயன்படுத்துவார் செயலைப்  பொருந்திவரும்.    கரை (வி) -  ஒலி, அழை.


மிகப் பாராட்டத்தக்க நிலையில் அமைந்தது என்று மேலே சொன்னோம்.  ஓங்கிய சொல் -  ஓங்கும் சொல் .   இங்கு  ஓங்கும் என்பதை  இடைக்குறைப் படுத்தினால்  ( ஓ[ங்கு]ம்) >  ஓம் என்றாகிவிடும்.   உயர்மந்திரத்தை உள்ளடக்கியது சுலோகம்  என்னும் சொல்  என்பது இதன் குறிப்பாகிறது.  இதைப் போலவே  "சொலோகம்" என்பதிலும் வேறுபடவில்லை.   "ஓகம்" என்னும் இறுதியைச் சுருக்கினாலும் "ஓம்"  வருகிறதென்பதை உணர்க.


சுலோகம் என்ற சொல்  சுலவம் என்ற வடிவத்தையும் அடையும்,   இஃது  சொலவு  >  சொலவம் > சுலவம் என்பதன் திரிபு.   சுலோகத்தைச் சுலவடை என்றும் சொல்வதுண்டு.   சொல்லுவது எதுவும் உடனே அதன் உயர்நிலையை அடைவதில்லை.  நாளடைவில் பலகாலும் புழங்குவதால் ஒரு மாற்றமற்ற நிலையை அடைகிறது.   அடைவதனால்  சொலவு+ அடை என்று கூட்டப்பெற்று சொலவடை >  சுலவடை   ஆகிறது.

சொலவு என்பது தொழிற்பெயர் ஆகிவிட்டது,  காரணம் வு என்ற விகுதியையும்  லகர ஒற்றை அடுத்து  அகர இடைநிலையையும் அது பெற்றுள்ளது.  இந்நிலையில்  சுலவு என்ற வினைச்சொல்லும் உள்ளது.   இது ~தல் என்னும் விகுதி பெற்றுச்  சுலவுதல் ஆகும்.   இஃது    உலவு > சுலவு  என்று பிறந்தது.  அகர வருக்கத்துச் சொற்கள்  சகர வருக்கமாகத் திரியும்.  எடுத்துக்காட்டு:  அமணர் - சமணர் எனக் காண்க.  இதுபோலும் பல சொற்களைப் பன்முறை பழைய இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளபடியினால்,  இங்கு அவற்றை மீண்டும் எடுத்துரைக்க வேண்டியதில்லை.  இது  உலவு > சுலவு என்றும்  சொலவு > சுலவு என்றும் இருவகையாகவும் விளக்கம் பெறற்குரியது ஆகும்.  சுட்டடிச் சொற்களை நன்கு அறிந்திடில் உல் என்பதே மூலச்சொல் என்பது தெற்றெனத் தெரிந்துகொள்ளலாம்.  உல் > ஒல் > சொல் என்றும்  உல்> உலவு > சுலவு என்றும் எளிதின் உணரற்பாற்று.   இனிச் சுலவுதல் என்பது சுலாவுதல் என்றும் திரிதற்குரியதாகும்.   சொல் என்பதும் பலர்மாட்டும் புழக்கத்தில்  இருப்பது. இருக்கவே,  சொல் உலவும் தன்மை உடையது.  எல்லோரிடத்தும் சென்று சுற்றுவது.  யாம்  வாய்திறந்து  அம்கும் என்றால் அப்படி ஒரு சொல் தமிழில் இல்லை.  ஆகவே அது சொல் என்னும் தகுதியில்லாத வெற்று ஒலி.  அதற்கு ஒரு பொருளும் இல்லை.  அமைக்கும் என்று சொல்வோமாயின் அது சொல். அது பொருளுடையது.  ஒரு வாக்கியத்தில் அதைப் பயன்படுத்தலாம்.  பிறரும் அறியவும் ஒலித்துப் பொருளறிவிக்கவும் முடியும் என்பது அறிக.  ஆகவே சொல் என்பது மக்களிடை நிலவுவதும் உலவுவதும் ஆகும்.   உல் என்ற அடிச்சொல்லின் பொருளுடன் அது இயைகின்றது. மற்றவை பின்பு ஓர் இடுகையில் அறிவோம்

அறிக மகிழ்க


குறிப்புகள்

முன்னர் வரைந்த குறிப்பு: இதை எழுதி முடிப்பதற்குச்

 சில தடைகள் விளைகின்றன.  ஆகையால் இதைப் பின்னர் முடித்திடுவோம்.

இப்போது முடிக்கப்பெற்றது.  09062021 1236  

தட்டச்சுப் பிறழ்வுகள் .

மெய்ப்பு  பின்.