செவ்வாய், 30 ஏப்ரல், 2019

சிங்குதல் என்ற சொல் அமைதல்.

சிங்கிவரும் விலங்கு சிங்கு+அம் = சிங்கம் என்பது கண்டோம்.  இச் சிங்குதல் என்னும் கருத்து அரிமா என்பதிலும் உள்ளுறைந்து அமைந்து கிடக்கின்றதென்பது ஓர் இடுகைக்கு முன் தானே கண்டோம். அதனால் நம் நேயர்கள் இதனை மறந்திருத்தலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவே ஆகும்.

சிங்குதல் என்ற வினைச்சொல் இன்னும் நம் அகரவரிசைகளில் காணப்படுகின்றது.  சொல்விளைந்த வினைச்சொல் எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழிக்குரியதே அதனின்று பிறந்ததாக அறியப்படும் பெயர்ச்சொல்லும் என்பது பிற ஆய்வாளர்களாலும் ஒப்பப் பட்டதே  ஆகும்.  அரிமா என்பதும் அதே பொருளுடைத்தாதல் அறிக.  அதற்கு இன்னொரு சொல் தேவைப்பட்ட ஞான்று அதே பொருளில் அதனை அமைத்தது ஒரு சிந்தனைச் சிக்கனமே ஆகுமென்பதை அறிந்தின்புறுவீர்.

இனிச் சிங்குதல் என்ற வினைச்சொல்லை ஆய்வோம்.

சிறுகுதல் > (சிகுதல்) > சிங்குதல் என்றமைந்ததே இச்சொல் ஆகும்.

இவ்வாய்வில் வழக்கொழிந்த வடிவங்களையும் கண்டெடுக்கலாம்.  அவை சிகுதல், சிறுங்குதல்.

ஒன்று இன்னொன்றில் மாட்டிக்கொண்டு ( எ-டு: நூல், தைக்கும்போது ) இரண்டு ஒன்றாகி எண்ணிக்கை குறைதலும் சிங்குதலே ஆம்.  இது சிக்குதல் என்ற சொல்லினைப் பிறப்பித்தது.

இதனை அறியத் தொடங்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.

தொடு >  தொடர்.
தொடு > தொடகு ( கன்னடம் ) > தொடங்கு (தமிழ்).

இதனுடன் இலகு> இலங்கு என்ற தமிழ் வடிவங்களையும் ஒப்பீடு செய்யுங்கள்.

நடுவில் ஒரு ஙகர ஒற்றினைப் பெற்றுச் சொல் விரிதல் தமிழிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் காணப்படுதாகும்.

பகு என்ற வினைச்சொல் ஒரு ஙகர ஒற்று ப் பெற்று விரிந்து பெயராதலும் அறிக.  பகு> பங்கு.  பகுக்கப்பட்ட ஒரு பகுதியே பங்கு.

தகுதி உடையாரே தங்குவர்; தகுதி இல்லார் வெளியேறுவர். இது உலக இயல்பு.

தகு > தங்கு  என்ற சொற்களின் தொடர்பும் அறிக.

அ என்ற சுட்டடி ஓரெழுத்து ஒருசொல் கு என்ற சேர்விடம் குறிக்கும் உருபினை இறுதிநிலையாகப் பெற்று,  அ+ கு =  அங்கு என்று புணர்ச்சித் திரிபு அடைதலும் இதன் இயல்பைக் கோடிகாட்டுவதே.  கு என்பது ஈண்டு உருபாக வராமல் ஒரு விகுதியாய் நின்றது.

சொல் மிகுதற்குத் துணையாவதே விகுதி:  மிகுதி> விகுதி. இது இறுதிநிலை எனவும் படும்.

சிறு > சிறுகு ( வினை)
சிறு > சிறுகு > சிறுங்கு ( இது இடைமிகை).
சிறுங்கு > சிங்கு   ( இது இடைக்குறை).

இத்தகைய திரிபுகளும் வழக்கொழிவும் நடைபெறக் காலம் சென்றிருக்கும். சில இடைவடிவங்கள் இல்லாதொழிதலும் இயல்பே.

பிழை காணின் பின் திருத்தம்,
சில திருத்தமும் சில சேர்க்கையும் செய்யப்பட்டன:  1.5.2019

நிலைபெற்றவை: நிலம் முதல் நிறம் வரை

நிலம், நிலவு என்ற சொற்கள்  "நில்" என்ற சொல்லினடியாகப் பிறந்தவை என்பதை முன் சில அறிஞர்கள்  அறிவித்திருந்தனர்.  நிலம் என்பது மனிதனும் ஏனைப் பொருட்களும் "நிற்பதற்குரிய இடம்" என்பதே பொதிந்த பொருளாம்.  பண்டைத் தமிழனோ நிலவும் நிலம்போல நிற்கும் கோள் என்றே கருதினான்.  அதனால் அதையும் நில்> நிலா என்று அறிந்து சொல்லை அமைத்தான்.  அதாவது வானத்தில் நிலை கொண்டிருக்கும்  கோள்களான   சூரியன், நிலவு  ஆகும் இவை ஏன் " உதயம்" ஆகின்றன,  ஏன் மறைகின்றன என்பவற்றை  அவர்கள் முழுமையாக அறிந்திருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. இவை எல்லாவற்றையும் விளக்க இன்னும் ஒரு கலிலியோ பிறந்துவிடவில்லை.

