சனி, 7 டிசம்பர், 2019

அரங்கசாமி > ரங்கசாமி

ஆற்றிடைக்குறை நிலத்துண்டில் சீராக அமர்ந்திருப்பவர் அரங்கனார் என்னும்
மாவிண் மன்னவராகிய  ( ஐந்திலொன்றாகிய) முன்னவர்.  அவர் அமர்ந்திருப்பதே அரங்கம்.

அரங்கு  >  அரங்கன் > ரங்கன்.

ரங்கன் > ரங்கசாமி.

சீர் அரங்கம் > சீரரங்கம் > சீரங்கம்.  இரு  ரகரங்களில் ஒன்று வீழ்ந்தது.  திரிபுச்சொல்.


தமிழறிஞர் கி ஆ பெ விசுவநாதமும் இது ( அரங்கு அரங்கசாமி என்பது)  கூறியுள்ளார்.

விண் விசும்பு எனவும்   படும்.
ஐந்து   என்பது :  நிலம் தீ நீர் வளி விசும்பு.  ஆக ஐந்து. ( தொல்.)

விண்ணு > விஷ்ணு.
விசு (தமிழ் )  > விஷ்.
சீரங்கம் > ஸ்ரீ ரங்கம்.  மெருகூட்டுச் சொல்.


விசுவம்  என்பது விசும்பையும் (விண்ணையும்) உள்ளடக்கிய உலக விரிவு.
விசும்பு விசுவம் என்பன ஓரடியின.   விஸ்வம் என்பது மெருகூட்டு.


குறிப்பு: -  இவ்விடுகை பழம்பதிவின் சாரம்.          
இக்கருத்து 2014-5 வாக்கில் இடுகைசெய்யப்பட்டது.

ரோமம்

ரோமம் என்ற சொல்லை ஆய்வுசெய்வோம்.

பண்டைத் தமிழர் மயிர் என்று சொல்லப்படும் முடிக்கு உற்றறியும் திறம் இருப்பதாக நம்பினர்.

அதனால் ரோமம் ( றோமம் ) என்ற சொல்லை உண்டாக்கினர். உற்றறியும் உணர்வுக்கு உரிய " உறு"  என்பதையும் அதைக் காப்பது என்னும் பொருளில் "ஓம்"  (ஓம்புதல் ) என்பதையும் இணைத்து அம் விகுதி கொடுத்தனர்.

உறு + ஓம் + அம் -=  உறோமம் என்ற சொல் அமைவுற்றது.

ஆற்றிடையில் அமைந்த நிலத்துண்டும் அரங்கு என்ற பெயரைப் பெற்றதும் ஆங்கு அமர்ந்த தேவன் அரங்கனாகிப் பின் அகரம் தொலைந்து ரங்கன் ஆனதும் போல்  பல சொற்கள் தலையெழுத்திழந்து உலவின.

 சொற்றிரிபு காத்தலும் அரிதே.

உறோமம் என்பதும் தவறாக றோமம் ஆகி, முன் வடிவு உணராமையின் ரோமம் என்று தவறாகத் திருத்தப்பெற்றது.

இவ்வலைப்பூவில் காணக்கிட்டாதெனினும் இது யாம் முன் கூறியிருந்ததே ஆகும்.

உரோமம் என்ற திரிசொல்லும் அழகுடன் அமைவுற்றதே என்றறிக.

ரோம் என்பது பகுதியாகக் கொண்டு அமைப்பை அறிய முற்படின் அஃது இருளிற் பொருளைத் தேடியதுபோலவே இறும்.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப்  பிழைகள் தோன்றின் பின் திருத்தம் பெறும்
வே






புதன், 4 டிசம்பர், 2019

சுவர் என்ற சொல்லின் தோற்றம்.

தமிழ் மொழியில் உள்ள மூலவடிச் சொற்களில் " சுல் " என்பதும் ஒன்றாகும்.

சுல் என்பதே து என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  சுல்+து = சுற்று என்ற வினைச்சொல் பிறக்க வழிசெய்தது.

சுவர் என்ற   சொல்லும் இம்மூலத்தினின்றே தோன்றியதாகும்.

சுவர் என்பதை "  சு + அர் " என்று பகுத்தால் இடையில் நிற்கும் வ் என்ற மெய் உடம்படு மெய் என்பது துலங்கும்.  அர் என்பதோவெனின்  அரு> அருகு > அருகுதல்  என்பதிற் காணும் நெருங்கி நிற்றல்,  இடைவெளியைக் குறைத்தல் என்னும் பொருளிய அடிச்சொல் என்பது புரிந்துகொள்ளலாம். இன்றும் அருகில் என்ற சொல்லில் இத்தொலைவின்மைக் கருத்து பளிச்சிடுகின்றது அறியலாம்.  அர் என்பது மூலமாக, ஈற்று உகரம் (அர்+ உ)  "  நெருங்கி முன் (நிற்றல்)  என்ற பொருளை வருவிக்கிறது.  உ(  சுட்டு ) : முன்.

சுவர் என்பது கூரையுடன் நெருங்கி அதை மேலணைத்தவாறு சுற்றி நிற்கிறது. இவ்வளவையும் இப்பகுப்பாய்வே தெரிவிக்கிறது.  இடர்ப்பாடு ஒன்றில்லா இனிமை இதுவாம்.

சுல்  > சு  (கடைக்குறை).

அர் என்பதிற் பொருள் காணாமல் வெறும் விகுதி என்று மட்டும் கொண்டால்,
சுவர் என்பது வீட்டைச் சுற்றி நிற்பது என்று மட்டுமே பொருள் கொண்டதாக ஏற்படும்.

சுவரில் ஒட்டிய கீரைக் குழம்பைச் "சுவத்துக் கீரை" என்றனர்.  ( பண்டித வி. சேகரம் பிள்ளை (1938). புதிய உலகம் மாத இதழ்). கோழிக்கறியை எதிர்பார்த்துச் சாப்பிட உட்கார்ந்த கணவன், கீரைக்குழம்புதான் தட்டிலுண்டு என்றறிந்து கோபம் கொண்டு,   வைத்த அக்குழம்பினைத் தூக்கிச் சுவரில் அடித்தானாம். வேறொன்றும் இல்லை என்று மனைவி கூற, "சுவத்துக்கீரையை வழித்துப் போடடி சுரணை கெட்ட பொண்டாட்டி" என்று வைதானாம்.  சுவத்தில் என்பது பேச்சு வழக்கு.

சுவர் என்பதே இப்போது கிட்டும் சொல்லாகும்.  இது சுவறு என்றிருந்தாலே பேச்சில் சுவத்தில் என்று வரவேண்டும். சுவறு என்பதை மீட்டுருவாக்கம் செய்தால்  " சுற்றி அடைக்கப்பட்டது"   (சு + அறு ) என்ற பொருள் கிட்டும். அறுக்கப்பட்டது அறை எனல்போலவே  வெளிச்சுற்றாக எழுப்பப்பட்டதுமாகும்.   எனல் ஒக்குமாறு,  சுவறு என்ற மற்றொரு வடிவம் மொழியில் இருந்து அஃது இறந்திருக்கலாம். இவ்வாறு கொள்வதிற் கடினம் ஒன்றுமில்லை காண்க.

பழையன கழிதலென்பது வழக்கமான நிகழ்வே.

தட்டச்சுப்பிழைகள் பின் திருத்தப்பெறும்.