செவ்வாய், 4 ஜூன், 2019

இனாம் என்ற சொல்லும் காரணமும்


இனி இனாம் என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்.

உலகின் மிக மூத்த மொழி என்று ஒன்றை எந்த ஆய்வாளன் கூறினாலும் அந்த மொழியில் கூட பிற மொழி வழக்குச் சொற்கள் என்று கருதத் தக்கவை காணக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, தமிழர் கார் என்ற ஆங்கிலச்சொல்லைப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துகின்றனர். தமிழில் கார் என்ற ஒரு சொல் இருந்தாலும் அதன் பொருள் வேறு. இவ்வாறு கலப்புகள் நேர்ந்துவிட்ட நிலையில் அகரவரிசைக்காரர் ஒருவர் அச்சொல்லையும் தம் நூலில் பதிவுசெய்து பொருள்கூற முனையலாம். அதன் காரணமாக அது தமிழ்ச் சொல் ஆகிவிடுவதில்லை. அது அயலே. ஆகவே சொல்லின் மூலம் யாது என்றுஅறிதல் மிக்க முன்மையானதாகின்றது.

ஒரு சொல் எந்த மொழிக்குரியதாய் இருப்பினும் அது தேவை என்றால் அதை வழங்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சரியாக வழங்குவதற்கும் சொல் வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் சொல் மூலக் கண்டுபிடிப்பு உறுதுணை செய்கிறது.
எடுத்துக்காட்டாக முகாம் என்ற சொல்லின் உண்மையான பொருள் என்ன என்று அறிந்துகொண்டோம் - சென்ற இடுகையில். சில வேளைகளில் சொற்பிறப்புப் பொருளும் அதன் இற்றை வழக்குப் பொருளும் வேறுபடுதலையும் அறிந்து, அச்சொல்லை வழங்குவதா வேண்டாமா என்று முடிவுசெய்யவும் இத்தகு ஆய்வுகள் துணைபுரிகின்றன.


இனி இனாம் என்ற சொல்லைக்
காண்போம்.

இது இரு துண்டுச் சொற்களால் ஆனது. இவற்றுள் முன்னது : இன் என்பதாம். ஒட்டி விகுதியாய் நிற்பது ஆம் என்பதே.

இன் என்னும் சொல் உரிமை குறிக்கும். இது வேற்றுமை உருபாகவும் இலங்குகிறது. எடுத்துக்காட்டுகள்:

கந்தனின் மனைவி வள்ளி.
தமிழரின் வீரம் ஒரு மரபு.

இவ்வாக்கியத்தில் கந்தனின் மனைவி என்பது வள்ளி அவளுக்கு உரிமையானவள் என்பதைக் காட்டுகிறது. பிறவும் அன்ன.

இனம் என்ற சொல்லும் இன் என்பதனடிப் பிறந்ததே. நீங்கள் எந்த மக்கள் கூட்டத்துக்கு உரிமையானவரோ அந்தக் கூட்டமே உங்கள் இனம். இன் + அம் = இனம்.

பிச்சை போட்டவர்கள் பாத்திரம் அறிந்தே பிச்சை போட்டனர். கேட்பவன் இனாம் வேண்டுமென்றால் அதற்கு அவன் உரியவனாய் இருத்தல் வேண்டும். உரியவனுக்கு விலையின்றிக் கொடுக்கப்பட்டது. அத்தைக்கு நெல் கொடுத்தால் எப்படிக் காசு கேட்பது? அவள் நம்மைச் சேர்ந்தவள் ஆதலின் - இனம் ஆதலின் - இனாமாய்த் தரப்பட்டது.

இன் என்ற அடியிலிருந்தே இரு சொற்களும் தோன்றின. இன்றும் சிற்றூரில் " எனமாய்க் கொடுத்துவிட்டேன்" என்றுதன் பேசுகின்றனர்.
இனாம் என்பதைப் படித்தவர்கள் கையாள்கின்றனர். அல்லாதருக்கு இனம் அல்லது எனமே அது. பெறுதற்கு இனமல்லார் இனாம் பெறார். அறிமுகம் இல்லாதவராயின் ஏழ்மையினால் உரிமை பெறுகிறார்.

அதாவது பெறுதற்கு உரிமை உள்ளவருக்கே இனாம் வழங்கப்பட்டது. இனாம் என்பதன் சொல்லமைப்புப் பொருள்: இன்= உரிமை; ஆம் = ஆகும், என்பதே. விலையின்றிப் பெறுவதற்கும் ஒரு தகுதியை மன்பதையோர் கண்டறிந்திருந்தனர் என்பதையே இச்சொல் விளக்குகின்றது. இனிதாய் அமைந்த சொற்களில் இதுவுமொன்றாகும்.

திங்கள், 3 ஜூன், 2019

முகம். , முகாம், முகமை

முகமும் முகாமும்.

முகமென்ற சொல்லில் அடியாக விருப்பது மு என்ற ஓரெழுத்து ஒரு சொல்லே ஆகும், அதாவது ஒரே எழுத்தால் ஆன சொல்.