நில் > நில் + அம் > நிலம்    நிற்பதாகிய நிலம். மண்.

நில் > நிலா.  இதில் ஆ என்ற இறுதி ஒரு விகுதி ஆகும்.

ஆ என்ற விகுதி பெற்ற வேறு சொற்கள்:

பல் > பலா  :   பல சுளைகள் உள்ள ஒரு பெரிய பழம் ,  அதைத் தரும் ஒரு மரம் அதன் உறுப்புகள்.

கல் >  கலா  .  இதன் பொருள் கலை.  இது ஒரு தமிழ்ச் சொல் என்பதை அறிந்து கூறினார் பேராசிரியர் அனவரத விநாயம்பிள்ளை.  கல்லுதல் :  தோண்டுதல். கல் = கற்றுக்கொள்ளுதல்.  இளமையில் கல் என்றார் ஒளவைப்பாட்டி.

இனி இன்னொரு முடிபையும் சொல்லக்கடவது.  அதாவது:

மன் :   நிலைபெற்றது.

மன் >  மண் என்பது திரிந்தமைந்தது.  இரு சுழி எழுத்து முச்சுழி எழுத்தினும் முந்தியது ஆகும்.  இவற்றின் பொருளமைதி ஒப்புமை காண்க.

இனி இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.  இப்புவியில் நிலையான பொருள்களில் நீரும் ஒன்றாகும்.   இதுவும் நில் என்ற வினையடிப் பிறந்த சொல்லே.

நில் > நீல் > நீர்.   முதனிலை என்ற முதலெழுத்து நீண்டது. லகரம் ரகரமாவது தமிழில் மட்டுமன்று பிற சில மொழிகளிலும் காணக்கிடைக்கும் ஒரு திரிபு ஆகும்.  இத்தகு திரிபு விளைந்த சொற்களைப் பழ இடுகைகளில் காண்க.

நில் > நீல் > நீலம்.  வானத்தின் கருமையே நிலையானது ஆகும்.  அது நிற்பது என்று சொன்னால் அது மாறாதது ஆகும்.   மாறாத இந்த நிறம் நீலம், ஓர் அடிப்படை நிறம்.

நில் > நிறு > நிறம்.   நிறம் என்னும் வண்ணம் நிற்பது.  அது பொருளில் நிற்கின்றது,  இலையில் பச்சை நிறம் போலும்.

இங்கு காணப்பட்ட சில பொருள்கள் வேறு இடுகைகளில் விளக்கமும் ஒப்புமையும் தெளிவுறுத்துவன  ஆகும்.  அறிந்து மகிழ்க.


 இது மீள்பார்வை பெறும்.


வெள்ளி, 26 ஏப்ரல், 2019

கூகிள் கூடுதலால் பெற்ற கடந்தகாலப் பயன்`கள்

கூகிள் நிறுவனம் கூடுதல் அச்சேவை
பாகினது பாத்திரம் ஆங்குதர ---- ஆகினவே
உட்புகுந்  துள்ளன ஓங்க நுகர்தலும்
கட்பகிர்ந்  தன்ன கருத்துகள்---- கொட்புறலும்
நற்பயன் பெற்றோமந் நாள்.

பெற்ற பயன் நினைவு கொள்ளுதல் பற்றிய கவி.
வெண்பா. நேரிசை.


பொருள் ( உரை)


கூகிள் நிறுவனம் கூடுதல் சேவை -  கூகிள் ப்ளஸ்
என்ற மென்பொருட் சேவை;
பாகினது -  காய்ச்சின பாகினுடைய
பாத்திரம் -  உண்கலம்
ஆங்கு தர -  விரைவாகத் தேடிக் கொணர்ந்து கொடுக்க;
உட்புகுந்து -  வலைத் தளத்தினுள் நுழைந்து;
உள்ளன ஓங்க நுகர்தலும் -  இருக்கும் இடுகைகளை
விரிவாக அனுபவித்தலும்;
கட் பகிர்ந்தன்ன  --  கண்களே பாகுபடுத்தி எடுத்துக்கொள்ளுதல்
போலவே;
கருத்துகள்:  எண்ணி எழுதிய பலவும்;
கொட்பு உறலும் -   மேற்கொள்ளுதல் மிகுதலும் ஆன;
நற்பயன் -  நன்மைகள் விளைந்திடுதலை;
பெற்றோம் அந்நாள்:  முன்னாளில் பெற்றும் மகிழ்ந்தோம் அல்லோமோ?
பெற்றோம் என்றபடி.

கூகிள் சேவை,  பாகுப் பாத்திரம் கொணர்ந்தளித்தலுக்கு உவமையாக
இங்கு சொல்லப்பட்டது.

மறுபார்வை செய்யப்பெறும்.