சனி, 2 ஜனவரி, 2021

கெடுதலிலும் நன்மை காணும் நன்னம்பிக்கை - தமிழர்பண்பாடு

 சங்க காலத்திலும் அது மருவிய காலத்திலும்,  தமிழர் கெடுதல் அல்லது தீமை எள்ளளவும் கலவாத வாழ்க்கையை உன்னி வாழ்ந்தனர் என்று நம் இலக்கியங்கள் சாற்றுகின்றன. அவர்கள் ஒரு மேலான இனமாக வாழ முற்பட்டனர். இக்காலத்தில் தமிழரல்லாதார் பண்பாட்டுக் கூறுகள் யாவை என்பதைத் தமிழிலக்கியம் பெரிதும் காட்டவில்லை. பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு  ஆதலின் அவர்கள் அத்தகைய செய்திகளைத் தம் இலக்கியத்திற் பெரிதும் பதிவு செய்திட்டிலர் என்பதே சரியாகும். தம் மேலான பண்புகளைக் கூறியவிடத்தும் பிறர்தீமை சொல்லாதமைதலே சான்றாண்மை ஆகும்.


பிற தேயத்து மன்னன் ஒருவன் சாலச் சிறந்த பண்புகள் உடையனாய் இருந்தான் என்பதனால் தமிழர்கள் அவனைச் "சாலமன்" என்று அழைத்தனர்.  சாலமோன் எனினும் ஆகும்.   மன் என்பது மன்னன் என்னும் பொருளது.  மோன் என்பது மகன் என்ற சொல்லின் திரிபாகும்.  தாம் சான்றாண்மையுடன் திகழ்ந்தது மட்டுமின்றிப் பிறதேயத்தார் சிறந்த பண்புநலன்கள் உடையாராய்த் திகழ்ந்த காலையும் அவர்களை மெச்சி நலல பெயரை அவர்கட்கு வழங்கத் தமிழர்கள் பின்வாங்கியதில்லை. மேலும் வாசிக்க:-


வறுமை என்பது கொடியது.  கற்றுவல்ல  சான்றாண்மை மிக்கப் புலவர்மாட்டும் வறுமை வந்துற்று அவர்கள்தமை வாட்டியதுண்டு. யாருமற்ற ஏழையும் அவ்வாறு வாடுதல் உண்டு. இவர்கட்கு வந்துற்ற வறுமையைக் கண்டு இவர்களை ஒருபோதும் இகழாமை கடைப்பிடித்து, இவர்களை " நல்கூர்ந்தார்" என்று தமிழர் சுட்டினர். இதை நல் என்ற அடைமொழி கொடுத்துத் தமிழர் குறித்தனர். இஃது மொழியினுள்ளே அமைந்து கிடக்கும் பண்பாட்டுக் கூறு ஆகும். நல்குரவு என்ற சொல்லையும் காண்க. கெட்டுப்போன நிலையையும் நல்ல என்ற அடைகொடுத்துக் குறிப்பவன் தமிழன். கெட்டது விரைவில் நல்லதாகவே மாறிடுதல் வேண்டுமென்பது அவன் தன் இறைவனை நோக்கிய வேண்டுதல் ஆகும். 

இவ்வாறே கெட்டுபோவதை அவன் நந்தல் என்றான்.  நன்மை+ து + அல்  என்று இதன் அமைப்பினைக் கூறினும் நல்> நன் > நன் து >  நந்தல் என்று கூறினும் அதுவே ஆகும். இது நல் தல் ஆகும், நன்றல் > நந்தல் எனினுமது. நன்மையை நினைக்க; தீமை விலக்குக என்பது தமிழர் கொள்கை.  கொடிய விடப்பாம்பையும் நல்ல பாம்பு என்பான் அவன்.

கம்பனும் சீதையை " நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கை" என்று வருணித்துள்ளமை காண்க. பிறனிடத்து அடைபட்டு வாடியவிடத்தும் நன்மையே கூறினான் கம்பன். அவன் புலமைக்கண் சான்றாண்மை பளிச்சிடுகின்றது காண்க.

அறிக மகிழ்க.

பெய்ப்பு -  பின்பு.


நகர் உலா

 தந்தையுடன் நகர் சுற்றிப் பார்த்த ஒரு பிள்ளை சொல்வது

போலும் இக்கவி:


உந்துவண்டி ஏறியே ஒய்யார மாயமர்ந்து

தந்தையுடன் சுற்றுவேன் பந்துபோல் ---- வந்த

சிறுநகைச் சீரால் மயக்கிவிரல் சுட்ட

ஒருநகர் முற்றும் வசம்'


தொங்கிருக்கை ஊஞ்சலில் தோய்ந்துநான் பேரரசி

இங்கிருக்க ஏற்றிலார் யாவருண்டு ---- நன்குநோக்காச்

செல்வார் திரும்ப வருவார்தம் கையசைக்கக்

கொள்வார்மெல் வாஞ்சையென் பால்.

உந்துவண்டி  -   ( கார்).

சிறுநகை -  புன்னகை

சுட்ட - காட்ட  (சுட்டிக்காட்ட)

நன்கு நோக்கா  -  நல்லபடி பார்க்காத

செல்வார் -  கடந்து போகிறவர்

வருவார் -  (குழந்தை இருக்குமிடம் தாண்டிச் செல்ல)

வருபவர்

கையசைக்க - (குழந்தையைக் கண்டு)  தம் 

கரங்களை  ஆட்ட 

மெல் - மென்மையான

என் பால்  -  என் மேல்

வாஞ்சை -  அன்பு



வெள்ளி, 1 ஜனவரி, 2021

2021 புத்தாண்டு வாழ்த்து விளக்கம்




வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021



இருபதிரு பத்தொன்றே வருக நீயே

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்

இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை

பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.



வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021



இருபதிரு பத்தொன்றே வருக நீயே -
இருபது இருபத்தொன்றே வருக நீயே.

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே
நீ இனிய ஆண்டாக  நல்ல ஆண்டாக விரிவுகொள்வாய்

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்
- சூரியன் ஒரு சுற்றை முடித்துவிட்ட மீண்டும் தொடங்க
இப்போது பக்கத்தில் வந்துவிட்டான்.
இரவி -  ரவி :  சூரியன்.
இருள் அவி > இர் அவி > இரவி  ஆயிற்று. இருள் என்பதில் இர் 

சுற்றார்ந்து - சுற்றை  நிறைவு செய்து.

இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை
பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

எல்லா இனிய உயிர்களும் வளர்ச்சி பெற்று 
நன்மை அடையவேண்டும் என்று ஆசிகளை
உதிர்த்து நிலைபெற்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

உலகத்து வெம்மை பெருகிவிடாமல் நாம்
அதைக் காத்திடுவோம்.

{  உலகம் வெப்பமயம் ஆதலைக் காக்கவேண்டும்.
வேறு வெம்மைகள் தொடர்பு அற்றவை }  

அறிவாழ்வில் -  நாம் அறிந்த இந்த வாழ்வில்.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

நமக்கு அரிதாய்க் கிடைக்கப்பெற்ற அரிய தாய்மாரும்
தந்தைமாரும்  உறவினர் நண்பர்களும்

அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.

மக்களும் நன்கு ஒளிவீச்சுப் பெறுக.


 இப்பாடலின் பொருள் மேற்கண்டவாறு.