முகமென்பதைப் பிரித்தால் மு+ கு + அம் எனப் பிரியும். இம் மூன்று எழுத்துக்களையும் பொருளுணர்ந்து வாக்கியமாக்க வேண்டின் " முன்னுக்கு அமைந்திருப்பது " என்று சொல்வது சரி. எனவே இது காரண இடுகுறியாகிறது.

மு என்பதும் முல் என்பதும் ஒரு பொருளனவே. முலை என்ற சொல் இதிற் பிறந்தது. முல் என்பது முதல் நீளும், மூல் ஆகும். இம் மூலென்னும் வடிவத்திலிருந்து மூலம், மூலியம், மூலிகை முதலிய சொற்கள் அமைந்தன. மு என்பது து விகுதி பெற்று முது என்றாகி ' 'முந்திய" என்றாகும். காலத்தால் முன்னிருப்பதும் இதிலடங்கும்.

இவற்றை அறிந்தபின் முகாமென்பது எளிதாகிவிடுகிறது. படைஞர் தம் படைக்கு ஒரு முகாம் அமைக்கின்றனர். முகாமென்பது ஒரு முன்னணிப் படைவீடு ஆகும். அதிற் படையணியுடன் இன்னும் என்னென்ன வைத்துக்கொள்ள வேண்டுமென்பதை படைத்தலைமை தீர்மானிக்கும். படையினர்க்கல்லாத பிற முகாமும் ஒப்புமை பற்றி முகாமென்றே குறிக்கத் தகும். மு+ கு + ஆம் = முகாம். அதாவது முன்னிருக்கும்படி ஆகும் இடம் அல்லது கட்டிடம், இதற்கு ஆம் ( ஆகும் ) என்பதையே விகுதியாக்கியது ஒரு திறமை என்றே சொல்க. இதில் கு என்பதை இரண்டாவது முறை வராமல் விலக்கியது ஒலிநயம் விளைக்கவே ஆம், இல்லையேல் முகாகும் என்பது இன்னா ஓசைத்தாகிவிடும். இவ்வாறு விலக்குதல் பல சொற்களில் வருதல் காணலாம். பழைய இடுகைகளைப் படித்து அறிக.

இவ்வழியில் முகமை என்ற சொல்லும் இனிதாகவே அமைந்துள்ளது.

உருது மொழிக்குப் பல சொற்களை அமைத்துக் கொடுத்தவர்கள் தமிழர்களே. இனாம் என்பதுபோல முகாமென்பதையும் அவர்களே அமைத்தார்கள். இனாமென்பது இன்னொரு நாள் காண்போம்.. பின்னர் உருவமைத்த மொழி உருது. உரு + து.

ஞாயிறு, 2 ஜூன், 2019

வயிறு என்னும் முதன்மைச் சொல்.

இன்று வயிறு என்ற தமிழ்ச் சொல் எவ்வாறு அமைந்தது என்ற கதையை அறிந்துகொள்வோம்.

நாம் பல சொல்லமைப்புகளையும் சில ஆண்டுகளாகவே ஒவ்வொன்றாக அறிந்துகொண்டுவருகிறோம். இவற்றையெல்லாம் ஒருசேர நோக்கி, இதிலிருந்து ஒரு தெரிவியலை ( தியரி - ஆங்கிலம் ) உருவாக்குவது எம் நோக்கமன்று. அத்தெரிவியல் அல்லது எத் தெரிவியலும் தானே முன்வந்துறுமாயின் சில வேளைகளில் யாம் அதனைக் குறிப்பிடுவதுண்டு. யாம் எழுதுவது சொல்லமைப்பை வெளிப்படுத்தவே ஆகும்.

வாயிலிருந்து தொடங்குகிற உணவு உட்கொள்ளும் வழியானது உடம்பின் உள்ளில் சென்று முடிகிறது அல்லது இறுகின்றது. இறு என்ற அடியினின்றே இறுதி என்ற சொல்லும் அமைகின்றது. ஆகவே இறுகின்றது என்ற வினைமுற்றை எளிதில் பொருளுணர்ந்து கொள்ளலாம்.

வாயிலிருந்து தொடங்கி உணவு செல்வழியானது குதத்தில் முடிவதாகச் சிலர் சொல்வதுண்டு எனினும் வயிறு என்ற சொல்லமைப்பில் இக்கருத்து கொள்ளப்படவில்லை. குதம் கழிவு வழியாதலின் போலும். குந்து > குது > குது + அம் = குதம். எனின் குந்தும் உடற்பகுதி.

வாய் தொடங்கி அது முடியும் இறுதியே வயிறு ஆகும். சொல் அமைந்தது இவ்வாறு:
வாய் + இறு = வாயிறு ( இங்கு முதல் குறுகி) > வயிறு ஆயிற்று. எனவே இது முதனிலை குறுகித் திரிந்த ஒரு சொல்லாக்க மாகும்.


இவ்வாறு திரிந்து அமைந்த சொற்கள் பல. உதாரணத்துக்கு:

சா + வு + அம் = சவம்
தோண்டு + = தொண்டை.

எனவே உணவு ஏற்கும் பகுதியின் இறுதியே வயிறு ஆகும்.